சென்னை புதிய விடியலை துவங்கியது போல, பொலிவாக விடிந்தது. மாநகரம் முழுவதும் அன்று மாலை மகாபலிபுரத்தில் நடக்க இருக்கும் கச்சேரியை பற்றிய பேச்சு மட்டுமே நிரம்பி இருந்தது.
“வணக்கம் சென்னை. நட்சத்திர FM, 100.3- ல் உங்களுடன் இணைந்திருப்பது ஆர் – ஜே விஜயா! இன்னிக்கு சிட்டியே, சின்னாபின்னமா இருக்கு அதுக்கு முக்கிய காரணம், நம்ம ராக் ஸ்டார் ஆர்யன் கன்சர்ட் எல்லாருக்கும் தெரியும். ஆர்யன் லைம் லைட் வெளிச்சத்தில் இருந்து காணாம போயி ஆறு மாதம் ஆகுது. இன்னிக்கு திடீர்னு புதுசா பொறந்த நட்சத்திரம் மாதிரி ஜொலிக்க ஆரம்பிச்சிருக்காரு அது பத்தின சிறப்பு நிகழ்ச்சி தான் நட்சத்திரம் ஜொலிக்கிறது. கேட்டுக்கொண்டிருக்கும் மக்கள் ஒவ்வொருத்தரும் உங்க அபிமான கருத்துக்களை தெரிவிக்க தயாரா இருங்க!”
நிதமும் கேளுங்க, நிதானமா கேளுங்க, நீங்க கேட்பது நட்சத்திர FM,100.3. எனும் பாடல் ஒலிக்க,
தொகுப்பாளினி ஆர் – ஜே விஜயா மீண்டும் தொடர்ந்தார், சரி இன்னிக்கு நம்மளோட லக்கி பர்ஸ்ட் காலர் யார்னு பாக்கலாமா?
“ ஹலோ வணக்கம் மேடம், என் பேர் ஓம், உங்களோட தீவிர ஃபேன், உங்க குரல்னா அவ்ளோ பிடிக்கும் மேடம்”
“ரொம்ப நன்றி ஓம், சரி இன்னிக்கு நடக்க போற ஆர்யன் சாரோட கன்சர்ட் பத்தி என்ன நினைக்கிறீங்க? டிக்கெட் புக் பண்ணிடீங்களா?”
“ அட என்ன மேடம் நா மட்டும் இல்லை, இவளோ கம்மியா டிக்கெட் கொடுத்தா நகரமே புக் பண்ணிருக்கும்”
“ ஆகா … அழகா எதுகை மோனையில பேசி அற்புதம் பண்ணிடீங்க, சரி நிகழ்ச்சி பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? ”
“நான் என்ன மேடம் அற்புதம் பண்ணினே! ஆர்யன் சார் தான் அற்புதம். அவரு இந்த ஊருக்கு ஏதோ சொல்லப் போறார்னு மட்டும் தெரியுது, எந்த மியூசிக் டிரைக்டரும் செய்யாத புது விதமா, அடிப்படை மக்களும், மாற்று திறனாளி, நோயாளினு கூட்டத்தை கூட்டுறாறு, இத பாக்கும் போது இன்னிக்கு மாலை, மலை போல இசை விருந்து இருக்குனு தான் நினைக்கிறேன்”
“ உங்க எண்ணத்தை எங்க நட்சத்திர FM – ல் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி ஓம், உங்களுக்கு என்ன பாட்டு வேணும்?”
“ஆர்யன் சாரோட முதல் பாட்டு, தமிழே எங்கள் உயிரே பாட்டு போடுங்க மேடம்”
“நன்றி ஓம், நீங்க கேட்ட பாடல் இனிதே அரங்கேறுகிறது நீங்க கேட்டுக்கொண்டிருப்பது நட்சத்திர FM100.3, கேட்டா ஒரே தூளு”
தமிழே எங்கள் உயிரே….
உறவே, உண்மை அரனே…
எனும் பாடல் ஒலிக்க… நகர மக்கள் பாடலை ரசித்துக் கேட்டுக்கொண்டிருந்தனர்.
சென்னை மாநகரமே அந்த மாபெரும் இசை நிகழ்ச்சிக்காகக் காத்திருந்தது. “ஆர்யன் மீண்டும் வருகிறான்” என்ற செய்தி காட்டுத்தீ போலப் பரவியிருந்தது. ஒவ்வொரு சுள்ளியும் தீ பிடித்து தன்னை நெருப்போடு இணைப்பது போல ஒவ்வொரு மனிதனும் ஆர்யன் பற்றி பேசி, இசையோடு தன்னை இணைத்துக்கொண்டனர். ஆனால், அந்த இசை நிகழ்ச்சிக்குத் பின்னால் இருக்கும் ஆபத்து ஆர்யனுக்கும் யாழினிக்கும் மட்டுமே தெரியும்.
“கௌதம் சார், உங்கள பாக்க குமார்னு ஒருத்தர் வந்திருக்காரு!” என உதவியாளர் கூற, கௌதம்..
“வர சொல்லுங்க,” என்றான்.
குமார், கருத்த நிறத்தில் கோடு போட்ட சட்டை ஒன்றை அணிந்தபடி தயக்கத்தோடு நின்றிருந்தான்.
“ சொல்லுங்க என்ன வேணும்”
“ என் பேர் குமார், ரிஷியோட தம்பி”
கௌதமிற்கு ஒரு அழுத்தத்தைக் கொடுத்தது அந்த பெயர்!
“ நீங்க, உங்க நண்பர் ஆர்யன், என்ன பண்ணுனீங்கனு எனக்கு தெரியும்”
“ உங்க அண்ணன் என்ன பண்ணினான்னு தெரியுமா”
“அண்ணே, அடிதடியில இறங்கி எத்தன பேர் வாழ்க்கைய நாசம் ஆக்கினான்னு எனக்கு தெரியும், கொஞ்சம் தனியா பேசணும்”
பண்ணை வீட்டின் வெளிப்புறம் இருந்த கார், ஒன்றை குமார் சுட்டிக்காட்ட, கௌதம் தனது இடுப்பில் இருந்த துப்பாக்கியை ஒரு முறை தொட்டுப்பார்த்துக்கொண்டு காரை நோக்கி நடந்தான்.
குமாரும், கௌதமும் காரில் ஏற, கார் பள்ளிக்கரணை நெடுஞ்சாலையில் வேகம் எடுத்தது.
கார் டிரைவர் சீட்டில் இருந்தவர், பார்க்க போலீஸை போல தெரிந்தான். அவனது முகவெட்டும், முடிவெட்டும், காலில் அணிந்திருந்த பிரௌன் கலர் ஷூ வும், காவலர் என்றதை உறுதி செய்தது.
குமார், ஏதும் அறியாத முகத்தோடு அமர்ந்திருந்தான்.
டிரைவர் சீட்டில் இருந்தவன் பேசினான்.
“ஏழு கொலையை பண்ணிட்டு, மியூசிக் கன்சர்ட் பண்ண தயாரா இருக்கீங்க போல?”
“சொல்லுங்க சார், உங்களுக்கு எவ்ளோ பணம் வேணும்”
காரின் முன் பகுதியை பார்த்துக் கொண்டிருந்த காவலன், சட்டென்று பின்னால் திரும்பி,
“இவ்ளோ சீக்கிரம் புரிஞ்சிப்பீங்கனு எதிர் பாக்கல, சரி தலைக்கு ஒரு கோடி கொடுங்க போதும்”
“அப்படியா ஒரு ஏழு கோடி தானே, அதற்கு எதுக்கு இந்தக் கார் டிராவல்? பண்ணை வீட்டில் கேட்டிருந்தால் அப்பவே கொடுத்திருப்பேன்,” என்றதும் இருவருக்கும் ஒரே ஆச்சர்யம்!
குமார் மௌன கோபமாக
“நீங்க இப்போ எங்க கஸ்டடியில் இருக்கீங்க, மறந்துடாதீங்க”
கௌதம் மிக யதார்த்தமாக,
“பணம் வேணும்னா, பண்ணை வீட்டுக்குத்தான் போகணும்”
கார் வேகமாக சர்டர்ன் பிரேக் பிடித்து நிற்க!
கௌதம், தனது லொக்கேஷனை உதவியாளருக்கு அனுப்பு, அதுவரை காரை பின் தொடர்ந்த உதவியாளர், சற்று பொறுமை காத்து இன்னும் சிலருக்கு, கௌதம் லொக்கேஷனை அனுப்பினார். அனைத்து உதவியாளர்களும் கௌதம் இருக்கும் இடத்திற்கு ஒன்றாக சென்றனர்.
கௌதம், நீ சொல்றத நம்பி கேட்கிறேன். கேட்ட பணம் மட்டும் வரல, நீ கடைசி வரைக்கும் கம்பி எண்ணிட்டு தான் இருக்கணும். என காவலர் தோரணையில் இருந்தவன் மிரட்ட…
உங்களுக்கு நம்பிக்கை இல்லைனா! என்னோட அசிஸ்டென்ட் ட, ஒரு ஒரு கோடி அட்வான்ஸ் எடுத்துட்டு வர சொல்லவா?
குமாருக்கு இது நம்பிக்கை அளித்தாலும், காவலர் தோற்றத்தில் இருப்பவருக்கு நம்பிக்கை வரவில்லை, மாறாக சந்தேகம் வந்தது.
படார் என திரும்பி கௌதம் முகத்தில் ஒரு அறை விட்டான்.
“ங்**** எங்கள பாத்தா, பைத்தியக்காரன் மாதிரி தெரியுதா?” என்கிட்டேயே கிண்டலா?”
என மிரட்ட, அடுத்த நொடி காரின் முன்னும், பின்னும் பைக்கின் மின்னொளி பரவ, கௌதம் உதவியாளர்கள், காரை சுற்றி வளைத்தனர்.
குமாருக்கு, கௌதம் ஏற்கெனவே ஒரு திட்டத்தோடுதான், வந்திருக்கிறான். என்பது புரிந்தது. அதற்கு ஏற்றாற்போல, தனது கைத்துப்பாக்கியை எடுத்து இருவரையும் நோக்கி நீட்ட!
“போலீஸ் காரன் கிட்டையே துப்பாக்கியா?” என மிரட்டலாக கேட்ட காவலர் உருவில் இருந்தவனுக்கு, கௌதம், அவனுக்கு பதிலடி கொடுப்பது போல, துப்பாக்கியை வைத்து மூக்கிலே ஒரு குத்து குத்தினான்.
இசை நிகழ்ச்சிக்கு இன்னும் சில மணிநேரங்களே இருந்தன. பண்ணை வீட்டின் தனது அறையில் ஆர்யன் தனது கிதாரைச் சரிசெய்து கொண்டிருந்தான். பல மாதம் கழித்து ரசிகர்களை சந்திக்கப்போகிறோம், ஒவ்வொரு ரசிகரின் கொண்டாட்டச் சத்தமும் தனக்குள் ஒரு புதிய செல்லை புத்துணர்வோடு உருக்கி, உடலை புல்லரிக்க செய்யும் மாபெரும் தொடர்பு. அது போல நல் நினைவுகளை நினைத்து, நினைத்து தன்னை திடப்படுத்திக்கொண்டான். அவனது , மன திடம், இப்போது காது கேளாமை என்ற தாழ்வு நிலையே இல்லாமல், ரசிகர்களின் சத்தத்தை ,மீண்டும், மீண்டும் நினைத்துப் பார்த்ததில் இனி காதில் கேட்டால் இந்த ஒலியை மட்டும் கேட்டால் போதும் என்ற புது உத்வேகம் பிறந்தது. எப்போதும் காதுக்குள் ஓடும் ரசிகரின் ஆனந்த பாராட்டு காது கேளாமை என்ற உணர்வை மறக்கச் செய்தது. எல்லாம் இறைவனின் ஆசீர்வாதம் என பிராத்தனை செய்து கொண்டான். இறைவன் எப்போதும் ஆசீர்வாதத்தை அள்ளி, அள்ளி வழங்கினாலும் மனித மனம் போல ஒரு தாவும் குரங்கை எங்கேயும் காண முடியாது. ஆர்யனின் முகம் அமைதியாக இருந்தாலும், உள்ளுக்குள் ஒரு போர்க்களமே நடந்து கொண்டிருந்தது. காது கேட்காத ஒருவன் பல்லாயிரம் பேருக்கு முன்னால் பாடுவது என்பது தற்கொலைக்குச் சமம். என கௌதம் சொன்ன வாயசைவுகள் சற்று குழப்பதை ஏற்படுத்தியது. யாழினி மெல்ல அவன் அருகில் வந்தாள். அவளது கையில் ஒரு சிறிய சந்தனக் கிண்ணம் இருந்தது. அவள் ஆர்யனின் நெற்றியில் சந்தனத்தை இட்டுவிட்டாள். அவளது விரல்கள் அவனது தோளில் பட்டபோது, ஆர்யன் ஒரு மின்சார அதிர்வை உணர்ந்தான்.
அவன் அவளது கைகளைப் பற்றிக்கொண்டான். “யாழினி, இன்னைக்கு நான் பாடப்போற ஒவ்வொரு வரியும் உனக்காகத்தான். ஒருவேளை மேடையில ஏதோ அசம்பாவிதம் நடந்தா…”
யாழினி சட்டென்று அவனது வாயைத்தன் கைகளால் மூடினாள். அவள் கண்களில் கண்ணீர் துளிகள் கோர்த்திருந்தன. அவள் தலை அசைத்து “அப்படி ஏதும் சொல்லாதே” என்று சைகை செய்தாள்.
ஆர்யன் அவளை இழுத்து அணைத்துக்கொண்டான். “பயப்படாதே கண்ணம்மா… உன் மௌனம் தான் எனக்குத் தைரியம். நீ மேடைக்கு முன்னாடி நின்னு எனக்குச் சிக்னல் கொடுக்கும்போது, நான் உலகத்தையே மறந்துடுவேன். நீதான் என் இசை, நீதான் என் உயிர்,” என்று அவளது காதோரம் கிசுகிசுத்தான். அவனது மூச்சுக்காற்று அவளது பிடரியைத் தீண்ட, யாழினி சிலிர்த்துப் போனாள். அந்த நிமிடம் அந்த அறையில் காலம் உறைந்து போனது. காதலுக்கு மட்டுமே நேரத்தை கட்டுப்படுத்தும், களவாடும் சக்தி உண்டு. மனதளவில் ஒருவரை நேசித்து விட்டாள், அவர்களை பற்றி நினைத்தாலே போதுமானது, எப்படி நேரம் சென்றது. என்று நமக்கே தெரியாது. அதே நேசிக்கும் பெண் உடனிருந்தால் சொல்லவே வேண்டாம். காலம், காலனிடம் கடன் வாங்கித்தான் காதலுக்கு செலவு செய்தாக வேண்டும்.
அப்போது கௌதம் அவசரமாக உள்ளே வந்தான். அவனது முகம் வெளுத்திருந்தது. “ஆர்யன், ஒரு பெரிய சிக்கல். அந்த அமைச்சர் நம்ம கன்சர்ட்டை நிறுத்த பிளான் பண்றான். அரங்கத்துக்கு வர்ற வழியில ரவுடிங்க நிக்குறதா தகவல் வந்திருக்கு. அதுமட்டும் இல்லாம, யாழினியை அங்கேயே வச்சுத் தூக்கப் போறாங்களாம்,” என்றான் பதற்றத்துடன்.
யாழினியின் முகம் பயத்தில் சுருங்கியது. ஆனால் ஆர்யன் மாறவில்லை. அவன் ஒரு புன்னகையுடன் தன் கிதார் பெட்டியைத் தூக்கினான்.
“சரி நீ எங்க போன? இவளோ நேரம் ஆளையே காணோம்?”
“ மச்சா, அந்தாளு என்னையே தொக்கிட்டான் டா, அவன் இருந்து தப்பிச்சு வந்தது வேற கதை அதை அப்பறம் சொல்றேன். நீயும், யாழினியும் பாதுகாப்பா மேடை ஏறினால் அது போதும்”
“அவங்க சத்தத்தைப் போட்டு நம்மைக் கொல்லப் பாக்குறாங்க கௌதம். ஆனா நாம மௌனத்தால அவங்களை ஜெயிக்கப் போறோம். யாழினி என் கூடவே வருவா. அவளை யாருமே நெருங்க முடியாது,” என்றான் உறுதியாக.
ஆர்யன் யாழினியைப் பார்த்து, “நீ தயாரா?” என்று கேட்டான்.
யாழினி தன் கண்ணீரைத் துடைத்துவிட்டு, மிக உறுதியாகத் தலை அசைத்தாள். அவள் தன் கழுத்தில் இருந்த அந்தப் பென்-டிரைவ் லாக்கெட்டை ஒருமுறை தொட்டுப் பார்த்துக்கொண்டாள். அது வெறும் பென்-டிரைவ் அல்ல, அது ஆயிரக்கணக்கான உயிர்களின் சாட்சியம்.
அவர்கள் ஒரு ரகசிய வாகனத்தில் அரங்கத்தை நோக்கிப் புறப்பட்டனர். வழியெங்கும் அமைச்சரின் ஆட்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். கார் ஜன்னல் வழியாகத் தெரிந்த சென்னையின் விளக்குகள் ஆர்யனுக்குத் தெளிவற்ற கோடுகளாகத் தெரிந்தன.
வாகனத்திற்குள் யாழினி ஆர்யனின் விரல்களை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டிருந்தாள். ஆர்யன் அவளது காதுக்குப் பின்னால் இருந்த முடியைச் சரிசெய்துவிட்டு, அவளது கன்னத்தில் ஒரு மென்மையான முத்தமிட்டான்.
“இந்த உலகம் நம்மைக் கலைக்கப் பாக்குது யாழினி. ஆனா மௌனமா இருக்கிற காதலுக்குத் தான் சக்தி அதிகம். இன்னைக்கு நைட் நம்ம வாழ்க்கையையே மாத்தப்போகுது,” என்று அவன் சைகை செய்தான்.
அரங்கத்தை நெருங்கியபோது, அங்கே ஒரு பெரும் கூட்டமே கூடியிருந்தது. கேமராக்களின் வெளிச்சம் மின்னியது. ஆர்யன் காரிலிருந்து இறங்கினான். அவனது கையில் கிதார், இன்னொரு கையில் யாழினியின் விரல்கள்.
மேடைக்குக் கீழே அமைச்சரின் ஆட்கள் கத்தி வைத்துக் கொண்டு பதுங்கியிருந்தனர். ஆனால் ஆர்யனின் கண்களில் தெரிந்த அந்தத் தீவிரம் அவர்களை ஒரு கணம் தயங்க வைத்தது.
ஆர்யன் மேடை ஏறினான். யாழினி மேடைக்கு நேர் கீழே, அவனுக்கு மட்டுமே தெரியும்படி ஒரு இடத்தில் நின்றாள். இருவருக்கும் இடையே ஒரு நூலிழைத் தொடர்பு இருந்தது. அதுதான் அவர்களின் காதலும், இசையும்.
மைக்ரோஃபோனை நெருங்கிய ஆர்யன், கூட்டத்தைப் பார்த்துப் புன்னகைத்தான். அவன் பாடப்போகும் அந்த முதல் பாடல், ஒரு பெரும் புரட்சியின் தொடக்கமாக அமையப் போகிறது என்பது அங்கிருந்த யாருக்குமே தெரியாது.
