உயிராக வந்த உறவு – அத்தியாயம் 3

தாரணியைப் பார்த்தும் ஒரு நொடி தீரன் முகத்தில் மின்னிய சிரிப்பு, அது அவனின் சந்தோஷத்தின் சின்னமல்ல, அது ஒரு ஏளனம். “என்னை வேண்டாம் என்று போனவள், இப்போ இப்படி என் முன்னாடி நிற்கிறாளா?” என்ற எண்ணம் அவன் மனதில், நஞ்சாக பரவியது. அவன் பார்வை தாரணியிடமிருந்து கையில் இருந்த கோப்பை வாங்கி புரட்டி பார்த்தான்..

அவளை மட்டமாக அளந்து பார்த்து,“சென்னை வேண்டாம்னு போனவள் தானே நீ? இப்போ அதே சென்னையில, அதுவும் என் முன்னாடி, வேலைக்காக நின்னிருக்கே…” என அவன் சொன்ன வார்த்தைகள் கேள்வியாக இல்லை,அவள் மனதில் தீயாக இருந்தது. அந்த குரலில் அதிகாரமும் அகந்தையும் கலந்திருந்தது. 

தாரணி பதில் சொல்லாமல் நின்றாலும், உள்ளுக்குள் கோபம் கொந்தளித்தது. அவன் மீண்டும் மிஸ்சஸ் தாரணி உங்க கணவர் பெயர் இதுல பெயர் இல்லையே..ஒரு வேளை டிவோர்ஸ் ஆ??

அதும் மென்ஷன் பண்ணல என அவளை பார்த்த படி கேட்க,

அவள் ஏதும் சொல்லாமல் நிற்க,

உடனே அவளோ தீரன், ஒழுங்கா பேசு என சொல்ல

ஸ்டாப் இட் இப்படி தான் பேசுவியா இங்க நான் ஒன்னும் உன் லவ்வரா இந்த சீட்ல உட்காரவில்லை. இந்த சீட்டுக்குள்ள மரியாதை கொடுத்து ஒழுங்கா பேசு என அனல்  பறக்கும் பார்வையில் அவன் சொல்லவும்

“ஓ சாரிங்க சார் அப்போ நீங்களும் கேள்வி ஒழுங்கா ஒரு கேண்டிடேட் கிட்ட கேட்கிற மாதிரி கேளுங்க, ஏதோ உங்க லவ்வர் கிட்ட பேசுற மாதிரி பேசாதீங்க” என பதிலுக்கு சொல்ல

உங்களை இப்ப மிஸ்னு கூப்பிடறதா மிஸ்ஸஸ்ன்னு கூப்பிடுறதா தான் தெரியல.அதனால தான் இதெல்லாம் கேட்டேன் என்று அவள் சுயமரியாதையை நொறுக்க முயன்ற அவனின் நோக்கம் தெளிவாக தெரிந்தது. 

அவளின் கண்களில் நீர் துளிர்த்தாலும் அவன் முன் அதை காட்டிக் கொள்ள அவள் விரும்பவில்லை.

“சார் நீங்க எனக்கு ஜாப் இன்னும் தர வேண்டாம்.உங்களுடைய கேள்விக்கு நம்ம பதில் சொல்ல விரும்பல,என்னைப் பார்த்து ஏளனம் பண்ண உங்களுக்கு உரிமை கிடையாது. நான் உங்களை விட்டுட்டு போன நாள் அதோட என் வாழ்க்கை முடிஞ்சது இல்லை; அன்னைக்கு தான் நான் உயிரோட இருக்க ஆரம்பிச்சேன்,” என்று சொன்னபோது, அறைக்குள் ஒரு கனமான மௌனம் எழுந்தது.

 தீரன் அதிகாரியின் நாற்காலியில் அமர்ந்திருந்தாலும், அந்த நொடியில் உயரமாக நின்றது தாரணியின் தன்னம்பிக்கை தான். அவள் திரும்பி நடக்கத் தொடங்கியபோது, அவள் முதுகுக்குப் பின்னால் அவன் பார்வை இன்னும் குத்திக்கொண்டிருந்தது.

தாரணி இனி ஒரு நொடியும் அங்கே நிற்க வேண்டாம் என்று முடிவு செய்தாள். அவளுக்குத் தேவையானது வேலை அல்ல,அவள் உயிரோடு வைத்திருக்கும் அந்த சிறிய சுயமரியாதை. குழந்தையை மனதில் நினைத்தபடி “இந்த வேலை எனக்கு வேண்டாம்,” என்று மெதுவாகச் சொன்னாள். அவள் குரலில் ஒரு  நடுக்கம். அவள் திரும்பி நடக்க ஆரம்பித்த அந்த நொடி, தீரனின் உள்ளுக்குள் ஏதோ ஒன்று உடைந்தது. அவன் எதிர்பார்த்தது அவளின் கண்ணீர், தலைகுனிவு. ஆனால் அவன் முன் நிமிர்ந்து நடக்கும் அவளைப் பார்த்ததும், அவனின் காதலின் சிதைவிலிருந்து பிறந்த கோபம் அதிகாரத்தின் முகமூடியை போட்டுக் கொண்டது.

தாரணி மேடம் தன் கையை நீட்டி சொடக்கு போட்டபடி “இப்படி போயிட முடியாதுன்னு தெரிஞ்சே தான் வந்திருக்கே,” என்று அவன் பின்னால் இருந்து சொல்லவும்

அந்த குரலில் அவளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற பிடிவாதம் இருந்தது. தாரணி நின்று திரும்பிப் பார்த்து, “நீ இங்க இருப்பேன் தெரிஞ்சுருந்தா இந்த இடத்துக்கு நான் வந்திருக்க மாட்டேன்” என கோபமாக சொல்ல 

 “இந்த மாதிரி பொறுப்புகளோட, இந்த மாதிரி சூழ்நிலையில வேலை கிடைக்குறது அவ்வளவு ஈசியா? அதுவும் இந்த லெவல்ல?” என்று அவன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அவளின் தன்மானத்தை சீண்டுவதற்காகவே இருக்க

அவள் முகம் சிவந்தது. “என் வாழ்க்கையை நான் ஒன்னும் உங்க கைல கொடுக்கல, அப்படி உங்க கைல குடுக்க நினைச்ச தாரணி எப்பவோ செத்து போயிட்டா. இது என்னோட வாழ்க்கை எனக்கு உங்க இரக்கம் எனக்கு தேவையில்லை,” என்று அவள் சொல்ல, 

அவன் சிரித்தான். அது சிரிப்பல்ல,அதிகாரத்தின் நக்கல்.

“இது இரக்கம் இல்ல,வாய்ப்பு,” என அவன் சொன்னான். 

“நான் நினைச்சா உன்னை இங்கே வேலைக்கு வைக்கலாம். நீ நினைச்சா வேற எங்கும் இந்த மாதிரி வாய்ப்பு கிடைக்காம போகலாம். யோசிச்சு பார், தாரணி. அவன் மெதுவாக அவளுக்கு அருகே வந்தான். “ஒரு காலத்துல என்னை விட்டுட்டு போனவள் இப்போ என் கீழ வேலை பாக்குற நிலைக்கு வந்தா… வாழ்க்கை எவ்வளவு அழகா ஒரு வட்டம் போடுது தெரியுமா?” அந்த வார்த்தைகள் அவளை அடிமையாகப் பார்க்கும் அவனின் மனநிலையை வெளிச்சம் போட்டது.

தாரணியின் கண்களில் கண்ணீர் நிறைந்தாலும், அது விழவில்லை. “நீங்க என்ன நினைக்கிறீங்க இப்ப தெரிஞ்சுக்கலாமா?” என அவள் கேட்க

அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தவன்,”உன்ன பத்தி நினைக்கிறதுக்கு புதுசா என்ன இருக்கு தாரு” என சொல்ல

ஹலோ என அவள் அதிரும் குரலில் சொல்லவும்

இந்த மாதிரி பேசுற வேலை எல்லாம் என்கிட்ட வச்சுக்காதீங்க என்று கோபமாக சொல்லி திரும்பி நடந்தாள். தீரன் அவளை நிறுத்தவில்லை. அவன் மனதில் ஒரே எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது.இவள் போகக் கூடாது. வேலைக்காக அல்ல, அவள் மீண்டும் அவன் வாழ்க்கையிலிருந்து தப்பி போகக் கூடாது என்பதற்காக. எப்படியாவது, இங்கேயே வைத்திருக்கணும். வேலையை காரணம் சொல்லி அவள் அருகில் அவன் இருக்க வேண்டும் என அவன் மனம் பிடித்தது.

அவன் கண்களில் காதல் இல்லை, அவள் மீது ஏதோ ஒரு உரிமை பிடிவாதம் மட்டும் இருந்தது. தாரணி வெளியேறும் போது கதவு சத்தமாக மூடியது. ஆனால் அந்த சத்தம் முடிவல்ல,இன்னொரு போரின் ஆரம்பம் என்று இருவருக்கும் தெரியாமல் இல்லை.

தாரணி அந்த அறையை விட்டு வெளியேறிய நிமிடம், தீரனின் உள்ளத்தில் ஏதோ ஒன்று காலியாகிப் போனது போல இருந்தது .அவளை இங்கேயே வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் அவன் மனதுக்குள் ஆயிரம் வழிகளில் சுழன்றது. அதிகாரம், பதவி, கட்டளை எதையும் பயன்படுத்தலாம் என்று அவன் நினைத்தாலும், அவள் திரும்பிப் பார்க்காமல் சென்ற நடை அவன் நினைவுகளை மட்டுமல்ல, அவன் இதயத்தையும் கிழித்தது. மெதுவாக எழுந்து வந்து அந்த அறையின் கதவை அவன் பூட்டினான். “யாரும் உள்ளே வர வேண்டாம்,” என்று வெளியே இருந்தவர்களிடம் குரல் உயர்த்தாமல் சொன்னான். 

உடனே HR பணியாளர்களை அழைத்து, “செலக்ஷன் முடிஞ்சுடுச்சு… எல்லாரும் கிளம்பலாம்,” என்று கூறிவிட்டு, மீண்டும் தனியாக அந்த அறைக்குள் வந்தான்.

மேசை மீது இருந்த வாட்டர் பாட்டிலை எடுத்துத் திறந்து, இரண்டு மூன்று மடங்கு தண்ணீர் குடித்தான். தொண்டை நனைந்தது. ஆனால் உள்ளுக்குள் எரியும் அந்த வலி குறையவில்லை. அவன் நாற்காலியில் சாய்ந்தபடியே கண்களை மூடினான். அப்போது அவன் முன் தாரிணி வந்தாள்.இன்றைய கோபத்துடன் அல்ல, மூன்று வருடங்களுக்கு முன், அவன் உலகமே ஆன அந்த தாரணி. 

மாலை நேரம், மென்மையான காற்று… அவள் அவன் விரல்களை பிடித்து கைகோர்த்து நடந்த நினைவு அவன் கண் முன் வந்தது. “எப்பவும் இப்படி தான் நடக்கணும்,” என்று அவள் சிரித்தபடி சொன்னதும், “உன்னோட கை விட்டா எனக்கு திசை தெரியாது,” என்று அவன் விளையாட்டாக பதிலளித்ததும், அந்த சிரிப்புகளுக்குள் ஒளிந்திருந்த ஆழமான காதலும் அவன் மனதை நெகிழ வைத்தது.

அவள் தோளில் சாய்ந்து நின்ற அந்த நொடிகள், சாலையோர டீ கடையில் இருவரும் பகிர்ந்த ஒரே டீ, மழை வரும் முன் அவள் அவன் கையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டது.அவை எல்லாம் சுகமான காதல் அனுபவங்களாய் அவன் மனதை மெதுவாக வருடின.

 “தீரன்… நீ எப்பவும் இப்படியே இருக்கணும்,” என்று அவள் சொன்ன குரல் அவன் காதில் இன்னும் ஒலித்தது. 

கழுத்தில் கிடக்கும் பூ மாலை போல் அவன் கைகள் அவள் தோல் மேல கட்டி கொண்டது.அவள் நடந்த விதம், பேசும் போது கண்களில் தெரிந்த நம்பிக்கை, அவன் பெயரை மட்டும் அழைக்கும் அந்த தனி உச்சரிப்பு என அனைத்தும் அவனுக்குள் மீண்டும் உயிர் பெற்று எழுந்தன. 

அவன் உதடுகளில் ஒரு சிரிப்பு வந்தது; அடுத்த நொடியில் அது வலியாய் மாறியது. அதே கைகள், அதே பெண்… இன்று என் முன் நிமிர்ந்து நின்று, என்னையே எதிரியாக பார்த்து போனாள். அந்த உண்மை அவன் மார்பை அழுத்தியது.

வாட்டர் பாட்டிலை மீண்டும் மேசையில் வைத்துவிட்டு, அவன் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தான். அவள் இல்லை. ஆனாலும் அவள் நினைவுகள் அந்த அறையை நிரப்பி நின்றன. “நீ என்னை விட்டு போகல… என் வாழ்க்கையில இருந்து போயிட்ட,” என்று அவன் மனம் மெதுவாக சொன்னது. காதல் அவனுக்கு இன்னும் அழகாகவே இருந்தது.

ஆனால் இப்போது அது இனிமையான காயம். அந்த காயம் தான் அவனை இன்னும் அவளைப் பிடித்து நிறுத்த முயல வைக்கிறது என்று அவன் உணர்ந்தான். கதவை பூட்டியிருந்தாலும், அவன் இதயம் மட்டும் இன்னும் தாரணியின் பெயரை திறந்தபடியே வைத்திருந்தது.

காதல் என்றுமே சுகமான அவஸ்தை தான்..

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page