மொழி – 8

இந்த ஒரு வார காலமும் பல உணர்வுகளின் ரோலர் கோஸ்டராய் தான் யஷ்வந்தின் வீட்டில் கடந்திருந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக யஷ்வந்த் பவித்ராவின் திருமண விஷயம் வெளியில் கசிய தொடங்கவும். 

ஒவ்வொருவராக தொலைபேசியின் வாயிலாகவும், நேரில் பார்க்கும் பொழுது நேரிலும் என விசாரிக்க தொடங்கினர்.

அதன் வெளிப்பாடு கோபமாகவும், அவ்வப்பொழுது ஆதங்கமாகவும் அவர்களின் வீட்டில் பிரதிபலித்தது.

சிறியவர்களுக்கு இடையே மெல்லிய இணக்கம் தோன்றி இருந்தாலும், பெரியவர்களின் மனநிலை வெகுவாய் பாதிப்படைந்து இருந்தது.

காலம் அனைத்தையும் சீர் செய்யும் என்ற எண்ணத்தோடு யஷ்வந்தும், பவித்ராவும் அமைதி காத்தனர்.

பவித்ராவிற்கு யஷ்வந்தின் ஆதரவு அளப்பரிய ஒன்றாய் இருந்தது. அவனின் துணையும், பற்றுக்கோளும் இல்லாவிட்டால் இந்த இடத்தில் அவள் நிலைத்து நிற்பது என்பது சாத்தியம் இல்லாத ஒன்று தானே.

என்ன தான் கோபம், ஆதங்கம் என அதனின் தாக்கம் வீட்டில் பிரதிபலித்தாலும், யஷ்வந்தையும், பவித்ராவையும் வீட்டை விட்டு வெளியே அனுப்ப அவர்கள் யோசிக்கவில்லை. அவர்களின் திருமணத்தை ஏற்றுக்கொள்ள தான் செய்தனர்.

இந்த காலத்தில் காதல் திருமணம் எல்லாம் அத்தனை பெரும் குற்றமாய் பார்க்கும் அளவிற்கு அவர்கள் இல்லை. 

காலத்திற்கு ஏற்ப தான் அவர்களின் மனநிலையும் இருந்தது. ஆனாலும், அவர்களுக்குள் நிறையவே ஆதங்கம் இருந்தது என்னவோ உண்மை தான்.

கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீள முயற்சித்துக் கொண்டிருந்தனர். இவர்களின் திருமணத்தை ஏற்கவும் அவர்கள் தவறவில்லை. ஆனால், அந்த நாள் வரும் வரை..

சரியாக திருமணம் முடிந்து ஒரு வாரம் கழிந்திருந்தது. மறுவார சனிக்கிழமை அனைவருக்கும் விடுப்பு நாள்.

காலை 6:00 மணிக்கு எல்லாம் கண்விழித்த பவித்ரா எழ முற்படவும். அவள் நினைத்ததை செய்ய விடாமல் தடுத்திருந்தது யஷ்வந்தின் இறுகிய அணைப்பு.

அவனின் உறக்கம் கலையாதவாறு மெதுவாக அவனின் கையை அவள் விளக்க முயற்சிக்கவும்.

“ம்ம்ச்ச்… என்ன டி” என்றான் தூக்க கலக்கத்தில்.

அவளின் சிறு அசைவுக்கே அவனின் முகத்தில் அப்படி ஒரு சுணக்கம். அதில் அவளின் விழிகள் தாராளமாக விரிய, “நேரம் ஆகுது”.

“சோ வாட்?”.

“இன்னைக்கு சனிக்கிழமை”.

“ஏன் சனிக்கிழமைனா கட்டிப்பிடிக்க கூடாதா? ஏதாவது விரதமா?”. 

“மறந்துட்டீங்களா.. இன்னைக்கு எல்லாருக்கும் லீவ். போன வாரம் லேட்டா எழுந்து திட்டு வாங்கின போல இந்த வாரமும் வாங்கணுமா?” என்றதும்.

இதழ்கள் நிறைந்த புன்னகையோடு தன் ஒற்றை கண்ணை மட்டும் திறந்து அவளை கண்டவன் விஷமமாக புன்னகைத்து, “வாங்கினா மட்டும் என்னவாம்.. இதெல்லாம் ஸ்வீட் மெமரிஸ் டி” என்றான் மோக குரலில்.

அவனின் குரலே அவனின் மனநிலையை எடுத்துரைக்க. வேகமாக அவனின் கையை பிரித்து எடுத்தவள், “திட்டு வாங்குறது எல்லாம் மெமரிஸா” என்று அவனின் கையில் கிள்ளியும் இருந்தாள்.

“ஸ்ஸ்.. ஆஆ..” என்று அலறியவன், “என்னையே கிள்ளுறியா.. உன்னை என்ன பண்றேன்னு பாரு” என்று நொடி நேரத்தில் அவளை தன் ஆளுகைக்கு கீழ் கொண்டு வந்திருந்தான்.

சற்றும் இதை எதிர்பாராதவள் திகைத்து ‘ஆ’வென விழிக்கவும்.

தானாக முன் வந்து வழி கொடுத்த அவளின் இதழ்களை தன் வசம் ஆக்கிக் கொண்டான்.

அவளின் வார்த்தைகள் அனைத்தும் அவனுக்குள்ளேயே அடங்கிப் போனது.

அங்கே ஓர் மௌன யுத்தம் அரங்கேறியது. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தும், தட்டிப்பறித்தும் என காதல் சம்பாஷனைகளோடு கெஞ்சலும், கொஞ்சலுமாய் நிறைவு பெற விடாமல் நீட்டித்துக் கொண்டே சென்றான் யஷ்வந்த்.

அடுத்த அரை மணி நேரம் எப்படி சென்றது என்று இருவருக்கும் நினைவிலேயே இல்லை. 

அவனின் கொண்டாட்டத்தில் திண்டாடி அவன் கரங்களிலேயே துவண்டு போனாள் பவித்ரா. 

மூச்சு வாங்க அவளைப் பார்த்து அவன் தன் ஒற்றை கண்ணை சிமிட்டி சிரிக்கவும்.

அவனை முறைத்து பார்த்தவள், “நான் திட்டு வாங்கணும்னு தானே நீங்க வேணும்னே இப்படி எல்லாம் செய்றீங்க.. ஒரு நாளாவது திட்டு வாங்காம இருக்கலாம்னு பார்த்தா விட மாட்டீங்க போலருக்கே” என்றாள் கோபித்துக் கொண்டு.

“கூடிய சீக்கிரமே என் அம்மா முழு மனசோட உன்ன அவங்க மருமகளா ஏத்துக்கிட்டு தலையில தூக்கி வச்சு கொண்டாட போறாங்க பாரு”. 

“நிஜமாவா?” என்று அவள் தன் கண்களை உருட்டி பெரிதாக விரித்து கேட்ட தோரணையில், அவளில் மீண்டும் மையல் கொண்டான் அவளவன்.

அவளை பார்த்துக்கொண்டே, “உஃப்” என்று இதழ் குவித்து ஊதியவன், “நீ வேணும்னு பண்ணுறியா இல்ல, தெரியாம பண்ணுறியான்னு தெரியல. பண்றது எல்லாம் பண்ணிட்டு அப்புறம் என்னால தான் லேட் ஆச்சு, என்னால தான் திட்டு வாங்குறேன்னு என்னையே குத்தம் சொல்றது” என்று வேறு நொடிந்து கொள்ளவும்.

“ஆங்..” என்று அவள் புரியாமல் விழித்தாள்.

அவளின் கன்னத்தோடு தன் கன்னம் வைத்து உரசியவன், “இன்னைக்கு ஒரு நாள் மட்டும் திட்டு வாங்கிக்கலாமே” என்றான் கரகரத்த குரலில்.

“என்ன” என்று அவனை திகைத்து பார்த்தவள், “அதெல்லாம் முடியாது. நான் நல்ல மருமகனு பேர் எடுக்கக்கூடாதுன்னே நீங்க இப்படி எல்லாம் சதி செய்றீங்க” என்றாள் சிணுங்களாக.

“சோதிக்கிற டி பவி” என்றான் தாப குரலில்.

“உங்களால தான் என் மானமே போகுது பாவா” என்று அவள் தன் முகத்தை சுருக்கி சிணுங்கிக் கொண்டே கூறவும்.

அவளின் ஒவ்வொரு அசைவும் இவனின் உணர்வுகளை கூறு போட்டுக் கொண்டிருந்தது.

“வாட்! கம் அகைன்!” என்றான் புரியாத பாவனையில்.

அவனின் மீசை முடியை பிடித்து நீவியவாறு, “அது.. ராணியம்மா இருக்காங்கல்ல.. அவங்க அவங்க வீட்டுக்காரரை பாவானு தான் கூப்பிடுவாங்க. அப்போ எல்லாம் எனக்கும் இப்படி கல்யாணம் ஆகும், எனக்கும் புருஷன் வருவார்னு தெரியாது. ஆனாலும், கல்யாணம் ஆனா இப்படி கூப்பிடனும்னு எனக்கும் ஆசை” என்று முகம் சிவக்க வெட்கப்பட்டுக் கொண்டே அவள் கூறிய சம்பாஷனையில் மொத்தமாக அவள் வசம் விழுந்து விட்டான் யஷ்வந்த்.

“மாமானு கூப்பிடுற மாதிரி இப்படி பாவான்னு நீ கூப்பிடுறதும் ஒரு மாதிரி கிக்கா தான் இருக்கு”. 

அவளின் அந்த ஆசையான அழைப்பிற்குள் அத்தனை காதல் புதைந்திருந்தது. முதல் முறை அவளாக அவனை அத்தனை காதலோடு அழைக்கிறாள். அதை மறுக்க அவனுக்கும் மனமில்லை.

“ஐ அம் ஆல்வேஸ் யுவர்ஸ்.. உனக்கு எப்படி கூப்பிடனும்னு இருக்கோ அப்படியே கூப்பிட்டுக்கோ.. நோ ப்ராப்ளம்” என்று அவளின் நெற்றி முட்டவும்.

“சரி, நேரம் ஆயிடுச்சு நகருங்க.. எல்லாரும் எழுந்திருப்பாங்க. இன்னைக்கும் நான் லேட்.. எல்லாம் உங்களால தான்”.

இதழ்கள் அதன் பாட்டிற்கு முணுமுணுத்துக் கொண்டு இருக்க. வேகமாக உடைமாற்றியவள் குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

கைகள் இரண்டையும் தலைக்கு பின்னால் கொடுத்து விட்டதை பார்த்தவாறு படுத்து கிடந்தவனின் மனமோ அத்தனை நிறைவாய் இருந்தது.

அவனின் இதழில் பூத்த புன்னகை பசை போட்டு ஒட்டினார் போல் அப்படியே நிலைத்திருக்க. தன்னவளின் நினைவிலேயே திளைத்துக் கொண்டு இருந்தான்.

என்னென்னவோ ஏதேதோ நடந்து விட்டது. அனைத்துமே அவன் சிந்தித்தும் பார்த்தது கிடையாது. வாழ்க்கை எத்தனை விசித்திரமானது என்ற எண்ணம் அவனுக்குள் எழாமல் இல்லை. 

அவனின் சிந்தனையை கலைக்கும் பொருட்டு அவனவள் குளித்து முடித்து நீர் சொட்ட வெளியே வந்திருந்தாள்.

பனி விழுந்த பூவனமாய் அவனின் முன்னே பூத்துக் குலுங்கிக்கொண்டு நின்றிருந்தவளை பறித்தெடுக்க ஆவல் கொண்டாலும், அவனின் விழிகள் அப்படியே சுவற்றில் மாட்டப்பட்டிருக்கும் கடிகாரத்தில் படிந்தது.

ஆறு நாற்பத்தைந்து என காட்டவும்.

கீழுதட்டை மடித்து சிரிப்பை கட்டுப்படுத்தியவாறு, “பவி சோதிக்கிற டி..” என்றதும், பதறி திரும்பியவள் அடுத்த நொடி கதவை திறந்து கொண்டு வெளியே ஓடி விட்டாள்.

அவளின் செயலில் சத்தமாகவே நகைத்து விட்டவன், “எவ்வளவு பயம்..” என்று கூறிக்கொண்டே கலைந்த சிகையை கோதியவாறு குளிக்க சென்றான்.

பெரிதாக அவளுடன் பேச்சு வார்த்தை எல்லாம் கிடையாது. ஆனாலும், அவளை விளக்கவும் இல்லை. அவள் வந்து நிற்பது புரிந்தாலும் எதுவும் பேசாமல் தன் பாட்டிற்கு வேலையை செய்து கொண்டு இருந்தார் பரமேஸ்வரி.

“ம்ம்” என்று அவளுக்கு முன்னே இருந்த டேபிளின் மீது ஒரு டம்ளரை வைத்தவர், “அவன் எழுந்தானா இல்லையா?” என்றார் வேறு எங்கோ பார்த்துக் கொண்டே கேள்வியாக.

“எழுந்துட்டாங்க” என்ற பவித்ராவின் குரல் மெலிதாக வர.

“நீ குடிச்சிட்டு அவனுக்கும் காபியை கொண்டு போ” என்று விட்டு தன் வேலையை தொடர்ந்து விட்டார்.

தனக்காக அவர் காபியை போட்டு கொடுத்ததும் பவித்ராவிற்குள் சொல்லல்லா ஆனந்தம். கண்களும் கொஞ்சமாக கலங்கிவிட. 

அவர் வைத்த காபியை எடுத்து பருகி முடித்தாள். 

அதற்குள் மீண்டும் ஒரு டம்ளரை அவளின் முன்னே வைத்தவர், “இதை கொண்டு போய் அவன் கிட்ட கொடுத்துடு”.

பேச்சுவார்த்தை இவளிடம் இருந்தாலும், பார்வை வேறு எங்கோ தான் இருந்தது. 

அதுவரை இதையாவது பேசுகிறாரே என்று பவித்ராவிற்கு சற்று நிம்மதியாக தான் இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அவரின் மாற்றம் இவளுக்கும் புரியாமல் இல்லை.

இந்த மாற்றங்களையே பெரும் நம்பிக்கையாய் பலமாய் பற்றி கொண்டு இந்த வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க துணிந்து விட்டாள்.

ஒருவித துள்ளலுடன் அறைக்குள் நுழைந்தவளை துண்டால் தன் தலையை துவட்டியவரே கண்டவன், “என்ன ரொம்ப குஷியா இருக்க போலருக்கு”. 

“ம்ம்.. அத்த எனக்கு காபி போட்டு கொடுத்தாங்க” என்றாள் கண்கள் மின்ன.

“அவ்வளவு தான.. இதுக்கு ஏன் டி இவ்வளவு எக்சைட் ஆகுற?”. 

“என்ன இப்படி கேட்டுட்டீங்க.. எனக்கெல்லாம் இப்படி ஒரு குடும்பம் அமையுறதே பெருசு..” என்றவளை அவன் முறைத்து பார்க்கவும்.

அவனின் கண்டிக்கும் பார்வையில் தன் விழிகளை சுருக்கியவள், “ப்ளீஸ் பாவா, நான் பேசிக்கிறேனே” என்றாள் கெஞ்சலாக.

துண்டை நாற்காலியின் மீது போட்டவன், தன் கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டு ‘பேசு’ என்பது போல் ஒரு பாவனையுடன் அவளை பார்த்துக் கொண்டு நின்றான்.

“எங்க வீட்டேன்.. ஆங்.. எனக்கெல்லாம் இப்படி ஒரு குடும்பம் அமையுறது ரொம்ப பெரிய விஷயம். என் லைஃப்ல இதெல்லாம் நடக்கவே நடக்காதுனு நினைச்சேன். ஆனா, இப்போ ஒன்னு ஒன்னா நடக்குது. எனக்கு இப்போ எப்படி இருக்கு தெரியுமா.. முதல் தடவ எனக்குன்னு இத்தனை உறவுகள்.. 

என்னை உறவு முறை வச்சு கூப்பிடுறாங்க.. நானும் அவங்களை அப்படி கூப்பிடும் பொழுது எனக்குள்ள எப்படி இருக்கு தெரியுமா.. அதெல்லாம் வார்த்தையால சொல்லவே முடியாது பாவா.. அப்படி ஒரு ஃபீல்.. வாழ்க்கையோட முடிவுல நின்னுட்டு இருக்கேன்னு நினைச்சிட்டு இருந்தேன். 

இனி வாழ்க்கையில என்ன இருக்குன்னு சலிப்பா இருந்துச்சு. ஆனா, இனி தான் ஆரம்பமேன்ற மாதிரி நீங்க என் கையை பிடிச்சு கூப்பிட்டு வந்ததும், எனக்கு இப்போ இவ்வளவு சொந்தம். எனக்கு.. எனக்கு..” என்றவளுக்கு அதற்கு மேல் பேச முடியவில்லை. கண்களில் நிறைந்திருந்த கண்ணீர் கீழ் இறங்கி விட்டது.

வேக எட்டுக்களுடன் அவளை நெருங்கியவன் இறுக்கமாக அவளை தனக்குள் அழுத்தி இருந்தான்.

******

கதையை பற்றிய உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் 😊 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
கொஞ்சல் மொழி பேசாயோ ஊமைக்கிளியே
914 11 5
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page