உடல்நிலை சரியான பிறகும் சந்தனாவை கேம்பிற்கு செல்ல மருத்துவமனை நிர்பந்திக்கவில்லை.அதற்க்கு இன்னொரு முக்கிய காரணம் அவர்கள் மருத்துவமனையில் வேலை செய்துகொண்டிருந்த நான்கு சீனியர் செவிலியர்கள் அரசு மருத்துவமனையில் வேலை கிடைத்து சென்று விட்டதுதான்.
அந்த இடத்தில வேறு செவிலியர்களை நியமிக்கும் வரை வேலை செய்து கொண்டிருக்கும் செவிலியர்களை வைத்து தடங்கல்கள் இல்லாமல் மருத்துவமனையை நடத்தியாகவேண்டும். கேம்பில் இருக்கும் நான்கு செவிலியர்களை திரும்பவும் அழைக்க முடியாது. மருத்துவ முகாம் நடத்துவது என்பது கேட்பதற்கு எளிதாக இருந்தாலும் நடைமுறையில் நிறைய அனுமதிகளை வங்கியாக வேண்டும் . மருத்துவர்கள் அந்த நேரத்தில் கிடைக்க வேண்டும் . சிறப்பு மருத்துவர்களின் நேரம் கிடைப்பது பெரிய விஷயம்.
அதையும் தவிர இது மருத்துத்துவமனையின் மரியாதையை உள்ளடக்கிய விஷயமும் கூட.
பாதியில் முகாம் தடைப்பட்டால் வெளியில் காட்டுத்தீ போல மருத்துவமனையை பற்றி திரித்து பரப்பிவிடும் அபாயமும் உண்டு. இதெல்லாம் வைத்துதான் சந்தனாவுக்கு முகாம் செலிலுவதிலிருந்து விலக்கு கொடுத்திருந்தது மருத்துவமனை நிர்வாகம்.
வேலைசெய்யும் செவிலியர்களுக்கு நிற்கக்கூட நேரம் இல்லாமல் வேலை நேரம் நீண்டுகொண்டே போனது. மதியம் சாப்பிடும் நேரம் குறுகியது. அடுத்து வந்த வாரமும் அப்படித்தான் சென்றது. சந்தனா மேல் தளத்திற்கு அனுப்பப்படாமல் கீழேயே வேலையை தொடந்தாள்.
வேலை பளு கூடியது.புதியதாக இரண்டு செவிலியர்கள் சீனியர் லெவெலிலும் இரண்டு செவிலியர்கள் ஜூனியர் லெவலிலும் வேலைக்கு சேர்க்கப்பட்டார்கள்.அவர்களுக்கு சீனியர் செவிலிலியர்களுக்கு இரண்டு வாரங்களும், ஜூனியர் லெவலில் வந்து சேர்ந்திருந்தவர்களுக்கு ஆறு மாதகாலமும் பயிற்சி .
சந்தனாவால் அதிக நேரம் வீட்டில் செலவிடமுடியாது போனது. ராகினிக்கு திரும்பவும் பள்ளி திறந்துவிட்டார்கள். வழக்கம்போல அவரவர் வேலையில் ஒன்ற வேண்டிய சூழ்நிலை.
அரவிந்தனுக்கு மறுத்த்துவமனையின் நிலை தெரியும். எப்படியும் சந்தனா வந்துவிடுவாள் என்று நினைத்து இருந்தவனுக்கு மனதில் எழுத படாத ஏமாற்றம் ! அவனுக்காகவென்று பார்த்திருந்த பெண் இரண்டு முறை அழைத்து பேசிவிட்டாள். இரண்டாவது முறை பேசும்பொழுது அவள் குரலில் தெரிந்த விருப்பம் அரவிந்தனை குழப்பியது.
அரவிந் வீடு திரும்ப இன்னமும் ஒரு வார காலம் இருக்கிறது. இவன் அம்மா ஜோசியரிடம் சென்று நிச்சயதாம்பூலம் நடத்தவும்,திருமணம் செய்யவும் திகதிகளை குறித்துக் கொண்டு வந்து விட்டார்.அதுபற்றி அரவிந்தனுக்கு இன்னமும் சொல்லவில்லை. வீட்டில் அனைவருக்கும் தெரிந்த அந்த விஷயம் அரவிந்தன் வீடு திரும்பும்வரை அவனுக்கு சொல்லப்பட போவதில்லை.
அரவிந் வீடு திரும்பும் அன்றைய நாளில் மாலையில் நிச்சயத்தை வைத்துக்கொள்ள நாள் குறித்துக் கொடுத்திருந்தார் ஜோசியர்.அரவிந் வீட்டுக்கு வந்த பிறகு அவனுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சி இது. இப்போதாவது சந்தனாவை காதலிக்கும் விஷயத்தை தனது வீட்டில் சொல்வானா என்றால் அது மில்லியன் டாலர் கேள்வி தான்.
விஜயராகவனது அன்றைய உரையாதலுக்குப் பிறகு அவன் வீட்டில் யாரும் அவனது திருமணம் பற்றி பேசவில்லை. ஆனால் வீட்டின் அமைதி வழக்கத்தை விடவும் வெகுவாக கூடிவிட்டிருந்தது. குழந்தை தயாவின் குரல் மட்டும் அதிகமாக ஒலித்தது. வாணிக்கும் ஆனந்துக்கும் என்ன செய்வது என்று புரியவில்லை.
‘விட்டுப்பிடிக்கலாம்’ என்றால், ஏற்கனவே நிறைய விட்டாயிற்று. இன்னமும் எவ்வளவு தூரம் விடமுடியும்? ஆனந்தின் தம்பி ஆனந்திடம் ,”எனக்கு தெரிந்த ஒரு ஜோசியர் இருக்காரு. நம்ம விஜியோட ஜாதகத்தை வேணும்னா காமிச்சு அவனோட வாழ்க்கை எப்படி இருக்கும்னு கேட்கலாமே.ஏற்கனவே ஒருமுறை கல்யாணம் தோல்வில முடிஞ்சிடுச்சி.திரும்பவும் ஒரு முடிவு எடுக்கும்பொழுது ரொம்பவே ஜாக்கிரதையா இருக்கணும் .என்ன சொல்றீங்க அண்ணே? என்றதில் விஜயின் பெற்றவர்களுக்கும் அது சரிதான் என்று தோன்றியது.
விஜயன் பிறந்தபொழுது ஜாதகம் குறித்துக்கொடுத்தவர்,’கொஞ்சம் செவ்வாய் தோஷம் இருப்பதாகவும்,முப்பது வயதுக்குமேல் திருமணம் செய்துவையுங்கள்’ என்று சொன்னதும் இப்போது ஞாபகம் வந்தது. ஆனந்த் தம்பியிடமிருந்து அந்த ஜோஸ்யரின் அலைபேசி எண்ணை வாங்கிக்கொண்டார்.
ஜோசியரிடம் ஒரு நல்ல நாள் பார்த்து சென்று பார்க்கலாமா என்று இருவரும் பேசிக்கொண்டே இருக்கும்பொழுது வாணியின் அலைபேசி அழைத்தது. புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்ததில் வாணி எடுக்கவில்லை. மீண்டும் இரண்டு முறை அழைப்பு வந்தபிறகுதான் எடுத்தார்.
சொல்லப்பட்ட விஷயத்தில் மயக்கம் வருவதுபோல இருக்கவே, சோபாவில் மீண்டும் சாய்ந்து அமர்ந்துவிட்டார். மருத்துவமனையிலிருந்து தான் அழைத்திருந்தார்கள். விஜயராகவன் முழுமையாக நினைவு இழக்கும் முன்பு தனது அம்மாவின் அலைபேசி எண்ணுக்கு அழைத்து சொல்ல சொல்லிவிட்டு மயங்கிப்போனான்.
அலுவலகத்திலிருந்து கிளம்பும் நேரம் டிரைவருக்கு உடல்நிலை சரியில்லை என்று கிளம்ப சொல்லியவன் தானே காரை ஓட்டிக்கொண்டு வந்தான்.தொழில் சம்மந்தமான அழைப்பு வரவே காரை ஓரமாக நிறுத்திவிட்டு பேசிமுடிக்கும்பொழுது எதிரில் வந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து இவனது காரில் இடித்து நின்றதில் விஜயராகவனுக்கு கடுமையாக அடிபட்டதில் சுற்றி இருப்பவர்களால் வரவழைக்கப்பட்ட ஆம்புலன்சில் இரண்டு கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.
கண்மூடி திறப்பதற்குமுன்பு இவ்வளவு விஷயங்கள் நடந்துபோயிற்று. விஜயராகவனுக்கு கிளம்பும் பொழுது கூட இப்படியெல்லாம் நிகழக்கூடும் என்று தெரிந்திருக்காது. மயங்கும் தருவாயில் தனது மகள் தயாவுடைய நினைவுகள் தாம். குழந்தைக்கு என்ன புரியும்,நான் எப்போது மீண்டும் எழுந்துகொள்வேன் என்பது போன்ற ஆழ்மன வருத்தங்களுடன்தான் மயக்கம் ஆட்கொண்டது.
வீட்டில் விஷயத்தை கேட்ட வாணிக்கு உடம்பு தள்ளியது.தன்னை நிதானப் படுத்திக்கொள்வதற்க்கென்று அமர்ந்திருந்த வாக்கிலேயே தோய்ந்து அமர்ந்துவிட்டார். அவரது கணவர் ஆனந்த் அலைபேசி அழைப்பில் மீதி விபரங்களை கேட்டுக்கொண்டார்.
இப்போதைய சூழ்நிலையை தனது கைகளில் எடுத்துக் கொண்டவர் , மனைவிக்கு தண்ணீர் கொணர்ந்து கொடுத்துவிட்டு மனைவியின் வலது உள்ளங்கையை எடுத்து தனது அகன்ற கரங்களில் பொதித்துக்கொள்ள வாணியின் அதிர்ச்சி மட்டுப்பட்டது. கணவர் கொணர்ந்த தண்ணீரை பருகியவருக்கு கொஞ்சம் பரவாயில்லயாக இருந்தது.
தயா மதியம் சாப்பிட்டு விளையாடிய களைப்பில் உறங்கிக்கொண்டிருக்ககுழந்தையை பார்த்துக்கொள்பவரிடம் சில நாட்களுக்கு இங்கேயே தங்கிவிடும்படிக்கு பணித்துவிட்டு இருவரும் மருத்துவமனைக்கு கிளம்பினார்கள். விஜயராகவன் அனுமதிக்கப் பட்டிருந்தது ஒரு சாதாரண சிறிய மறுத்த்துவமனையில் தான். அங்கே அவனுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தாலும்,உடனடியாக கொஞ்சம் மருத்துவ வசதிகள் அதிகம் இருக்கும் மருத்துவமனைக்கு மாற்றிவிட்டால் நல்லது என்று விஜயராகவனது பெற்றவர்கள் யோசிக்க விஜயராகவனின் அந்தரங்க காரியதரிசி அதற்கான வேலைகளை தொடங்கினார்.
ஒரு மணி நேரத்தில் விஜயராகவன் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டான். அது சந்தனா வேலை செய்யும் மருத்துவமனைதான். அங்கே அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தான். தீவிரமாக அவனுக்கு சிகிச்சை நடந்துகொண்டிருந்தது. முதுகு தண்டுவடத்தில் நல்ல அடி. வலது கையில் எலும்பு முறிவு.இடது கையில் அடிபட்டிருந்ததே தவிர எலும்பு முறிவு இல்லை. கால்களில் நல்ல அடி பட்டிருந்தது. கொஞ்சம் உடல்நிலை தேறிய பிறகுதான் மற்றவை பற்றி சொல்ல முடியும் என்று மருத்துவர்கள் சொல்லியபிறகு காத்திருப்பதை தவிர வேறு வழி இல்லாமல் காத்திருந்தார்கள்.
தயாவை இப்போதைக்கு மருத்துவமனைக்கு அழைத்துவரவேண்டாம் என்றுதான் வீட்டில் விட்டு வந்தது.அவள் விழித்து எழும்பொழுது வீட்டில் அப்பா,பாட்டி தாத்தா என்று யாரையும் காணாமல் விடாமல் அழுகை தான்.பார்த்துக்கொள்ளும் பெண்ணால் கையாள முடியாத அளவுக்கு அழுது தீர்த்தாள் தயா. அவர் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார்.குழந்தை சமாதானமாகவில்லை. சாப்பிடவும் இல்லை. அழுகையில் மூச்சிரைப்பு வந்துவிடுமோ எனும் அளவு பயந்தார் அவர்.
வாணிக்கு அழைத்து குழந்தையின் நிலை பற்றி சொல்லவும், மனது முழுவதும் மகனிடம் இருந்தாலும், வாணி கிளம்பி வீட்டுக்கு சென்றார். உயிர் ஆபத்து இல்லை என்பதால் உடல்நிலை குறித்த கவலைதான். ஆனந்திடமும்,” நீங்களும் ரொம்ப நேரம் இங்கே காரிடாரில் உட்கார முடியாது. பையனை கவனிக்க நம்ம உடம்பு கண்டிஷன் நல்லா இருக்கணும்.ப்ளீஸ் , ரெஸ்ட் எடுக்க ஒரு ரூம் கேட்டு வாங்கிடுங்க” என்று அலைபேசியில் அழைத்து கணவரிடம் ஞாபகப்படுத்தவும் வாணி மறக்கவில்லை.
வீட்டில் பாட்டியை பார்த்தவுடன் தயா கொஞ்சம் அழுகையை குறைத்தாள்.ஆனாலும் அவளின் விழிகள் அப்பாவை தேடியது. சமாளிப்பது பெரிய சவால் என்று வாணிக்கு புரிந்தது. ஏதேதோ கதைகள் சொல்லி , இரவு உணவு கொடுத்து ,விடிகாலை இரண்டு மணிவரை அவள் விளையாட துணையிருந்து, அவளுடன் விளையாடி ,மீண்டும் தயாவுக்கு பாலை கொடுத்து உறங்க செய்வதற்குள் வாணியும் வேலை செய்யும் பெண்ணும் ஓய்ந்து போனார்கள்.இருவரும் காலையில் கண்விழிக்கவே எட்டு மணி ஆகிவிட்டது.இன்னமும் தயா எழுந்திருக்கவில்லை. அவசரகதியில் செய்து வைக்கப்பட்டிருந்த காலை உணவை முடித்துக்கொண்டு வாணி மருத்துவமனைக்கு கிளம்பினார்.
கிளம்பும்முன்,”தயா எழுந்தா அப்பா வேலை செய்ய ஊருக்கு போயிருக்காங்க.வர த்ரீ டேஸ் ஆகும். தாத்தா ஆபிஸ் போயாச்சு.பாட்டி பாட்டு பாடிட்டு ராத்திரி வருவாங்க ன்னு சொல்லுங்கம்மா. கொஞ்சம் சமாளிக்க பாருங்க.நா ராத்திரி வந்துருவேன்.இல்லனா சார் வருவாரு தயா ஒன்பது மணிக்கு எழுந்துட்டா ஸ்கூல் கிளப்பி அனுப்பிடுங்க.கொஞ்சம் மூட் மாறும் “என்று சொல்லிவிட்டு தான் கிளம்பினார்.
‘இப்படி விஜயராகவனுக்கு விபத்து ஏற்பட்டிருக்க வேண்டாம் ‘என்று பெற்றவளின் மனம் புலம்பியது. காலையில் வாணி மருத்துவமனைக்கு செல்லும்பொழுது கணவருக்காக உடுப்புகளும் எடுத்துக்கொண்டு தான் சென்றிருந்தார். வாணி செல்லும்பொழுது காலை காபியும், உணவையும் சாப்பிட்டு,உட்கொள்ளவேண்டிய மருந்துகளை மனைவி எடுத்துக்கொண்டு வருவார் என்று காத்திருந்தார்.
வாணி அறைக்குள் நுழைவதற்கும்,சந்தனா ட்யூட்டிக்கு வருவதற்கும் சரியாக இருந்தது.அவளுக்கு இப்போது ஆர்த்தோ மருத்துவருக்கு உதவி செய்யவென்று பணி ஒதுக்கப் பட்டிருக்கிறது. மருத்துவருடன் நோயாளிகளை காணவென்று வந்தவளுக்கு விஜயராகவன் மருத்துவமனையில் ஐ சி யுவில் அனுமதிக்கப் பட்டிருப்பது சற்றே அதிர்ச்சியை கொடுத்திருந்தது. அவளும்கூட இதை எதிர்பார்த்திருக்கவில்லை.
எதிர்பார்க்காத திருப்பங்களை கொண்டது தானே வாழ்க்கை. இந்தக்கதை இனிமேல்தான் தனக்குள் புதைத்துக்கொண்டிருக்கும் விஷயங்களை வெளியே சொல்லப்போகிறது. தயாராகுங்கள். சந்தனா வாழ்க்கையை தெரிந்து கொள்ள.
