வெந்து தணிந்த இதயம்-30(1)
நான் உங்கள் AY_84
வெந்து தணிந்த இதயம்-30(1)
யாழினி இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீண்டிருக்காதது கண்டு பத்ரவேல் பாண்டியன் அவளின் தோள்களைப் பற்றினான்.
திடுக்கிட்டவள் அவனை பார்த்தும் பயந்தாள். பத்ரி மரண வேதனை கொண்டான்.
தனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை என்று அவ்வூரில் தைரியமாக இருந்த யாழினியால் தன் குழந்தைக்கு ஒரு ஆபத்து என்றபோது அதே முடிவில் உறுதியாக நிற்க முடியவில்லை.
“இல்ல, இல்ல, இனிமே இங்க என்னால ஒரு நிமிசம் கூட இருக்க முடியாது. நான் போறேன். என்னை விட்டுடுங்க. இது ஒரு நரகம். இது ஒரு சபிக்கப்பட்ட மண்ணு. இங்க மனித நேயம், காதல், இரக்கத்துக்கெல்லாம் வழியே இல்ல. நான் தப்பு பண்ணிட்டேன். நான் உங்களை கல்யாணம் பண்ணியிருக்கக்கூடாது. அதுவும் நான் உங்களை காதலிச்சிருக்கவே கூடாது. பெரிய தப்பு பண்ணிட்டேன். ஆனா.. ஆனா.. நீங்க மட்டும் ஏன் எனக்கு வித்தியாசமானவரா தெரிஞ்சீங்க? உங்களுக்கு ஒன்னுன்னா ஏன் என் மனசு பதறுது? உங்க தொடுகையை ஏன் என் உடம்பு கேட்குது? என்னை கொடுமைப்படுத்த கல்யாணம் பண்ணினவரை நான் ஏன் இந்தளவுக்கு விரும்புறேன்?” என்றவள் தேம்பி தேம்பி அழ,
அவனால் அவளின் அழுகையை சகிக்க முடியவில்லை. இதயத்தில் ஈட்டி பாய்ந்தது போல் உணர்ந்தான்.
சற்று முன் நடந்த நிகழ்வில் அவன் உயிரே அவன் கையைவிட்டு போனது போலல்லவா அவன் துடித்துப் போயிருந்தான்! அது அவள் மீதான தன் காதலை அவன் உணர்ந்த தருணமும் கூட.
தற்போது அவளும் தன்னை விரும்புவதாய் தெரிய, ஒரு ஆணாய் தனது கர்வத்தையெல்லாம் அவளின் காலடியில் சமர்பிக்கத் தயாரானான் பத்ரி. மெதுவாக அவளின் மாவிளக்கு பாதத்தை தனது நெஞ்சில் தூக்கிவைத்தான்.
அக்கணம் தனது ஆணாதிக்கம், அகங்காரம், பராக்கிரமம் என்று சகலத்தையும் அவள் காலடியில் சமர்பித்தான் அவன்.
அவனால் இனி ஒரு கணமும் அவளை பிரிந்திருக்க முடியாது. ஆனால், அவளை அவன் இங்கு தங்க வைக்க ஒரே வழி அவனது காதல் மந்திரம் மட்டும் தான். அதை உறுதியாகப் பற்றிக்கொண்டான்.
யாழினியோ அவனை ஆச்சரியமாய் பார்த்தாள்.
அவன் அவளின் மனக்காயங்களுக்கு தனது வார்த்தைகளால் மருந்திட முயன்றான்.
“இங்கப்பாரு யாழினி, நான் உன்னை காதலிக்கிறேன். இதையும் ஏதோ அரசியல் ஆதாயத்துக்காக சொல்றேன் நினைக்காத. மனசுலயிருந்து சொல்றேன். உன்னை கொடுமைப் படுத்தத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேனு எனக்கு நானே சொல்லி என்னை ஏமாத்திக்கிட்டிருந்தேன் இவ்வளவு நாளா. ஆணாதிக்கத்தோட மொத்த உருவமா நான் நின்னது தான் உன்னை வப்பாட்டியா வச்சிக்க நினைச்சது. அப்பறம் தரம் தாழ்ந்து உன்னை உடலளவுல பலவீனமா நினைச்சி என் வலிமையை காட்டினதெல்லாம் எனக்கே கேவலமா இருக்கு யாழினி. அன்னைக்கு உன் முகத்துல சாதத்தை துப்பினது நான் சுத்தமா என் மனுசத்தன்மையை இழந்ததுக்கான அடையாளம். ஆனா என்னையும் நீ காய்ச்சல்ல இருந்தப்ப ஒரு குழந்தை மாதிரி பார்த்துக்கிட்ட. உனக்கு தெரியுமா? நீ ஒரு தேவதை. பூஞ்சை மனசுக்காரி. அன்னைக்கு அந்தப் பூனைக்காக எவ்வளவு துடிச்ச நீ? நான் என்னவோ உன் கூட கட்டில்ல கூடுறதை பெரிய வீரமா நினைச்சி பெருமைப்பட்டுட்டு இருந்தேன். ஆனா, நீ ஒரு சின்ன அருவருப்பை கூட முகத்துல காட்டினதில்ல. அப்படி காட்டியிருந்தா அன்னைக்கே என் ஆண்மைக்கு அது ஒரு பெரிய அடியா இருந்திருக்கும். உன்னால யாரையுமே காயப்படுத்த முடியாது யாழினி. இது தான் உன்னை நோக்கி என்னை இழுத்துக்கிட்டே இருந்த விசயம். இது தெரியாம நான் கேவலம் இந்த உடம்பு தான்னு நினைச்சு இவ்வளவு நாள் என்னையே ஏமாத்திக்கிட்டு இருந்திருக்கேன். எனக்கு உன் காதலை திகட்ட திகட்ட அனுபவிக்கனும் யாழினி. உன்னை காதல் மழையில நனைய வைக்கனும். தயவு செஞ்சு என்னைவிட்டு போயிடாதடி. நான் நீ இல்லைனா வெறும் பொணம்டி.” என்றபோது, பதறி அவனின் வாயில் கைவைத்தாள் யாழினி.
அவன் அவள் கையை விலக்கினான்.
“என்னை பேச விடுடி. நீ மொத்தமா எனக்குள்ள நுழைஞ்சிட்ட. நானே இல்ல இல்லனு பிடிவாதம் பிடிச்சப்பல்லாம் சொட்டு சொட்டா எனக்குள்ள இறங்கிட்டு இருந்த. இப்ப என் இதயம் உனக்காகத் தான் துடிச்சிட்டிருக்கு. அங்க நீ மட்டும் தான். நீ என்னை ஜெயிச்சிட்டடி. என்னை உனக்கு அடிமையாக்கிட்ட. இங்கப்பாரு, இந்த வீட்டுல உனக்கு நான் இருக்கேன். உன்னை அந்த எமன் நினைச்சாலும் என்னை மீறி கொண்டு போக முடியாது. ஏன்னா நீ எனக்கு மட்டுமே சொந்தம். ஐ லவ் யூ யாழினி! ஐ லவ் யூ! ஐ லவ் யூ!” என்று மீண்டும் அவளின் பாதத்தை எடுத்து உதட்டில் வைத்து முத்தம் பதித்தான்.
அதில் சிலிர்த்துப் போனவள், ஆனந்தக் கண்ணீரில் மிதந்தாள்.
அவனின் காதல் அவளின் இதய பலூனில் காற்றாய் நிறைந்து அதன் முழுக்கொள்ளளவை எட்டியது.
தரையில் முழங்காலிட்டு அமர்ந்திருப்பவனின் நெற்றியில் முத்தமிட்டாள். அவனோ பதிலுக்கு அவளை முத்தங்களால் குளிப்பாட்டினான்.
அவர்களிருவரும் ஒருவரையொருவர் கட்டிக்கொண்டிருந்தபோது யாழினி அவ்வார்த்தைகளைச் சொன்னாள்.
“இதுநாள் வரை அந்தப் பக்கமா இந்தப் பக்கமானு இருந்தீங்க. இப்ப ஒரேப் பக்கமா நியாயத்தோட பக்கம் நில்லுங்க” என்றதும், அவன் கண்களிரண்டும் பிரகாசமடைந்தன.
தன் தேவதை தன்னை மன்னித்துவிட்டாள். தன்னை அவள் வெறுக்காமல் தனக்கு இன்னொரு வாய்ப்பு வழங்குவதை நினைத்து உணர்ச்சிப் பெருக்கில் மீண்டும் அவளை கட்டியணைத்துக் கொண்டான் பத்ரி.
யாழினிக்குமே தன் செயல் விந்தை தான். ஆனால், அவன் திருந்துவதே அவளுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியல்லவா?
இனி ரத்னவேல் பாண்டியனின் சாம்ராஜ்ஜியத்தை வேரோடு அழித்துவிடலாம் என்ற நம்பிக்கை பிறந்தது அவளுக்கு.
ஆனாலும், பத்ரியை ஆழம் பார்த்தாள்.
அவள் காதம்பரியின் காதலை மனதிற்கொண்டு, “ஒருவேளை உங்களால கடந்த காலத்துக்குப் போக முடிஞ்சு அந்தப் பொண்ணையும், அந்தப் பையனையும் சேர்த்து வைக்க முடிஞ்சா, சேர்த்து வைப்பீங்களாங்க?” என்றதும், ஒருகணம் யோசிக்கவில்லை பத்ரவேல் பாண்டியன்.
“என் அப்பா மேல சத்தியமா சேர்த்து வைப்பேன்.” என்றான்.
அவளுக்கு அதுபோதும். உடனே காதம்பரியின் காதலை கட்டவிழ்த்தாள்.
“அப்ப காதம்பரி உங்களை எதிர்த்து போட்டியிடுற தர்மதுரையை காதலிச்சாலும் சேர்த்து வைப்பீங்களா?” என்றதும், திடுக்கிட்டான் பத்ரி.
“அது.. உண்மையான காதலா இருக்க வாய்ப்பில்ல யாழினி. அந்த தர்மதுரை முழுக்க முழுக்க என் அப்பாவை பழி வாங்கற வெறியில சுத்திட்டு இருக்கான். அதனால காதம்பரி வாழ்க்கையை என்னால ஆபத்துல சிக்க வைக்க முடியாது.” என்று உறுதியாக மறுத்ததும்,
“ஒருவேளை அவர் காதுவை உண்மையாத்தான் லவ் பண்றாருனு நான் ப்ரூவ் பண்ணிட்டா, நீங்க அவங்களை சேர்த்து வைப்பீங்களா?” என்று விடாமல் கேட்டாள் யாழினி.
நிச்சயமாக என்று மறுபடியும் தன் தந்தை மீது சத்தியம் செய்தான் பத்ரி.
அவள் அவனை முழு மனதோடு நம்பினாள். அவளின் அணைப்பு இறுகி, கண்ணீர் அவனின் நெஞ்சை நனைத்தது.
மறுபுறம் ரத்னவேல் பாண்டியன் நிலைகொள்ளாமல் தவித்தார்.
அவரின் அரிசி குடவுனில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பையனை வேறு காவலிருந்த அடியாட்கள் கோட்டை விட்டிருக்கிறார்கள் என்று தெரிந்ததும், குறுக்கும் மறுக்கும் பதட்டத்தில் நடந்துகொண்டே இருந்தார்.
தப்பிச் சென்றவன் தோட்டத்து வீட்டிலிருந்த தன் காதலிக்கு ஏற்பட்ட நிலையறிந்து காவல்நிலையத்திற்கோ, ஊடகத்திற்கோ சென்றால்? என்று பயத்தில் தன் முகத்தில் பூத்த வியர்வைத் துளிகளை துடைத்துக் கொண்டார்.
அவரின் இன்னொரு பயத்துக்கு காரணம், எங்கே அவரின் பத்மஸ்ரீ விருதை பிடிங்கிக் கொள்வார்களோ என்று தான்.
அவர் இப்படி பயந்தார் என்றால் அவர் முன் கைக்கட்டி நின்று கொண்டிருந்தவர்கள் எல்லாம் வேறொரு பயத்திலிருந்தார்கள். எங்கே விசயம் வெளியில் கசிந்து அந்தப்பெண்ணின் பெற்றோர் தங்கள் வீட்டுப்பையனை தேடிக் கொன்று விடுவார்களோ என்று பயந்தனர்.
“அய்யா! விசயம் கைமீறி போயிக்கிட்டிருக்கு. எங்களுக்கோ ஒரே மகன். அவனை எப்ப காவக்கொடுப்போமோனு வயித்துல நெருப்பைக் கட்டிட்டு இருக்கோம்யா. பேசாம அவன் ஆசைப்பட்டவளுக்கே அவனை கட்டி வச்சிருந்தா இந்த நிலைமை வந்திருக்காதுல்லயா?” என்றதும், அருணாச்சலத்தை உறுத்து விழித்தார் ரத்னவேல் பாண்டியன்.
“பிள்ளைப்பாசம் உன்னை எப்படியெல்லாம் தரம் தாழ்ந்து பேச வைக்குது அருணாச்சலம்?” என்று உறுமிக்கொண்டிருந்தபோதே வெளியில் பெரும் கூச்சல் கேட்டது.
தொடரும்…
லைக் கரோ,
கமெண்ட் கரோ,
ஸ்டோரி லிங் ஷேர் கரோ தங்கம்ஸ்:)
