பகுதி 2
“என்னங்க, கிணத்துல போட்டு கல்லு மாதிரி அமைதியா இருக்கீங்க. உங்க பையனுக்கு என்ன இப்போதான் 18 வயசுனு நினைப்பா, அதான் உங்க தங்கச்சி அவ்வளவு தூரம் சொல்றாளே.. நீங்களாது பேசி, அவனை கல்யாணத்துக்கு ஒத்துக்க வைக்க கூடாதா” என்றார் லட்சுமி.
“இங்க பாரு லட்சுமி, அவன் ஒரு விஷயம் வேணாம்னு முடிவு பண்ணிட்டா.. வேணாம் தான். அவங்குணம் தெரிஞ்சும், திரும்பத் திரும்ப அதையே பேசி அவன்கிட்ட வாங்கி கட்டிக்காத” என்றார், பைரவனின் தந்தை பரமசிவம்.
“அதானே, என்னைக்கு நீங்க அவன் பேச்சுக்கு எதிர்பேச்சு பேசினீங்க, இப்போ பேசுறதுக்கு. ஊர்ல இருக்க இவன் வயசு பசங்க எல்லாம் போய் பாருங்க, எல்லாம் கல்யாணம் பண்ணி குழந்தை குட்டியோட இருக்கானுங்க. அவ்வளவு ஏன் இவனோட சுத்துறானுகளே ரெண்டு பேரு, அவனுங்களுக்கு கூட கல்யாணம் ஆயிடுச்சு. ஆனா இவன் மட்டும் இன்னும் தனிமரமாவே சுத்திக்கிட்டு இருக்கான்” புலம்பி தள்ளும் மனைவியை கண்டு பரமசிவத்திற்கு எரிச்சல் தான் வந்தது.
“ஏண்டி, அவன் என்ன கல்யாணமே வேணாம்னா சொல்லிட்டான். திலகா மவளத்தானே வேண்டாம்ன்னு சொன்னான் (திலகா பரமசிவத்தின் தங்கை). என் தங்கச்சி மவளவிட்டா ஊர் உலகத்துல பொண்ணா கிடைக்காது. கொஞ்சம் அமைதியா இரேன்டி, வேற பொண்ணு பாப்போம்” சற்று பொறுமையாகவே மனைவியிடம் கூறினார் சிவம்.
ஆனால் அதை கேட்காத லட்சுமி
“இப்பவே 29 வயசு பிறக்கப்போகுது அவனுக்கு. இன்னும் பொறுமையா இருந்து, 40 வயசுல மகனுக்கு கல்யாணம் பண்ணலாம்னு முடிவு பண்ணியிருக்கிங்களா” ஹாலில் நின்று கோபமாக கேட்டார் லட்சுமி.
அதேநேரம் அங்கு வந்த பைரவன், “50 வயசுல கூட நான் கல்யாணம் பண்ணிக்குவேன். ஆனா, நீ சொல்ற பொண்ணை என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது” ஆத்திரமாக கூற..
“அதான் ஏன்னு கேட்குறேன். அந்த பொண்ணுக்கு என்ன குறைச்சல், அழகில்லையா அறிவில்லையா. அப்புறம் ஏன் அவளை வேண்டாம்னு சொல்ற” என்றார்.
“நீ வேணா அவங்க பேசினது எல்லாம் மறந்துட்டு, அவங்களோட சம்பந்தம் பண்ண தயாராகலாம். ஆனால் என்னால் அதெல்லாம் முடியாது” பிடிவாதமாக அவன் கூற…
“சொந்தக்காரங்க பேசுறது எல்லாம் பெருசா எடுத்துக்கிட்டா, அப்புறம் உறவு நீடிக்காது பைரவா…. அம்மா சொல்றத கேளுப்பா, ரேகா உன்மேல உயிரையே வச்சிருக்காடா” என்றார் கெஞ்சலாக.
“அது எப்படி மா, இவ்வளவு வருஷமா ரேகாவுக்கு என்மேல லவ் வராம இந்த ரெண்டு வருஷ அளவுல லவ் வந்திருக்கும். இது எல்லாம் நீ யோசிக்கவே மாட்டியா” அவன் தாயிற்கு புரிய வைக்கும் நோக்கில் கேட்க..
“இப்போ நீ என்னதான் சொல்ல வர பைரவா” என்றார் அவர்.
“நான் கஷ்டப்படற காலத்துல என்கூட இல்லாத எந்த உறவும், நான் சந்தோஷமா இருக்கிற டைம்ல எனக்கு வேண்டாம்னு சொல்ல வரேன். எனக்கு ரேகா வேண்டாம் அவ்வளவுதான்” என்றவன், அதற்கு மேல் அங்கு நிற்காமல் சென்றிருந்தான்.
செல்லும் மகனையே பார்த்த பரமசிவம், “லஷ்மி இதுக்கு மேல தயவுசெஞ்சு இதபத்தி பேச வேண்டாம், புரிஞ்சுதா. திலகா கேட்டா நான் பேசிக்கிறேன்” என்றவரும் மகன் பின்னே சென்றிருந்தார்.
தந்தையும் மகனும் தங்கள் நிறுவனத்தை நோக்கி வாகனத்தில் செல்ல, அப்போது.. “பைராவா அம்மா உனக்கு கல்யாணம் பண்ணனும்ன்ற ஆசைலதான், இப்படி எல்லாம் பேசிக்கிட்டு இருக்கா. நீ எதையும் மனதில் வச்சுக்காத” என்றவர்.. “உனக்கு இப்போ கல்யாணம் பண்ணிக்க சம்மதம்னா, நான் வேணா வேற இடத்துல பொண்ணு பாக்குறேன்” என்றார்.
உடனே பைரவன், “எனக்கு கல்யாணம் பண்ணிக்கிறதுல எந்த பிரச்சனையும் இல்லபா. ஆனா பொண்ணு கண்டிப்பா வசதியான வீட்டு பொண்ணா இருக்கக் கூடாது அவ்வளவுதான்” என்றான்.
இது என்ன மகன் இப்படி கூறுகிறான் என்று குழப்பமான பரமசிவம்.. “ஏன் பைரவா அப்படி சொல்ற” என்றார் அவனிடம்.
“அப்பா காரணமெல்லாம் கேட்காத. நான் சொல்ற மாதிரி பொண்ணு பாரு” என அத்தோடு முடித்துக் கொண்டவன், அலுவலகம் வந்து சேர்ந்ததால், வேகமாக உள்ளே சென்றான்.
“என்ன இவன் இப்படி சொல்லிட்டு போறான்” யோசித்தவர்…. “சரி கட்டிக்கு போறது அவன். அவன் இஷ்டப்படியே பொண்ணு பாப்போம்” என முடிவு செய்தார்.
அதேநேரம்.. இங்கே லட்சுமியை பார்க்க வந்த அவரின் நாத்தனார் திலகா, அவர் கூறியதை கேட்டு ஆத்திரமடைந்தார்.
“அர்ப்பணுக்கு வாழ்வு வந்தா அர்த்தராத்திரில குடை பிடிப்பான்னு சொல்லுவாங்க. அது இது தான் போல. கஞ்சிக்கும் கூழுக்கும் கஷ்டப்பட்டதெல்லாம் மறந்து போச்சு மாப்பிள்ளைக்கு. இப்போ பணம் வந்தவுடனே, என் பொண்ணயே வேணாம்னு சொல்றானோ. என் பொண்ணுவிட அப்படி எந்த உலக அழகி அவனுக்கு பிடிச்சிருக்காம். எதுக்காக அவளை வேண்டாம்னு சொல்றான் அவன்” கத்தி கூப்பாடு போட்டவரை முறைத்த கிருஷ்ணா..
“அத்தை தேவையில்லாம பேசாதீங்க. அதான் எங்க அண்ணன் வேணான்னு சொல்லிடுச்சில்ல. நீங்க வேற இடத்துல மாப்பிள்ளை பார்த்துக்கோங்க” என்றான் கோபமாக.
“பேசுவீங்கடா பேசுவீங்க, புதுசா பணம் வந்துருச்சில்ல. இப்படித்தான் பேசுவீங்க. பாக்கறேண்டா உங்க அண்ணனை விட வசதியான மாப்பிள்ளையா பார்த்து, ஊரே மெச்சுற அளவுக்கு என் பொண்ணுக்கு கல்யாணத்தை நடத்தி காட்டுறேன்டா” என்றவர், “உங்க அண்ணனுக்கு எப்படி கல்யாணமாகுதுன்னு நானும் பாக்கறேன்டா” என பொரிந்து தள்ளிவிட்டு புறப்பட்டார்.
அவர் பேசிய அனைத்தையும் கேட்டு அதிர்ந்து போய் நின்றிருந்த தாயிடம் வந்தவன்.. “பாத்தியாமா நம்ம அண்ணன் அவங்க பொண்ணை வேணாம்னு சொன்னவுடனே என்ன பேச்சு பேசுறாங்கன்னு. இப்படிபட்டவங்களுக்காக தான் நீ அண்ணன்கிட்ட அவ்வளவு பேசின” என்ற இளைய மகனின் பேச்சில் சங்கடமாக உணர்ந்த லட்சுமி.
“ச்சே, எப்படி பேசிட்டு போயிட்டா, “இனிமே இவகூட சங்காத்தமே வச்சிக்க கூடாது” என முடிவெடுத்தார்.
*******
அலுகலக்கத்திற்குள் நுழைந்த தோழிகள் இருவரும் அவரவர் இடத்திற்கு சென்று அமர்ந்தனர்.
அப்போது, “என்ன இன்னைக்கு ரொம்ப சைலண்டா இருக்க மாதிரி ஃபீலாகுது. இப்படியே தினமும் இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும்” எண்ணியவாறே தன் வேளையை செய்து கொண்டிருந்த யாதவியின் முன் வந்து நின்றான் அவன்.
“ம்க்கும்” தொண்டையை செறுமியவனை கண்டதும் அப்படி ஒரு கோபம் வர, அதை அடக்கிக் கொண்ட யாது, “அடக்கடவுளே, ஒரு அஞ்சு நிமிஷம் நான் நிம்மதியா இருந்தது உனக்கு பிடிக்கலையா? உடனே இந்த இம்சையை அனுப்பிட்டியே” எண்ணியவள், அவனை நிமிர்ந்து பார்க்காமல், தன் வேலையை செய்து கொண்டிருந்தாள்.
உடனே அவன், “ச்சூ, ச்சூ, ச்சூ.. இந்த சின்ன வயசுலயே காது கேட்காம போயிடுச்சே பாவம்.. ம்ம்ம்ம்” பெருமுச்சு விட்டவன், பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு “இனிமே யார் உன்னை கல்யாணம் பண்ணுவாங்க” எனக்கூற..
“ரைட்டு, இன்னைக்கு ஒரு சம்பவம் உறுதி” மனதிற்குள் கூறிக் கொண்டிருந்தாள் யாது.
எப்படியாவது இன்று அவளை பேச வைத்தே தீர வேண்டும் என யோசித்த மோகன்.. மீண்டும் அவளை கேலி பேசியபடியே நின்று கொண்டிருக்க… அப்போது அங்கு வந்த வைரம்.,
“டேய், மொக்க மோகன் எதுக்கு டா என் ஃப்ரண்டை வம்பு இழுத்துட்டிருக்க” என்றாள் மிரட்டும் தொனியில்.
“ஆமா, அப்படியே உன் ஃப்ரண்ட வம்பு இழுத்துட்டாலும்” இழுவையாக கூறியவன்…
“இதுக்கு மேல என்ன பண்ணனும்னு எனக்கு தெரியல டைமண்ட், ப்ளீஸ்… அவகிட்ட சொல்லி என்ட்ட பேச சொல்லு” என்றான் கவலையாக.
“ஹே மோகன், உனக்குதான் அவளைபத்தி தெரியுமில்ல. கொஞ்சம் அவளுக்கான ஸ்பேஸ் குடுடா. அவளா உன்னை புரிஞ்சுகிட்டு உன்கிட்ட வருவா, அதுவரையும் நீ கொஞ்சம் பொறுமையா இரு” எனக் கூறியதும், தன் மனதிற்கினியவளை ஏக்கமாக பார்த்த மோகன் அவனுடைய இறுக்கைக்கு சென்றிருந்தான்.
அவன் அங்கிருந்து அகன்றதுமே அவனை தவிப்பாக யாதவி பார்க்க..
“ஏண்டி, அதான் அவன்மேல இவ்ளோ லவ் இருக்கே. அப்புறம் ஏன் அவனுக்கு, தண்டனை கொடுக்கிறேன்ற பேர்ல.. உன்னை நீயே தண்டிச்சுகிற” என்றாள் வைரம்.
அவள் பேச்சில் கண்கள் இரண்டும் கலங்கிபோய் தோழியை பார்த்த யாதவி.. “நானும் எல்லாத்தையும் மறக்கணுன்னு தான் நினைக்கிறேன்டி. ஆனா, என்னால முடியலயே… அவனை நினைக்கும்போது என்னை அறியாமலே எனக்கு அது ஞாபகம் வந்துடுதுடி. நான் என்ன பண்ணட்டும் சொல்லு” என்றவள், வைரத்தின் தோள் சாய்ந்தாள்.
“யாது மோகன்தான் அவ்வளவு தூரம் சொல்றான்ல. அப்றம் ஏன் நீ அதையே நினைக்கிற. ப்ளீஸ் அதுலருந்து வெளியே வா யாது. அவனுக்காக இல்லாட்டியும் உன் நிம்மதிக்காகவாது அதை மறந்துடு” தோழிக்கு ஆறுதல் கூறியவளின் மனம், “அவளிடத்தில் நீ இருந்தாலும் இப்படித்தான் யோசிப்பாயா” என்றது.
உடனே “ம்க்கும், இப்படி நான் யோசிக்கிற அளவுக்கு அவன் பண்ணிட கிண்ணிட போறான்” என நொடித்துக் கொண்டு.. யாதவியை சமாதானப்படுத்தியவள், தன்னுடைய வேலையை காண சென்றிருந்தாள்.
அதன்பின் மதியம் வரை வேலையில் கவனம் செலுத்திய தோழிகள் இருவரும்.. உணவு உண்ண சென்றிட, அப்போது வைரத்தின் அலைபேசி இசைத்தது.
உடனே அலைபேசியை எடுத்து பார்த்த வைரம்.. “என்ன இந்த டைம்க்கு அப்பா கால் பண்றாரு” யோசித்தவள், அதை எடுக்காமலிருக்க..
“ஏய், ஃபோன் அடிக்கிதுடி, எடுத்து பேசு” என்றாள் யாதவி.
உடனே அட்டேன் செய்தவள்.. “சொல்லுங்கப்பா” பதட்டமாக கேட்க..
மகளின் குரலை கவனித்த ஏகாம்பரம்.. “என்னம்மா, அப்பாதானே கால் பண்ணினேன். அதுக்கு ஏன் இப்படி பதட்டமாகுற” என்றார்.
“இல்லப்பா வழக்கமா இந்த நேரத்துக்கு நீங்க கால் பண்ண மாட்டீங்களே. அதான் யாருக்கு என்னவோனு கொஞ்சம் டென்ஷன் ஆயிட்டேன்” என்றாள் அவள்.
“நீ பயப்படுற மாதிரி எல்லாம் ஒன்னும் இல்லடா, எல்லாம் நல்ல விஷயம் தான்” என்ற தந்தையின் வார்த்தையில் சற்று ஆஸ்வாசமடைந்த வைரம்.. அவர் அடுத்து கூறியதைக் கேட்டு மின்னல் தாக்கியதைப் போல் உணர்ந்தாள்.
“என்ன விஷயம் ப்பா” என்று ஆவலுடன் கேட்டவளிடம்..
“என் ஃப்ரண்ட் மணி இருக்கானில்ல, அவன் பையன் கௌதம்க்கு உன்னை ரொம்ப புடிச்சிருக்காம். கல்யாணம் பண்ணிக்க ஆசைபடுறானாம். மணியும், அவனும் நேர்ல வந்து வீட்டில பேசிட்டு போனாங்க. எனக்கு அம்மாவுக்கும் இதுல பரிபூரண சம்மதம். அதனால சரின்னு சொல்லிட்டோம்” என்றவரின் வார்த்தையில் அதிர்ந்த வைரத்திற்கு… அதற்குமேல் அவர் கூறிய எதுவும் காதில் ஏறவேயில்லை.
“மாப்பிள்ளை ஃபோட்டோவை உன் ஃபோனுக்கு அனுப்பியிருக்கேம்மா, பாத்துக்கோ. இன்னைக்கு ஈவினிங் உன்னை மீட் பண்ண காபி ஷாப்க்கு வர சொல்லி இருக்காரு. மறக்காம ஆஃபீஸ் முடிச்சிட்டு போய் பார்த்து, பேசிட்டு வந்துருடா” அனைத்தையும் மடமடவென கூறியவர், அவளின் பதிலை எதிர்ப்பார்க்காமல் அழைப்பை துண்டித்திருந்தார்.
அழைப்பு துண்டிக்கப்பட்டது கூட தெரியாமல், அலைபேசியை காதிலே வைத்திருந்தவளிடம்… யாதவி.. “என்னச்சி இவளுக்கு ஃபோன் வழியா மந்திரம் ஏதும் போட்டுட்டாங்களா, இப்படி பிரம்மை புடிச்ச மாதிரி உட்கார்ந்திருக்க” என தோழியை உலுக்க.. அதில் தெளிந்தவள், உண்ணாமலே எழுந்து சென்றாள்.
தொடரும்…
ஸ்டோரி பத்தின கமெண்ட் சொல்லுங்க வாசகர்களே.. கொஞ்சம் பொறுமையாதான் கதை நகரும் போகப்போக ஸ்பீடு வந்துரும்.
