அத்தியாயம் 1
பிரபலமான சாலையில் பல ஏக்கர் பரப்பளவை தன்னகத்தே அடக்கி கொண்டிருந்தது சுந்தரேசன் திருமண மஹால்
அந்த பிரம்மாண்டமான கட்டிடத்தில் அங்கும் இங்கும் பல வண்ண விளக்குகளை கட்டி தொங்க விட்டிருந்தனர்!!
ஒருவேளை இந்த நேரம் இரவாக இருந்தால் வண்ணமயமாக ஒளிரும் விளக்குகளின் முழு அழகையும் கண்டிருக்கலாமோ என்னவோ!!
பகல் பொழுதாய் இருந்ததால் சாதாரணமாகத்தான் இருந்தது. ஆனாலும் பல வண்ணங்களில் அலங்கரிக்கப்பட்டிருந்ததால் காண்போரின் கண்களை கவர்ந்து கொண்டிருந்தது.
வாசலில் மாவிலைகளும் தோரணங்களும் வாழ மரங்களும் கட்டப்பட்டிருந்தது!!
அழகுக்காக மஹாலின் முன்புறம் விதவிதமான மலர்களை கொண்டு அலங்காரம் செய்திருந்தனர்!!
ஒரே உடை அணிந்த பெண்கள் சிலர் அங்கு வருகின்ற விருந்தினர்களை உபசரிப்பதற்காக பன்னீரோடும் கற்கண்டோடும் நின்று கொண்டிருந்தார்கள்.
புன்னகை சிந்தி கொண்டிருக்கும் அவர்களைப் பார்க்க அத்துணை அழகு
அந்த மண்டபத்திற்கு வருவோர் எல்லாம் அணிந்திருந்த உடைகளை பார்த்தாலே வசதியானவர்கள் என்பதை அடையாளம் காண முடிந்தது!!
மஹாலின் அருகாமையில் வரும் போதே 90களில் திருமண வீடுகளில் ஒலித்த பாடல்கள் அந்த மஹாலில் ஒலித்துக் கொண்டிருந்தது. இந்த காலகட்டத்திலும் ரசனை மாறாமல் பாடல்களை ஒளிபரப்பில் கொண்டிருக்கிறார்கள்.
இப்போதெல்லாம் இப்படி பாட்டுகள் எங்கே கேட்க? பாடல் ஒலிப்பதே பல மண்டபங்களில் இல்லாமல் போய்விட்டது!
மஹாலின் வெகு தூரத்திலேயே அங்கு தயாரிக்கப்படும் பிரியாணியின் மணம் காற்றில் மிதந்து அவ்வழி செல்வோரின் பசியை தூண்டிக் கொண்டிருந்தது.
அந்த இடத்தை பற்றிய ரசனைகளை எல்லாம் உள்வாங்கிக் கொண்டு உள்ளே நுழைய,
ரஞ்சித்
Weds
பிரதிக்ஷா
என்ற பெயர் பலகை ஒன்று மண்டபத்தின் உயரத்தில் பாதி அளவு இருந்தது. அதையெல்லாம் பார்த்துக் கொண்டே மண்டபத்தின் உள்ளே செல்ல இதுவரை வெளியில் நின்று ரசித்த திருமண மண்டபத்தின் ரசனைகள் கலைக்கும் விதமாக சத்தமும் கூச்சலும் அளவுக்கு அதிகமாக கேட்டுக் கொண்டிருந்தது!!
மங்கள வாத்தியம் முழங்க வேண்டிய நேரத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள் !
அழகு பதுமையாக மணமகள் கோலத்தில் அலங்காரம் செய்யப்பட்ட மணமகள் பிரதிஷா கண்கள் கலங்கி நின்று கொண்டிருந்தாள்.
பக்கத்தில் பட்டு வேஷ்டி கட்டி பாந்தமாய் நின்று கொண்டிருந்த மணமகன் ரஞ்சித் அமைதியாக நின்று கொண்டிருந்தான்.
மணமகனின் பக்கத்தில் நின்ற மாப்பிள்ளை தோழன் விதுரனோ கூனி குறுகி நின்று கொண்டிருந்தான்.
“என்னப்பா சொல்றீங்க? அதான் பொண்ணே சொல்லிடுச்சே! கல்யாணத்துக்கு முன்னாடியே களங்கப்பட்டுட்ட்டேன்னு, இனியும் யோசிச்சுக்கிட்டே இருந்தா எப்படி! நடந்தது நடந்து போச்சு, யாரையும் குற்றம் சொல்லி இனிமேல் ஒன்னும் நடக்க போறது இல்ல!
அதனால அந்தப் பொண்ணு வாழ்க்கையை கெடுத்த அந்த பையனுக்கே கல்யாணத்தை பண்ணி வச்சிருங்க ” என்று உரைத்தார் அந்த கூட்டத்தில் நின்ற பெரியவர் ஒருத்தர்.
திருமணத்திற்கு வந்தவர்கள் எல்லாரும் தங்களுக்குள் ஏதேதோ குசுகுசுவென்று ரகசியமாய் பேசிக் கொண்டிருந்தார்கள்.
“எல்லாரும் என்னை நம்புங்க நான் எந்த தப்பும் பண்ணல! இந்தப் பொண்ணு ஏன் இப்படி சொல்லுதுன்னு எனக்கு தெரியல? ” என்று கூறினான் விதுரன்.
“தம்பி, பண்ணக்கூடாத பண்ணிட்டு நல்லவன் மாதிரி பேசுற! ஒரு பொண்ணு இவ்வளவு கூட்டத்துக்கு மத்தியில் தான் கெட்டுப் போனத சொல்றான்னா, பொய் சொல்லுவாளா? நீ வெளியூர்க்கார பயலா போயிட்ட, இப்படி ஒரு காரியத்தை எங்க ஊர் பையன் பண்ணி இருந்தா இந்நேரம் என்ன பண்ணிருப்போம்னு தெரியாது!
ஒழுங்கா, உன்னால கெட்டுப்போன அந்த பொண்ணுக்கு நியாயத்தை சொல்லு!!” என்று கூட்டத்தில் இருந்த ஒருவர் கோபத்தில் கண்கள் சிவக்க கூறினார்.
மணமகள் பிரதிஷாவோ எதுவும் சொல்லாமல் அழுது கொண்டே இருந்தாள். அவளை ஆதரவாக தாங்கிக் கொண்டிருந்தார் பிரதிக்ஷாவின் அன்னை லட்சுமி.
“மச்சான் நான் எதுவும் பண்ணல உனக்கு என்னைய பத்தி தெரியும் தானே! நானும் மனிஷாவும் எந்த அளவுக்கு காதலிக்கிறோம்னு உனக்கு தெரியும்! இந்நாள் வர மனிஷாகிட்ட கூட நான் அட்வான்டேஜ் எடுத்து பழகினது கிடையாது, அப்படி இருக்கும்போது நீ கல்யாணம் பண்ண போற பொண்ணு கிட்ட நான் எப்படி தப்பா நடந்துப்பேன்!
நேத்து பேச்சுலர் பார்ட்டி முடிஞ்சு நான் போதையில் தான் வந்தேன்! ஆனா கண்டிப்பா நான் என்னோட சுய கட்டுப்பாட்டை இழக்கிற அளவுக்கு போதை கிடையாது, என்று விதுரன் கூற “அப்ப இந்த வீடியோவுக்கு என்ன அர்த்தம்?” என்று கேட்டாள் பிரதிக்ஷாவின் தோழி ரம்யா.
“இங்க பாருங்க, அந்த வீடியோவுக்கு என்ன அர்த்தம்னு அந்த பொண்ணு கிட்ட கேளுங்க! அந்த பொண்ணோட ரூமுக்கு போகும்போது அங்க யாரோ தண்ணிய கொட்டி போட்டு இருந்தாங்க, நான் கொஞ்சம் போதையில் இருந்தனால கால் வழுக்கி விழுந்துட்டேன் அவ்வளவுதான்! அதுக்காக அதை வச்சு நான் அந்த பொண்ணு கிட்ட தப்பா நடந்துகிட்டேன்னு சொன்னா நான் ஏத்துக்க மாட்டேன்!” என்று அங்கு கண்கள் கலங்க நின்று கொண்டிருந்த பிரதிக்ஷாவை பார்த்தான் விதுரன்.
பிரதிக்ஷாவோ, விதுரனை பார்த்து, “இங்க பாருங்க! இனிமேல் உண்மையை மறச்சு நீங்க என்ன பண்ண போறீங்க, நீங்க திட்டம் போட்டு பண்ணுனிங்கனு நான் சொல்லவே இல்ல, ஏதோ போதையில பண்ணிட்டீங்க! அதை மறச்சு நான் ரஞ்சித கல்யாணம் பண்ணுனா அது நான் அவருக்கு செய்ற துரோகம்னு எனக்கு தோணுச்சு, அதனாலதான் உண்மையை சொல்லிட்டேன், இவங்க எல்லாரும் சொல்ற மாதிரி நீங்க என்னைய கல்யாணம் பண்ணிக்கிறீங்கன்னு நான் கட்டாயப்படுத்த மாட்டேன்! ஆனா நீங்க பண்ணுன தப்ப மட்டும் ஒத்துக்கிருங்க!” பிரதிக்ஷா அழுது கொண்டே சொல்ல அவளை எரிப்பது போல் பார்த்தான் விதுரன்!.
“அந்தப் பொண்ணு எவ்வளவு நல்ல பொண்ணா இருக்கு! இப்படி ஒரு சம்பவம் நடந்ததை வெளியில சொன்னா எல்லாரும் அந்த பொண்ண தப்பா நினைப்பாங்கன்னு கூட நினைக்காம ஒருத்தருக்கு துரோகம் பண்ண கூடாது நினைச்சு உண்மைய சொல்லுது! ஆனால் நீ …. என்று விதுரனை அருவருக்கும் பார்வை பார்த்தார் ரஞ்சித்தின் அப்பா.
“அப்பா நான் சொல்றதை கேளுங்க?” என்று விதுரன் சொல்ல ” யாருக்கு யார் அப்பா, நண்பன் கல்யாணம் பண்ணிக்கிற பொண்ணுனு தெரிஞ்சும் இவ்வளவு அசிங்கமா நடந்திருக்க, உன்னை பார்க்கவே எனக்கு அருவருப்பா இருக்கு!” என்று ரஞ்சித்தின் அப்பா ராம்தேவ் கூறினார்.
தன் மகனை விட விதுரன் சிறந்தவன் என்று மணிக்கு ஒரு முறை சொல்பவர் இன்று தன்னை பார்த்து அருவருப்பாய் இருக்கிறது என்று சொல்லவும் உடைந்து விட்டான் விதுரன்.
விதுரனுக்கு ஒன்று மட்டும் புரிந்தது! ‘ஒரு பெண் கண்கள் கலங்கி எது சொன்னாலும் இந்த உலகம் நம்பும், ஆனால் ஆடவனின் பக்கம் நியாயம் இருந்தாலும் அதை யாரும் புரிந்து கொள்வதில்லை’ என்று நினைத்துக் கொண்டு இதற்கு மேல் பேசி எந்த பிரயோஜனமும் இல்லை என்று அமைதியாக நின்று கொண்டிருந்தான்.
“சரி இப்ப என்ன பண்ணலாம்! எங்க பொண்ணுக்கு ஒரு வழியை சொல்லுங்க என்று பிரதிக்ஷாவின் தாய் அழுது கொண்டே தன் கண்களை முந்தானையால் துடைத்துக் கொண்டு கேட்க, “வேற வழி என்ன? அந்த பொண்ணு வாழ்க்கையை
சீரழிச்சவனுக்கு தான் கல்யாணம் பண்ணி வைக்கணும்!” என்று கூட்டத்தில் இருந்த சிலர் கூறினார்கள்.
நேரமாக ஆக மண்டபத்தின் நிலை தலைகீழாக மாறிக்கொண்டிருந்தது!
பெண் வீட்டார் அனைவரும் பிரதிக்ஷாவின் நிலை இப்படி ஆனதை நினைத்து கண்கலங்கி கொண்டு நிற்க, ரஞ்சித்தின் குடும்பமோ ரஞ்சித்தை குற்றம் சொல்லிக் கொண்டிருந்தது!
“நம்ம யாரோட பழகுறோம்னு முதல்ல தெரிஞ்சுக்க! நண்பன் நண்பனு யாரை தலையில் தூக்கிக்கொண்டு
திரிஞ்சியோ இன்னிக்கு அவன் தான் உன் வாழ்க்கைய சீரழிச்சிருக்கான், இப்ப என்ன பண்ண போற உன் கல்யாணம் நின்னு அந்த பொண்ணு வாழ்க்கையும் இப்படி ஆயிருச்சு!” என்று ரஞ்சித்தின் உறவினர்கள் கேட்க,
“இங்க பாருங்க நீங்க யாரும் இதுல தலையிட வேண்டாம்! எனக்கு என்ன செய்றதுன்னு தெரியும்” என்று சொல்லிக்கொண்டே அங்கு குற்றவாளியாய் நின்று கொண்டிருந்த விதுரனின் அருகில் சென்று அவனின் தோள்களில் கை வைத்தான்.
இவ்வளவு நேரம் தன் வேதனையை அடக்கி கொண்டிருந்த விதுரன் தன் நண்பனின் கை தன்மேல் பரிவாய் பட்டதும், ” மச்சான் இவங்க எல்லாரும் என்னென்னமோ சொல்றாங்க என்னைய பத்தி உனக்கு தெரியும் தானே? எப்பவுமே நான் உனக்கு கெடுதல் நினைச்சது கிடையாது! அப்படி இருக்கும்போது உன் கல்யாணத்தை எப்படி நான் நிறுத்துவேன், இந்தப் பொண்ணு எல்லாரும் முன்னாடியும் என்னை அவமானப் படுத்தனும்னு நெனச்சு என் மேல இப்படி ஒரு பழிய தூக்கி போடுறா?” என்று விதுரன் அங்கு நின்று கொண்டிருந்த பிரதிக்ஷாவை பார்த்து கூறினான்.
“மச்சான் இங்க யாரு என்ன வேணாலும் சொல்லட்டும் உன்னை பத்தி எனக்கு தெரியும்! நீ தெரிஞ்சு எதையும் பண்ணி இருக்க மாட்ட. நான் நல்லா இருக்கணும்னு இங்கே இருக்கிறவங்களை விட நீ தான் நினைப்ப. அதனால நான் தப்பா நினைப்பேன்னு மட்டும் நீ நினைக்காத!
பல கோடி ரூபா ப்ராஜெக்ட் பத்தி கூட யோசிக்காம எனக்காக என் கல்யாணத்துக்கு நீ வந்தனும் எனக்கு தெரியும், ஏதோ நம்ம எதிர்பார்க்காதது நடந்துருச்சு! யாரு குற்றவாளின்னு கண்டுபிடிக்கிற நேரம் இது கிடையாது,
உண்மையோ பொய்யோ இங்கே இருக்கிற எல்லாரும் உன்னைய குற்றவாளின்னு சொல்றாங்க!
ஒரு பொண்ணு உன்னால அவளோட வாழ்க்கை சீரழிஞ்சிட்டுன்னு சொல்லி நிக்கிறா? அவ உண்மை சொல்றாளோ பொய் சொல்றாளோ! தெரியல, இவ்வளவு தப்பு நடந்த பின்னாடி உங்களோட வாழ முடியாதுனு என்கிட்ட பிரதிக்ஷா சொல்லிட்டா. அப்படி இருக்கும்போது நான் அந்த பொண்ண கல்யாணம் பண்ண முடியாது!
அதனால நீயே இதே மணமேடையில பிரதிக்ஷவ கல்யாணம் பண்ணிக்க!” என ரஞ்சித் சொல்ல அதிர்ச்சியில் உறைந்தான் விதுரன்.
