மயக்கம் தயக்கம் 30
சந்தனாவும் விஜயும் கடற்கரைக்கு வந்தார்கள். கூட்டம் அதிகமில்லாத பகுதியில் சென்று காரை நிறுத்திவிட்டு மணலில் இறங்கி நடந்தார்கள்.இருவருக்குள்ளும் அலைமோதும் எண்ணங்கள் அங்கே அடித்துக்கொண்டிருக்கும் கடல் அலைக்கு சற்றும் குறைவு இல்லாமல் இருந்தது. வெகுகுநேரம் இருவருக்குள்ளும் வெறும் மௌனம் மட்டுமே! தான ஏதாவது கேட்கப்போய் பெண்ணின் மனம் புண்பட்டுவிடக்கூடாதே என்று வெகு நேரம் அமைதியாக இருந்தான் விஜய ராகவன்.
அவனை புரிந்தவளாக சந்தனா தானே ஆரம்பித்தாள்.” உண்மையாவே வெறும் நண்பர்களா இருக்க உங்களுக்கு சம்மதம் தானா? இன்னிக்கு சரியா தோணுற பல விஷயங்கள் நாளைக்கு வேறே விதமா தோணும்.உங்களோட உணர்ச்சிகளோடு விளையாட எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனக்காக நீங்க … எனக்கு இதெல்லாம் சரியாய் வரும்னு தோணல.”என்றுவிட்டு அவனை அன்னாந்து பார்த்தாள்.
வெகுநேரமாக விஜயராகவன் இவளைத்தான் பார்த்துக்கொண்டு இருக்கிறான். அவள் கேட்டவுடன் அவனது பார்வை இன்னமும் தீவிரமாகியது. அவன் கரங்கள் அவளது கரங்களை கோர்த்து இருந்தது.
“நா உன்னோட கையை இப்போ பிடிச்சிருக்கேன். என்னோட கையை உதறிவிட்டு போகணும்னு உனக்கு தோணுதா சந்தனா?”— விஜயராகவன்.
“ ம்ஹும் இல்ல .. பாதுகாப்பா உணருகிறேன்.”சந்தனாவின் தோள்களை சுற்றி கையை மாலையாக்கி போட்டவன் ,இப்போ..என்னை உதற தோணுதா?” என்றான்.
அவளிடமிருந்து மீண்டும் இல்லை எனும் பதில்தான். கைகளை கீழே இறக்கி அவளது இடுப்பை சுற்றி வளைத்துக்கொண்டு ,”இப்போ என்னை அறையனும்.காயப்படுத்தணும்னு தோணுதா சந்தனா ” என்றவரிடம் ,”என்ன பைத்தியக்காரதனமான கேள்வி இது ?”என்று வெடித்தால் தவிர அவனது கைகளை கற்றைவிடவில்லை. அதுவே அவனுக்கு நிம்மதியாக இருந்தது.
“நீ சொல்லுற ஆங்கிள் சரி தான் சந்தனா. ஆனா,உனக்கு என்மேல் வெறுப்பு ஏதும் இல்லைன்னு ப்ரூவ் ஆகிடுச்சு. வருஷங்கள் ஆனாலும் உடம்பாலையும் நீ என்னை ஏத்துக்குவா. எனக்கு நம்பிக்கை இருக்கு. இதெல்லாம் தெரியும் முன்னரே உன்மேல எனக்கு காதல் உண்டு. சோ,பரிதாபம் கொண்டு நா உன்னை கல்யாணம் செஞ்சுக்க ஒத்துக்கல. நிச்சயம் நமக்கு ரெண்டு பேருக்குமே பரஸ்பரம் அங்கீகரிக்க,முழுசா சுவீகரிச்சுக்க நேரம் தேவை. ” என்று முடித்துக்கொண்டான்.
இருவரும் வெகு நேரம் அங்கேயே நின்று கடல் அலைகளில் கால் நனைத்துக்கொண்டு நின்றார்கள். விஜய் மீண்டும் சந்தனாவிடம் , ” நம்ம கல்யாணத்தை எங்க வீட்டுல இல்ல உங்க வீட்டுல வச்சிக்கலாம். கொஞ்சநாள் கழிச்சு கிராண்ட் ரிசெப்ஷன் கொடுத்திடலாம்.உனக்கு சம்மதமா ?” என்றான். அவளுக்குள்ளும் அதே யோசனை தான்.
“எங்க வீட்டுல வச்சிக்கலாம். எப்படியும் கல்யாணம் ஆகி அங்கே தானே வரப்போறேன். எங்க வீட்டு மொட்டை மாடியில் ஷாமியானா போட்டு சாப்பாட்டுக்கு அரேஞ் செஞ்சிடலாம் “–சந்தனா.
இருவரும் திரும்ப வீடு வரும் பொழுது பெண்ணின் முகம் பொலிவு கூடி இருந்தது. அதை வீட்டில் பெரியவர்கள் மட்டும் இல்லை.ராகினியும் கவனித்தாள். அப்பாவை இல்லை… இல்லை…அத்தானை அக்காவுக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டாள்.
கல்யாணத்திற்கு என்று புடவைகள் எடுக்க காஞ்சிபுரம் போனார்கள். பச்சை நிறத்தில் உடல் முழுவதும் தங்க கொடிகளால் நெய்யப்பட்ட புடவையை சந்தனாவுக்கு முகூர்த்த புடைவை என்று தெரிவு செய்தான் விஜயராகவன். தயா – ராகினி இருவருக்கும் ஒன்று போல பட்டு பாவாடை. பெரியவளுக்கு தங்க நிற தாவணி என்று தெரிவு செய்தாள் சந்தனா. விஜய்க்கு புரிந்துவிட்டது. இரு மகள்களும் ஒன்றுதான் என்று. அதை ஆமோதிக்கும் வகையில் சந்தனாவின் கையை அழுத்திக்கொடுத்தான் விஜய்.இன்னும் நிறைய வாங்கினார்கள்.விஜயராகவன் வருங்கால மனைவிக்கும் மகள்களுக்குமாக வாங்கிக்குவித்தான். தாலி அணிய நல்ல கனமான பத்து பவுன் சங்கிலியில் ஒன்றும் ,மருத்துவமனைக்கு செல்லும் பொழுது அணிய மூன்று பவுனில் சங்கிலி ஒன்றும் எடுத்த மகனை பார்வையாலேயே கேலி செய்தார் வாணி.அவர் மனம் நிறைந்து போயிருந்தது.
வீட்டுக்கு வந்தபிறகு பெண்ணுக்கு எடுத்த புடவைகளை சாமியிடம் வைத்துகும்பிட்டுவிட்டு புடவைகளின் ரவிக்கை துணிகளை மட்டும் தனியே எடுத்து டிரைவரிடம் கொடுத்து அதை சந்தனாவின் வீட்டில் கொடுக்க சொன்னார்கள்.
சந்தனாவுக்கு தான் எடுத்த முடிவு சரிதானா என்ற குழப்பம் இன்னமும் இருக்கிறது. தாலியும் முகூர்த்த பட்டும் எடுத்தபிறகு இந்த குழப்பத்தை வைத்து என்ன செய்ய முடியும்? இதைத்தான் கீதாவும் சொன்னார். “ஒருமுறை முடிவு எடுத்திட்ட சந்தனா.இனி,முதல்லேந்து ஆரம்பிக்காதே.” என்று. அந்த வீட்டில் குழம்பிப்போயிருக்கும் இன்னொரு முக்கிய நபர் ராகினி.இவ்வளவு வருஷங்களாக அக்கா என்று தான் கூப்பிட்டு பழகிய நபர் தனது அக்கா இல்லை.மாறாக அவள்தான் அம்மா என்று உண்மை தெரிந்த பிறகு அவள் தன்னை அடக்கிக் கொள்வது பிரம்ம பிரயத்தனம் ஆகியது. தெரியும் சமயத்தில் அம்மாவுக்கு கல்யாணம் நிச்சயம் ஆகி விட்டது.இவ்வளவு வருஷங்களாக வீட்டில் அக்காவின் திருமணம் பற்றி பேசியதும் ,அவள் மறுத்தது எல்லாம் ராகினிக்கு தெரியும். இப்போது இவருக்கு மட்டும் எப்படி ஒப்புதல் கொடுத்தாள் என்று ராகினிக்குள் பெரும் குழப்பம் .எப்படி பிரிந்திருக்க போகிறேன்? எனும் கேள்வி.அதைவிட இனி , “அக்கா தனக்கு அம்மா என்றால் அம்மா திருமணம் செய்துகொள்ளும் விஜயராகவன் அவர்கள் எனக்கு அப்பா.ஆனால் நான் எனது தாத்தாவை அப்பா என்று கூப்பிடவேண்டும். அம்மாவின் கணவரை அத்தான் என்று கூப்பிட வேண்டும் ” என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்தேகம் அவளுக்குள் முளை விட்டது. ஏற்கனவே டீன் ஏஜ் குழப்பங்கள்.இதில் இது வேறு. முடிவாக அக்காவை “சதும்மா” என்று அழைப்பதாக முடிவு செய்து கொண்டவள், விஜய ராகவனை ‘சார்’ என்றே அழைப்பதாக முடிவு செய்து கொண்டாள். அந்த குட்டி மூளைக்கு அவ்வளவு தான் புரிந்தது.
மறுநாள் காலையில் எழுந்த நிமிஷத்திலிருந்து ராகினி அதை கடைபிடிக்க ஆரம்பித்துவிட்டாள்.வீட்டில் இருப்பவர்களுக்கு முதலில் வித்தியாசமாக இருந்தாலும் பிறகு மூவருமே புரிந்துகொண்டார்கள்’பெண்ணுக்கு ஏதோ தெரிந்திருக்கிறது’என்று.மேற்கொண்டு அவளிடம் அதுபற்றி யாருமே தோண்டித் துருவவில்லை.அமைதியாக அவள் போக்கில் விட்டார்கள்.
சந்தனா மனதுக்குள் குறுகுறுப்பு.”என்னை சதும்மா என்று அழைப்பவள் விஜயராகவனை என்னவென்று அழைக்க கூடும்?” என்று. திருமணம் இன்னமும் பத்து நாட்களில்.சந்தனாவின் வீட்டில் திருமணம்.மொட்டை மாடியில் உணவுக்கு பரிமாற ஏற்பாடு ஆகியிருந்தது.வெறும் நெருங்கிய உறவுகள் இருபது பேர் மட்டும் வருவதற்கான அழைப்பு. கீதாவின் பெற்றவர்கள், அரங்கனின் கூடப்பிறந்த அக்காவும் அவர்கள் குடும்பமும், விஜயன் வீட்டில் ரோஷினியின் குடும்பம் மாமியார் -மாமனார் உட்பட. அவ்வளவுதான்.
திருமணம் முடிந்து ஒருமாதம் கழித்து ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ரிசப்ஷன் கண்டிப்பாக வைத்தாக வேண்டும் என்றார் ஆனந்த். “அதுதான் உன் வாழ்க்கையில் சந்தனாவுக்கான அங்கீகாரத்தை கொடுக்கும்” என்று அவர் சொன்னதை மறுப்பதற்கு இல்லை.
திருமணத்திற்கு முதல்நாள் மாப்பிளை வீட்டில் நிச்சயம் நடந்தது. சந்தனா குடும்பத்துடன் அங்கே சென்றிருக்க மீண்டும் சந்தனாவுக்குள் விஜயராகவனை தனது பெண் என்னவென்று அழைக்கப் போகிறாள் என்று படபடத்தது. அதற்க்கு தகுந்தாற்போல் ராகினி அவனை ” சார் ” என்றுதான் அழைத்தாள். இதுதான் சரி என்றது அவள் மனது.
அங்கே இருக்கும் பெரியவர்களுக்கு ஒன்றும் சொல்ல முடியாத நிலை. விஜயன் அந்த நொடியிலிருந்து ராகினியை உற்று நோக்கத் தொடங்கினான்.அவனுக்கும் புரிந்துவிட்டது. அந்த நேரத்தில் எதுவும் சொல்லவில்லை.ஆனால்,இப்படியே விடக்கூடாது என்று முடிவு செய்து கொண்டான்.
மறுநாள் சந்தனாவின் வீட்டில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து அவள் புகுந்த வீட்டுக்கு கிளம்பும் பொழுது அவள் வீட்டில் யாரும் அழவில்லை.ஏற்கனவே அவள் விஷயத்தில் அவளும் அவளை பெற்றவர்களும் நிறைய அழுது முடித்துவிட்டார்கள்.இது சிரிப்பதற்கான நேரம் என்று எல்லோரும் சிரித்த முகமாகவே அவளுக்கு விடை கொடுத்து அனுப்பினார்கள்.
சந்தனாவின் பெட்டிகள் விஜயனின் மாடி அறையில் அடுக்கப்பட்டது.ஏற்கனவே தான் புழங்கிய வீடுதான் என்பதால் சந்தனாவுக்கு ஒன்றும் கடினமாக இல்லை. வீட்டில் ஸ்வாமி விளக்கு ஏற்றினாள். மற்ற நாட்களை போலவே அன்றும் அவர்கள் இருவருக்கும் சாதாரண நாளாகத்தான் போனது. விஜயராகவன் மனதில் சந்தனவுடனான வாழ்க்கை பற்றிய அழகிய கனவுகள் உண்டு. ஆனால்,அவள் மனம் மாறுவதற்கு நேரம் வேண்டும்.அவள் தன்னை முதலில் புரிந்துகொள்ளவேண்டும் என்று அமைதியாகி விட்டான்.
மறுநாள் வீட்டில் சுமங்கலி பூஜை வைத்திருந்தார் வாணி.அதனால் விஜயன் – சந்தனா இருவருமே வேலைக்கு செல்லவில்லை.இரண்டு நாட்களுக்கு விடுப்பு எடுத்திருந்தார்கள். பூஜைக்கு சந்தனாவின் வீட்டிலிருந்து எல்லோருமே வந்திருந்தார்கள். ராகினி அழைப்பதை பார்த்து தயாவும் ‘சதும்மா ‘என்று அழைக்கப் பழகியிருந்தாள். ராகினி,சந்தனாவை பார்த்து அழவில்லையே தவிர அவளைவிட்டு நகரவும் இல்லை. சந்தனா தன் பெண்ணின் கையை பிடித்துக்கொண்டே அமர்ந்திருந்தாள். அழக்கூடாது என்று ஏற்கனவே கீதா சொல்லிவிட்டார்.
“கவலை படாதே ராகி.இது உன்னோட வீடும் தான்.எப்போ வேணும்னாலும் நீ இங்கே வந்திரு.நானும் அவரும் அங்கே வரோம். இங்கேந்து வெறும் அரைமணி நேர பயணம். நா ஹாஸ்பிடல் போறதா நினைச்சுக்கோ.”என்று மகளுக்கு ஆறுதல் சொன்னாள் சந்தனா. விஜயராகவன் சந்தனா அருகிலேயே அமர்ந்திருந்தான். அவன் தனது மூத்த மகள் ராகினிக்கென்று படிக்க புத்தககங்கள் வாங்கி வைத்திருந்தான்.இங்கே அவள் வந்த பொழுது, “உனக்கு நீட் கோச்சிங் போகணும்னா சொல்லு.இப்போவே ஆரம்பிக்கணும் “என்று வேறு சொன்னான். அவளுக்கு மருத்துவர் ஆகும் விருப்பம் என்று பேச்சுவாக்கில் கீதா ஒருநாள் சொல்லியிருந்தார்.
விஜயன் ராகிணிக்கென்று நீட் கோச்சிங் ஏற்பாடு செய்துவிட்டான். இனி ,சந்தனாவை சேர்ந்த அத்தனையும் தனக்கும்தான் என்று அவன் மனம் என்றோ முடிவு செய்து விட்டது. அடுத்தநாள் சந்தனாவின் வீட்டில் விருந்து.பிறகு இருவரும் வேலைக்கு செல்ல ஆரம்பித்து விட்டார்கள்.
விஜயராகவன் கடுமையான உடற்பயிற்சிகளின் மூலம் தனது பிட்னெஸ்ஸை ஓரளவுக்கு மீண்டும் கொண்டுவந்துவிட்டான்.இப்போது பார்ப்பதற்கு ஆணழகன்தான். தலைமுடி தான் நிறைய கொட்டிவிட்டது.அதைப்பற்றி யாருக்கும் கவலை இல்லை.அவன் நல்லபடியாக பிழைத்து வந்ததே போதும் என்ற நிறைவு. திருமணம் முடிந்து எட்டு மாதங்கள் ஆகிறது.இன்னமும் ரிசெப்ஷன் வைக்க வேண்டாம் என்றுசந்தனா அடம்பிடிக்கிறாள்.அவள் மனதில் என்ன என்று விஜயனுக்கு ஒன்றும் புரியவில்லை. திருமணத்தை பதிவு செய்து விட்டார்கள்.
அவ்வப்பொழுது மனைவியின் பார்வை தன்னை ஆராய்ச்சியாக,ஏக்கமாக, விருப்பமாக என்று விதவிதமாக பார்ப்பதை அவன் உணர்கிறான். அவளை எப்படி நெருங்குவது என்றுதான் தெரியவில்லை. அவளுக்கு தன்னை பிடித்திருக்கிறது என்பது பெரிய ஆறுதல். அவளிடம் நேரடியாக கேட்டும் பார்த்துவிட்டான்.பதில் இல்லை.அவளுக்குள் என்ன வருத்துகிறது என்று அங்கே யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை. ராகினி பதினோராம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்புக்கு சென்று விட்டாள். அம்மாவையும் அப்பாவையும் பார்ப்பதற்காக சந்தனா வீட்டுக்கு வந்திருந்தாள். சந்தனா வேலையிலிருந்து இன்னமும் வந்திருக்கவில்லை.
வீட்டில் பெரியவர்கள் இருவரும் வெளியே சென்றிருந்தார்கள். விஜயனை வழக்கம்போல் ,” சார்” என்று அழைத்து பேசத் தொடங்கினாள் ராகினி. அவள் பார்ப்பதற்கு அவளது அம்மா சந்தனாவை போலவே இருந்தாள்.
”என்ன ராகினி, என்னை அப்பான்னு கூப்பிடணுமா, அத்தான்னு கூப்பிடணுமான்னு குழப்பமா ,சார்னு கூப்பிடுற?”என்று கேட்டுவிட்டான். ராகினி பதில் சொல்ல தெரியாமல் திருதிருவென விழித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள். மேற்கொண்டு ராகவனே தொடர்ந்தான்.
“நீ என்னை எப்படி கூப்பிட்டாலும் ,நீயும் ,தயாவும் என்னுடைய பொண்ணுங்க தான்.மாற்றமில்ல. சில நடைமுறை விஷயங்களை மட்டும் புரிஞ்சுக்கோ. உன்னோட அம்மா சந்தானான்னு ஏற்கனவே வெளியில தெரிஞ்சிருந்தா இன்னிக்கு உனக்கு இவ்ளோ நல்ல லைஃப் ஸ்டைல் இருந்திருக்காது.மரியாதை கிடைச்சிருக்காது. நிறைய கேள்விகளை நீ கேட்டிருப்ப. உன்னோட தாத்தா பாட்டி பொறுப்பை எடுத்துக்கிட்டு உன்னையும் உங்க அம்மாவையும் சேவ் பண்ணி வளர்த்திருக்காங்க.இவ்ளோ வருஷம் உன்னோட அம்மா உன்னை நினச்சு தானே கல்யாணம் செஞ்சுக்கல. இப்போ நீ வளந்தாச்சு. உனக்குன்னு கொஞ்ச வருஷம் கழிச்சு கல்யாணம் ஆகும் .குடும்பம் வரும் . அப்போ உன்னோட அம்மாவை பார்த்துக்க யார் இருப்பாங்க? தாத்தா பாட்டிக்கும் ஏஜ் ஆகிடும் தானே !
பெண்ணிடம் மௌனம்”.உன்னோட அம்மா ,ஷி இஸ் எ வெரி குட் லேடி. பக்குவம் அதிகம்.உனக்காகவே மீண்டு வந்து படிச்சு இன்னிக்கு சமூகத்துக்கு முன்னாடி நிமிர்ந்து நிக்கிறாங்க. நீ அவங்களை பற்றி ப்ரௌட்டா தான் திங்க் பண்ணனும். தயா உன்னோட சிஸ்டர். நா உன்னோட அப்பா. காலத்துக்கும், சொஸைடிகும் யோசிச்சு நாம ரகசியத்தை காப்பாத்துறோம். பல விஷயங்களில் ரகசியம் காக்கப்பட்டாதான் மதிப்பு ராகி. என்னிக்கும் இந்த ரகசியத்தைமத்தவங்களுக்கு தெரிய விட்டுற கூடாது. உனக்கும் அதுதான் நல்லது “என்று முடித்தான்.
ராகினிக்கு புரிந்தது.அவள் முகத்தில் சிரிப்பு படர்ந்தது.”ஓகேப்பா,உங்கள அப்பான்னு கூப்பிடலாம் தானே? என்றவளை தோளில் தட்டிக்கொடுத்தான் ராகவன். பட், மத்தவங்க முன்னாடி எப்பவும் சார் தான்.’ என்றுவிட்டாள்.
சந்தனா எப்பொழுதோ வந்து விட்டிருந்தாள். இவர்கள் பேசுவதை ஹாலில் ஒரு ஓரமாக நின்று கவனித்துக்கொண்டிருந்தாள். அப்பா பெண் இருவரும் இவளை கவனிக்கவில்லை. சந்தனாவின் மனம் நிறைந்தது.
