வானின் நிலவென ஒளி கொண்டு வண்ணத்துப்பூச்சியென சிறகை கடிக்கும் ஓவியமே உன்னில் நான் தொலைந்து எப்போதென அறியேனே…!
உன்னில் சிறையாகிறேன் – 29
பார்ட்டி நடக்கும் அந்தப் பிரம்மாண்டமான ஹோட்டலின் வாசலில் கார் நின்றது, கேமரா வெளிச்சங்களும், கோட் சூட் அணிந்த மனிதர்களும் அந்த இடத்தையே ஒரு கனவு உலகம் போலக் காட்டினர்,
காரின் கதவை ரோஹித் திறந்து விட, அருவி மெல்லக் கீழே இறங்கினாள், அதே சமயம், மற்றொரு கருப்பு நிறக் கார் அங்கே வந்து நின்றது, அதிலிருந்து அக்னி இறங்கினான்,
அவனது கம்பீரமான தோற்றமும், ஆளுமையும் அங்கே இருந்த அனைவரையும் ஒரு நிமிடம் திரும்பிப் பார்க்க வைத்தது,
அக்னி நேராக அருவியை நோக்கி வந்தான்,
அவளது புதிய தோற்றத்தை ஒரு நிமிடம் இமைக்காமல் பார்த்தவன், அவளது அருகில் வந்து நின்றான், அவனது அதிகாரமிக்க வாசனை அருவியைச் சூழ்ந்தது,
“பரவாயில்லையே, நான் எக்ஸ்பெக்ட் பண்ண விட, நீயே ரொம்ப அழகா தான் இருக்க” என்று அக்னி அவளது காதருகே குசும்பாகச் சொன்னான்,
பின்பு, அவளது இடையைச் சுற்றித் தன் பலமான கரங்களை வளைத்து, அவளைத் தன்னோடு அணைத்தபடி உள்ளே அழைத்துச் சென்றான்,
ரோஹித் பின்னால் நின்று இதைப் பார்த்துக் கொண்டிருந்தான்,
அவனது கண்கள் அக்னியின் கைகள் அருவியின் மீது இருந்ததை எரிச்சலோடு பார்த்தன, தன் உயிருக்கு உயிரானவள், அக்னியின் கைகளுக்குள் சிறைப்பட்டிருப்பதைப் பார்ப்பது,
அவனுக்குத் தாங்க முடியாத வலியைக் கொடுத்தது, ஆனாலும், எதையும் காட்டிக்கொள்ளாமல் அக்னியின் உதவியாளராக அங்கேயே நின்றான்,
அக்னிக்கு பி.ஏ-வின் மனதில் தன் மனைவி இருக்கிறாள் என்பது அவனுக்குத் தெரிந்தால் என்ன நடக்கும்?
அக்னி,அருவி இருவரும் கேமராக்களுக்கு தங்களின் அசைவுகளை அனுப்பி விட்டு உள்ளே நுழைந்ததும்,
“மிஸ்டர் அக்னி அண்ட் மிஸஸ் அக்னி” என்று அறிமுகப்படுத்தப்பட்டனர்,
அங்கே வந்திருந்த ஒவ்வொரு தொழிலதிபரும் அருவியின் அழகைப் புகழ்ந்து பேசினர், அக்னி கர்வத்தோடு அனைவரிடமும் அவளை அறிமுகம் செய்தான்,
ஆண்களை விடவும் பெண்களின் பார்வை வலையில் சிக்கினாள் அருவி, பிரம்மனே மெனக்கெட்டு செதுக்கிய சிற்பமானவளாயிற்றே, ஒவ்வொருத்தரின் கண்களுக்கும் அழகிய மயிலாலென காட்சி கொடுத்தாள் மகிழருவி,
பல தொழிலதிபர்கள் அக்னியைச் சூழ்ந்து கொண்டனர்,
“மிஸ்டர் அக்னி, உங்க வொய்ப் ரொம்ப அழகா இருக்காங்க, கன்கிராஜுலேஷன்ஸ்” என்று பாராட்டிய போது,,
அக்னிக்கு செம்ம ஹேப்பி, நொடிக்கொரு தரம் தன்னவளை பார்வையாலும் சில சமயம் கைகளாலும் தழுவிக் கொண்டான்,
ஆனால் அருவிக்கு அந்த இடமும், அக்னியின் நெருக்கமும் மூச்சு முட்டுவது போல இருந்தது, வெகு நேரம் தொடர்ந்த பார்ட்டி ஒரூ முடிவுக்கு வர, அனைவரிடமும் விடைபெற்று,
பார்ட்டியின் அந்தப் பிரம்மாண்டமான விளக்கு வெளிச்சத்திலிருந்து, மெல்ல இரவு நேரத்துக் குளிர்ச்சியில் கார் நின்றிருந்த இடத்திற்கு இருவரும் வந்தனர்,
ரோஹித் முன்னரே சென்று காரைத் தயார் நிலையில் வைத்திருந்தான், அக்னி காரின் பின் கதவைத் திறந்து அருவியை ஏறச் சொல்லிவிட்டு, தானும் அவளருகே அமர்ந்து கொண்டான்,
கார் மெல்ல ஹோட்டலை விட்டு வெளியேறிச் சாலையின் அமைதியில் பயணிக்கத் தொடங்கியது,
காரின் உள்ளே நிலவிய அந்த நிசப்தம், ஏசியின் குளிர்ச்சியையும் தாண்டி ஒருவிதமான கனத்தோடு இருந்தது, அக்னி தன் தலையைச் சாய்த்து,
தன் அருகில் அமர்ந்திருந்த அருவியைப் பார்த்தான், கலைந்திருந்த ஒரு சிறு கூந்தல் இழை அவளது நெற்றியில் விழுந்து அவளது அழகை இன்னும் அதிகப்படுத்தியது,
அக்னியின் இதயம் அவனறியாமலேயே ஒரு தாளம் தப்பியது, அதிகாரத்தாலும் பணத்தாலும் அவளைச் சிறை பிடித்திருக்கிறோம் என்று நினைத்தவனுக்கு, இப்போது அவளது அழகே அவனைச் சிறை பிடித்து வைத்தது,
அக்னி மெல்லத் தன் கையை நீட்டி, அவளது நெற்றியில் விழுந்திருந்த அந்தச் சிறு கூந்தல் இழையை மென்மையாகத் தள்ளிவிட்டான், அவனது விரல்கள் பட்ட அந்த நொடி,
அருவி திடுக்கிட்டு அவனைத் திரும்பப் பார்த்தாள். இருவரின் கண்களும் நேருக்கு நேராகச் சந்தித்தன, அக்னியின் பார்வையில் கட்டுக்கடங்காத காதலும், அடக்க முடியாத உரிமைத்தாகமும் அனலாய் மின்னியது,
அருவிக்குத் தன் இதயம் எக்குத் தப்பாகத் துடிக்க, எங்கே தன் இதயத் துடிப்பு அவனுக்கே கேட்டுவிடுமோ என்று பயந்தாள்,
“ஹேய் நீ ஏன் இன்னைக்கி இவ்ளோ அழகா இருக்க, என்னை மயக்கி உன் மடியில போட்டுக்கலாம்னு பாக்குறியா” என்று அவள் காதருகே கிசுகிசுத்தான்,
“நான் அழகா இருந்தா அது என் தப்பில்ல, அப்புறம் உங்களை மயக்கி எனக்கு என்ன ஆகப்போகுது, தேவையில்லாத கற்பனை பண்ணி உளராம வாங்க” என்று கடுமையாக சாடினாள் அருவி,
“கோபத்துல கூட நீ இன்னும் அழகா தான் இருக்க, ஒருவேளை நான் நிஜமாவே உன் மேல இண்ட்ரஸ்ட் ஆகிட்டேனா” என்று அவளிடமே கேட்ட அக்னி, அவளது கையைத் தன் பலமான கைகளுக்குள் திணித்துக் கொண்டான்,
“என்ன பேசிட்டு இருக்கீங்க, கை வலிக்கிது முதல்ல கையை விடுங்க” என்று உதறினாள் அருவி,
அவன் எப்படி விடுவான், ஒரு கையால் அவள் கையையும் மறு கையால் அவளை தோள் மீது போட்டு அணைத்துக் கொண்டான், அவளோ அத்துமீறுபவனை அடக்க மாட்டாத கோபத்தோடு முறைத்தாள்,
முன் இருக்கையில் அமர்ந்து காரை ஓட்டிக்கொண்டிருந்த ரோஹித், ரியர் வியூ மிரர் வழியாக நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தான்,
அக்னி அருவியைத் தொடுவதும், அவளை ஒருவிதமான தாகத்தோடு பார்ப்பதும் அவனது இதயத்தில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவது போல இருந்தது, அவனது கைகள் ஸ்டீயரிங்கை இறுக்கிப் பிடித்தன,
அருவிக்கோ, ஒருபுறம் அக்னியின் இந்த உரிமை மீறல் கோபத்தைக் கொடுத்தாலும், அவனது அந்த நெருக்கமான தொடுதல் அவளுக்கே தெரியாமல்,
அவளது மனதிற்குள் ஏதோ ஒரு ரசாயன மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பதை அவளால் மறுக்க முடியவில்லை, அவனின் மூச்சு காற்று படும் வேளையில் உடலெங்கும் சிலிர்க்கத்தான் செய்தது,
எப்படியோ ஒரு வழியாக அக்ன்யுடன் போராடியபடியே வீடு வந்து சேர்ந்தாள் அருவி, ரோஹித் இருவரையும் வாசலில் இறக்கிவிட்டான்,
அருவி காரிலிருந்து இறங்கி விட்டால் போதும்டா கடவுளே என்று விறுவிறுவென உள்ளே செல்ல, அக்னி அவளது அந்த ஒய்யாரமான நடையையும், அவள் ஒரு தேவதையைப் போல மின்னுவதையும் ரசித்தவாறே பின்னாடியே சென்றான்,
ரோஹித், காரின் ஸ்டீயரிங்கை ஆத்திரத்தில் ஒரு முறை அடித்துவிட்டு, அவர்கள் உள்ளே மறைவதைக் கண்டு கனத்த இதயத்துடன் அங்கிருந்து கிளம்பினான்,
உள்ளே சென்ற அருவி, முதலில் யாழினியைத்தான் தேடினாள், யாழினி திருவாசகம் ஐயாவின் அறையில் மெத்தையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள், அருவி மெல்லக் குனிந்து அவளைத் தூக்கப் போக, திருவாசகம் ஐயா அவளைத் தடுத்தார்,
”விடும்மா, பாவம் குழந்தை நல்லா உறங்கிட்டா, இங்கேயே இருக்கட்டும், நான் பார்த்துக்கறேன், நீ வெளிய போயிட்டு வந்து களைப்பா இருப்ப, போய் தூங்கு” என்று,
அவர் வம்படியாகச் சொல்ல, அருவியால் அவரிடம் மறுத்துப் பேச முடியவில்லை, மெல்ல அவனின் அறைக்கே வந்தாள், அவள் பின்னாலேயே வந்தவன்,
உள்ளே வந்து கதவு மூடப்படும் சத்தம் அருவியின் இதயத் துடிப்பை எகிற வைத்தது, அக்னி தன் டக்ஸிடோ கோட்டைக் கழற்றிச் சோபாவில் வீசினான், தன் சட்டையின் மேல் பொத்தான்களை ஒவ்வொன்றாகத் தளர்த்தினான்,
அவனது கண்கள் வேட்டையாடத் துடிக்கும் ஒரு வேடனைப் போல அருவியின் மீது நிலைத்திருந்தன,
அருவி ஜன்னல் ஓரம் நின்று வெளியே தெரிந்த இருளைப் பார்த்துக் கொண்டிருந்தாள்,
ஆனால் அவளது கவனம் முழுவதும் அக்னியின் ஒவ்வொரு அசைவிலும் இருந்தது, அவன் தன்னை நெருங்கி வருவதை அவளது உடல் உணர்ந்தது,
அக்னி மெல்ல அவளது பின்னால் வந்து நின்றான். அவனது உடலின் சூடு அருவியின் முதுகில் பட, அவள் அறியாமலேயே ஒரு முறை சிலிர்த்தாள், அவன் கண்களில் தெரிந்த அந்தத் தாகம் அருவியைச் சுட்டது,
எதுவும் பேசாமல் அமைதியாக ஜன்னலோரம ஒதுங்கி நின்றாள், அக்னி அவளுக்கு மிக அருகில் வந்து நின்றான், அவனது மூச்சுக்காற்று அவள் கழுத்தில் பட, அருவி தன் இமைகளை இறுக மூடிக்கொண்டாள்,
அவனோ அவள் பட்டுக் கைகளின் பிஞ்சு விரலில் தன் விரலைக் கோர்த்துக் கொண்டு அவளின் கூந்தலை முகர்ந்தான்,
“அக்னி இது சரியில்ல, கை விட்டுட்டு தள்ளிப்போங்க” என்று அவள் முணுமுணுத்தாள்,
“தள்ளிப் போகனுமா, ஏன் தள்ளிப் போகனும், இனி உன்னை விட்டு தள்ளி போக முடியாது, இது என் வீடு என் ரூம், நீ என் வொய்ப் தெரியும்ல” என்று கேட்டவன் குரலில் அதிகாரம் மின்ன, விரல்கள் தன்னவளின் மீது ஆதிக்கமும் செலுத்தியது,
அக்னி அவளை அப்படியே தன் பக்கம் திருப்பி, அவளது கண்களை நேருக்கு நேராகப் பார்த்தான், அதில் விவரிக்க முடியா உணர்வுக் குவியலைக் கண்டு தன்னை மெல்ல மெல்ல தொலைத்தான்,
இதுவரை எத்தனையோ போர்க்களங்களைச் சந்தித்திருக்கிறான், ஆனால் இந்தப் பெண்ணின் ஒற்றைப் பார்வையின் முன்னால் அவன் கொஞ்சம் கொஞ்சமாகத் தகர்ந்து போவதை அவனாலேயே தடுக்க முடியவில்லை,
அந்தத் தனிமையின் தாக்கமும், இரவின் நிழலும் இருவரையும் ஒருவரை ஒருவர் ஈர்க்கச் செய்தது,
அக்னி மெல்லக் குனிந்து அவளது நெற்றியில் தன் இதழ்களைப் பதித்தான்,
அங்கிருந்து மெல்லக் கீழே இறங்கி அவளது கன்னங்களில் தன் இதழ்களால் கோலமிட்டான்,
அருவியின் மூச்சுக்காற்று சூடானது,
அக்னியின் முரட்டுத்தனமான அன்பில் ஒருவிதமான காந்த சக்தி இருப்பதை அவளால் மறுக்க முடியவில்லை, அவன் அவளது இடையைச் சுற்றித் தன் பலமான கரங்களை வளைத்து, அவளைத் தன்னோடு அணைத்துக் கொண்டான்,
இருவரின் இதயத்துடிப்பும் இப்போது ஒரே தாளத்தில் ஒலித்தது, அருவியின் எதிர்ப்பு சக்தியற்றுப் போக கண்களை மூடிக் இறுக கொண்டான்,
அவனது அந்தத் தீண்டலில் அருவிக்கு உடல் சிலிர்த்தது. அக்னி மெல்லக் குனிந்து அவளது தோளில் தன் முகத்தைப் புதைத்தான்,
தன் வாழ்நாளில் முதல் முறையாக ஒரு பெண்ணின் நெருக்கத்தையும் வாசத்தையும் அனுபவிக்கிறான், அது ஏதோ ஒரு புதுவித அனுபவமாக இருந்தது,
தன்னவள் என்ற உரிமையோ, அல்லது தன்னால் பாதிக்கப்பட்டவள் என்ற குற்ற உணர்ச்சியோ ஏதோ ஒன்று அவளிடம் அவனை கட்டிப் போட்டது,
பெண்ணவளோ அவன் ஆட்டுவிக்கும் பொம்மை போல, அவனின் கோபக்கணலுக்கும் அதிகாரத்திற்கு எதிரே நின்று போரிடுகிறாள்,
காதலோடு நெருங்கி வந்தால் மறுநொடி கரைந்தே மெழுகாகிறாள், அவனின் தவிப்பை மௌனமாக ஏற்கிறாளோ?
தொடர்ந்து வாசிப்போம் வாங்க
