அகல்யாவின் மனம் படபடத்தது. இவ்வளவு நேரமும், ஆட்கள் அருகிலேயே இருந்து, சமாளித்தாகிவிட்டது. இனி தனியே அவனை சந்திப்பதென்றால் அவளுக்கு அச்சமாக இருந்தது.
முன்பும்,இதுபோன்ற ஒரு தருணம் அமைந்த போது, தோழிகளின் கேலியும், உள்ளுக்குள் ஒருவித கிறக்கமும்,மயக்கமுமாக சென்ற இரவில்,தலையில் இடி விழுந்தது, அநியாயமாக நினைவில் வந்தது.
‘அப்படி ஒரேடியாகப் பயப்பட எதுவுமில்லைதான். சிபி அவளை விரும்பித்தான் கல்யாணம் செய்வது போல எல்லாரும் சொல்கிறார்கள். ஏற்கனவே என்னைத் தெரிய வேறு செய்யுமாமே? எப்படியோ?’ என்று எண்ணியவளின், அருகில் சிபி வந்தான்.
அவளுக்கு இதயம் பந்தயக் குதிரை வேகமெடுத்தது.தன் கையில் வைத்திருந்த சுவாமி மாலையை அவளிடம் நீட்டி, “அத்தை உன்கிட்ட குடுக்க சொன்னாங்க அகல்” என்று சொன்னான்.
தலையை அசைத்தபடி மாலையை அவள் வாங்கிட, அவன் கரம் மெலிதாக அவளை உரசிட, ஜிவ்வென மின்சாரம் பாய்ந்தது. காலையில் தாரை வார்த்தபோது, சிந்தனையில் சிக்கியிருந்தவளுக்கு எதுவும் தெரியவில்லை.
இப்போது அவன் நினைவில் இருந்ததால்,அவன் தீண்டல் உறைக்கின்றதோ?இயல்பாக இருக்க மிகவும் சிரமப்பட்டாள்.
இதற்குள் காயப் போட்டிருந்தத் துணிகளை ரூபிணியும், ஷன்மதியும் எடுத்து வந்திருக்க, அனைவரும் வீட்டுக்குத் திரும்பினர். பின்னாடியே இரவு சாப்பாட்டுக்கும் சொல்லிவிட்டு ஆனந்தும், தீபக்கும் வந்து சேர்ந்தனர்.
வீட்டுக்கு வந்த உடனேயே, ஷன்மதியும், ரூபிணியும் ஒத்தைரூமுக்கு சென்றுவிட, தனியே என்ன செய்வது என தன்னறைக்குள் அகல்யா நுழைய, அங்கே சிபி இருந்தான்.
திகைத்து விழித்தவளிடம், “இல்ல, காலைக்கு வேண்டிய டிரஸ், எடுத்து வைக்க சொன்னாங்க. உனக்கும் எடுக்க வேண்டியிருக்குமே? எடுக்கனுமா? “என்று கேட்டபடித் தன் பெட்டியை மூடி சுவர் ஓரமாக வைத்தான் சிபி.
‘ஆம்’ என்று தலையை மட்டும் அகல்யா ஆட்ட, சிரித்தவன், “எடுத்துத் தாயேன் நானேக் கொண்டுக் கொடுத்துடுறேன்” என்றான்.
‘ சரி’ என்று அதற்கும் தலையசைப்பு தான். நாளைக் கட்டுவதற்காகப் புதியதாக வாங்கி தந்திருந்தப் புடவை பார்சலை எடுத்து அவனிடம் நீட்டினாள்.
“எல்லாம் இதுக்குள்ளேயே இருக்குதா? “என்று பார்சலை வாங்கிப் பார்த்தான். புடவை, ஜாக்கெட், இத்யாதிகள் எல்லாம் இருந்தது. அவன் பார்த்ததும் அகல்யாவுக்குள் லேசாகக் கூச்சமா இருந்தது.
‘ச்சே நாமளேக் கொண்டு போயிருக்கனுமோ?’என்று மனதுக்குள் தன்னையேத் திட்டிக் கொண்டாள்.”ஓகே நான் குடுத்துடுறேன்” என்றபடி அவன் வெளியேற அவளுக்கு அப்பாடி என்றிருந்தது.
‘ கடவுளேக் கொஞ்ச நேரத்துக்கே, இப்படி படபடப்பா இருக்கே, இதுல நைட் பூராவும் எப்படி சமாளிக்கப் போறேன்? அதுவும் அவன் மனநிலை எப்படி இருக்கும்னு தெரியலியே?’
‘என்னை மாதிரியே, அவனுக்கும்இது, ரெண்டாவது முறைதான். ஆனாலும் எந்த சலனமும் இல்லையே? எப்படி முடியுது? என்னதான் முரளி, தன்னை விரும்பாத கணவனாக இருந்த போதிலும், ஏதோ ஒரு வகையில் அவன் நினைவு அவளை இம்சிக்கிறதே?’
‘அதுபோல அவனுக்கும் இருக்குமா? ஒருவேளை பழைய நினைவுகளை மறந்தது போலக் காட்டிக் கொள்ளத்தான் சிரிச்சுட்டே உலாவுறானோ? இருக்கும்’ என்று அவளாகவே முடிவும் கட்டிக் கொண்டாள்.
யோசித்தபடி அறைக்குள் இருந்தவளை சாப்பிட அழைக்க வந்தாள் ரூபிணி. லேசாகக் கலங்கிய விழிகளுடன், கட்டிலில் அமர்ந்திருந்தவளைக் கண்டதும்” ஏன் அகல் நல்ல நாளும் அதுவுமா கண்கலங்கிட்டே இருக்க?” என்று கேட்டாள்.
“பயமாயிருக்குது அண்ணி “என்றவளைக் கோபமாக , ‘என்ன பயம், இது புதுசு இல்லையே?’என்று வாய்வரை வந்த வார்த்தைகளை அப்படியே முழுங்கி, அதே நேரம் சற்றே வருத்தமாக “நீ செய்றதப் பார்த்தா, உன்னை நாங்கக் கட்டாயப்படுத்தி,கல்யாணம் செஞ்சு வச்ச பீலிங் வருது” என்றாள்.
அகல்யா மௌனமாகத் தலை குனியவும், “இங்க பாரும்மா, சிபி உன்ன விருப்பப்பட்டுதான் கல்யாணம் பண்ணிருக்காரு. உன் மேல நிஜமாவே அன்பு இருக்கு டா. நீ பயப்படுற மாதிரி எதுவுமில்ல “என்றாள் ரூபிணி.
அதற்குள் ஷன்மதியும் “அண்ணி சாப்பிட வரலியா?” என்று கேட்டபடி உள்ளே வர, ரூபிணி அகல்யாவிடம் கண்ஜாடை செய்ய, வலிய புன்னகையைப் பூசியபடி, “வரேன் அண்ணி.நீங்க சாப்பிடலியா?” என்று கேட்டாள்.
“சேர்ந்து சாப்பிடலாம்னுதான், கூப்பிட வந்தேன். சாப்பிட்டாத் தானே ரெடியாக முடியும்” என்றுக் கண்களில் குறும்புடன் ஷன்மதிக் கூற,”வாங்க போகலாம் “என்று ரூபிணி இருவரையும் அழைத்துக் கொண்டு வெளியே வந்தாள்.
சாப்பாடு, சந்தைக் கடை போல சலசலப்பும் கலகலப்புமாக கழிந்தது.அகல்யாவுக்கு
தான் எதுவும் மனதில் பதியவில்லை. மருந்தைக் குடிக்கையில் குரங்கை நினைக்காதே கதை போல பழைய நினைவுகளிலேயே உழன்றாள்.
அகல்யா மனநிலை உணர்ந்ததால், ரூபிணி அவளுக்கு பெரிதாக அலங்காரம் என்று எதுவும் செய்யவில்லை. உடம்புக் கழுவி, எளிமையான ஒரு காட்டன் சில்க் கட்டி,நீண்ட கூந்தலை குளிப்பின்னலிட்டு, அடியில் மட்டும் ரப்பர் பேண்ட் போட்டு,கொஞ்சம் பூவை வைத்தாள்.
இதமாகக் காய்ச்சி வைத்திருந்தப் பால் டம்ளரை அவள் கையில் கொடுக்க, ஷன்மதியும் வந்துவிட, இருவருவருமாக அவளை ஒத்தை ரூமுக்கு அழைத்துவந்தனர்.
வீட்டுக்கு பின்புறமாக, அதிகமாக விருந்தினர் வந்தால் தேவைப்படும் என்று ஒரு அறையை பாத்ரூம் வசதியுடன் கட்டியிருந்தார்.
ஆனந்தின் சாந்திமுகூர்த்தம் அங்குதான் நடந்தது. சென்றமுறை அடுத்த ஊர்தான் என்பதால் மதியமே முரளி வீட்டினர் அவளையும் அழைத்து சென்றுவிட்டதால், அங்குதான் அவளுக்கு ஏற்பாடானது.
அங்குதான் அவளுக்கு ஏமாற்றத்தையும், வேதனையும் தந்த சம்பவங்கள் அரங்கேறியது. மீண்டும்,மீண்டும் மறக்கவே விடாமல் எண்ணங்கள் அவளை சுழற்றியடித்தது.
அறைக்குள், சிபி எளிமையான காட்டன் வேட்டி சட்டையுடன் அமர்ந்திருந்தான். “அண்ணி, ரூபியக்கா எல்லாம் சொல்லிருப்பாங்க சமர்த்தா சீக்கிரம் லைட் ஆஃப் ஆயிடனும் சரியா?”
” இந்த மேசையில ஏத்தி வச்சிருக்கேனே, அந்த விளக்கு அணையாம பாத்துக்கனும் ஓகே? ஆல் த பெஸ்ட்.”என்று அவளின் கன்னத்தை செல்லமாகத் தட்டி விட்டு ஷன்மதி சென்றாள்.
ரூபிணி அகல்யாவின் காதுகளில் மெல்ல, “புரிஞ்சு நடந்துக்கோ டா ப்ளீஸ்” என்று மட்டும் சொல்லிவிட்டு ஷன்மதியோடு இணைந்து கொண்டு வெளியேறினாள்.
அகல்யாவுக்கு படபடவென வந்தது. மயக்கம் வரும் போல இருந்தது.சிபி புன்னகையுடன் “ஏம்மா அங்கேயே நின்னுட்ட?” என்று எழுந்து வந்தான். போகும் போது ரூபிணி கதைவை சாத்தி விட்டு சென்றிருந்தாள்.
சிபி, கதவைத் தாளிட்டான்.பால் தம்ளரை நடுங்கியபடியே அவனிடம் நீட்ட, அவன் அதை வாங்கிக் கொண்டு,அருகிலிருந்த மேசையில் வைத்தான்.
‘காலில் விழுந்து வணங்கும்படி அண்ணி சொன்னாளே?’ முரளி அறைக்குள் நுழைந்தவுடனேயே பேசி முடித்துவிட,இதுபோல எதுவும் அவள் செய்திருக்கவில்லை. மீண்டும் அதே நினைவு.
நினைவை ஓரம்கட்டிவிட்டு, மெல்ல அவனருகில் நடந்து சென்று அவன் காலில் விழப்போக, அவன் தடுத்தாட்கொண்டவன் போல, அவளைப் பற்றித் தன் அருகில் அமர்த்திக் கொண்டான்.
லேசாக அவன் தொண்டையை செருமவும், ‘ஐயோ ஏதோ சொல்லப் போகிறான் போலவே?’ என்று அவள் மனது அடித்துக் கொள்ளத் துவங்கியது.
“இங்க பாரும்மா,எனக்கு உன் மனநிலை நல்லா புரியுது. அதுவும் இன்னைக்கு கொஞ்சம் அதிகமாவே,பழைய நினைவுகள் உன்னை அலைக்கழிச்சிருக்கும். அதனால எல்லாமே இன்னைக்கே நடக்கனும்னு அவசியமில்ல.”
“நாம ரெண்டு பேரும், ஒருத்தரையொருத்தர் நல்லா புரிஞ்சு, இயல்பா எல்லாமே நடக்கட்டும். அதுவரை நல்ல ஃப்ரெண்ட்ஸாப் பழகுவோமே?” என்றுக் கேட்டிட, அவள் கண்கள் நன்றியில் பளபளத்தது.
” உனக்கு இந்த கல்யாணம் நடந்ததில்ல இஷடக்கேடு எதுவுமில்லையே? என்னைப் பிடிச்சிருக்குதானே? “என்று அவள் ஆமாம் என்று சொல்லவேண்டுமே என்ற தவிப்போடு அவன் கேட்டான்.
அவள் ‘ஆம் ‘என்பது போலத் தலையசைக்க, நிம்மதியானப் புன்னகையுடன் “உனக்கு எதுவும் என்கிட்ட கேட்கனுமா? “என்று கேட்டான்.
மெல்ல அவனை ஏறிட்டவள், “உங்களுக்கு என்னை முன்னாடியேத் தெரியுமா?” என்று அவள் கேட்க, சிபி காற்றில் எதையோப் பிடிப்பது போல சைகை செய்து தன் நெஞ்சருகே கையைக் கொண்டு வைத்தான்.
அகல்யா புரியாமல் விழிக்க, அவன் சிரித்தபடி, “நான் எதாவது பேசினாலும் நீ தலையை மட்டும் தானே அசைப்பே? நீ ஊமையில்லைன்னு தெரியும். ஒருவேளை உனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமில்லையோனு நினைச்சேன்.”
“இப்போ என் பொண்டாட்டி முதல்முதலா என்கிட்டப் பேசினீயா? அதான் அந்த வார்த்தைகளை என் நெஞ்சுக்குள்ளப் பத்திரப்படுத்துறேன் “என்ற போது அவளையுமறியாமல், அவள் கன்னங்கள் சிவந்தன.
அதை ரசித்தவன், “ம்ம் ரொம்ப முன்னாடியேத் தெரியும். நீயும் என்னைப் பார்த்திருக்க” என்றான். அவள் ஆச்சர்யமாக “நான் பார்த்திருக்கேனா? எனக்கு நினைவே இல்லையே?” என்றாள்.
” உன்னோட காலேஜ்ல நடந்த கல்ச்சுரல்ஸ்க்கு எங்க காலேஜ் சார்பா ப்ரோகிராம் கோஆர்டினேட்டரா நான் வந்தேன். நீ கூட எங்க காலேஜ் பையனோட சேர்ந்து ஒரு பாட்டு பாடின. அந்த சமயம்தான் நாம பார்த்தது.” என்றான் அவன்.
அகல்யா,ஆச்சர்யத்தில் விழி விரித்தாள். “கூட சேர்ந்து பாடினவரையே எனக்கு நினைவில்ல. ஆனா உங்களுக்கு எப்படி என்னை நினைவிருக்குது?” என்று கேட்டாள்.
அதற்கு பதில் சொல்ல அவன் மனது வேதனைப்பட்டது. ‘பார்த்த முதலே உன்னை லவ் பண்ண ஆரம்பிச்சுட்டேன் என்று சொல்லத்தான் ஆசை.அப்படின்னா முதல்லயே என்னை ஏன் கல்யாணம் பண்ணல?ன்னு அவள் கேட்டால் அவனால் என்ன பதில் சொல்ல முடியும்?’
பிராயசையுடன், “நான் படிச்ச காலேஜ்லயே, கொஞ்ச நாள் கெஸ்ட் லெக்சரரா வர்க் பண்ணினேன். அப்போ தான் உங்க காலேஜ் புரோகிராமுக்கு வந்தேன். அப்போ பார்த்த சிலரை, எனக்கு இப்பவும் நினைவிருக்கு “என்று சமாளித்தான்.
“ஓஓ “என்றாள் அகல்யா. மேலும் அதையேப் பேசி வளர்க்க விரும்பாதவன் போல,” பால் குடிக்கிறியா?” என்று அவளிடம் பால் டம்ளரை எடுத்து நீட்டினான்.
“இல்ல,ஆண்ணி முதல்ல நீங்க தான் குடிக்கனும்னு சொன்னாங்க.” என்றாள் அவள். “அட ஏம்மா நம்ம முதல் அறிமுகம் பால்ல துவங்கனும்கிறது சம்பிரதாயம். அத நீ முதல்ல குடிச்சா என்ன? நான் குடிச்சா என்ன? ரெண்டும் ஒண்ணுதான் “என்றான்.
மெலிதாக அவன் மேல் நன்மதிப்பு வந்தது அகல்யாவுக்கு. “பரவாயில்ல நீங்களேக் குடிச்சிட்டு தாங்க. நான் கீழப் படுத்துக்கிறேன் உங்களுக்குத் தரையிலப் படுத்து பழக்கம் இருக்கோ என்னவோ?,என்றாள்.
“ ஒண்ணும் தேவையில்ல. மனசுக் கட்டுப்பாடா இருந்தா ஒரேக் கட்டிலயே ஒண்ணாப் படுக்கலாம். அப்புறம் இந்த டீலீங் நமக்குள்ளேயே இருக்கட்டும். வெளியத் தெரிய வேண்டாம்.”
“உங்க வீட்டுலயும் சரி, எங்க வீட்டுலயும் சரி இதுவரை ரொம்ப வேதனைப்பட்டுட்டாங்க. இந்த கல்யாணம் மூலமா அவங்களுக்குக் கிடைக்கிற சந்தோசத்தைக் கெடுக்க வேண்டாம்” என்று அவன் சொல்ல ஆமோதிப்பாகத் தலையசைத்தாள்.
தொடரும்…
