கோவை மாநகரில்… சக்கரவர்த்தி இண்டஸ்ட்ரீஸ் என்ற பெயர் தாங்கிய முகப்பு கொண்ட அந்த அடுக்குமாடி கட்டிடத்தின் 10வது தளத்தில் இருந்த சிஇஓ அறையில் நேர்முகத் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அது மோட்டார் வாகனங்களுக்கான உதிரி பாகங்களை தயாரிக்கும் நிறுவனம்.
ஆனால் நிறுவனத்திற்குத் தேவையான பணியாளர்களைத் தேர்வு செய்ய அந்த நேர்முகத் தேர்வு நடத்தப்படவில்லை. பிறகு எதற்கு?
சிஇஓ அறைக்கு வெளியே இருந்த இருக்கைகளில் இளம் பெண்கள் பலர் நகத்தை கடித்தபடி டென்ஷனோடு அமர்ந்திருக்க, எந்த சலனமுமின்றி இறுக்கமான முகத்துடன் அமர்ந்திருந்தாள் ஒரு பெண். வெள்ளை நிற அனார்கலி சுடிதார் அணிந்திருந்தவள் முகமோ கருத்து, களையிழந்து இருந்தது.
ஏற்கனவே அங்கிருந்த எல்லோரும் ஆயிரக்கணக்கான விண்ணப்பதாரர்களில் இருந்து, நேர்முகத் தேர்வின் பல படிநிலைகளை கடந்து, தேர்வாகி வந்தவர்கள். கடைசியாக முழு உடல் மருத்துவ பரிசோதனையும் முடித்து தேர்வாகி இருந்த நூறு பேரில் அவளும் இருந்தாள்.
ஒவ்வொரு பெண்ணாக முகமலர்ச்சியோடு உள்ளே செல்வதும், தலைகவிழ்ந்து போய் வெளியே வருவதுமாக இருந்தார்கள். இன்னும் யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. சில கேள்விகளிலேயே, ஒரு தீர்க்கமான பார்வையிலேயே அவன் எல்லோரையும் நிராகரித்தான்.
அவள் முறை வந்தது. “எக்ஸ்சியூஸ் மீ சார்..” என்று அனுமதி கேட்டவாறு உள்ளே நுழைந்தவளை, எதிரில் இருக்கும் இருக்கையில் அமர சொல்லி பார்வையாலே கட்டளையிட்டான். அவள் அங்கு அமர்ந்ததும், “மிஸ். நதியா.. ரைட் சொல்லுங்க. எதுக்காக இந்த இன்டர்வியூக்கு வந்திருக்கீங்க?” கேட்டது அவனில்லை, அவனுக்கு அருகில் அமர்ந்திருந்த அவனுடைய பி.ஏ விஷ்ணு.
“சார்.. என்னோட அம்மா ஒரு ஆக்சிடென்ட்ல அடிபட்டதுல அவங்க ரெண்டு கால் மூட்டுலயும் ஆபரேஷன் பண்ணாங்க. அது தப்பா பண்ணிட்டாங்களாம். மறுபடியும் ஆபரேஷன் பண்ணனும்னு சொல்றாங்க. அதுமட்டுமில்லாம அவங்களுக்கு ஹார்ட்லயும் ஏதோ பிரச்சினைன்னு சொல்லியிருக்காங்க. ஆபரேஷன் பண்றதுக்கு நிறைய பணம் செலவாகும். அதுக்குத்தான்” என்றவள் குரல் தழுதழுக்க, வெளியேறத் துடிக்கும் கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டாள்.
“இந்த இன்டர்வியூ எதுக்குன்னு உங்களுக்குத் தெரியுமா?” விஷ்ணு கேட்க,
“தெரியும்.. சரகஸி மதருக்கான இன்டர்வியூ”
“கரெக்ட்.. ஆனா பிசிக்கல் ரிலேஷன்ஷிப்ல தான் குழந்தை பெத்துக்கப் போறீங்க. குழந்தை பிறக்கிற வரைக்கும் இந்த உண்மை வேற யாருக்கும் தெரியக் கூடாது. குழந்தை பிறந்த பிறகு நீங்க அந்த குழந்தையை உரிமை கொண்டாடக் கூடாது. சார் சொல்ற மாதிரி நடந்துக்கிட்டா உங்களுக்கு பணமோ பொருளோ என்ன தேவையோ எல்லாம் உங்களுக்கு செய்வார். அக்ரிமெண்ட் போட்ட பிறகு, பாதியிலேயே நீங்க இதுல இருந்து விலகினா பின்விளைவுகள் வேற மாதிரி இருக்கும்”
“ஹ்ம்ம்..” என்று குனிந்து கொண்டே தலையாட்டியவள், “லிசன்.. உனக்கு தம், தண்ணி அடிக்கிற பழக்கம் இருக்கா?” கேட்ட அந்த கணீர் குரலில் அதிர்ந்து போய் அவனை பார்த்தாள்.
“இல்ல..” என்றவள் திருதிருவென விழிக்க, “என்ன முழிக்கிற? கமான் டெல் மீ தி ட்ரூத்?” பார்வையிலேயே அது பொய் என்று கண்டு கொண்டான்.
“சார்.. பழக்கமெல்லாம் இல்ல,காலேஜ் படிக்கும் போது லாஸ்ட் இயர் ஃப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்து ஒரே ஒரு தடவை தம், தண்ணி அடிச்சேன். அதான்..” என்று அவள் தயங்கியவாறு சொல்ல,
‘போச்சுடா, இவர் வேணாம்னு சொல்லப் போறாரு. காலைல இருந்து எத்தனை பேர்கிட்ட தான் கேட்ட கேள்வியே கேட்கிறது. வாயெல்லாம் வலிக்குது. எனக்கென்னமோ இவருக்கு மாமா வேலை பார்க்குற மாதிரியே ஃபீல் ஆகுதே. அடச்சே’ தனக்குள் புலம்பிய விஷ்ணு, “விச்சு.. விச்சு” என்ற கம்பீரக்குரல் கேட்டு நினைவுக்கு வந்தான்.
“சொல்லுங்க சார்..”
“எனக்கு ஓகே. ஃபர்தரா நீ பேச வேண்டியதெல்லாம் பேசிட்டு அக்ரிமெண்ட்ல சைன் வாங்கிடு. டைம் இல்ல. டூ இட் ஃபாஸ்ட் ஓகே. எனக்கு கொஞ்சம் வெளில வேலை இருக்கு. மீட் யூ போத் அட் ஈவினிங்” என்று கட்டளையிட்டவன் வேகமாக எழுந்து வெளியே சென்றான்.
புயல் வேகத்தில் அவன் அறைக்கு வெளியே சென்றிருக்க, அப்போதுதான் விஷ்ணு, நதியா இருவரும் இழுத்துப் பிடித்திருந்த மூச்சை விட்டு ஒருவரையொருவர் பார்த்தார்கள்.
‘அம்மா பரதேவதை.. என்னை காப்பாத்திட்ட. இது ஒரு வேலை. இதுக்கு ஒரு இன்டர்வியூ’ என்று தனக்குள் நினைத்தவன், “மிஸ்.நதியா அக்ரிமெண்ட்ட நல்லா படிச்சு பார்த்துட்டு கையெழுத்து போடுங்க. பின்னாடி எந்த பிரச்சனையும் வரக்கூடாதுல” என்று சொல்ல,
“அண்ணா.. என்னோட அம்மாவை சேர்த்த ஹாஸ்பிடல்ல இருக்கிற நர்ஸ் தான் இந்த மாதிரி இன்டர்வியூ நடக்கிறதா சொன்னாங்க. அம்மாவுக்கு ட்ரீட்மென்ட் க்கு தேவையான எல்லா பணமும் தந்துருவீங்கள? எனக்கு இருக்கிற ஒரே சொந்தம் என்னோட அம்மா தான். அவங்க முழுசா சரியாகி என்கூட இருந்தா போதும்” வேதனையை அடக்கியவள் கம்மிய குரலில் கேட்க,
அண்ணா என்ற வார்த்தையை கேட்டு அகமகிழ்ந்தவன், ‘என்னையே அந்த பாடு படுத்துவாரு. பாவம் இந்த பொண்ணு அவர்கிட்ட சிக்கிக்கிட்டு என்ன கஷ்டம் படப் போகுதோ. பேசாம இப்படியே ஓடிருன்னு சொல்லிடலாமா?’ மனதிற்குள் பேச, ‘டேய் அப்படி சொல்லிட்டு நீ ரோட்டுக்கு போய் பிச்சை எடுக்கப் போறியா? உன் அப்பா ஹார்ட் ஆபரேஷன், அவர் வாங்கி வச்சிருக்க கடன் இதெல்லாம் யார் பார்ப்பா, பொண்ணா இருந்திருந்தா இப்போ நீதான் அந்த பொண்ணு இடத்துல இருந்திருப்ப. நல்லது நினைக்கிற மூஞ்சிய பாரு’ அவன் மனசாட்சியே அவனைக் காரி துப்பியது.
“உன்னோட அம்மா சரியாகிடுவாங்க, அது இனிமே எங்களோட பொறுப்பு. ஆனா அது நீ சரியா நடந்துக்கிறதுல தான் இருக்கு. அவர் எது சொன்னாலும் சரி சரின்னு தலையை ஆட்டு. என்ன சொன்னாலும் பண்ணிடு மா. அவர் கோபப்படாத மாதிரி நடந்துக்கோ” மனம் தாங்காமல் இலவசமாய் சில அறிவுரைகளையும் தந்தான் விஷ்ணு.
நதியா கண்ணீரோடு அவன் தந்த ஒப்பந்த படிவங்களில் எல்லாம் கையெழுத்திட்டு முடிக்க, “சரி வா போகலாம்” என்று அவளை அழைத்து கொண்டு லிஃப்ட்டில் கீழே பார்க்கிங் தளத்திற்குச் சென்றான்.
நிறுவனம் அவனுக்கென்று ஒதுக்கிய காரில், அவளையும் அழைத்துக் கொண்டு ஏறியவன், நதியாவின் அம்மாவை சேர்த்திருக்கும் ஹாஸ்பிடல் பேரை கேட்டு அங்கு சென்றான்.
நதியா அவசர சிகிச்சை பிரிவில் இருக்கும் தன்னுடைய அம்மாவை சென்று பார்த்தவள், “அம்மா..” என்றழைக்க, மருத்துவ உபகரணங்களின் உதவியோடு மூச்சு விட்டுக் கொண்டிருந்தவர் மெல்ல கண்களைத் திறந்து பார்த்தார்.
கண்ணீரை அடக்கியவாறு அவர் கையை பிடித்துக் கொண்டவள், “அம்மா எனக்கு வேலை கிடைச்சிருச்சு. உங்களுக்கு ஆபரேஷன் பண்ணா சீக்கிரமே சரியாகிடும். நீங்க பழைய மாதிரி என்கூட வந்து பேச தான் போறீங்க. என்கூட விளையாடிக்கிட்டே எனக்கு சாப்பாடு ஊட்டி விடப் போறீங்க” என்று சொல்ல, அவர் கண்களை மூடிக் கொண்டார்.
அடக்கி வைத்திருந்த கண்ணீர் அவளின் கன்னம் தாண்டி வழிய, விஷ்ணு பாவமாய் அவர்களைப் பார்த்திருந்தான். சிறிது நேரத்தில் நதியாவின் அம்மா அந்த ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டார்.
அம்மாவுடன் ஆம்புலன்ஸில் ஏறப் போனவளை தடுத்த விஷ்ணு, “சார் உங்க அம்மாவை அவருக்குத் தெரிஞ்ச பெரிய ஹாஸ்பிடல்ல சேர்க்க சொல்லியிருக்கார். ஆனா உங்களுக்கு எந்த ஹாஸ்பிடல்னு தெரிய வேணாம்னு சொல்லிட்டார்” என்று சொல்ல, அதிர்ச்சியாய் அவனை பார்த்தாள்.
ஆம்புலன்ஸ் சென்றபின் காரில் ஏறியவள், கேள்வியாய் அவன் முகத்தைப் பார்க்க, “நீ ட்ரீட்மென்ட் முடிஞ்சதும் உங்க அம்மாவை கூப்பிட்டு, எங்களை ஏமாத்திட்டு போயிட்டா என்ன பண்றது. எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கையான ஏற்பாடு தான். எங்க சார் அவ்ளோ ஈஸியா யாரையும் நம்ப மாட்டாரு” என்று சொல்ல,
விரக்தியாய் சிரித்தவள், “நீங்க என் அம்மாவுக்கு நல்ல ட்ரீட்மென்ட் தந்து சரியாக்குவீங்கன்னு நான் எப்படி நம்புறது?” அழுத்தமாய் அவனை பார்த்துக் கேட்டாள்.
அவன் பதில் சொல்ல முடியாமல் தடுமாற, “நான் நம்புறேன்..” என்று பதிலையும் அவளே சொல்லி முகத்தை திருப்பிக் கொண்டாள். இங்கு வேலைக்கு சேர்ந்த பின் மனசாட்சியையும், உணர்வுகளையும் ஏற்கனவே அடகு வைத்திருந்தவன், அதன் பிறகு ஒன்றும் பேசாமல் சலனமின்றி காரை ஓட்டினான்.
ஒரு உயர்தர ஹோட்டலில் காரை நிறுத்தியவன், அவளை உள்ளே சாப்பிட அழைத்துச் சென்றான். “உனக்கு என்ன வேணுமோ ஆர்டர் பண்ணிக்கோமா” என்று அவன் சொல்ல, “மட்டன் பிரியாணி, முட்டை பரோட்டா, மட்டன் சுக்கா, சிக்கன் லாலிபாப், சிக்கன் நூடுல்ஸ், பட்டர் சிக்கன், நாண்” அவள் ஆர்டர் தர, உணவு வந்ததும் அமைதியாக சாப்பிட்டாள். அவள் சாப்பிடுவதை, வாயைப் பிளந்து பார்த்திருந்தவன் வயிறும் நிறைந்து போனது.
ஆர்வமாய் சாப்பிட்டுக் கொண்டிருந்தவள் நிமிர்ந்து அவனை பார்த்து, ” நீங்க சாப்பிடலையா அண்ணா?” என்றுவிட்டு, “எனக்கு மனசு சரியில்லைனா பிடிச்சதெல்லாம் வாங்கி சாப்பிடுவேன்” என்று சொல்லி அவள் சாப்பிட, தொண்டையை அடைத்த துக்கம் அவளை சாப்பிட விடாமல் தடுக்க, கண்களை மீறி வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே சாப்பிட்டாள். என்னதான் இரும்பாய் மனதை மாற்றிக் கொண்டாலும், விஷ்ணுவால் இதெல்லாம் பார்க்க முடியாமல் எழுந்து வெளியே சென்றான்.
எல்லா உணவிலும் தேவையான அளவு எடுத்து சாப்பிட்டு முடித்து அவளும் வெளியே வர இருவரும் கிளம்பினர். “உன்னோட லக்கேஜ், உனக்குத் தேவையான எல்லாம் எடுத்துக்கோ மா. சார் வீட்டுக்கு போகணும். குழந்தை பிறக்கிற வரைக்கும் நீ அங்கதான் இருக்கணும். அக்ரிமெண்ட் படி எப்படியும் ஒரு வருஷம் ஆகும்” என்று அவன் சொல்ல, தற்போது அவள் தங்கியிருக்கும் தோழி வீட்டிற்குச் சென்று வேலை கிடைத்த விஷயத்தையும், ஹாஸ்டலில் தங்கியிருக்கப் போவதாகவும் சொல்லிவிட்டு அவள் உடைமைகளை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.
“அண்ணா.. நீங்க எவ்வளவு வருஷமா சார் கிட்ட வேலை பார்க்குறீங்க?” பொழுதை போக்க நினைத்து நதியா அவனிடம் கேட்க,
“நான் 10 வருஷமா இங்கதான் வேலை பார்க்குறேன்” என்று பதில் தந்தவன், ‘இதுக்கு நான் அடிமாடா போயிருக்கலாம்’ மனதோடு நினைத்துக் கொண்டான்.
“உங்க சார் யாரையும் நம்ப மாட்டாருன்னு சொல்றீங்களே. உங்களை மட்டும் நம்பி எப்படி 10 வருஷமா கூடவே வச்சிருக்கார்?” அவள் கேட்டிட, அவனுக்குள்ளும் இந்த கேள்வி நீண்ட நாட்களாக இருந்தது.
‘ஆமா எதுக்கு வச்சிருக்கார்?தெரியலையே. ஒருவேளை என்னோட அப்பா அவரோட அப்பா கிட்ட பி.ஏ வா இருந்தார். அதனால இருக்குமோ. பேசாம அவர்கிட்டையே கேட்டிடலாமா? நான் கேட்டு அவர் பதில் சொல்லிட்டாலும்’ தலையை ஆட்டி ஆட்டி தனக்குள்ளேயே அவன் பேசிக் கொண்டிருக்க, அவன் முகபாவனைகளை பார்த்தவள் சிரித்தே விட்டாள்.
“எதுக்குமா சிரிக்கிற? என்னை பார்த்தா பைத்தியம் மாதிரி இருக்கா?” அவன் கோபமாய் கேட்க, “மாதிரி லாம் இல்ல அதேதான்” சொன்னவள் சத்தமாய் சிரித்திட, “நல்லா சிரிச்சுக்கோமா, அவங்க வீட்டுக்குள்ள போனா சிரிக்க முடியுமோ என்னமோ? வீட்ல ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு டிசைனா இருப்பாங்க” உண்மையைச் சொல்லி அவள் மனதில் கலக்கத்தை உண்டாக்கியிருந்தான்.
அங்கிருந்து கிளம்பியவர்கள் கம்பெனிக்கு வருவதற்கும், அவன் கம்பெனிக்குள் வருவதற்கும் சரியாக இருந்தது.
❤️🔥 மோகம் தீர்ப்பாள் ❤️🔥
