அத்தியாயம் 1
அரண்மனை போன்ற அந்த இல்லத்தில் இரவு நேர மின்விளக்குகள் ஒளிர.. பிரம்மாண்டமாய் காட்சியளித்தது அந்த கட்டிடம்..!!
ஊர் ஜனமே அந்த இல்லத்தில் திரண்டு இருக்கிறதா அல்லது அந்த வீட்டில் உள்ள சொந்தக்காரர்களா அவர்கள் என்று அறிய முடியாத வண்ணம் கூட்டம் அலைமோதியது அந்த இல்லத்தில்..
வாசலிலேயே வருவோரை வரவேற்கும் அந்தப் பெரிய கிரில் கேட்டும் ஆகர்ஷதீரன் , சேர்மன் ஆப் டீமன்ஸ் ரிசார்ட்ஸ் என்ற தங்க எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட அந்த பெரிய போர்டையும் தாண்டி உள்ளே நுழைந்தால், அந்த கார் பார்க்கிங் ஏரியாவே கிட்டத்தட்ட ஒரு பெரிய கார் ஷோரூம் போல அதில் அத்தனை கார்கள் நின்று கொண்டிருக்க பரபரப்பாக காட்சியளித்தது அவ்விடம்..
அந்த அரண்மனை முன்பிருந்த பச்சை பசேல் என்ற தோட்டத்தில் அங்கும் இங்குமாக பல தொழிலதிபர்கள் கையில் கோப்பையை ஏந்தியபடி பிசினஸ் டீலிங் பேசிக் கொண்டிருந்தனர்..
” இவனெல்லாம் ஒரு மனுசன்னு சொல்லி எப்படித்தான் அந்த பொண்ணு கல்யாணம் பண்ணிக்கிச்சோ தெரியல..” கையில் இருந்த திரவத்தை சுவைத்து கொண்டே பேசினார், அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவர்.
” அவன் அரக்கனா இருந்தாலும் அரசனாக அல்லவா இருக்கிறான்.. அதனால் தான் அந்த பொண்ணு கழுத்தை நீட்டிடுச்சு போல.. ஆயிரம் தான் சொல்லுயா எத்தனை தப்பு பண்ணினாலும் சரி அதுக்கப்புறம் கட்டு கட்டா பணத்தை தூக்கி எறிஞ்சா யாரு வேணாலும் நமக்கு சலாம் போடுவாங்க.. இப்படி தேவதை மாதிரி ஒரு பொண்ணு கழுத்தை நீட்டி நம்மளை கல்யாணம் கூட பண்ணிக்கும்.. அதுக்கு உதாரணம் தான் இந்த தீரன் “, என்று புறணி பேசினார் இன்னொருவர்.
” ஆனா அந்த பெண்ணை பார்த்தால் காசுக்கு ஆசைப்பட்டு வந்த மாதிரி தெரியலையே.. ரொம்பவே அப்பாவி பொண்ணா இருக்கா..”, என்று இன்னொருவர் வக்காலத்து வாங்கினார்.
“யோவ் நீ வேற எங்க இருக்க?? இந்த காலத்தில் அப்பாவியா இருக்கிற பெண்களை தான் நம்ப முடியாது”, என்று இன்னொருவர் கருத்து சொன்னார்.
இவர்களின் சம்பாஷனைகள் அனைத்தையும் தாண்டி அந்த அரண்மனைக்குள் நுழைந்தால், அங்கேயும் ஒரு சில கூட்டம் கையில் கோப்பையை ஏந்தியப்படி, இன்னும் சிலர்.. கையில் ஏகப்பட்ட உணவு வகைகள் நிறைந்த தட்டுடன் நின்று கொண்டு கதைத்துக் கொண்டிருந்தனர்..
சற்று நேரத்தில் வேகமாக அங்கே ஓடி வந்த அந்த அரண்மனை சேவகன்..
” இன்னும் அஞ்சு நிமிஷத்துல உங்க எல்லாரையும் இங்கிருந்து கிளம்ப சொல்லிவிட்டார் ஐயா.. அதனால சத்தம் போடாம எல்லாரும் கிளம்பிடுங்க இன்னும் அஞ்சு நிமிஷத்தில்.. அதற்கு மேல் இங்கே யாரும் நின்று பேசக்கூடாது… யாருடைய சத்தமாவது கேட்டது என்றால் அவருக்கு கோபம் வந்துடும்”, என்று எச்சரித்துவிட்டு பிறகு அவன் தன் வேலையை பார்க்க சென்று விட்டான்.
அந்த சேவகன் வந்து சொல்லிவிட்டு போன அடுத்த நிமிடமே ஒருவர் முகத்தை இன்னொருவர் பார்த்துக்கொண்டு,” என்ன செய்றது?? எல்லாம் தலையெழுத்து.. இந்த ஆள் கூப்பிட்டா வந்தாகணும் வேற வழி இல்ல.. வந்ததுக்கு நல்ல மரியாதை கொடுத்து அனுப்புறான் இதையும் நாம ஒன்னும் சொல்ல முடியாது கிளம்பி தான் ஆகணும்.. காரணம் ,அவனுடைய பிசினஸ் டீலிங் நமக்கு ரொம்ப முக்கியம்.. பேசாமல் கிளம்பிடுவோம் இங்கிருந்து மரியாதை போறதுக்குள்ள” என்று வாய்க்குள் முணுமுணுத்து கொண்டே அங்கிருந்து அனைவரும் கிளம்பி சென்றனர்..
சொன்னது போலவே அடுத்த ஐந்தே நிமிடத்தில் அங்கிருந்த அனைவரும் கிளம்பி சென்று விட்டார்கள் கல்லடி பட்ட காக்கை கூட்டம் போல…
மார்பிள் கற்களாலான தரையை கடந்து மாடிக்கு சென்றால் வரிசையாக கிட்டத்தட்ட பத்து அறைகள் அங்கு இருந்தது..
அனைத்துமே அழகுக்காக கட்டப்பட்டு பூட்டியிருந்தது.. அதில் ஒரு சில அறைகளை மட்டுமே உபயோகித்துக் கொண்டிருந்தார்கள்..
முக்கியமாக, அந்த பத்து அறைகளில் ஒரே ஒரு அறை மட்டும் மிகவும் வித்தியாசமாகவும் அலங்காரம் செய்யப்பட்டு பிரம்மாண்டமாகவும் காட்சியளித்தது..
அந்த வீட்டு முதலாளியின்.. இல்லை இல்லை.. கிட்டத்தட்ட அந்த அரண்மனையின் அரசனான ஆகர்ஷதீரனின் அறை என்பதற்கு அடையாளமாக அந்த அறை கதவிலேயே அவனுடைய பெயர் பொறிக்கப்பட்டு டோன்ட் டிஸ்டர்ப் என்கிற போர்டும் தொங்கி கொண்டிருந்தது..
அறையின் கதவை நெருங்கும் முன்னமே அதிலிருந்து வரும் பாட்டின் ஓசை காதை கிழித்தது..
“ஆசையை காத்துல தூது விட்டு…….”, என்று முழங்கிக்கொண்டிருந்தது அந்த இசை….!!
கிட்டத்தட்ட மினி பங்களா போன்ற சைஸில் இருந்தது அந்த அறை..
அங்கேயே குளியலறை சிறிய மாடுலர் கிச்சன், உடை மாற்றும் அறை, உடற்பயிற்சி செய்வதற்கான மினி ஜிம், பால்கனி என்று சகல வசதியுடன் இருந்தது அந்த அறை..!!
தரையில் ரெட் கார்பெட் விரித்து அறையெங்கும் பூ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது..
அங்கே..
ஜன்னல் வழியே தெரியும் நிலவை வெறித்த வண்ணம்.. அலங்காரம் செய்யப்பட்டு தலை நிறைய பூச்சூடி அழகிய தேவதை போல நின்று கொண்டிருந்தாள் அகமித்ரா.
எல்லா பெண்களுக்கும் இருப்பது போல இவளுக்கும் கல்யாண ஆசை, கனவுகள் என்று எல்லாமே இருந்தது..
ஆனால் கனவு மட்டுமே அவளால் காண முடியும் போல இறுதிவரை..!!
கழுத்தில் தொங்கி கொண்டிருந்த மஞ்சள் கயிறு.. அவள் திருமதி ஆகிய ஆறு மணி நேரம் ஆகிவிட்டது என்பதை பறை சாற்றியது..!!
புதுமணப் பெண்ணிற்கே உண்டான பூரிப்பும் வெட்கமும் அவள் முகத்தில் தென்படவில்லை.. மாறாக கண்களில் கண்ணீரும் சோகமும் ஒரு வித பயமும் அவள் முகத்தை ஆட்கொண்டிருந்தது..!!
உள்ளத்தில் இருக்கும் பயத்தால் உள்ளங்கை முழுக்க வேர்த்து கொட்டியது..
படபடப்புடன் பௌர்ணமி நிலவை வெறித்து கொண்டிருந்தவளின் காதருகில் அந்த கம்பீரமான குரல் ஒலித்தது..!!
” இப்படியே எத்தனை நேரத்துக்கு வானத்தையே முறைச்சி பார்த்துட்டு நின்னுட்டு இருப்ப?? நீ கனவு காணுவதற்கு இது நேரமில்ல.. ம்ம்.. சீக்கிரம் வா” என்றவன் கைகள், அவள் தோளில் அழுந்த படிந்தது..!!
அடக்கடவுளே நிம்மதியாக கண்ணீர் கூட வடிக்க முடியவில்லையே?? அதற்குள் வந்து நின்று விட்டானே?? என்று எண்ணிக்கொண்டு பயத்துடன் அவனை திரும்பிப் பார்த்தாள் அகமித்ரா.
ஆறடி உயரத்தை விட சற்று ஒரு அடி கூடுதலாக வளர்ந்திருந்தான் அவன்.. அலை அலையாய் கேசம் புரண்டது, கூர் நாசி, துல்லியமாக ஆட்களை எடை போடும் அந்த சிறிய கண்கள் அவளை மேலும் கீழுமாக ஒரு பார்வை பார்த்து வைத்தது..
பார்ப்பதற்கு கம்பீரமாக போர்வீரனை போல காட்சியளித்தான் ஆகர்ஷதீரன்..!!
கிட்டத்தட்ட போர் புரிவதற்காகத்தான் காத்திருக்கிறான் அவன்.. ஆனால் என்ன அந்த போர் மைதானத்தில் நடக்காமல் மயிலிறகை விட மென்மையான மெத்தையில் நடக்க போகிறது அவ்வளவே…!!
” என்ன நான் பாட்டுக்கு பேசிக்கிட்டே இருக்கேன் நீ என்னவோ பேய பாக்குற மாதிரி பாத்துட்டு நின்னுட்டு இருக்க வா”, என்று கூறியவன் அவளுடைய பதிலை கூட எதிர்பார்க்காமல் சட்டென்று அவளின் கைகளை இறுகப்பற்றி அவளை அழைத்துச் சென்றான்.
” இல்ல.. அது வந்து.. அது.. எனக்கு கொஞ்சம்..”, என்று அவள் பேசுவதற்கு தடுமாற..
” என்ன எதுக்கு இப்போ இத்தனை பதட்டம்?? ஏற்கனவே பேசி வச்சு எல்லாமே சரியா தானே நடந்திருக்கு.. என்னவோ புதுசா உன்னுடைய விருப்பமே இல்லாமல் இந்த கல்யாணம் நடந்த மாதிரியும் உன்னுடைய விருப்பமே இல்லாமல் இப்போ நான் உன்னுடைய கையை பிடிக்கிற மாதிரியுமில்ல இருக்கு.. இங்க பார் பேசியபடி எல்லாமே நமக்குள் நடக்கணும் அதுக்காகத்தான் உனக்கு அத்தனை பணம் கொடுத்திருக்கேன்.. உன்னுடைய கஷ்டத்துக்காக நீ உதவி கேட்ட.. என்னுடைய தேவையை தீர்ப்பதற்காக நானும் உன்னை யூஸ் பண்ணிக்கிறேன்.. இதுல தப்பு ஒன்னும் இல்லையே.. ஏற்கனவே தெளிவா பேசி உன்னுடைய ஒப்புதலோடு தான இதெல்லாம் நடக்குது?? அப்புறம் என்ன மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கிற??”, கண்கள் சிவக்க சீற்றமாக கேட்டான் அவன்..!!
“ அப்படி எல்லாம் இல்ல நிச்சயமா நான் கொடுத்த வாக்கை மீற மாட்டேன்.. ஆனால் என்னவோ தெரியல என்னுடைய மனசு ஒரு மாதிரி….”
” என்ன?? என்ன ஒரு மாதிரி இருக்கு இப்போ?? இல்லாத பொல்லாத கதை எல்லாம் சொல்லி என்னை டென்ஷன் பண்ணாத.. அப்புறம் நான் பொல்லாதவன் ஆயிடுவேன்.. மனுஷ ரூபத்தில் இருக்கிறேனே ஒழிய என்னுடைய குணம் ஒன்னும் அப்படி கிடையாது என்று உனக்கு தெரியாது.. அந்த குணத்தை நீ பார்க்கணும் உணரணும்னு கனவில் கூட நினைச்சிடாத உன்னால தாங்கிக்க முடியாது. ஒழுங்கு மரியாதையா இப்பவே நான் சொல்லும்போது வந்துடு நேரமாகிட்டே இருக்கு”, அருகில் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடலை தாண்டி அதிகபட்ச டெசிபலில் ஒலித்தது அவனுடைய குரல்..
அவன் போட்ட கூச்சலில் பயந்து நடுங்கியவள் அடுத்த நொடி எதையும் எதிர்த்து பேசாமல் அமைதியாக அவன் இழுத்த இழுப்பிற்கு சற்று அசைந்து கொடுத்தாள்..
” நான் பேசுறது கொஞ்சம் கேளுங்க.. நான் என்ன சொல்ல வரேன்னா “, என்று முழுதாக அவள் சொல்லி முடிக்கும் முன்பே அவளுடைய குரல்வளையை பிடித்து நெறித்திருந்தான் அவன்.
” ஏய் இங்க பாரு.. சும்மா , நான் ஒன்னும் உன்னை காதலிச்சு கல்யாணம் பண்ணி இப்போ ஒன்னும் உன்னை கொஞ்சி கூட விளையாடுறதுக்கு ஃபர்ஸ்ட் நைட் ரூம் குள்ள கூட்டிட்டு வரல.. உன் மேல காதலும் கிடையாது எந்த கான்றாவியும் கிடையாது.. எனக்கு தேவை சந்தோஷம் திருப்தி.. அது எந்த பொண்ணு கிட்டயும் எனக்கு கிடைக்கலையே.. அதனாலதான் உன்னை கல்யாணம் பண்ணேன்.. அது என்னவோ தெரியல உன்னை பார்த்த மாத்திரத்தில் உன்னை அடைந்தே தீரணும்னு எனக்குள்ள தோணுச்சு.. அதுக்கு விலை தான் உன் கழுத்தில் தொங்குற இந்த தாலி, உனக்கு நான் கொடுத்த பத்து லட்சம் பணம்.. இது எல்லாத்தையும் வாங்கிட்டு கடைசில என்னுடைய ஆசையை நிராசை ஆக்கலாம் என்று நெனச்சா.. அதுக்கப்புறம் எதுக்காக இதையெல்லாம் செய்வதற்கு நீ ஒத்துக்கிட்டியோ அதோட அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைத்து விடுவேன் ஜாக்கிரதை.. நான் சொல்றது உனக்கு புரியுது தானே..?? எந்த பொண்ணு கிட்டயும் எனக்கு கிடைக்காத திருப்தி சந்தோஷம் உன் கிட்ட கிடைக்கும்னு என் மனசு நம்புது.. அந்த நம்பிக்கையை பொய்யாக்க நான் விரும்பல.. அதை நான் அடைந்தே தீரனும்.. என்னைக்கும் என்னுடைய உள் மனம் பொய் சொல்லாது.. என்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்ள உன்னுடைய கழுத்தில் நான் தாலி கட்ட வேண்டிய அவசியமே இல்லை.. ஆனால் என்னுடைய அம்மாவின் வற்புறுத்தலால் தான் இந்த திருமணமே நடந்தது.. உடம்புக்கு முடியாமல் படுத்திருக்கும் அவர்களுடைய கடைசி ஆசை என்னுடைய கல்யாணம் தான்.. எனக்கு எப்படியாவது கல்யாணம் பண்ணி பார்க்கணும்னு அவங்க ஆசைப்படுறாங்க அதனால தான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. அவங்க ஆசை நிறைவேறின மாதிரியும் ஆச்சு என்னுடைய தேவை தீர்ந்த உன்னுடைய பிரச்சனைக்கு முடிவு கொண்டு வந்த மாதிரியும் ஆச்சு.. மொத்தம் ஒரே கல்லில் மூன்று மாங்கா.. இத்தனை விஷயத்தையும் உன்கிட்ட நான் ஏற்கனவே எடுத்து சொல்லிட்டேன் மறுபடியும் இப்ப நான் சொல்றேன்.. சும்மா சும்மா பழசையே பேசி என்னை டென்ஷன் பண்ணாத ஒழுங்கு மரியாதையா சீக்கிரமா வந்து சேரு”, படபடவென்று பொரிந்து தள்ளியவன் அடுத்த கணம் அவளுடைய கையை பற்றி இழுத்து கட்டிலுக்கு அழைத்துச் சென்றான்..
என்ன நினைத்தானோ தெரியவில்லை இப்படியே பேசிக் கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாதே.. மயிலே மயிலே இறகு போடு என்றால் அது போடாது நாம் தான் பிடுங்கி எறிய வேண்டும்… என்று எண்ணிக்கொண்டவன் அவளை தூக்கி கட்டிலில் கிடத்தி விட்டு அவள் மீது படர தொடங்கினான் , நொடியும் தாமதிக்காமல்..!!
– தொடரும்..
