உன்னில் சிறையாகிறேன் – 27

உந்தன் உள்ளம் என்ன கரும்பாறையோ அதில் விளைந்த சிறு நேசம் தான் என் காதலோ அன்பே…!

உன்னில் சிறையாகிறேன் – 27

அக்னி அறையை விட்டு வெளியேறியும், அவன் மூடிவிட்டுச் சென்ற கதவின் ஓசை அருவியின் இதயத்தில் அதிர்வை ஏற்படுத்தியது, 

யாழினி குட்டி பயத்தில் விக்கி விக்கி அழுது கொண்டிருக்க, அருவி அவளைத் தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டாள்,

​”அழாதே தங்கம், மம்மி இருக்கேன்ல” என்று அவளைத் தேற்ற முயன்றாலும், அருவியின் கண்களில் இருந்து கண்ணீர் வழிவதை அவளால் தடுக்க முடியவில்லை,

​சுற்றிலும் பார்த்தாள் அந்த அறை அத்தனை பிரம்மாண்டமாக இருந்தது, அக்னியின் ஆளுமையைப் போலவே அந்த அறையின் ஒவ்வொரு பொருளும் ஒருவித மிடுக்கோடும்,

பணக்காரத் தன்மையோடும் காணப்பட்டது, ஆனால் அருவிக்கோ, அந்தச் சொகுசுகள் அனைத்தும் ஒரு தங்கக் கூண்டைப் போலவேத் தெரிந்தன,

​”மிருகம்… வெறும் பணமும் அதிகாரமும் இருந்தா எதை வேணாலும் சாதிச்சுடலாம்னு திமிர்” என்று அவனை மனதிற்குள் வசைபாடினாள்,

​அப்போது கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது அருவி திடுக்கிட்டுப் போனாள்,

‘மறுபடியும் அவனா’ என்ற பயத்துடன் கதவைப் பார்த்தாள்,

​”சின்னம்மா, நான் ரவி பால் கொண்டு வந்திருக்கேன்,” என்ற குரல் கேட்டதும் தான் அவளுக்கு மூச்சு வந்தது,

​அருவி மெல்லச் சென்று கதவைத் திறந்தாள், ரவி கையில் பாலும், சில தின்பண்டங்களும் வைத்திருந்தார், 

“இந்தாங்கம்மா குழந்தை அழுதுட்டே இருக்கா, இதைக் கொடுத்தா கொஞ்சம் அமைதியாவா,” என்று கனிவோடு சொன்னார்.

​அருவி அதை வாங்கிக் கொண்டு, 

“ரவி அண்ணா… அவரு எங்க போனாரு” என்று தயக்கத்துடன் கேட்டாள்,

​”சின்னய்யா அவசரமா ஏதோ மீட்டிங்னு ஆபீஸ் கிளம்பிட்டாருங்கம்மா, வர்றதுக்கு நைட்டு ஆகும்னு சொன்னாரு, நீங்க எதையும் நினைச்சு கவலைப்படாம குழந்தைக்கு ஊட்டி விடுங்க,” என்று சொல்லிவிட்டு ரவி நகர்ந்தார்,

​அக்னி இல்லாதது அருவிக்கு ஒரு பெரிய நிம்மதியைத் தந்தது, யாழினிக்கு மில்க் கொடுத்துவிட்டு, அவளை அந்த மெத்தையில் படுக்க வைத்தாள், 

சிறிது நேரத்தில் அழுது ஓய்ந்திருந்த களைப்பில் யாழினி உறங்கிப் போனாள்,

​ஆனால் அருவியால் மன அமைதியை திரும்பப் பெற முடியவில்லை, 

ஜன்னல் வழியாக வெளியே தெரிந்த வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள், தன் வாழ்க்கை எப்படி இப்படி திசை மாறியது, 

ஒரு கோடி ரூபாய்க்காகத் தன்மானத்தை அடகு வைத்துவிட்டு இங்கே நிற்பதை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை,

அதே சமயம், கீழே ஹாலில் வசந்தா தன் போனில் யாரிடமோ ஆவேசமாகப் பேசிக் கொண்டிருந்தாள், 

“அந்தப் பிச்சைக்காரி மறுபடியும் வீட்டுக்குள்ள வந்துட்டா என் பையன் அவளுக்காக என்னை எதிர்த்துப் பேசுறான், அவளை இங்கிருந்து விரட்டலன்னா என் பேரு வசந்தா இல்ல நீங்க உடனே கிளம்பி இங்க வாங்க” என்று அவள் சொல்லும்போதே அவளது கண்களில் குரோதம் மின்னியது,

​இரவு நெருங்கிக் கொண்டிருந்தது அக்னியின் கார் காம்பவுண்டுக்குள் நுழையும் சத்தம் கேட்டது. அருவியின் இதயம் மீண்டும் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது.

உறங்கிப்போன யாழினியின் அருகில் அமர்ந்து, அவள் தலையை வருடிக்கொண்டிருந்த அருவிக்கு, ஒவ்வொரு வினாடியும் ஒரு யுகமாகக் கழிந்தது.

​திடீரெனக் கதவு திறக்கப்படும் சத்தம்,

​அக்னி உள்ளே நுழைந்தான், அவன் கையில் இருந்த கோட் சட்டையைச் சோபாவின் மீது வீசியவன், தன் சட்டையின் மேல் பொத்தான்களைத் தளர்த்திக்கொண்டே அவளை ஏறிட்டுப் பார்த்தான்,

அவன் கண்களில் தெரிந்த அந்தச் சிவந்த நிறம், அவனது கோபத்தையா அல்லது களைப்பையா என்று அருவியால் கணிக்க முடியவில்லை,

​”இன்னும் தூங்காம என்ன பண்ணிட்டு இருக்க” என்று அவன் அதிகாரக் குரலில் கேட்க, அருவி திடுக்கிட்டு எழுந்து நின்றாள்,

​”குழந்தை இப்பதான் தூங்குனா, நீங்க மெதுவாப் பேசக்கூடாதா, அவ எழுந்தா அழுவா” என்று அவள் குரலைத் தாழ்த்திச் சொன்னாள்,

அக்னி அவளை நோக்கிச் சில அடிகள் எடுத்து வைத்தான், அவனது பெர்ஃப்யூம் வாசனை அவளைச் சூழ்ந்தது, 

“என் வீட்டுக்குள்ள நான் எப்படிப் பேசணும்னு நீ எனக்கு கிளாஸ் எடுக்காத, ஒழுங்கா உன் வேலையை  மட்டும் பாரு, புரியுதா” என்றான் அக்னி,

​”உங்களை பாத்தாலே என்னை உங்களுக்கு பிடிக்கலைன்னு நல்லாத் தெரியுது, அப்புறம் ஏன் என்னை இங்க கூட்டிட்டு வந்து கஷ்டப்படுத்துறீங்க, இதனால உங்களுக்கு என்ன கிடைக்கும்” என்று அருவி கேட்டாள்,

அக்னியின் தாடை நரம்புகள் புடைத்தன, அவளது அந்தத் துடிப்பு அவனது முகத்தில் கோபமாக மாறியது, ​அவளது கையைப் பலமாகப் பற்றி இழுத்து, சுவரோரம் சாய்த்தான். 

“அதிகப்பிரசங்கித் தனமா பேசாத, நான் எதுக்காக உன்னை இங்க இழுத்துட்டு வந்தேன்னு உனக்குத் தெரியாது, என் இமேஜ், என் சொசைட்டி அந்தஸ்து இதுக்காக மட்டும்தான் நீ இங்க இருக்க, 

அதைத் தாண்டி நீ யோசிச்சா, அப்புறம் உன் நிலைமை மோசமாயிடும்,” என்று மிரட்டலாகச் சொன்னான்,

​அவன் முகம் அவளுக்கு மிக அருகில் இருந்தது, அவனது மூச்சுக்காற்று அவள் நெற்றியில் பட்டது, அருவி அவன் கண்களை நேருக்கு நேராகப் பார்த்தாள், 

“மிரட்டுறது மட்டும்தான் உங்களுக்குத் தெரியுமா அக்னி, ஒரு உயிரை மதிக்கத் தெரியாத, தயவு செஞ்சு என்னை விட்டுடுங்க என் குழந்தையோடு நான் எங்கேயாவது போயிடுறேன்,

உங்க லைஃப்ல எப்பவுமே உங்க கண்ணுல படாத தூரத்துக்கு போயிடுறேன், என்னை விட்டிருங்க” என்று கெஞ்சலாக கேட்டாள் அருவி,

​”விடமாட்டேன்” என்ற அவனின் குரல் இடியென முழங்கியது, 

“நீ சாகுற வரைக்கும் என் கண்ணு முன்னாடி தான் இருக்கணும், இது நான் செஞ்ச பாவத்துக்கு, எனக்கு நானே குடுத்துக்கிற தண்டனை” என்று அக்னி சொல்ல,

​அவன் எதைச் சொல்ல வருகிறான் என்று புரியாமல் அருவி திகைத்தாள்,

“இங்க பாரு நாளைக்கு ஒரு பார்ட்டி இருக்கு, அங்க நீ என் கூட வரணும், நீ எப்படி இருக்கணும், என்ன பேசணும்னு என் பிஏ வந்து உன்கிட்ட சொல்லுவான், 

மறுபேச்சு பேசாம நடந்துகோ, இல்லன்னா, என் செய்வேன்னு சொல்லிட்டு இருக்க மாட்டேன், செஞ்சிடுவேன்” என்று மிரட்டியவன் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை நோக்கினான்,

அவனின் மறைமுக மிரட்டல் புரிந்து கொண்ட அருவிக்குத் தொண்டை அடைத்தது, அவளது ஒரே பலவீனமான குழந்தையை வைத்தே அவன் மீண்டும் மீண்டும் காயப்படுத்துவதை அவளால் தாங்க முடியவில்லை, 

அவன் ஒரு மிருகம் என்பதில் அவளுக்கு இப்போது எந்தச் சந்தேகமும் இல்லை,

​அக்னி தன் கட்டிலின் ஒரு புறத்தில் படுத்துக்கொண்டான், அருவி யாழினியைக் கட்டிக்கொண்டு மெத்தையின் மறுபுறம் ஒரு மூலையில் ஒடுங்கிக்கொண்டாள்,

அறையில் ஏசியின் குளிர்ச்சி அதிகமாகத் தெரிய, அக்னி மெல்லப் புரண்டு படுத்தான், அவனது கண்கள் மூடியிருந்தாலும், அடிமனதில் ஏதோ ஒன்று அழுத்திக் கொண்டே இருந்தது,

​மறுபுறம், யாழினியை அணைத்தபடி படுத்திருந்த அருவிக்கு பழக்கப்படாத ஏசியின் குளிர் அவளை நடுங்கச் செய்தது, குளிரைத் தாங்க முடியாமல், உறக்கத்திலேயே அவள் மெல்லப் போர்வைக்காகத் தேடினாள்,

அக்னி போர்த்தியிருந்த அந்தப் பெரிய போர்வையின் ஒரு பகுதி அவளது கையில் சிக்கியது,

​அறியாமலேயே அவள் அந்தப் போர்வையை இழுக்க, அக்னியும் அதே போர்வையின் கீழ் இருந்ததால் இருவருக்கும் இடையிலான இடைவெளி குறையத் தொடங்கியது,

​நடுநிசி வேளையில், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அக்னிக்குத் தன் அருகே ஏதோ ஒரு கதகதப்பு உணர்வு ஏற்பட்டது, தன் கையை மெல்ல நீட்டியவன், தற்செயலாக அருவியின் இடையைச் சுற்றி வளைத்தான்,

அருவி குளிரின் தாக்கத்தில் அவனது நெஞ்சோடு இன்னும் நெருங்கி ஒடுங்கினாள்,

​அக்னியின் மூச்சுக்காற்று அருவியின் கழுத்தில் பட, அவளது உடல் ஒரு நிமிடம் சிலிர்த்தது, 

உறக்கத்திலேயே அவனது பலமான கைகள் அவளைத் தன்னோடு இன்னும் இறுக்கி அணைத்துக் கொண்டன, ​திடீரென கண் விழித்த அருவி, தான் அக்னியின் மார்பில் சாய்ந்து கிடப்பதைக் கண்டு திடுக்கிட்டாள்,

அவனது வலுவான கரங்கள் அவளை ஒரு சிறையைப் போலப் பூட்டியிருந்தன,

​”அக்னி… விடுங்க…” என்று அவள் மெல்லிய குரலில் முணுமுணுத்தபடி அவனை விலக்க முயன்றாள்,

​ஆனால் அவளது அசைவில் கண் விழித்த அக்னி, அவளை விடவில்லை, அவனது கண்கள் இருட்டில் மின்னின, அருவியின் முகம் அவனுக்கு மிக அருகில் இருந்தது, 

அவளது இதயம் ஒரு பறவையைப் போல அடித்துக் கொள்வதை அவனது மார்பு உணர்ந்தது,

​”என்னை வெறுக்கிறேன்னு சொல்லுற, ஆனா உன் உடம்பு என்கிட்ட நெருக்கத்தை தேடுதோ,” என்று அக்னி மிகக் கரகரப்பான குரலில் அவள் காதருகே கேட்டான்,

​அருவியின் சுவாசம் சூடானது, 

“அது… அது தெரியாம… குளிர்ல…” என்று அவள் தடுமாற, அக்னி அவளது முகவாயைத் தன் விரல்களால் பற்றித் தூக்கினான்,

​”தெரிஞ்சா என்ன, தெரியாம இருந்தா என்ன, நீ இப்போ என் வொய்ஃப், உன் மேல எனக்கு எல்லா உரிமையும் இருக்கு” என்று சொல்லிவிட்டு, அவளது இதழ்களைத் தன் பார்வையில் சிறைப்படுத்தினான்,

​அருவி அவனைத் தள்ள முயன்றாள், ஆனால் அவனது நெருக்கம் அவளது எதிர்ப்பை மெல்ல மெல்ல கரைக்கத் தொடங்கியது, அவனது கரங்களின் வன்மை அவளுக்கு ஒருவிதமான பாதுகாப்பையும், 

அதே சமயம் ஒரு இனம் புரியாத உணர்வையும் கொடுத்தது, அக்னி மெல்லக் குனிந்து அவளது நெற்றியில் தன் இதழ்களைப் பதித்தான், அந்த ஒரு நொடி, இருவருக்கும் இடையிலான அனைத்தும் மறைந்து போனது,

​அக்னி அவளை இன்னும் நெருக்கமாகத் தன் மேல் இழுத்துக் கொண்டான், அந்த இரவின் குளிர்ச்சி, இருவரின் உடல் சூட்டில் காணாமல் போனது, அக்னிக்குத் தெரியும், 

இது வெறும் உடல் ரீதியான நெருக்கம் மட்டுமல்ல, அவளைத் தன்னுள் மறைத்துக் கொள்ளத் துடிக்கும் ஒரு குற்றவாளியின் தவிப்பு இது என்று,

அருவிக்கோ, இந்த மிருகத்தின் தொடுதல் ஏன் இத்தனை இதமாக இருக்கிறது என்ற புரியாத புதிர் அவளை ஆட்கொண்டது, அருவி மெல்லத் தலைதூக்கி அவனைப் பார்த்தாள்,

அக்னி அவளது கன்னத்தைத் தன் கரங்களால் மென்மையாக வருடினான், பின்பு  அவளது கூந்தலில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டு அவளை இன்னும் இறுக்கமாகக் கட்டிக்கொண்டான்,

அக்னியின் இதயம் சீராகத் துடிப்பதை அவனது மார்பில் சாய்ந்திருந்த அருவியால் நன்றாக உணர முடிந்தது, 

அவனை ஒரு மிருகம், அரக்கன் என்று வெறுத்த அதே மனது, இப்போது அவனது கரங்களின் கதகதப்பில் ஏனோ ஒரு விவரிக்க முடியாத உணர்வில் கட்டுண்டு போனது,

அந்த இரவு முழுக்க அருவி அவனது அணைப்பிலேயே இருந்தாள், அக்னியின் பிடி தளரவே இல்லை, அவளைத் தப்பிச் செல்ல விடாத ஒரு வேடன் போல தன்னவளைத் தன்னுள் பதுக்கினான்,

தொடர்ந்து வாசிப்போம் வாங்க 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page