அலை கடல் பெண்ணவள்

அலை 29

கொற்கை நகர் துறைமுகம் ஆழிக்காற்றால் இருண்டு கிடந்தது. இரவென்றும் மழையென்றும் பாராமல் கப்பல்கள் பல அணிவகுத்துக் கிடந்தன.

யவனநாட்டுக் கப்பல் ஒன்று அப்போதுதான் வந்து நின்று கொண்டிருந்தது. யவன வணிகர்கள் துறைமுகம் வருவதற்காகத் தோணியை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

துறைமுக வீதிகளில் குளிரைப் போக்கும் சூடான பானங்களைப் பருகிக் கொண்டும் ருசித்துக் கொண்டும் இருந்தனர் பலர்.

கடலின் அலையைப் பார்த்துக் கொண்டு ஆருடத்தை சொல்லிக்கொண்டிருந்தான் முதிர் சேர்ப்பான் ஒருவன்.

கலங்கரை விளக்கம் காற்றிலும் மின்னலிலும் கலங்காமல் தன் வெளிச்சத்தில் திசையைக் காட்டிக் கொண்டிருந்தது.

யவனவிஹாரத்தில் நுழைந்தனர் சிங்கனும், வீனஸும். வீனஸிற்குப் பழைய நினைவுகள் எழுநதது. அன்றைய வீனஸ், இன்றைய வீனஸ் எண்ணிப் பார்த்தான் மாலுமியின் வாயில் இரண்டு மண்ணளவு தித்திப்பை திணிக்க வேண்டும்.

‘என்ன ஒரு ஆரூடம்! எத்தனை இதயங்களின் உறவுகளைக் கொடுத்து விட்டது இந்த முத்து குளிக்கும் நகரம். கொற்கை முத்தைப் போன்ற வெண்மையான மனதைக் கொண்டவர்களே இந்த மக்கள்!’ என்று நினைத்துக் கொண்டே யவனவிஹாரில் தான் தங்கிய அறைக்குச் சென்றார்கள்.

அறையில் துகிலன் காலைப் பரப்பிக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தான்.

சிங்கன், “இவனுக்குத் துகிலன் என்ற நாமம் வைத்திருக்கக் கூடாது. துயிலன் என்றே வைத்திருக்க வேண்டும். அந்த நாமம் தான் இவனுக்குச் சரியாக இருக்கும்.” என்றான் சிங்கன்.

வீனஸ் சிரித்தான். “என்ன ஒன்று சிறந்த அறிவாளி! தங்களின் அறையிலிருந்த பொருட்களையும், பரிசில் பொருட்களையும் பத்திரமாகக் கொண்டு சேர்த்துவிட்டே துயில் கொள்கிறான் இந்தத் துகிலன்.” என்றான்.

அப்போது அங்கு வந்த யவன வியாபாரி பெரிய காகிதத்தை நீட்டினான்.

“என்ன?” என்று கேட்ட சிங்கனிடம்,

“இவ்வளவு உணவுப்பண்டங்களையும் சாப்பிட்டுவிட்டு நாணயம் கொடுக்காமல் கொற்கை துறைத்தலைவரிடம் வாங்கிக் கொள்” என்று வந்து விட்டான் என்றான் பாவமாக.

முழுக்கடையையும் கபளீகரம் செய்து விட்டான் என்றான் பாவமாக. சிங்கன் ஆத்திரத்துடன் துகிலனைப் பார்க்க, அவனோ தூக்கத்தில் பதார்த்தங்களின் பெயர்களைச் சொல்லிக் கொண்டும், ருசிபார்க்க எடுத்து வருமாறும் கட்டளை இட்டுக்கொண்டிருந்தான்.

அதைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டே வீனஸ் யவன நாணயங்களைக் கொடுத்தான்.

சிங்கன், “நீங்கள் ஏன் கொடுத்தீர்கள்? நான் கொடுத்து இருப்பேன்.” என்றான்.

வீனஸ், “நம் துகிலன் சிங்கன்! அவனைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.” என்றான்.

“எங்கே! அவன்தான் என்னைப் பார்த்துக் கொள்ள வேண்டும்.” என்றவன் வீனஸிடம் சரியென்று தலையை ஆட்டினான்.

சிங்கன், “சிறிது நேரம் இளைப்பாறுங்கள், விடியலில் கப்பல் கிளம்பும்.” என்றான்.

வீனஸ் சரியென்று படுத்துக் கொண்டான். சிங்கனும் ஒரு ஓரத்தில் அமர்ந்தான். மூவரும் யவனவிஹாரத்தில் துயில் கொண்டனர்.

சாரல் மழை அவ்வப்போது பலகாணி வழியாகப் பூவாய் தூவியது.

***

வைகறையில் கப்பல் புறப்படப் போகும் சப்தம் கேட்டது. கொற்கைத் துறைமுகத்தின் கடற்கரை அமைதியாக இல்லை. கடல் கரையில் நின்ற விளக்குகள் காற்றில் துடித்தன.

பாண்டிய நாட்டின் புகழ்பெற்ற துறைமுகமான கொற்கையிலிருந்து யவனதேசத்தை நோக்கி ஒரு பெரிய மரக்கப்பல் புறப்படத் தயாரானது.

அந்தக் கப்பலின் மேல் நின்றவள் வீனஸ். சிங்கனும், துகிலனும் கண்ணீருடன் வழி அனுப்பினர். எரா வண்ணாவிடமிருந்து அன்புடன் விடை பெற்றது. துகிலன் எராவை அணைத்துக் கொண்டு அழுது கொண்டே, “வெள்ளைச்சாமி, போய்வா!” என்றான். எரா தலையை ஆட்டியது.

“கப்பலை விடுங்கள்!” என்று யவன மாலுமி குரல் கொடுத்தான்.

கயிறுகள் அவிழ்க்கப்பட்டன. கப்பல் மெதுவாகக் கடலுக்குள் நகர்ந்தது.

மழை வலுக்க ஆரம்பித்தது. கடல் திடீரெனத் தனது கோபத்தைக் காட்ட ஆரம்பித்தது. தூரத்தில் கருமேகங்கள் ஒன்றாகச் சேர்ந்து பெரிய இருள் மலைபோல எழுந்தன. முதலில் மழைத்துளிகள் விழுந்தன. பிறகு அது கொட்டித் தீராத மழையாக மாறியது.

கப்பல் நகர ஆரம்பித்து இரவு நேரம் வந்தது. அப்போது, “கடாக்!”என்று வானம் இரண்டாகப் பிளந்தது போல ஒரு மின்னல் கடலை வெட்டியது.

அதன் ஒளியில் கடலலைகள் வெள்ளை நாகங்கள் போல எழுந்து கப்பலை விழுங்கப் பார்த்தது. மற்றொரு இடியுடன் மின்னல் கப்பலின் அருகே கடலில் விழுந்தது.

அலைகள் தூக்கி எறிந்த நீர் கப்பல்மேல் மழை போலச் சிதறியது.

மாலுமிகள் கத்தினர். “படகை நிலைநிறுத்துங்கள்!”

“கயிறுகளைப் பிடியுங்கள்!” கப்பல் ஒரு பக்கம் சாய்ந்தது.

வீனஸ் கப்பலின் மரத்தூணைப் பற்றிக்கொண்டான்.

அந்த இடியுடன் கூடிய இருளில் அவனது மனதில் ஒரு நினைவு மட்டும் எழுந்தது கொற்கை. அங்கே விட்டுவந்த அவனது காதலும் அவனது வாழ்க்கையும் வந்து போனது.

வானம் மீண்டும் முழங்கியது. மின்னல் ஒளியில் கப்பல் அலைகளின் மேல் உயர்ந்து கீழிறங்கிக் கொண்டே சென்றது. யவனதேசத்தை நோக்கி அந்தப் புயல் இரவின் நடுவே போராடிக் கொண்டு சென்றது அந்தக் கப்பல்.

கடல் பைத்தியமாய் கொந்தளித்தது. கப்பலின் மரத்தடிகள் காற்றின் தாக்கத்தில் “கிர்ர்… கிர்ர்…” என்று ஒலித்தன.

பெரிய அலைகள் ஒவ்வொரு முறை எழும்பும்போது கப்பல் வானத்தை நோக்கி உயர்ந்து, பிறகு பள்ளத்தில் விழுவது போலக் கீழே சரிந்தது.

வானம் திடீரெனப் பெரிய ஒளியில் பிளந்தது.

“கடாக்!”என்ற இடியுடன் ஒரு கொடூரமான மின்னல் நேராகக் கப்பலின் பாய்மரத்தூணில் விழுந்தது.

ஒரு கணத்தில் அந்த உயர்ந்த மரத்தூண் வெண்மையான தீ ஒளியில் ஜொலித்தது.

பிறகு “படடடடடம்!” என்று ஒரு வெடிப்புபோல மரத்தூண் சிதறியது. உலர்ந்த கயிறுகளும் பாய்மரமும் மின்னலின் வெப்பத்தில் உடனே தீப்பிடித்தன. காற்று வலுவாக வீசியதால் அந்தத் தீ ஒரு பாம்புபோல விரைந்து பரவியது. மழை கொட்டியபோதும் தீ அணையவில்லை. ஏனெனில் மின்னல் தாக்கிய மரம் உள்ளிருந்து சிவந்த நெருப்பாக எரிந்தது.

“தீ! தீ! கப்பலில் தீ!” என்று மாலுமிகள் கத்தினர்.

ஒருவர் தண்ணீர் எடுத்து வீசினார். மற்றொருவர் கயிறுகளை வெட்டினார். ஆனால் புயலின் காற்று அந்தத் தீயை இன்னும் பெரிதாக்கியது.

பாய்மரம் முழுவதும் அரிவாள் போல எரிந்து சிவப்பு ஒளியில் வானத்தைத் தொட்டது. மின்னல் ஒளியும், தீ ஒளியும், மழையும் காற்றும் அனைத்தும் ஒன்றாகக் கலந்து கப்பலை ஒரு எரியும் நரகமாக மாற்றின.

வீனஸ் அந்தத் தீ ஒளியில் ஒரு கணம் நின்றான். அவன் கண்களில் பயம் மட்டுமல்ல, ஒரு வேதனையும் இருந்தது.

“கொற்கையின் நாட்டிய மயூரி!” என்று அவன் மெதுவாகச் சொன்னான். “என் பெண் எனக்காகக் காத்து இருப்பாள்.”

அவன் திரும்பிப் பார்க்கும்போது பாய்மரத்தின் எரிந்த பகுதி உடைந்து கீழே விழ ஆரம்பித்தது. அந்த எரியும் மரம் நேராகக் கப்பல்மேல் விழுந்தால் அது உடைந்து அனைவரும் கடலில் விழுந்துவிடுவார்கள். புயல் இரவில் எரியும் கப்பல் கடலின் நடுவில் தன் கடைசி மூச்சைப் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தது.

பாய்மரத்தில் எரிந்த தீ இப்போது முழுக் கப்பலையும் பிடித்துக் கொண்டிருந்தது. காற்று சத்தமாக “ஊஊஊஊஊ” என ஊதியது.

மழை இன்னும் கொட்டிக் கொண்டே இருந்தது. ஒரு அழிவின் இரவாக மாறியது.

வீனஸ் கப்பலின் நடுவில் நின்றான். அவனைச் சுற்றிலும் மாலுமிகள் அலறி ஓடினர்.

“கப்பல் உடைந்து போகிறது!”

“கடலில் குதியுங்கள்!”

என்று அவர்கள் கத்தினர்.

அப்போது “கர்ர்ர்ர்…!” என்று கப்பலின் மரத்தடி பெரிய சத்தத்துடன் பிளந்தது. ஒரு பெரிய அலை எழுந்து எரியும் கப்பலை நேராக மோதியது. “படாம்!” அந்தத் தாக்கத்தில் கப்பலின் நடுப்பகுதி இரண்டாக உடைந்தது. எரியும் மரத்துண்டுகள்

கடலுக்குள் சிதறின. அந்த அதிர்ச்சியில் வீனஸ் சமநிலையை இழந்தான். அவனது உடல் கப்பலின் விளிம்பைத் தாண்டி நேராக இருண்ட கடலுக்குள் விழுந்தது.

“சப்ளாஷ்!”

கடல் பனிபோலக் குளிர்ந்தது. அலைகள் அவனை உடனே கீழே இழுத்தன. ஒரு கணம் அவன் மூச்சே வாங்க முடியாமல் போராடினான்.

“இல்லை…!” என்று அவன் உள்ளுக்குள் போராடினான். அப்போது அவனது கையில் ஏதோ மோதியது. கப்பலிலிருந்து உடைந்து வந்த ஒரு பெரிய மரத்துண்டு.

வீனஸ் உடனே அதை இரு கரங்களாலும் பற்றிக்கொண்டான்.

அலை ஒன்று எழுந்து அவனை அந்த மரத்துண்டுடன் மேலே தூக்கி எறிந்தது. மீண்டும் கீழே வீசியது. ஆனால் அவன் கையை விடவில்லை. மின்னல் ஒளியில் கடலின் மேல் எரியும் கப்பல் தூரத்தில் மெதுவாக மூழ்கிக் கொண்டிருந்தது.

மாலுமிகளின் குரல்கள் அலைகளின் சத்தத்தில் மறைந்தன.

இப்போது அந்த அகன்ற இருள் கடலில் வீனஸ் மட்டும்.

ஒரு மரத்துண்டைத் தழுவியபடி அலைகளுடன் ஆடிக்கொண்டிருந்தான். வானம் மறுமுறை முழங்கியது. மின்னல் ஒளியில் மயூரியின் முகம் ஒரு நொடி தெரிந்தது.

அவன் கண்களை மூடி மெல்லச் சொன்னான்.

“மயூரி…நான் இன்னும் உயிரோடிருக்கிறேன்…”

புயல் இரவு முழுவதும் அடித்து அலைகள் அவனைத் தூக்கிச் சுமந்து எங்கேயோ ஒரு தெரியாத திசையை நோக்கிக் கொண்டு சென்றன.

***

கொற்கையில் பேய்மழை மெதுவாகப் பெய்துக் கொண்டிருந்தது. நிலா சதுக்கம் அருகிலிருந்த மலர் மணம் நிறைந்த மாளிகையில் மயூரி தனியாக உறங்கிக்கொண்டிருந்தாள். அவளது அருகில் ஒரு சிறிய விளக்கின் ஒளி மட்டும் அறையை மெதுவாக ஒளிரச் செய்தது. காற்று ஜன்னலின் வழியாக வந்து திரைத் துணிகளை மெதுவாக அசைத்தது. மயூரியின் கண்கள் மூடியிருந்தன. ஆனால் அவளது மனம் அமைதியாக இல்லை.

அந்த இரவில் அவள் ஒரு கனவு கண்டாள். அந்தக் கனவில் கருமேகங்கள் நிறைந்த கடல் தெரிந்தது. அலைகள் மலைபோல எழுந்தன. வானம் முழங்கியது. மின்னல் வானத்தை வெட்டியது.

அந்த மின்னல் ஒளியில் ஒரு கப்பல் எரிந்து கொண்டிருந்தது. பாய்மரம் தீயில் சிதறியது. கப்பல் இரண்டாக உடைந்தது. அந்த எரியும் கப்பலிலிருந்து ஒரு உருவம் கடலுக்குள் விழுந்தது.

மயூரியின் இதயம் திடீரெனத் துடித்தது. அவள் கவனமாகப் பார்த்தாள். அந்த உருவம் வீனஸ். வீனஸ் கடலில் போராடிக் கொண்டிருந்தான். அலைகள் அவனை இழுத்தன. ஒரு மரத்துண்டை அவன் உயிர்ப்பிடியாகப் பற்றிக் கொண்டான்.

மின்னல் ஒளியில் வீனஸின் முகம் தெளிவாகத் தெரிந்தது. அவன் களைப்புடன் வானத்தை நோக்கிப் பார்த்தான். அந்தக் கணத்தில் வீனஸ் மெதுவாகச் சொன்னான்.

“மயூரி…”

அந்தக் குரல் கடலின் சத்தத்தைக் கடந்து நேராக மயூரியின் காதுகளில் விழுந்தது.

“மயூரி…!”

அவள் திடீரெனப் பயத்தில் விழித்துக் கொண்டாள். அவளது மார்பு வேகமாக எழுந்து இறங்கியது. விளக்கின் ஒளி இன்னும் எரிந்துகொண்டிருந்தது. அறை அமைதியாக இருந்தது.

ஆனால் மயூரியின் உள்ளம் அமைதியாக இல்லை. அவள் மெதுவாக எழுந்து சாளரம் அருகே சென்றாள்.

அலை வருடும்…

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page