29
வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டதுமே, அகல்யாவின் இதயம் ஒரு கணம் நின்று துடித்தது. அவளைப் பார்த்த ஆகாஷ், கண்ணாலேயே தைரியமா இரு என்று சொல்லிவிட்டு வாசலை நோக்கிச் ஓடவும்.
பதற்றத்தில் இருந்த அகல்யாவோ, அவசரமாகக் கிச்சனில் இருந்து தப்பித்து, அறைக்குள் சென்று தனது உடைகளை மாற்றிக் கொண்டாள். இப்பொழுது அவள் அணிந்திருந்த அந்த மெல்லிய வெள்ளை நிறச் சுடிதார், அவளது தூய்மையான மனதைப் பிரதிபலிப்பது போல இருந்தது. முகத்தைத் துடைத்துக்கொண்டு, லேசாகப் பவுடர் பூசி, நெற்றியில் ஒரு குட்டிப் பொட்டு வைத்துக்கொண்டு வெளியே வந்தாள்.
வாசலில்… தலையில் ஒரு சிறிய துண்டு, கையில் ஒரு மஞ்சா பை என அச்சு அசல் மதுரைக்காரராக ராஜசேகரும், ஒரு காட்டன் புடவையில் மிக எளிமையாகச் சிவகாமியும் நின்றிருந்தனர். ஆகாஷ் பின்னால் நின்றுகொண்டு அகல்யாவை பார்த்து ரகசியமாகச் சிரித்துக் கொண்டிருந்தான்.
ராஜசேகர் வீட்டை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “என்னடா தம்பி… வீடு என்னமோ சின்னதாத்தான் இருக்கு… ஆனா ஏதோ கல்யாண மண்டபத்துல வர்ற மாதிரி வாசம் ஊரைக் கூட்டுதே?” என்று மதுரைத் தமிழில் அதிரடியாக ஆரம்பித்தார்.
அப்போது மெதுவாக ஹாலுக்குள் வந்த அகல்யாவை பார்த்த மாத்திரத்திலேயே சிவகாமியின் முகம் மலர்ந்து விட. “அட… இது யாரு தம்பி? வீட்ல மகாலட்சுமி மாதிரி ஒரு பொண்ணு நிக்குது?” என்று சிவகாமி ஆச்சரியமாக கேட்க (அப்படி போடு எல்லாம் நடிப்பு தான்)
அதனை புரிந்துக் கொண்ட ஆகாஷும், தன் தலையைச் சொறிந்துகொண்டு, நடிப்பு கலந்த வெட்கத்துடன், “அது… அது வந்து மா… இவதான் அகல்யா. நான் உங்ககிட்ட போன்ல சொன்னேன்ல… என் புது ஆபீஸ் பிரண்ட்… இல்ல இல்ல… எனக்கு ரொம்பப் பிடிச்சவ!” என்று இழுக்க..
“ஓ… இவதானா அந்த புள்ளையா! பாக்குறதுக்கே பச்சரிசி மாதிரி பளபளன்னு இருக்காளே!” என்று ராஜசேகர் தன் கணீரென்ற குரலில் சொல்ல, வெட்கத்தில் கன்னங்கள் சிவந்து போன அகல்யா மெதுவாகத் தலைகுனிந்து அவர்கள் இருவரின் பாதங்களையும் தொட்டு ஆசிர்வாதம் வாங்கினாள்.
“நல்லா இரு தாயீ… தீர்க்காயிசா இரு!” என்று ராஜசேகர் மனதார வாழ்த்த, சிவகாமி அவளைத் நிமிர்த்தி அணைத்துக்கொண்டாள்.
“வாம்மா… உன்னைப் பத்தித் தம்பி சொல்லும்போதே பாக்கணும்னு ஆசையா இருந்துச்சு. நேர்ல பார்த்தா இவ்வளவு அழகா இருக்கியே!” என்று சிவகாமி சொல்லிக்கொண்டே, தான் கொண்டு வந்திருந்த மஞ்சள் பையிலிருந்து ஒரு சிறிய மல்லிகைச் சரத்தை எடுத்தவள், “இந்தா… இது மதுரை மல்லி… உன் தலைக்கு ரொம்ப அழகா இருக்கும்,” என்று சொல்லி, மிக வாஞ்சையோடு அகல்யாவை நெருங்கி வந்து அவளது கூந்தலில் அந்தப் பூவைச் சூடினார்.
அந்த ஒரு நொடியில், அகல்யாவுக்குள் இருந்த அத்தனை பயமும், தயக்கமும் பனிபோல மறைந்தன. அது வெறும் பூச்சரம் அல்ல, பல காலமாய் அவள் ஏங்கித் தவித்த ஒரு தாயின் ஆசீர்வாதம். சிறுவயதிலிருந்தே தாய் பாசத்தை ஒரு துளி கூட உணராதவள், சிவகாமியின் இந்த திடீர் நெருக்கத்தில் நிலைதடுமாறிப் போனாள். அவளது கண்கள் சட்டெனக் குளமாக, “அத்தை…” என்று விம்மலோடு சிவகாமியின் மார்பில் சாய்ந்து கொண்டாள்.
சிவகாமியின் கண்கள் கனிவில் நனைய, அவளை இன்னும் இறுக்கமாக அணைத்துக்கொண்டவர், “அத்தை, சொத்தை எல்லாம் வேண்டா தாயி… அம்மான்னு உரிமையோடு கூப்பிடு. மதுரையில இருந்து உன் ஆத்தா வந்திருக்கேன்னு நினைச்சுக்கோ,” என்று அந்த மதுரைத் தமிழின் மணம் மாறாமல் சொல்ல, அகல்யாவுக்கு உடல் சிலிர்த்துப் போனது.
தன் வாழ்க்கையில் முதல்முறையாக அந்த வார்த்தையை உச்சரிக்கும் துணிச்சலோடு, “அம்மா…” என மெல்லிய குரலில் அழைத்துவிட்டு, அந்தப் பாசமான அணைப்பில் தஞ்சம் புகுந்தாள். அந்தத் தருணத்தை ஒரு ஓரமாய் நின்று பார்த்துக் கொண்டிருந்த ஆகாஷின் கண்கள் கலங்கின. தன் திட்டம் இவ்வளவு அழகாய் நிறைவேறும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.
அகல்யா மெல்லச் சிவகாமியின் மார்பில் இருந்து விலகி, ஈரக் கண்களால் ஆகாஷைப் பார்த்தாள். ‘உன் குடும்பம் என்னை ஏத்துக்குமான்னு கேட்டியே… இப்போ பார்த்தியா?’ என்பது போல ஆகாஷ் தன் கண்களாலேயே அவளிடம் கேட்க, அகல்யா வெட்கத்தில் தலைகுனிந்து சிரித்தாள்.
இந்த நெகிழ்ச்சியான தருணத்தைக் கவனித்த ராஜசேகர், உரிமையோடு இடையில் புகுந்தவர். “என்ன மகளே… எங்களை இப்படியே வாசல்ல நிக்க வெச்சு பேசப் போறியா? இல்ல உள்ள கூப்பிட்டு நாலு வாய் சோறு போடப் போறியா? உள்ளே இருந்து வர்ற வாசனை ஆளைத் தூக்குதே தாயி… என்ன சங்கதி?” எனத் தன் வேட்டியைச் சரிசெய்தபடி குறும்பாக்க் கேட்க.
அவரது அந்தப் பேச்சு அகல்யாவை இயல்பு நிலைக்குக் கொண்டு வந்தது. “அய்யோ… மன்னிச்சிருங்கப்பா! உள்ள வாங்க… அம்மா, நீங்களும் வாங்க. நீங்க வருவீங்கன்னுதான் ஆசை ஆசையாச் சமைச்சு வச்சிருக்கேன். கை கால் கழுவிட்டு வாங்க… சூடாச் சாப்பிடலாம்,” என மிகுந்த உரிமையோடு அவர்களை அழைத்தாள்.
அகல்யா முன்னே நடக்க, ராஜசேகரும் சிவகாமியும் அவளது நடையிலேயே அவளது குணத்தைப் பார்த்து மெச்சியபடி உள்ளே சென்றனர். ராஜசேகர் தன் மகனை பார்த்து, நடிப்பு ஓகே வா டா என்பது போல கேட்க …
அவனும் … ” ஹோ தூள் .. ” என பெருமிதத்துடன் சொன்னவன் ஒரு தம்ப்ஸ் அப் 👍🏻 காட்டினான்.
ஆகாஷின் பெற்றோர்கள் முகம் கழுவ அறைக்குள் செல்ல, சமையலறைக்குள் நுழைந்த அகல்யா அப்படியே ஸ்தம்பித்து நின்றாள். சிவகாமி அவளுக்குப் பூச் சூட்டிய அந்த நொடி, ஒரு தாயின் ஸ்பரிசத்திற்காக ஏங்கிய அவளது ஏகாந்தமான மனதிற்குப் பெரும் மருந்தாக அமைந்தது. பூரிப்பில் அவளது கண்கள் தானாகவே பனித்தன.
அவளது மௌனமான அந்த உணர்ச்சிப் போராட்டத்தைக் கவனிகாதபடி பின்னால் வந்த ஆகாஷ், மென்மையாக அவளது தோள் பட்டையைத் தொட்டான். திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்த அகல்யா, அவசர அவசரமாகக் கண்ணீரைத் துடைக்க முயன்றாள். ஆனால், அவளது சிவந்த கண்களைப் பார்த்த அதிர்ச்சியடைந்த ஆகாஷ்,
அவளது தாடையைத் தன் விரல்களால் ஏந்தி, முகத்தை மெல்ல உயர்த்தியவன், “என்ன அகல்யா? ஏன் அழற?” என்பது போலப் புருவங்களை உயர்த்தி வினவ…
கண்களில் ததும்பிய நீருடன், “ஒன்றும் இல்லை…” எனத் தலையை இருபுறமும் ஆட்டி மறுத்தவளது உடைந்த குரல் உண்மையைச் சொன்னது.
ஆகாஷ் விடாமல் அவளது கண்களையே ஊடுருவ, “தேங்க்ஸ் ஆகாஷ்!” என்று தழுதழுத்தவள், அடுத்த நொடி அவனது மார்பில் அப்படியே சாய்ந்து கொண்டாள். அவனது இதயத்துடிப்பின் தாளத்தில் தன் அத்தனை காலத் தனிமையும் கரைவதைப் போல உணர்ந்தாள்.
“அகல்யா, என்ன இது? ஏன் திடீர்னு இப்படி?” என்று அவளை மெல்ல நிமிர்த்தி அவன் கேட்க,
“ஒன்னும் இல்லை ஆகாஷ்… உங்க அம்மா, அப்பாக்கிட்ட இருந்து நான் இதையெல்லாம் எதிர்பார்க்கவே இல்லை. அவங்க இவ்வளவு அன்பா இருப்பாங்கன்னு நான் கனவுல கூட நினைக்கல,” என்று நெகிழ்ச்சியுடன் சொன்னாள்.
அவளது வார்த்தைகளில் இருந்த அந்த அப்பாவித்தனமான சந்தோஷத்தைக் கண்ட ஆகாஷ், அவளது நெற்றியில் இதழ்களை அழுத்தி ஒரு நீண்ட முத்தத்தைப் பதித்தான். “இது ஆரம்பம்தான் அகல்யா… நீ எதிர்பார்க்காத நல்ல விஷயங்கள் இனிமே நிறைய நடக்கும்,” என்று அவன் ஆறுதலாகச் சொன்னான்.
பின்னர் சூழலை மாற்ற விரும்பியவன், “உனக்கு ஏதாவது உதவி தேவையா? சாப்பாடு எடுத்து போய் வைக்கவா?” எனக் கேட்க
“இல்ல வேண்டாம்… நீங்க போய் அம்மா, அப்பா உட்காருறதுக்குத் தரையில பாய் போட்டு, இலை மட்டும் வைங்க. நான் சாப்பாடு கொண்டு வந்துடுறேன்,” என்று அவள் சொல்ல, ஆகாஷும் சிரித்துக்கொண்டே சரி எனத் தலையாட்டி நகரத் தொடங்கினான்.
ஆனால், அவன் மூன்று அடி கூட நடந்திருக்க மாட்டான், பின்னால் ஓடி வந்த அகல்யா அவனது தோளைப் பிடித்து நிறுத்த. “என்ன?” என்று அவன் ஆச்சரியமாகத் திரும்பும் முன், மின்னல் வேகத்தில் அவனது முகத்தைப் பிடித்து தன் பக்கம் இழுத்தவள், அவனது கன்னத்தில் ஒரு அழுத்தமான முத்தத்தைக் கொடுத்துவிட்டு, அவனது கன்னத்தை, ஈரமாக்கி விட்டு வெட்கத்தில் ஓடியே போனாள்.
ஆகாஷ் அப்படியே உறைந்து நின்றுவிட்டான். தன் கன்னத்தை மெல்லத் தடவியபடி அவன் திகைத்து நிற்க, அந்த வழியாக வெளிய வந்த ராஜசேகர் அவனைக் கவனித்துவிட்டார்.
“என்னடா மகனே… கன்னம் மட்டும் ரொம்பச் சிவந்து போயிருக்கு? மதுரைக் காத்து பட்டதுமே சென்னை முகம் மாறிடுச்சா?” என நக்கலாகக் கண் சிமிட்டிக் கேட்க,
திருதிருவென விழித்த ஆகாஷ். “டாட்… அது வந்து…” என மழுப்பியபடியே, தன் தந்தையின் தோளில் கையைப் போட்டுக்கொண்டு அவருடன் பேசிக்கொண்டே ஹாலுக்குள் நுழைந்தான்.
ஹாலின் ஒரு ஓரத்தில் பாய் விரிக்கப்பட, வாழை இலைகள் போடப்பட்டன. ராஜசேகரும் சிவகாமியும் தரையில் அமர்ந்தனர்.
அகல்யா கையில் ஒரு பெரிய பாத்திரத்துடன் வெளியே வந்தாள். அவளது முகத்தில் இப்போது பயமில்லை, ஒருவிதமான மன நிறைவு இருந்தது. ஆகாஷ் அவளுக்கு உதவி செய்ய நகர்ந்தான், அவனை வேண்டாம் என தடுத்தவள் அவனையும் ஒரு இலையில் அமர சொன்னாள்.
ஆகாஷ் ஓரமாக அமர்ந்து கொண்டு “இன்னைக்கு ஒரு புடி!” என்பது போலத் தயாரானான்.
முதலில் சுடச் சுட சாதத்தை இலையில் பரிமாறினாள். அதன் சூடு இளம்வாழையில் படரவும் அந்த மணம் அந்தச் சிறிய வீட்டையே ஒரு திருவிழா வீடாக மாற்றியது.
அடுத்ததாக, மிளகு தூக்கலாகத் தூவப்பட்ட சிக்கன் சுக்கா மற்றும் வறுவல் வகைகளைப் பரிமாறினாள்.
அகல்யா குனிந்து முருங்கைக்காய் போட்ட ஆட்டுக்கறி குழம்பை ஊற்றும் போது, ராஜசேகர் அதன் நிறத்தையும் வாசனையையும் வைத்தே மயங்கிப் போனவர்,
“இந்தாம்மா அகல்யா… குழம்பு வாசனை சும்மா தூக்குதே! என் ஊர்ல சாப்பிட்ட அதே பக்குவம் தெரியுது,” என்றபடி முதல் கவளத்தைச் சோற்றில் பிசைந்து வாயில் வைத்தார் ராஜசேகர்.
அவர் கண்கள் விரிந்தன. ” டேய் ஆகாஷ்! இந்த புள்ளைய சென்னைனு சொன்ன… ஆனா இவ கைமணத்தைப் பார்த்தா அப்படியே நம்ம ஊரு பக்குவத்தில சமைக்கிறா!” என்று அவர் பாராட்ட, ஆகாஷ் பெருமையுடன் அகல்யாவைப் பார்த்தான்.
சிவகாமி ரசித்துச் சாப்பிட்டுக் கொண்டே, “உண்மைதான் தம்பி… இந்த உருளைக்கிழங்கு வறுவலும், குழம்பும் அவ்வளவு ருசி. நீ ஒத்தையாவே ரொம்ப நேரமா சமைச்சியாம்மா?” என்று கேட்க,
அகல்யா ஒரு மெல்லிய புன்னகையுடன், “இல்ல ம்மா … அவரும் எனக்கு வெங்காயம் உரிச்சுத் தந்து உதவி செஞ்சாரு,” என்று உண்மையைச் சொல்ல,
“அடடா! எங்க வீட்டு இளவரசன் வெங்காயம் உரிச்சாரோ? எல்லாம் நேரம்தான்!” என்று ராஜசேகர் கிண்டல் செய்ய, அந்த இடமே சிரிப்பொலியால் நிறைந்தது.
அகல்யா அவர்களுக்குப் பரிமாறிக் கொண்டே இருந்தாள். கடைசியாக அவள் கொண்டு வந்த மிளகு ரசம் அவர்கள் தொண்டைக்குள் இறங்கியபோது, “ஆஹா… இதுதான் விருந்து!” என்று ராஜசேகர் திருப்தியாக ஏப்பம் விட்டார்.
அவர்கள் எல்லோரையும் ஒரு குடும்பமாக இணைத்திருந்தது. சாப்பிட்டு முடித்ததும் அகல்யாவைப் பார்த்த ராஜசேகர் “அகல்யா… சமையல் மட்டும் இல்ல, உன் அன்பும் எங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு தாயீ!” என சொல்ல
அந்த வார்த்தைகள் அகல்யாவின் காதுகளில் தேனாகப் பாய்ந்தன. அதுவரை அவளது மனதில் எஞ்சியிருந்த ஒரு சின்ன சின்ன நடுக்கமும் அந்த நிமிடமே காணாமல் போனது. சாப்பிட்டு முடித்து, இலையை மடித்துவிட்டு நிமிர்ந்த ராஜசேகரின் கண்கள் கனிவுடன் அவளைப் பார்த்தன.
அந்தக் கணம், அகல்யா தன்னை ஒரு அனாதை என்று நினைக்கவே இல்லை. பல வருடங்களாகத் தனிமையின் இருட்டில் வாடிய ஒரு செடிக்கு, முதல்முறை பெய்த பெருமழை போல அந்தப் பாராட்டு அவளை நனைத்தது. அவளது இதயம் நன்றியுணர்வாலும், நிம்மதியாலும் விம்மியது. தன் கைப்படச் சமைத்த உணவை ஒரு தந்தை ஸ்தானத்தில் இருக்கும் ஒருவர் இவ்வளவு ருசித்துச் சாப்பிட்டுவிட்டு, அன்பைப் பாராட்டுவது அவளுக்குப் புதிய அனுபவம் தந்தது.
அவள் ஏதும் பேசும் முன்பே அவளின் மனநிலையை அறிந்துகொண்ட ராஜசேகர். ஆசிர்வதிப்பது போல அவளின் தலையில் மெதுவாக தடவி கொடுத்து விட்டு கை அலம்ப நகர்ந்தார் …
பின்னால் வந்த ஆகாஷிடம், “டேய் இப்போ எதுக்கு இந்த நாடகம்? உண்மையைச் சொல்லிடலாமே” என அவர் சொல்ல, ஆகாஷ் பதற்றமடைந்தான்.
உண்மையா சொல்வானா அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம் ..
🌧️தூறல்கள் தொடரும்…
