இதழ் – 23
தன் எதிரில் இருந்த பெண்ணைப் பார்த்து, “நீயா!!” எனக் கேட்டான் ராகவன்.
அவனைப் பார்த்து,
“அண்ணா!” என்றாள் அவள்.
“ச்சீ! வாயை மூடு. உன் வாயால என்னை அண்ணனு கூப்பிடாத” என்றான் ராகவன்.
“ஏன்? அண்ணா, அப்படிச் சொல்றீங்க. நான் என்ன தப்பு செஞ்சேன்?” எனப் புரியாமல் கேட்டாள்.
“உன்னாலதான் என் பிரண்டு உயிரை விட்டான். அவன் சாவுக்கு நீதான் காரணம்” என்றான் ராகவன் அனிதாவைப் பார்த்துக் கோபமாக.
“நான் சொல்றதைத் தயவு செய்து கேளுங்க. நீங்க என்னைத் தப்பா புரிஞ்சுகிட்டீங்க.”
“யாரு? நானா!! தப்பா புரிஞ்சுகிட்டேன்? ஆமா!! உன்னை நல்ல பொண்ணுனு நான் தான் தப்பா புரிஞ்சுகிட்டேன். இப்பதான் தெரியுது நீ எவ்வளவு மோசமான பொண்ணுனு,” என்றான் ஆத்திரத்துடன்.
“எதுவும் தெரியாம, புரியாம பேசுறீங்க அண்ணா.”
“இதே மாதிரி மாதவனும் உன்னை கேள்வி கேட்டு இருந்தான்னா நீ ஒழுங்கா இருந்திருப்ப. நீ அவனை லவ் பண்றேன்னு ஏமாத்திட்ட. நீ செஞ்ச துரோகம் தாங்காமல் தன்னோட உயிரை விட்டுட்டான் அவன்.”
“நான் சொல்றதை கொஞ்சம் கூட காது கொடுத்து கேட்காம நீங்க பாட்டுக்கு பேசாதீங்க. நடந்தது என்னன்னு உங்களுக்கு தெரியுமா?” என அவளும் இப்போது கோவமாகக் கேட்டாள்.
“எனக்கு எல்லாமே தெரியும். நீ அவனை லவ் பண்ணுது, அவனை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டு கடைசி நேரத்தில் அவனை கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொன்னது தாங்க முடியாம தான் விஷம் குடிச்சு இறந்துட்டான். உன்னால ஒரு உயிர் போயிருச்சு. அத பத்தி கொஞ்சம் கூட கவலையே இல்லையா!!” எனக் கேட்டான் ராகவன்.
“அவர் சாவுக்கு நான் காரணம் இல்ல. நீங்க தப்பா புரிஞ்சுகிட்டீங்க.”
“போதும் நிறுத்து!! எல்லா பொண்ணுங்களும் சொல்ற ஒரே வார்த்தை இதுதான் – ‘தப்பா புரிஞ்சுகிட்டீங்க, தப்பா புரிஞ்சுகிட்டீங்க’னு. நீங்க ஒழுங்கா நடந்திருந்தா நாங்க ஏன் தப்பா புரிஞ்சுக்கப் போறோம்? ஒருத்தன காதலிச்சிட்டு எப்படித்தான் இன்னொருத்தன கல்யாணம் பண்ண முடியுது. உங்கள மாதிரி ஒரு சில பொண்ணுங்களால தான் எல்லா பொண்ணுங்களையுமே தப்பா நினைக்க வேண்டியது இருக்கு. அதனால யாரு நல்ல பொண்ணு, யாரு கெட்ட பொண்ணுனே தெரியல. எல்லாம் வேஷம்” என்றான்.
“போதும் நிறுத்துங்க. உங்க வந்தபடி பேசிட்டு இருக்காதீங்க.”
“உண்மையை சொன்னா உனக்கு கோவம் வருதா!!” என நக்கலாகக் கேட்டான்.
“நான் அந்த மாதவனை காதலிக்கவே இல்ல!” எனக் கத்தினாள் அனிதா.
இப்பொழுது அவள் கூறியதைக் கேட்டதும், “என்ன? இப்படிச் சொல்லி தப்பிக்கலாம்னு பாக்குறியா? நீ அவனை உயிருக்கு உயிரா காதலிச்ச…”
“அதுக்கு என்ன சாட்சி?”
“நானே தான் சாட்சி.”
“எப்படி சொல்றீங்க?”
“நீ அவன் கூட சேர்ந்து ஊர் சுத்துனதுக்கு நானே சாட்சி. இதைவிட என்ன வேணும்?”
“நீங்க என்னை அவனுடன் சேர்ந்து பார்த்து இருப்பீங்க. ஆனா சந்தோஷமா சிரிச்சு பார்த்திருக்கீங்களா? சொல்லுங்க.”
“நீ என்ன சொல்ல வர? எனக்கு புரியல,” என ராகவன் கேட்டான்.
“நான் இப்ப சொல்றேன். தெளிவா கேட்டுக்கோங்க. நான் மாதவன லவ் பண்ணவே இல்ல.”
“இது என்ன? புது கதை.”
“இது தான் உண்மை. அவன் ஒரு நாள் என்கிட்ட வந்து ‘என்ன லவ் பண்றேன்னு’ சொன்னா ‘முடியாது’னு சொல்லிட்டேன். மறுநாள் அவன் எனக்கு போன் பண்ணி, ‘உன் அம்மா அப்பா உயிரோட உனக்கு வேணும்னா நீ என்ன லவ் பண்ணனும். அப்ப தான் நான் அவங்க உயிரோட இருப்பேன். நான் சொல்றதை நீ கேட்கணும். இல்லனா அவங்கள கொன்னுடுவேன்’னு சொல்லி என்னை மிரட்டுனான்” என்றாள் அழுதபடி.
“இல்ல, நீ பொய் சொல்ற” என்றான் ராகவன் அவள் சொல்வதை நம்பாமல்.
“உங்ககிட்ட பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை எனக்கு. நடந்தத சொல்றேன்.”
அவள் சொல்வதை அவனால் நம்ப முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை.
“இப்படியே என்னை பிளாக்மெயில் பண்ணி மிரட்டி மெரட்டித்தான் சினிமாக்கு, ஹோட்டலுக்கு கூட்டிட்டு போனான். அது மட்டும் இல்ல, ஒரு ரெண்டு மூணு தடவை உங்களையும் பார்க்க கூட்டிட்டு வந்தான். அப்போ நான் பெயருக்கு தான் உங்ககிட்ட இரண்டு வார்த்தை பேசுவேன். நீங்களே சொல்லுங்க – உங்க கிட்ட நான் கலகலன்னு பேசி இருக்கேனா?” எனக் கேட்டாள்.
“இல்ல” எனத் தலையசைத்தான்.
“ஒரு தடவை உங்க கிட்ட உண்மையை சொல்லிடலாம்னு நான் உங்களுக்கு போன் பண்ணுனேன். அதை அவன் கண்டுபிடிச்சு கத்தியால என் கையை கிழிச்சிட்டான். தெரியுமா உங்களுக்கு?”
யோசித்துப் பார்த்த ராகவன்,
“அது என் கூட பேச கூடாதுனு நீ அவனை மிரட்டி, நீயாவே உன் கையை அருத்திட்டேன்னு அவன் சொன்னான்.”
“எல்லாமே பொய்” என்றாள்.
“நான் கேட்டதுக்கு நீ யார்கிட்டயும் பேச மாட்டேன்னு சொன்னான்.”
“கிடையாது. நான் ரொம்ப ஜாலியான டைப் பொண்ணு. ஆனா நான் உங்ககிட்ட பேசினா எங்க உங்க கிட்ட எல்லாம் உண்மையை சொல்லிடுவேன்னு சொல்லித்தான், அவன் என்ன உங்க கிட்ட கூட சரியா பேச கூடாதுன்னு சொல்லி மிரட்டி தான், உங்களை பார்க்கவே கூட்டிட்டு வருவான்.”
அவள் பேசப் பேச அதிர்ந்து, குழம்பி நின்றான் ராகவன்.
“அது மட்டும் இல்ல. ஒரு நாள் அவன் என்ன செஞ்சான்னு தெரியுமா? ஒருநாள் எனக்கு போன் பண்ணி ‘எங்க வீட்டுக்கு வா’னு கூப்பிட்டான். நான் வர முடியாதுன்னு சொன்னேன். ‘தயவு செய்து வா. இந்த ஒரு தடவை மட்டும் வா. அதுக்கப்புறம் நான் உன்னை தொந்தரவு பண்ண மாட்டேன். உன் கிட்ட தனியா பேசணும்’னு நல்லவன் மாதிரி நடிச்சான்.”
அவள் சொல்வதை இமைக்க மறந்து கேட்டுக் கொண்டிருந்தான்.
“சரின்னு நம்பித்தான் நான் போனேன். என் முகத்தில் மயக்க மருந்து ஸ்பிரே அடிச்சிட்டான். நான் மயக்கத்திலே இருந்தபோது அவன் என்ன தப்பு தப்பா போட்டோ எடுக்க, நான் கண் முழிச்சி அவன்கிட்ட சண்டை போட்டேன். போட்டோவை டெலிட் பண்ண சொன்னேன். ‘நீ என்கூட ஒரு தடவை இரு உடனே இந்த போட்டோவை டெலிட் பண்ணறேன்’னு சொன்னான். நான் முடியாதுன்னு மறுத்தேன். என் கிட்ட தப்பா நடக்க முயற்சி செஞ்சான். நான் அவன் கிட்ட இருந்து தப்பிச்சு வந்துட்டேன். மறுநாள் அவன் விஷம் குடிச்சு இறந்துட்டான்னு எனக்கு அவன் அம்மா போன் பண்ணுனாங்க. இது தான் நடந்துச்சு” எனக் கூறி கதறி அழுதாள் அனிதா.
அவள் பேசப் பேச சிலையாக அப்படியே உறைந்து நின்று விட்டான் ராகவன்.
“நீங்களே சொல்லுங்க. ஒரு பொண்ணு கட்டின புருஷன் கூட விருப்பம் இல்லாம தன்னை தொட அனுமதிக்க மாட்டா. ஆனால் அவன் கல்யாணத்துக்கு முன்னாடி என்ன அனுபவிக்கணும்னு கேட்டான். நீங்களே சொல்லுங்க, உங்க தங்கச்சியா இருந்தா நீங்க இதுக்கு ஒத்துக்குவீங்களா?” என அவள் கேட்ட அந்த ஒரு கேள்வி அவனுக்கு செருப்பால் அடித்தது போல் இருந்தது.
என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் கலங்கி நின்றவன், சற்று நினைவுக்கு வந்து மெல்ல அவள் அருகில் வந்து,
“சாரி அனிதா. என்ன மன்னிச்சிடு. அவன் என்னோட பெஸ்ட் பிரண்டா இருந்தான். ஆனா அவன பத்தி எதுவுமே தெரியாத முட்டாளா நான் இருந்திருக்கேன். இப்ப நீ சொல்றதை கேட்ட அப்புறம்தான் தெரியுது அவன் எவ்வளவு பெரிய மோசமானவனா இருந்திருக்கானு. நான் உன்ன தப்பா புரிஞ்சுகிட்டேன். என்னை மன்னிச்சிடு” என்றான் அனிதாவிடம்.
“பரவால்ல அண்ணா! இப்பவாது நீங்க என்ன புரிஞ்சிக்கிட்டீங்களே அதுவே எனக்கு போதும்” என்றாள்.
“இப்ப நீ ஹாஸ்டல்லயா இருக்க?”
“இல்ல. நான் மாதவோட அம்மா அப்பா கூடதான் இருக்கேன்.”
“என்ன சொல்ற? அவங்க…”
“ஆமா! உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? அவன் என்னை மிரட்டுனத அவன் அம்மா பாத்துட்டாங்க. அவங்கதான் அவனுக்கு சாப்பாட்டுல வெஷத்தை வச்சு கொடுத்திருக்காங்க. பெத்தவங்களே இப்படி செஞ்சிருக்காங்கன்னா அவன் எப்படிப்பட்ட கேடுகெட்ட அயோக்கியனா இருப்பான்னு நீங்க கொஞ்சமாவது நினைச்சு பாருங்க அண்ணா” என்றாள் கண்ணீருடன்.
“சாரி அனிதா. நான் உன்னை ரொம்ப தப்பா புரிஞ்சுகிட்டேன். இனிமே நீ நல்லா இரு. சாரி, நான் உங்களையும் தப்பா பேசிட்டேன்” என்றான் அவள் காதலனிடம்.
“பரவால்ல சார். நாங்க வரோம்” என அனிதாவை பைக்கில் அழைத்துக் கொண்டு சென்று விட்டான் அவன்.
காரில் அமர்ந்தவனுக்கு உலகமே இருண்டது போல் தெரிந்தது. ஒரு மோசமானவனை நல்லவன்னு நெனச்சு அவனுக்காகத் தன் மனைவியை வெறுத்து ஒதுக்கி, அவளைக் கஷ்டப்படுத்தி, அவளிடம் மிருகம் போல் நடந்து கொண்ட தன்னையே நினைத்து வெட்கப்பட்டான். இப்பவே வீட்டுக்கு போய் அருவி காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு, அவ கிட்ட கெஞ்சி அவ கூட இனிமே சந்தோஷமா வாழனும் என நினைத்துக் கொண்டவன் வேகமாகக் காரை எடுத்துக் கொண்டு வீட்டிற்குள் வந்தான்.
“அருவி… அருவி…” எனக் கத்திப் படி வீட்டிற்குள் வந்து பார்க்க, அறையில் அவள் இல்லை. மொட்டை மாடியில் சென்று தேடினான். தோட்டத்திலும் வந்து தேடிப் பார்த்தான். எங்கேயும் அவளைக் காணவில்லை.
தரையில் அமர்ந்து, “எங்கடி போனே?” எனக் கதறி அழுதான் ராகவன். அப்போது எதார்த்தமாக டேபிளில் இருந்து பறந்து வந்த லெட்டர் அவன் காலடியில் விழ, அதை எடுத்துப் படித்துப் பார்த்தவன் அதிர்ந்தான்.
அதில், “என்னை மன்னிச்சிடுங்க. நான் எந்த தப்பும் பண்ணல. இனிமே உங்க வாழ்க்கையில நான் குறுக்க வர மாட்டேன்” என எழுதி இருந்தது.
அப்பொழுது, “ராகவா… அருவி…” எனச் சத்தம் கேட்டு தன் அறையில் இருந்து வெளியே வந்து பார்த்தான்.
ஹாலில் தன் தாயும் தந்தையும் நின்று இருந்தனர்.
“என்ன? ராகவா, நீ மட்டும் இருக்க. அருவி எங்க? காணோம். உங்களுக்கு சஸ்பென்ஸா இருக்கட்டும்னு தான் உங்களுக்கு சொல்லாம நாங்க வந்தோம். எப்படி எங்க சஸ்பென்ஸ்?” எனக் கேட்டார் சேதுராமன்.
“அருவி எங்க? ஆளையே காணோம். கோயிலுக்கு போயிருக்காளா?” எனக் கேட்டார் சரஸ்வதி.
“அம்மா, அப்பா… என்னை மன்னிச்சிடுங்க” என்றான் தயங்கித் தயங்கி.
“நீ எதுக்கு மன்னிப்பு கேட்கிற? சொல்லு ராகவா.”
“அம்மா… நான் என் அருவியைத் தொலைச்சிட்டேன்மா. என்னை மன்னிச்சிடுங்கம்மா” என வேகமாக ஓடி வந்து அவர்கள் காலில் விழுந்து கதறி அழுதான் ராகவன்.
♥️ இப்ப அழுது என்ன பிரயோஜனம்?
அருவி எங்க போயிருப்பா தெரிஞ்சிக்க அடுத்த எபிசோடு மிஸ் பண்ணாம படிங்க பிரண்ட்ஸ் ❤️
