காலையில் வேலைக்கு கிளம்பவும் அன்புவின் ஞாபகம் மீண்டும் வந்து ஒட்டிக்கொண்டது.
“எதுக்காக இவன் போன் பண்ணலை..?, மெசேஜ் பண்ணலை..? என்ன ஆச்சுன்னு வேற தெரியலை..?, யாரிடம் கேட்கறதுன்னு புரியலை..” என தலையை சொரிந்தபடியே கிளம்பி பேருந்து நிலையத்திற்கு வந்தாள்.
“அக்கா இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கீங்க. பூ வச்சாலே உங்க முகம் வேற மாதிரி இருக்கு அக்கா” என்றாள். அவள் ஊரில் இருந்து கல்லூரி செல்லும் பெண்.
லேசான சிரிப்புடன் அவர்களுடன் நின்று கொண்டாள். பேருந்து வர ஏறினாள். இன்று ஈஸ்வரி அக்காவும் விடுமுறை என்பதால் கவலையாகியது.
வழக்கம்போல பேருந்தில் இருந்து தனியாக இறங்கி நடக்க.. அவள் பின்னால் “ஹோய் லூசு” என்ற சத்தம் வந்தது
‘லூசா…?, நம்மலையா..?, இருக்காது வேற யாரையாவது கூப்பிட்டுவாங்க’ என திரும்பாமல் செல்ல… மீண்டும் அதே போல “ஹேய் லூசு உன்னைத்தான் திரும்பி பார்” என சத்தம் வர இப்போது அந்த குரல் பிடிபட… கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது. ‘அவனா இருக்காது’ என திரும்பி பார்த்தவளுக்கு கண்கள் திகைப்பில் விரிந்தது.
அவனேதான். அவள் முன் சிரித்தபடி நின்றிருந்தான் அன்பு. பள்ளியில் படிக்கும் பொழுது பார்த்தது மத்தபடி அவனின் போனில் பேசுவதோடு சரி. இத்தனை வருடம் கடந்து இன்றுதான் நேரில் பார்க்கிறாள். 20வயதிற்குரிய முகத்தோற்றம் வந்திருந்தது. குரல் லேசாக மாறியிருந்தது. பார்க்கவே நாயகன் போல இருந்தான்.
“நீ.. நீ எப்படி இங்கே..? என அவள் வார்த்தைகள் தடுமாறி மீண்டூம்.. “ நீ வர்றதா ஒரு போன் பண்ணல, மெசேஜ் பண்ணல சொல்லாமல் வந்திருக்க..?”
““அவசரமாக கிளம்பி வந்தேன். வீட்ல ஒரு பங்சன்மா, கோயில்ல பொங்கல் வைக்கிறாங்க, எல்லாருமே வந்தோம். சரி உனக்கு சர்ப்ரைஸ் பண்ணலாம்னு சொல்லல.”
“நான் எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா. உங்கிட்ட இருந்து எந்த பதிலும் இல்லைன்னு”
சிரித்தபடியே அவளை பார்த்தான்…. அவன் கண்கள் வேறு மொழி பேசுவது போலவே இருந்தது.
“என்னடா அப்படி பாக்குற..?”
“ரொம்ப க்யூட்டா இருக்க.. குண்டூஸ்”
“யார் நானு கரடி பொம்மை மாதிரி இருப்பேன்”
“உண்மையாவே ஏஞ்சல் மாதிரி இருக்க குண்டூஸ், அவன் வாய் வார்த்தைகளும் கண்ணின் மொழிகளும் அதையே பிரதிபலித்தன. அவளை ரசிக்கிறான் என புரிந்தது. புரியாத அளவுக்கு முட்டாள் இல்லையே. அதற்காக அவளை ஏஞ்சல் என்றதெல்லாம் கொஞ்சம் அதிகம்தான். காதல் வந்துவிட்டால் காதலிக்கும் பெண் ஏஞ்சலாகதான் தெரியும் போல…
“சரி இங்கே நீ மட்டும் தான் வந்திருக்கியா… உன் கூட வேற யார் வந்திருக்காங்களா..?” என் அருணா கேட்க…
“நான் மட்டும்தான் உன்னை பார்த்துட்டு போகணும்னு வந்தேன். இனிமேதான் பொங்கல் வைக்க போகணும்.”
“சரி சரி!, நீ கிளம்பு நான் வேலைக்கு போகனும் அன்பு” அந்த இடத்தை விட்டு நகர வேண்டும் என நினைத்தாள். அப்பாவிற்கு தெரிந்தவர்கள் யாராவது பார்த்தால் அவ்வளவுதான் என்ற பயம்.
“சரிம்மா, மதியம் மீட் பண்ண முடியுமா..?”
“மதியமா..?, வேலையில் இருப்பேனே”
” ஈவ்னிங் உடனே கிளம்பிடுவேன் குண்டூஸ்… இனிமே எப்போ வருவேன்னு தெரியலை… அதான்… பேசிட்டு போகலாம்னு பார்த்தேன்”
அதற்கு மேல் அவன் எதுவும் சொல்லவில்லை. அவளை கட்டாயப்படுத்தவும் விரும்பவில்லை.
“சரி நான் லஞ்ச் டைம்ல பர்மிஷன் கேட்டு வெளியே வரேன். நீ பிஎஸ்என்எல் எக்ஸ்சேஞ்ச் ஆபிஸ் இருக்குல்ல, அங்கே வந்து வெயிட் பண்றியா…?”
“சரி” என்றவன் கிளம்பினான். ஆனால் அன்பு செல்லும் வரை திரும்பி திரும்பி அவளை பார்த்து சென்றான்.
அப்போதுதான் ஜெர்லின் சொன்னது ஞாபகத்தில் இருந்தது. ‘அவன் பேசும்போது அவன் கண்ணை பாரு, உன் மேல என்ன மாதிரியான ஃபீலிங் இருக்குன்னு உனக்கே தெரியும்.’ என அவள் சொன்னதை நினைத்ததும் லேசான அதிர்வு தோன்றியது. அவள் சொன்னதில் எத்தனை உண்மை. அவன் கண்கள் அவளை பார்க்கும் விதம் முற்றிலும் வேறு.. என்பது உண்மை தானே… என யோசித்தபடியே மருத்துவமனை வந்து சேர்ந்தாள்.
“ஹேய்..!, அருணா என்ன இன்னைக்கு ரொம்ப வித்தியாசமா தெரியிற… பெண் பார்க்க யாரும் வந்தாங்களா என்ன…?”
லதா சிஸ்டர் அப்படி கேட்டதுமே அன்பின் முகம் வந்து சென்றது.
“அடக்கொடுமையே.!, ஏன் இப்படி தோணுது.” என்றவள், லதாவிடம் “அப்படி எல்லாம் ஒன்னும் இல்லக்கா” என தன்னுடைய வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.
“அக்கா நேத்து ஒருத்தவங்க பில் கொடுக்காமல் போனாங்க. ஈவினிங் வந்து தரதா சொன்னாங்களே, செட்டில் பண்ணிட்டாங்களா..?” என கேட்க…
“யாரு சொர்ணவள்ளி பேஷண்ட்தானே. ஆமா அவங்க ஹஸ்பண்ட் வந்து நேற்று ஈவ்னிங் அமௌன்ட் செட்டில் பண்ணிட்டாங்கடா.”
“சரிக்கா பில் கொடுத்துட்டிங்கல்ல..?”
“அதெல்லாம பண்ணிட்டேன்”
அப்போது மருந்துகள் பரிந்துரைக்கும் மெடிக்கல் ரெப்ரசென்டேட்டிவ்ஸ் இருவர் வந்து நின்றனர்.
“சிஸ்டர் மேடமை பாக்கணும் பாக்கலாமா..?” என வந்த இருவரில் ஒருவர் கேட்டார் .
“வெயிட் பண்ணுங்க இப்போதான் மேடம் வந்தாங்க. பேஷன்ட் பார்த்துட்டு இருக்காங்க.முப்பது நிமிஷம் வெயிட் பண்ணிதான் ஆகனும்.”
“சரி” என்ற இருவரும் அங்கே அமர்ந்தனர். அருணா ரெப்ரசென்டேட்டிவ்ஸ் வந்திருப்பதை டாக்டரிடம் சொல்லிவிட்டு மீண்டும் ரிசப்ஷன்ல வந்து நின்றாள்..
அந்த இருவரில் ஒருவரின் பார்வை அருணாவை மொய்த்தது. அவளுக்கு அவன் பார்வையின் அர்த்தம் புரிந்தாலும், அதை கண்டுகொள்ளவில்லை தான் உண்டு தன் வேலையுண்டு என்பது போலவே இருந்தாள்.
டாக்டர் அவர்கள் இருவரையும் உள்ளே அழைக்க அவர்களை அனுப்பி வைத்தாள்.
டாக்டரை பார்த்துவிட்டு வெளியே வந்தவன் அருணாவிடம் “பேனா கிடைக்குமா” என கேட்டான் .
“உங்ககிட்ட பென் இல்லையா..?”
“இருக்குங்க எழுதலை. அதான் உங்ககிட்ட கேட்கிறேன்”
“சரி” என பேனாவை நீட்டினாள். அதை வாங்கியவன் போன் நம்பரை தாளில் எழுதி அவளிடம் நீட்ட “என்ன இது..?” என புரியாமல் கேட்டாள்…
“இன்னைக்கு மேடம் பார்க்க.., ரொம்ப நேரம் ஆயிடுச்சு இவ்ளோ நேரம் வெயிட் பண்ணதுக்கு வேற டாக்டர் பார்த்துட்டு வந்து இருப்போம். அடுத்த வெள்ளிக்கிழமை காலையிலேயே மேடம் எப்போ வருவாங்க என்று எனக்கு தகவல் கொடுத்திங்க என்றால், அந்த டைம் வந்து பார்த்துட்டு போயிடுவோம் வெயிட் பண்ண வேண்டிய அவசியம் இருக்காது” என்றான் அவன்.
“பாருங்க சார், எனக்கு அதை பத்தி எல்லாம் எதுவுமே தெரியாது. இங்கிருந்து உங்களுக்கு நான் கால் செய்து சொல்ல முடியாது. என ஒரு சீட்டை நீட்டியவள், இதுல ஹாஸ்பிடல் லேண்ட் லைன் நம்பர் இருக்கு, நீங்க இந்த நம்பருக்கு கால் பண்ணி கேட்கலாம்” என முடித்தாள்.
“சரி” என்றவன் முகம் லேசாக கருகி போனது போல இருந்தது.
அவன் அருணாவை பார்த்தபடியே வெளியேறினான்.
“என்ன வழக்கம்போல உன்கிட்ட பிட்டு போட்டானா..?” என வந்தார் ஜானகி சிஸ்டர்.
“நீங்க வேற சும்மா இருங்க அக்கா வரும்போது எல்லாம் அவன் பார்வையும் அவனும் கடுப்பா இருக்கு ”
“ஆள் நல்லா தானடி இருக்கான். ஒரு வேலை உன்னை லவ் பண்றானோ”
“அக்கா கொஞ்ச நேரம் அமைதியா இருக்கீங்களா..?”
“சரி சரி..!, நீ டென்ஷன் ஆகாத.., காலையிலேயே அழகா தேவதை மாதிரி வந்த… இப்ப பாரு ஊர்றுன்னு இருக்க… இன்னைக்கு ஸ்கேன் எடுக்க டாக்டர் வருவாங்க… ஸ்கேன் எடுக்க வர்ற பேஷண்ட் நேம் எல்லாம் தனியா சிஸ்டம்ல போட்டு வச்சிடு அதை சொல்லதான் வந்தேன்’
“பண்ணிட்டேன் அக்கா.”
“ரொம்ப தாண்டி சலிச்சிக்கிற” என அவள் கன்னத்தில் தட்டிவிட்டு சென்றார் ஜானகி.
மதியம் அங்கிருந்து சிஸ்டரிடம் அரை மணி நேரம் விடுப்பு கேட்டு வெளியே வந்தாள் அருணா.
பிஎஸ்என்எல் ஆபிஸ் வந்து வந்து நிற்க அன்பு இன்னும் வரவில்லை.
அவன் எண்ணிற்கு அழைப்பு விடுக்க… அவளுக்கு பின்னால் இருந்து சத்தம் வந்தது. அந்த அலுவலகத்தை ஒட்டிருந்த ஆலமரத்து பின்னால் அமர்ந்திருப்பான் போல.…
எழுந்து வெளியே வந்தான்.
அவளைப் பார்த்து சிரித்தபடி அவளிடம் வந்து நின்றவன் “ரொம்ப நன்றி மேடம்” என கைகூப்பி சிரிக்க…
“எதுக்கு இந்த நன்றி..?”
“நான் கூப்பிட்டதும் என்னை மதித்து நீங்க வந்ததுக்கு”
“லூசு ஹாஸ்பிடல் ரீசார்ஜ் பில் கட்டணும். அதான் அப்படியே உன்னை பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்.”
“அதுக்கு நீ தான் வருவியா வாட்ச்மேன் எல்லாம் இல்லையா..?”
“இருக்காங்க அன்பு. வயசான தாத்தா. எப்பவும் நடந்து வருவார். இன்னைக்கு நீ வேற பாக்கணும்னு சொன்னியா… அதான் அவர்கிட்ட நானே போய், பில் கட்டிட்டு வரேன்னு சொல்லிட்டு பர்மிஷன் வாங்கிட்டு வந்தேன்”.
“அப்போ எனக்காக வரலை”
“ம்ப்ச் உனக்காகத்தான் வந்தேன். நான் எப்பவும் பர்மிஷன் கேட்கமாட்டேன். ஈஸ்வரி அக்கா கூப்பிட்டால் மட்டும்தான் பர்மிஷன் வாங்குவேன். இன்னைக்கு அவங்களும் லீவ். அதான் இதை காரணமாக வச்சி உன்னை பார்க்க வந்தேன். சரிங்க சார் என்ன பேசனும் சொல்லுங்க”
“அதெல்லாம் ஒன்னும் இல்லை ” என்றவனின் கண்கள் அவள் முகத்திலேயே நிலைத்து நின்றது.
“என்னடா அப்படி பாக்குற..?”
“ரொம்ப மாறிட்ட மாதிரி இருக்க அருணா”
“நீ தான் ரொம்ப மாறிட்ட… நான் எப்பவும் போல குண்டூஸ்தான்.”
“ஆமாதான். ஆனால் நீ ரொம்ப அழகா மாறிட்ட” என்றவனின் இதழில் சிறு புன்னகை.
“நீயும் தான் ரொம்ப வித்தியாசமா தெரியற… ஒரு மெச்சோடான பையன் மாதிரி”.
“இருக்கலாம் நிறைய அடிபட்டுடோம்ல”
“சரி விடு பாஸ்ட் இஸ் பாஸ்ட். அந்த வயசுல கல்யாணம் முடிச்சு நீ என்ன பண்ணி இருக்க போற…?”
கல்யாணம் முடிக்க முடியாது தான் ஆனால், நானா தேடி போகலையே அந்த பொண்ணாதான் தேடி வந்து விரும்புறேன்னு சொல்லுச்சு. சரி என் வீட்டில் சம்மதித்ததால் சம்மதம்னு சொன்னேன். அவள் பேச ஆரம்பித்த பத்து நாள்ல… என்ன லவ் பண்ற விஷயம் தெரிஞ்சு அவங்க அப்பா அடிச்சி வீட்ல இருக்க வச்சிட்டார்., எங்களுக்கும் அவங்களுக்கும் சின்ன சண்டை வேற… எங்க மேலே இருந்த கோபத்தில் அந்த பொண்ணுக்கு உடனே கல்யாணம் முடிச்சு கொடுத்துட்டார்”
“அப்போ அந்த பொண்ணு மேல எந்த தப்பும் இல்லடா”
“சரிங்க மேடம். வா அப்படியே ஹோட்டலில் சாப்பிட்டு போகலாம்”
“கொன்னுடுவேன். உன்கிட்ட பேசுவதற்கு எவ்வளவு பயந்து பயந்து வந்து இருக்கேன்னு எனக்கு தான் தெரியும். எங்க அப்பாவுக்கு இங்க தெரியாதவங்க யாருமே கிடையாது”.
” உடனே இதை ஒன்னு சொல்லிடு” என அவளைப் பார்த்து முறைக்க…
அப்போது அவனுக்கு வீட்டில் இருந்து அழைப்பு வந்தது. பேசியவன் “சரி அருணா, நான் கிளம்புறேன். பஸ் ஏறும்போது கால் பண்றேன்.” என கிளம்பினான், அன்பு.
அவன் செல்வதே பார்த்தவள் ஆபீஸ்க்கு நுழைந்து போன் பில்லை கட்டி விட்டு நேராக மருத்துவமனைக்கு வந்தாள்.
அவள் வரும் நேரம் ஸ்கேன் எடுக்க வரும் பேஷண்ட்கள் எல்லாம் வரிசையாக அமர்ந்திருந்தனர். அவர்களோடு அவர்களாக அமர்ந்திருந்தவனை கண்டு அதிர்ச்சியானவள் வீட்டுக்கு போறேன்னுதானே சொன்னான். இங்கே வந்து இருக்கான் என நினைத்தவள் அவனை கண்டு கொள்ளாதது போல தன் இருப்பிடத்திற்கு சென்று நின்றாள்.
ஸ்கேன் எடுத்து முடியும் வரை அவர் அந்த இடத்தை விட்டு நகரவில்லை. அருணாவுடன் வேலை செய்யும் யாருக்குமே அன்புவை தெரியாது. யாருடனாவது ஸ்கேன் எடுக்க துணைக்கு வந்திருப்பான் என நினைத்துக் கொண்டனர். ஓரளவுக்கு கூட்டம் முடியவும்தான் அவன் அங்கிருந்து கிளம்பி சென்றான். அதுவரை அவன் பார்வை அருணாவை சுற்றிதான் இருந்தது. உள்ளுக்குள் ஒருவித சிலிர்ப்பு . அவன் பார்வையில் கோவம் வரவில்லை. வெட்கமும் நாணமும் போட்டிபோட்டது. மனம் அவனின் பார்வையை ஏற்கிறது என புரிந்தது.
அவள் “கிளம்பு” என கண்ணால் சைகை காட்ட… அதன் பிறகு சிரித்தபடியே, சரி என தலையை மட்டும் அசைத்தவன் அங்கிருந்து நகர்ந்தான்.
அவன் கண்ணை காட்டி சொன்னது புரிய… அவன் இருந்த இடத்திற்கு சென்று பார்க்க… சின்னதாக ஒரு கிப்ட் பாக்ஸ் இருந்தது.
யாரும் கவனிக்காத நேரம் அதை எடுத்து வைத்துக் கொண்டாள்.
அவள் மொபைலை பார்க்க… “என்ன கிப்ட் கொடுக்கணும்னு தெரியல எனக்கு தோணுணதை வாங்கிட்டு வந்தேன். பிரிச்சி பார்த்துட்டு பிடிச்சிருக்கான்னு சொல்லு” என அனுப்பி இருந்தான் அன்பு.
“சரி” என சிரித்தபடி சில ஸ்மைலிகளை சிதறவிட்டவள் தன் வேலையை தொடர்ந்தாள்.
‘தன்னை எப்போது பிரிப்பாய்…?’ என கிப்ட் பாக்ஸ் அவளையே பார்த்து கொண்டிருந்தது.
