தனது நண்பன் கேட்டதை தனியறையில் தனது மனைவியிடம் கேட்டான் விஜயராகவன். அவனுக்கும் குழந்தை ஒன்று பிறந்தால் இன்னமும் தங்களது வாழ்க்கை நிறைவாக இருக்குமே என்று தான் தோன்றியது. இதைப் பெரியதாக எடுத்துக்கொண்டு அதற்க்கு பதில் சொல்ல திவ்யாவுக்கு இஷ்டமில்லை.
“லீவ் இட் டா , இப்போ உன்னோட பிரெண்ட் கேக்காத வரைக்கும் உனக்கும் குழந்தை வேணும்னு தோணவே இல்லைதானே? அப்படி இருக்கும் பொழுது பொதுவுல யாராவது நம்ம அந்தரங்க வாழ்க்கைகுள்ளே நுழைஞ்சா அதற்கு ஏன் ரியாக்ட் செய்யணும்?
லுக் ,இப்போ நாம குழந்தைக்கு பிளான் பண்ண வேணாம்.எனக்கு இன்னமும் கொஞ்சம் சுதந்திரமா இருக்கணும்.நமக்குள்ள புரிதல்,காதல் ரெண்டும் அதிகமாகணும்.குழந்தையே பிறந்தாலும் அது நெக்ஸ்ட் தான். அந்த மனசு பக்குவம் வந்த பிறகு குழந்தை பத்தி யோசிக்கலாம் “என்று முடித்துவிட்டாள்.
அதற்குமேல் பேசுவதற்கு அவளுக்கு ஒன்றும் இல்லை என்பது போல் தூங்கவும் சென்றுவிட ,மனது சரியில்லை என்று மொட்டை மாடிக்கு சென்று விட்டான் அவன் திரும்ப வீட்டுக்குள் தனது கையிலிருக்கும் சாவியை வைத்து திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான். நடந்தவற்றின் எந்த தாக்கமும் இல்லாமல் அவள் நிச்சலமாக தூங்கிக்கொண்டிருந்தாள்.
திருமண நாளுக்கான சந்தோசம் எங்கோ மூலையில் பதுங்கிக்கொண்டிருப்பதை போல் உணர்ந்தவன் கட்டிலின் மறுபக்கத்தில் சென்று படுத்துக்கொண்டான். அவன் படுத்த அடுத்த பத்தாவது நிமிஷத்தில் அவனது தோள்வளைவில் தலையை வைத்துக்கொண்டு தூக்கத்தை தொடர, அவனோ தூக்கத்தை தொலைத்தான். ஏனோ மனதில் ஒரு சலிப்பு ஏற்படத்தான் செய்தது.
மனதின் எண்ணங்களை ஒதுக்கி வைத்துவிட்டு அவளை கட்டியணைத்துக்கொண்டு உறங்க முயற்சிசெய்தான்.அது வெறும் முயற்சிதான்.அவனது மனம் முழுவதும் குழந்தை பற்றிய ஆசைகள் துளிர்விட ஆரம்பித்திருக்க,அதற்க்கான முயற்சிகளில் இறங்கினால்தான் என்ன என்ற கோணத்தில் சென்றது அவனது யோசனைகள்.
அடுத்து வந்த நாட்களில் இருவரும் அதிகமாக பேசிக்கொள்ளவில்லை. இருவரின் தேவைகளும் வெவ்வேறாக இருக்க ,அவர்களிடையே நீண்ட பெரும் மௌனம்.அது பகலில் தான். இரவில் கட்டியணைத்துக்கொண்டு உறங்குவது மட்டும்தான். மற்றவகையில் இணையை தேடவே இல்லை.
பத்து நாட்கள் சென்றிருக்க அவளது மாதாந்திர நாட்களும் முடிந்துவிட்ட நிலையில் அவளுக்கு அவன் மீதான அதிகமான தேடுதல். இவ்வளவு நாட்கள் இருவரும் ஒதுங்கி இருந்து பழக்கம் இல்லை.அது வேறு மனதை அரித்தது. “ஆனாலும் இவனுக்கு இவ்வளவு பிடிவாதம் கூடாது ” என்று தான் நினைக்கத் தோன்றியது அவளுக்கு.அதற்க்கு மேல் அவன் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறான் என்பதைப் பற்றிய யோசனைகளை அவள் தவிர்த்தாள் என்றுதான் சொல்ல வேண்டும்.
அவளுடைய ஆசைகளுக்கு வளைந்து கொடுத்தவன்,தன்வரையில் பாதுகாப்பு சாதனங்களை தவிர்த்துவிட்டான். மோகத்தின் உச்சத்தில் அவளாலும் அதை பெரியதாக கவனிக்கமுடியவில்லை. அப்படியும் கரு ஒன்றும் அவள் வயிற்றில் தங்கிவிடவில்லை. அதுவே அவனிடம் சோர்வையும், அலட்சியத்தையும் கொடுத்துவிடவே இருவருமே கருத்தடை சாதனங்களை பெரியதாக கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.ஒருவருஷம் கழிந்த பிறகு, திடீரென அலுவலகத்தில் அவன் இருந்த தளத்துக்கு வேகமாக வந்த திவ்யா,” ஹேய், கம்,லெட்ஸ் கோ டு அர் ஹோம் . இட்ஸ் அன் எமெர்ஜென்சி” என்று வந்து நின்றாள். அவள் என்ன சொல்கிறாள் என்று புரிந்து கொள்ள முடியாதவனாக ,” வாட் ஹாப்பேன் திவி. ஐ ஹவ் சம் அர்ஜென்ட் ஒர்க்.” என்று கடுப்படித்தான். அவன் பொய் ஒன்றும் சொல்லவில்லை.அவளை தட்டிக் கழிக்கும் எண்ணமெல்லாம் நிச்சயமாக இல்லை. அவனுக்கு அன்றே முடித்துக்கொடுக்க வேண்டிய முக்கியமான வேலை இருந்தது தான். அவனது பக்கத்திலிருந்து முடித்துக் கொடுக்காமல் விட்டால், இவ்வளவு தூரம் அந்த டீலை எடுத்துக்கொண்டு வந்தது எல்லாம் ஒன்றுமே இல்லை என்று ஆகி விடும்.
அவன் தன்னை திரும்பியும் பார்க்காமல் கணினி திரையை பார்ப்பதும் அருகில் வைத்திருக்கும் நோட்பாடில் எழுதுவதுமாக பார்த்தவளுக்கு கண்களில் நீர் நிறைந்தது. அவனுக்கு தன் மீதான அக்கறை குறைந்ததாக, அலட்சியம் செய்வதாக உணர்ந்தவள் ,மேற்கொண்டு அவனிடம் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அன்று மதியத்திற்கு லீவுக்கு மெயில் அனுப்பியவள் முகத்தில் ஒரு ஏளனப் புன்னகை புதியதாக வந்து அமர்ந்து கொண்டது.
அந்த மெயில்லை அப்ப்ரூவ் செய்ய வேண்டியவன் அவளது கணவனே! தனது கைப்பையையும், மொபைல் போனையும் எடுத்துக்கொண்டவள் , லேப்டாப் பேக்கை எடுத்து தோள்களில் மாட்டிக்கொண்டாள். உடம்பு வெகுவாக சோர்ந்துபோய் இருந்தது. ஏதோ சொல்ல முடியாத உணர்வு. தலை சுற்றல், வாந்தி வரும்போல் என்னென்னவோ செய்யவே தான் தன்னால் சமாளிக்க முடியாது என்று கணவனிடம் சென்று நின்றது.
இதுவரை மனைவி இப்படி தன்னிடம் வேலை நேரத்தில் வந்து நின்றிருக்கிறாளா என்று யோசிக்க மாட்டானா என்று ஆதங்கம் வேறு. உபேரில் காரை புக் செய்தவள் வீட்டுக்கு சென்று படுத்துவிட்டாள்.யாராவது அருகே இருந்தால் பரவாயில்லை என்று தோன்றவே, கழிவிரக்கத்தில் மீண்டும் ஒரு கண்ணீர். அப்படியே தூங்கியும் போனாள்.
மாலை அவன் வரும் வரையில் அவளால் எழுந்திருக்கவே முடியவில்லை.வீட்டுக்குள் அவன் நுழையும் பொழுது விளக்குகளை கூட போடாமல் அப்படி ஒரு உறக்கம் திவ்யாவினிடத்தில். விளக்குகளை எரியவிட்டவன் மனைவி தங்கள் அறையில் இருப்பாள் என்று தேடிக்கொண்டு போனான்.அங்கே அவள் இல்லை என்றதும் கீழே கெஸ்ட் ரூமில் சென்று பார்த்தான்.அவள் ஆழ் உறக்கத்தில் இருந்தாள்.
நெற்றியை சுருக்கியவன் அவள் அருகில் சென்று தொட்டுப் பார்த்தான். உடம்பு கொதித்தது. நெற்றியில் லேசாக தட்டிக்கொண்டவன்,அவளை நிதானமாக எழுப்பி பார்த்தான்.அவள் அசைந்து கொடுக்கவே அவளை எழுப்பினான்.கண்ணை திறந்தவளுக்கு கண்கள் எரிந்தது. லேசாக சிவந்திருக்கும் கண்களின் உஷ்ணம் தாங்காமல் நீர் வழிய,அவளை தன்னிடம் இறுக்கி விடுவித்தவன்,”சாரி டா, வேலை ரொம்பவே அதிகமா இருந்திச்சி. நீயாவது உடம்பு சரியாய் இல்லன்னு சொல்லியிருந்திருக்கலாம்ல்ல ?” என்று உருகினான்.அவள் அதற்க்கு ஒன்றும் சொல்லவில்லை.அவளை அழைத்துக்கொண்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்றான்.
இவளது உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர் , நாடித்துடிப்பில் இவள் கர்ப்பமாக இருக்கிறாள் என்று ஐயம் கொண்டார். கர்ப்பிணியாக இருக்கும் பட்சத்தில் சில மருந்துகளைக் கொடுக்கக் கூடாதே என்று அடிப்படை மருந்துகளை மட்டும் எழுதி தந்தவர், “கொஞ்சம் ஜுரம் இறங்கியதும் கர்ப்பமா இருக்காங்கலானு உறுதி செஞ்சுக்கோங்க. கிட் மெடிக்கல் ஷாப்புல கிடைக்கும். திரும்ப ஜுரம் இறங்கலைன்னா வாங்க. கர்ப்பமா இருக்குற பட்சத்தில் ஜுரம்னா கூட நீங்க கைனக் பாக்குறது நல்லது.”என்று அனுப்பி வைத்தார்.
ஜுரம் இரண்டு நாட்களில் இறங்கிவிட்டது. மருத்துவர் பரிந்துரை செய்தபடிக்கு வீட்டிலேயே கர்ப்பத்தை உறுதி செய்து மீண்டும் சிறப்பு மருத்துவரிடம் அழைத்தும் சென்றான். திவ்யா உடல்நிலை காரணமாக ஒருவாரமாக வீட்டில் தான் இருக்கிறாள்.முதல் இரண்டு நாட்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்தவன் அலுவலகம் செல்லாமல் இயலாது என்று தவிர்க்க முடியாமல் கிளம்பி செல்ல வீட்டில் திவ்யா தனியாக இருந்தாள்.
தனது பெற்றவர்களுக்கு அழைத்து சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டான் அவன். திவ்யாவுக்கு எரிச்சலாக இருந்தது.இவளது பெற்றவர்கள் இப்போது ஆந்திரா பக்கத்தில் இருப்பதாக நெருங்கிய உறவினர் மூலம் ஏற்கனவே தெரிந்து வைத்திருந்தவளுக்கு அவர்களது அலைபேசி எண்ணும் இருந்தது. ஏற்கனவே அழைத்து பேச முயன்றவளுக்கு அவர்களிடமிருந்து கிடைத்தது ராங் நம்பர் என்ற வார்த்தையே!
இப்போது அவன் தனது பக்க நெருங்கியவர்களுக்கு இவளது கர்ப்பம் குறித்து சொல்லி ஆர்ப்பரித்த சமயத்தில்’ தான் ‘தனியாக இருப்பதாக உணர்ந்தாள். தனிமை அவளது உணர்வுகளுக்கு தூபம் போட்டது.வீட்டில் யாராவது பெரியவர்கள் இருந்திருந்தால் அவளுக்கு கண்டபடிக்கு தோன்றியிருக்காதோ என்னவோ! காலையில் வந்து சமையல் வேலையை கவனிக்க ஒரு பெண்மணி இருக்கிறார்.காலையில் சமையலை அவர் முடித்துவிட்டு சென்றுவிடுவார். வீட்டையும் தோட்டத்தையும் சுத்தம் செய்யவும் ஆட்கள் இருவர் உண்டு. tஅவர்கள் யாரும் வீட்டு மனிதர்கள் ஆகிவிட முடியாதே! அவர்களும் வேலையை முடித்துவிட்டு சென்று விடுவார்கள். வெளியே சாப்பிட்டு வருவது வழக்கமாக இருக்கிறது. இந்த ஒரு வாரமாக சமைக்கும் பெண்ணை மாலை வரை இருக்க சொல்லிவிட்டான் அவன்.
வீட்டில் இருக்கும் கணவனும் மனைவியும் அலுவலகம் சென்றுவிடுவார்கள்.தேவையில்லாமல் அந்நிய மனிதர்கள் புழங்குவானேனேன்? என்று வாணி செய்து வைத்த ஏற்பாடு. திவ்யாவுக்கு வாந்தியும்,மயக்கமும் படுத்தி எடுத்தது. எப்போதும் படுத்தே இருப்பது சுகம் என்பது போல உடல்நிலை.சரியாக சாப்பிடவே முடியவில்லை.
ஒருவாரம் கழித்து அலுவலகம் சென்றவளுக்கு வேலை செய்யவே முடியவில்லை.தூக்கமாக இருந்தது.மேலதிகாரியிடம் சென்ற அன்றே திட்டுக்கள் வாங்கினாள். இத்தனை நாட்களாக சேர்த்து வைத்திருந்த நல்ல பெயர் என்னாவது என்று குழப்பம். கணவனோ அலுவலக வேலை கழுத்தை நெறிக்க மனைவியுடன் தனிப்பட்ட நேரத்தை அதிகப் படுத்த முடியாமல் திணறினான்.கணவன் தன்னை கண்டுகொள்ளவில்லை என்று கோவம். தனிமை என்று எக்கச்சக்க மனா அழுத்தம். போதாத குறைக்கு வயிற்றுப்பக்கமும் கால்களிலும் அரிப்பு வேறு. லோஷனுக்கு கட்டுப்படுவேனா என்று இருந்தது.
எல்லாமுமாக சேர்ந்து இரவு வீடு வந்த கணவனிடம்,”எனக்கு இப்போ இந்தக் குழந்தை வேணவே வேணாம்.குழந்தை பெத்துக்கற மனநிலைல நா இல்ல. உடம்பும் ரொம்பவே படுத்துது.வேலைக்கு போனா அங்கே கான்செண்ட்ரைட் செஞ்சு வேலை செய்யவே முடியல.வீட்டுல கவனிக்க ஆளில்ல. சோ,அப்பார்ட் பண்ணுறதா முடிவு செஞ்சிருக்கேன் ” என்றுவிட்டாள்.
அவ்வளவு நேரம் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தவன் அவளது கடைசி வார்த்தையில் காயப்பட்டு,அவளை அறைந்து விட்டான். அன்று தொடங்கியது அவர்களிடையேயான பிரச்சனைகள்.
அடுத்த ஒருவாரம் இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை.மருத்துவரை பார்க்க முடியாது என்று தீர்மானமாக இருந்தாள் திவ்யா. “உனக்கு முடியலைன்னா வீட்டுலேந்து வேலை செய்யு திவி. நா மேனேஜ்மண்டுல கேக்குறேன்.நம்ம ஆபிஸ்ல இதுமாதிரி நிறைய ப்ரெக்னென்ட் லேடீஸ் வீட்டுலேந்து ஒர்க் செய்ய பர்மிஷன் உண்டு. அதிகம் வேலையும் குடுக்க மாட்டாங்க “என்று இறங்கி வந்து பேசியவனிடம் பொங்கிவிட்டாள் பெண்.இப்படியே போனால் தன்னுடைய கேரியர் என்னவாகும் என்ற கவலையில் அவளது பிரஷர் கூடியது. அவனுக்கு மனைவியை எபப்டி கையாள்வது என்று தெரியவில்லை.எல்லாவற்றிற்கும் கோவம் கொண்டாள். தனது பெற்றவர்களிடம் புலம்பினான்.அவனது அப்பாவோ,” நா வேணா அம்மாவை அங்கே வர சொல்லவா? ஒரு வருஷம் அம்மா உங்களோட இருக்கட்டும்.இங்கே நானும் ரோஷியும் சமாளிச்சுப்போம். நீயும் உன்னோட மனைவிகிட்டே கேட்டு சொல்லு “என்றார்.
அவர்களின் மருமகள் . அந்த வார்த்தையை கூட உரிமையாய் அவர்களால் உச்சரிக்க முடியவில்லை என்று தான் அவனுக்கு தோன்றியது.
