தாரகையின் மாயோன்

மாயோன்- 10

ஸ்ருதி புவனேஷ் எண்ணி வருத்தம் கொண்டவள்  தூக்கம் வராமல்  விடியும் தருவாயில் கண்ணயர்ந்தாள்.

இனியா பயந்துகொண்டே உறங்கினாலும் பக்கத்தில் ஸ்ருதி இருக்கும் தைரியத்தில் முருகனை கும்பிட்டு படுத்து தூங்கினாள்.

மறுநாள் காலை வானரப் படைகள் கல்லூரி நாட்களில்  கடைசி நாளை அனுபவிக்க மிகுந்த மகிழ்ச்சியுடன் கிளம்பினார்.

ஆமாங்க இந்த வானர படைகளுக்கு இதுதான் இறுதி வருடம்.. இன்று இவர்களுக்கு farewell party .அதன்பிறகு அவர்கள் செமஸ்டர் தேர்வுக்கு மட்டும்தான் ஒன்று கூடுவார்கள்..அனைவரும் மகிழ்ச்சியாக கிளம்பி கொண்டிருக்க ஸ்ருதி மட்டும் கடமையே என்று கிளம்பினாள்.அனைவரும் ஆரவாரத்துடன்  கல்லூரிக்குள் சென்றனர். ஸ்ருதி சிந்தனை வயப்பட்டவளாக சென்றவள் எதிரே வரும் புவனேஷை கவனிக்காமல் இடித்து விட்டாள்.

இதில் கோபமடைந்த புவனேஷ் , “உனக்கு என்ன பெரிய மகாராணி என்று நினைப்பா?இது ஒண்ணும் உன் வீடு கிடையாது.உனக்கு உன் திமிர்த்தனம் மட்டும் அடங்கவே அடங்காது அப்படி தானே?”என்றவன் வேகமாக அங்கிருந்து நகர்ந்தான்.

அபிஷேக் ஸ்ருதியை தேடி வந்தவன்  புவனேஷ் கூறியதை கேட்டவன்,’ஏன் புவனேஷ் அண்ணா எப்ப பாரு ஸ்ருதியை திட்டிக்கிட்டே இருக்கார். ‘என்று நினைத்து ஸ்ருதியை நெருங்கினான்.

ஸ்ருதி அவன் பேசி விட்டுப் போனதில் கலங்கிபோயிருந்தாள்.அபிஷேக் அவளின் தோளில் கை வைத்ததும் அவனைப் பார்த்தவள் தன்னை சமன்படுத்தியவளாக ,”எனக்கு ஒரு மாதிரி இருக்கு நான் வீட்டுக்கு போக வா அபி”என்றவளை முறைத்தவன்

“ஸ்ருதி நீ என்ன லூசா ?நானும் பார்த்துட்டு தான் இருக்கேன் உனக்கும், அவருக்கும் அப்படி என்னதான் பிரச்சனை.?”

“என்னன்னு தெரியல டா .அவர் என்னை பார்க்கும்போதெல்லாம் திட்டிட்டே இருக்காரு. என்ன காரணம் என்று தெரியாமல் திட்டு வாங்கறவ நானா தான் இருப்பேன்”இன்று அழுதாள் ஸ்ருதி.

“அவர் திட்டினா நீ ஏன் இப்படி அழற.? நீ  இப்படி இருக்க மாட்டியே யாராவது தேவையில்லாம திட்டினா அவங்களை உண்டு இல்லைன்னு பண்ணிடுவியே என்ன விஷயம் சொல்லுடி”

“அதுதான் சொன்னேனே காரணம் தெரியல .எனக்கு அவர் திட்டினா யாரோ நெருங்கிய உறவுக்காரங்க திட்ற மாதிரி  மனசு கஷ்டமா இருக்கு”

இதில் அபிஷேக் சந்தேகத்துடன் ஸ்ருதியை பார்க்க

“டேய் என்னடா அப்படி பாக்கற”

“ஒண்ணும் இல்ல புவனேஷ் அண்ணா வாழ்க்கையில் நடந்ததெல்லாம் உனக்குத் தெரியும் தானே?”

“தெரியும்டா நீ தான் சொல்லியிருக்கியேஏன்டா கேட்கிற”

இவள் எதையோ நம்மக்கிட்ட இருந்து மறைக்கிறா என்று நினைத்தவன்,”இப்ப எதுவும் பேச வேண்டாம் நீ வா” என்று அவளை அழைத்துச் செல்ல அனைவரும் ஃபேர்வெல் பார்ட்டி முடிந்து மகிழ்ச்சியாக வீட்டிற்கு திரும்பினர்.

அபிஷேக் கார்த்திக் ராஜனிடம்  நடந்ததைக் கூற ,”  எனக்கு எதுவுமே புரியலடா.நேத்து ஃநைட் கூட அவன் ஸ்ருதியை திட்டினான். அவங்க இரண்டு பேருக்கும் அப்படி என்னதான் நடந்துச்சு உனக்கு ஏதாவது தெரியுமா?” 

“அண்ணா ஸ்ருதி நேரில் பார்க்கும்போது அனைத்து ஆண்களிடமும் தைரியமா பேசுவாளீ. ஆனால் புவனேஷ் அண்ணாவை பார்த்தா மட்டும் மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்பு போல மாறிடுவாள். அதுமட்டுமில்ல அவரை பார்க்கும்போதெல்லாம் அவள் பார்வையில் வித்தியாசத்தை பார்க்கலாம். அவளோட முகத்தில் அவ்வளவு பரவசம் அவ்வளவு மகிழ்ச்சி இருக்கும் அண்ணா.ஆனால் அவரோ இவளை  முறைச்சிக்கிட்டே போவார்.

இனியா ஒருமுறை  ஸ்ருதி புவனேஷ் சாரை  விரும்பறாளோ எனக்கு சந்தேகமா இருக்குன்னு சொன்னாள்”என்றான் அபிஷேக்.

“ஓஹா! அப்போ என்னுடைய சந்தேகத்திற்கு விடை கிடைச்சிடுச்சு.ஆனாலும் இவன் எதுக்கு இப்படி நடந்துக்கிறான்.சரி நீ ஸ்ருதியை வரச்சொல்லு”என்றான் கார்த்திக் ராஜன்.

அபிஷேக் ராஜன் ஸ்ருதியை அழைத்து வர கார்த்திக் அவளை விசாரிக்க ஆரம்பித்தான்.

“ஸ்ருதி நீ என்னை உன் அண்ணனா நினைக்கிற தானேடா”

“என்ன அண்ணா இப்படி கேட்கறிங்க .நான் உங்களை  அண்ணாவா தான் நினைக்கிறேன்.அதில் உங்களுக்கு சந்தேகமே வேண்டாம்”

“சரி அப்போ உண்மையை சொல்லு புவனேஷ் உங்கிட்ட ஏன்  அப்படி நடந்துக்கிறான்”

ஸ்ருதி அபிஷேக்ராஜனை பார்க்க ,”நான் தான் சொன்னேன் அவன் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லுடி”

“எனக்கு அது தெரியல அண்ணா ஆனால் அவர் அப்படி நடந்துக்கிறது எனக்கு மனசு கஷ்டமா இருக்கு”

“ஸ்ருதி அவன் அப்படி நடந்துக்கிட்டா உனக்கு ஏன் கஷ்டமா இருக்கு ,எனக்கு தெரிஞ்சி நீ யாருக்கும் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தது இல்லையே ?அவனுக்கு மட்டும் ஏன் கொடுக்கிற. நான் கேட்கிறேன் தப்பா நினைக்காத. நீ அவனை விரும்பறியாமா?”என்று கேட்டான் கார்த்திக் ராஜன்.

“அண்ணா அது எப்படி சொல்றது ,என்னன்னு தெரியல எனக்கு அவரைப் பார்க்கும்போது அவர் கூடவே இருக்கனும் னு தோணும்.அவரைப் பார்க்கும் போதெல்லாம் என்னுடைய அம்மாவை பார்க்கிற மாதிரி இருக்கும்.அது  ஏன் எனக்கு ஆரம்பத்தில் தெரியல பிறகுதான் நான் ஒருநாள் அம்மா பெட்டியிலிருந்து ஆல்பத்தை எடுத்து பார்த்தேன் .அதில் ஒரு சின்ன பையன் இருந்தான்.என் பாட்டிகிட்ட இவங்க யாருன்னு கேட்டேன். அவங்க அம்மாவின் அண்ணன் குடும்பம் என்று சொன்னாங்க.ஒருநாள் நான் அதே போட்டோவை புவனேஷ் சார் பர்ஸ்ல பார்த்தேன் .நான் அன்று தான் அவரை முதன் முதல்ல பார்த்தேன்.அவரை கவனிக்காமல் இடிச்சிட்டேன் அப்போ அவர் பர்ஸ் கீழே விழுந்திருச்சு .நான் கீழே குனிந்து அவருடைய பர்ஸை  எடுத்தப்போ ஒரு போட்டோ கீழே விழுந்துச்சு..அதை பார்த்து எனக்கு அதிர்ச்சி.. அப்போதான் நான் அவர்கிட்ட  இவங்க  உங்களுக்கு என்ன உறவ’என்று என் அம்மாவை காண்பித்து கேட்டேன்.அவர் அதுக்கு பதில் சொல்லாம என்னை முறைச்சிட்டு போயிட்டார்.

நான் அவரை பார்க்கும் போதெல்லாம் அதையே கேட்க. “நீ ஏன் அதை கேட்கிற. என் பர்ஸ்ல என் குடும்பம் புகைப்படம் இல்லாம மத்தவங்க வீட்டு புகைப்படமா இருக்கும் முண்டம் கேட்கிற கேள்வியைப் பாரு.? அவங்க என் அத்தை…

இனி என்னை தொந்தரவு பண்ணாத சொல்லி அங்கிருந்து போயிட்டாரு.

அப்போ தான் அவர் எனக்கு என்ன உறவு என்று தெரிந்தது. நான் ரொம்ப சந்தோஷமா இருந்தேன்.என் அம்மா வீட்டு உறவு எனக்கு கிடைக்கப் போகுது என்று அப்போதான் ஒரு நாள் அப்பா காலேஜ்க்கு வந்தார்.

அப்பாவை பார்த்ததும்  அதிர்ச்சியான புவனேஷ் அங்கிருந்து போயிட்டாரு.. அதிலிருந்து என்னைப்பார்த்து எப்பவும் திட்டிகிட்டே இருப்பாரு. இது தவிர எனக்கு வேறு எதுவும் தெரியாது அண்ணா”

“இப்போ எல்லாம் புரியுது .சரி நீங்க போங்க நான் பார்த்துக்கறேன் “என்றான் கார்த்திக்.

அபிஷேக் ஸ்ருதியை முறைத்தவன்  “உனக்கு எங்கிட்ட சொல்லனும் தோணல அப்படித்தானே? அப்போ நாங்க உனக்கு வேற யாரோ வா”

“இப்படி எல்லாம் சொல்லாத டா .என்னால தாங்க முடியல. இந்த அனாதைக்கு உங்களை விட்டா வேற யாரும் இல்லடா “என்று அழுதாள்.

“ஏய் அப்படியே அறஞ்சேனா பாரு என்னடி பேசுற நீ”

“நான் உண்மையத்தான் சொல்றேன் எனக்கு யாருமே இல்ல டா. இதோ நீ கூட என்னை புரிஞ்சுக்காம தானே பேசுற.நான் யார் மீது ரொம்ப பாசம் வைக்கிறேனோ அவங்க யாருமே என்னை சரியா புரிஞ்சிக்க மாட்டேங்கிறாங்க .முதல்ல எங்க அப்பா,அடுத்து அவர் .எங்க அம்மாவும் என்னை விட்டுட்டு போயிட்டாங்க.. நீங்களாவது என்னை அனாதையா விடாம என் கூட கடைசி வரை இருப்பீங்களா டா”என்று அவளை அணைத்து அவளின் தலையை ஆதுரமாக வருடினான் அபிஷேக்‌ராஜன்

“ஸ்ருதி மா ப்ளீஸ் அப்படி சொல்லாதடி கஷ்டமா இருக்கு.” என்று அவனும் கலங்கினான்.

ஸ்ருதி,” எனக்கு யாருமே இல்ல டா என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே  அங்கு வந்த புவனேஷ் தன்னையும் சேர்த்து தான் அவள் சொல்கிறாள் என்பதை புரிந்து கொண்டவன்.அவளின் அனாதை என்ற வார்த்தை அவனை வாட்டி வதைக்க..மனம் கஷ்டமாக திரும்பி திரும்பி அவளைப்ப் பார்த்துக் கொண்டு சென்றவன் கார்த்திக்கின் அறைக்குச் சென்றான்.

புவனேஷ் செல்வதை அபி, ஸ்ருதி  இருவரும் கவனித்துவிட்டனர்.

கார்த்திக் அவனை வரவேற்றவன் நேரடியாக ஸ்ருதியை பத்தி பேச ஆரம்பித்தான்.

“புவனேஷ் நீ ஏன்டா இப்படி இருக்க, அவளுடைய மனசை ஏன் இப்படி கஷ்ட படுத்தற.அவள் யார்  உன்னுடைய அத்தை மகள் தானே?”என்றான்.

“ எனக்கு அவள் அத்தை பெண் இல்லடா.அந்த பணக்கார வீட்டுப்பெண் எனக்கு தேவையில்ல.எனக்கு அவங்க அப்பாவ பார்த்தாலே கடுப்பா இருக்கு ,என் அத்தையை எங்கிட்ட இருந்து பிரிச்சவர் அவர்”

“ஏன்டா ஸ்ருதி அவரோட பொண்ணு மட்டும்தானா ?உன் அத்தையோட பொண்ணு இல்லையா?உன் அத்தை பொண்ணு கஷ்டப்படறத இப்படித்தான் நீ வேடிக்கை பார்த்துட்டு சும்மா இருப்பியா?’என்று கேட்டான் கார்த்திக் ராஜன்.

அதை அப்போதுதான் யோசித்த புவனேஷ் இத்தனை நாள் அவளை வேதனை அடையச் செய்ததற்கு தன் அத்தையிடம் மானசீகமாக மன்னிப்பு வேண்டியவன்,”இல்லடா அதுவந்து அதுவந்து …”என்று தயங்கியவனை 

“என்னடா அதுவந்து அது வந்து  சொல்லு…

என்று அவனை திட்டிக் கொண்டிருக்க ஸ்ருதி உள்ளே வந்தாள்.

“அண்ணா நான் நான் அவங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசனும் “என்றாள்.

கார்த்திக்,” சரி மா பேசுங்க என்றவன் இங்க பாருடா அவள் என் தங்கச்சி அவளை அழ வைக்காத”

என்று வெளியேறினான்.

 

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!