கோவை மாநகரில்… ‘சக்கரவர்த்தி இண்டஸ்ட்ரீஸ்’ என்ற பெயர் தாங்கிய முகப்பைக் கொண்ட அந்த அடுக்குமாடி கட்டிடத்தின் பத்தாவது தளத்தில் இருந்த சி.இ.ஓ அறையில் நேர்முகத் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அது மோட்டார் வாகனங்களுக்கான உதிரி பாகங்களைத் தயாரிக்கும் நிறுவனம்.
அந்நிறுவனத்திற்குத் தேவையான பணியாளர்களைத் தேர்வு செய்ய அந்த நேர்முகத் தேர்வு நடத்தப்படவில்லை. பிறகு எதற்காக?!
சி.இ.ஓ அறைக்கு வெளியே இருந்த இருக்கைகளில் இளம் பெண்கள் பலர் நகத்தைக் கடித்தபடி பதற்றத்தோடு அமர்ந்திருக்க, எந்தச் சலனமுமின்றி இறுக்கமான முகத்துடன் அமர்ந்திருந்தாள் ஒரு பெண். வெள்ளை நிற அனார்கலி சுடிதார் அணிந்திருந்தவளது முகமோ கருத்து, களையிழந்து காணப்பட்டது.
ஏற்கனவே அங்கிருந்தவர்கள் ஆயிரக்கணக்கான விண்ணப்பதாரர்களில் இருந்து, நேர்முகத் தேர்வின் பல படிநிலைகளைக் கடந்து தேர்வாகி வந்தவர்கள். கடைசியாக முழு உடல் மருத்துவப் பரிசோதனையும் முடித்துத் தேர்வாகி இருந்த நூறு பேரில் அவளும் ஒருத்தி.
ஒவ்வொரு பெண்ணாக முகமலர்ச்சியோடு உள்ளே செல்வதும், தலைகவிழ்ந்து வெளியே வருவதுமாக இருந்தனர். இன்னும் யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. சில கேள்விகளிலேயே, ஒரு தீர்க்கமான பார்வையிலேயே அவன் அனைவரையும் நிராகரித்தான்.
அவள் முறை வந்தது. “எக்ஸ்க்யூஸ் மீ சார்…” என்று அனுமதி கேட்டவாறு உள்ளே நுழைந்தவளை, எதிரில் இருக்கும் இருக்கையில் அமரச் சொல்லிப் பார்வையாலேயே கட்டளையிட்டான். அவள் அங்கு அமர்ந்ததும், “மிஸ். நதியா… ரைட்! சொல்லுங்க, எதுக்காக இந்த இன்டர்வியூக்கு வந்திருக்கீங்க?” – கேட்டது அவனல்ல, அவனுக்கு அருகில் அமர்ந்திருந்த அவனுடைய பி.ஏ விஷ்ணு.
“சார்… என்னோட அம்மாவுக்கு ஒரு ஆக்ஸிடென்ட்ல அடிபட்டதுல ரெண்டு கால் மூட்டுலயும் ஆபரேஷன் பண்ணாங்க. ஆனா, அது தவறா நடந்துடுச்சாம். மறுபடியும் ஆபரேஷன் பண்ணனும்னு சொல்றாங்க. அதுமட்டுமில்லாம அவங்களுக்கு ஹார்ட்லயும் ஏதோ பிரச்சினைன்னு சொல்லியிருக்காங்க. அதுக்கெல்லாம் நிறைய பணம் செலவாகும். அந்தக் காரணத்துக்காகத்தான்…” என்றவளின் குரல் தழுதழுக்க, வெளியேறத் துடிக்கும் கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டாள்.
“இந்த இன்டர்வியூ எதுக்குன்னு உங்களுக்குத் தெரியுமா?” விஷ்ணு வினவியதும்,
“தெரியும்.. சரகஸி மதருக்கான இன்டர்வியூ” என்றாள்.
“கரெக்ட்… ஆனா பிசிக்கல் ரிலேஷன்ஷிப் மூலமாதான் நீங்க கருத்தரிக்கப் போறீங்க. குழந்தை பிறக்கிற வரைக்கும் இந்த உண்மை வேற யாருக்கும் தெரியக்கூடாது. அதேபோல, டெலிவரி முடிஞ்சதுக்கப்புறம் அந்தக் குழந்தை மேல நீங்க எந்த உரிமையும் கொண்டாடக்கூடாது. சார் சொல்றதைக் கேட்டு நீங்க நடந்துக்கிட்டா, உங்களுக்குத் தேவையான பணமோ பொருளோ… எல்லாமே தாராளமா கிடைக்கும். ஆனா, அக்ரிமெண்ட்ல கையெழுத்து போட்ட பிறகு பாதியிலேயே இதிலிருந்து விலக நினைச்சா… பின்விளைவுகள் மோசமா இருக்கும்”
“ஹ்ம்ம்…” என்று குனிந்தபடியே தலையாட்டியவள், “லிசன்… உனக்குத் தம், தண்ணி அடிக்கிற பழக்கம் இருக்கா?” கேட்ட அந்த கணீர் குரலில் அதிர்ந்து போய் அவனைப் பார்த்தாள்.
“இல்ல…” என்றவள் திருதிருவென விழிக்க, “என்ன முழிக்கிற? கமான் டெல் மீ தி ட்ரூத்?” அவளது முகத்தைப் பார்த்தே அது பொய் என்று கண்டுகொண்டான்.
“சார்… பழக்கமெல்லாம் இல்ல, காலேஜ் படிக்கும்போது லாஸ்ட் இயர் ஃப்ரெண்ட்ஸ்கூட சேர்ந்து ஒரே ஒரு தடவை தம், தண்ணி அடிச்சேன். அதான்…” என்று அவள் தயங்கியவாறு சொல்ல,
‘போச்சுடா, இவர் வேணாம்னு சொல்லப்போறாரு. காலையிலிருந்து எத்தனை பேர்கிட்டதான் கேட்ட கேள்வியையே கேட்கிறது? வாயெல்லாம் வலிக்குது. எனக்கென்னமோ இவருக்கு மாமா வேலை பார்க்குற மாதிரியே ஃபீல் ஆகுதே… அடச்சே!’ – தனக்குள் புலம்பிய விஷ்ணு, “விச்சு… விச்சு…” என்ற கம்பீரக் குரல் கேட்டு நினைவுக்கு வந்தான்.
“சொல்லுங்க சார்…”
“எனக்கு ஓகே… ஃபர்தரா நீ பேச வேண்டியதெல்லாம் பேசிட்டு அக்ரிமெண்ட்ல சைன் வாங்கிடு. டைம் இல்ல, டூ இட் ஃபாஸ்ட் எனக்குக் கொஞ்சம் வெளில வேலை இருக்கு. மீட் யூ போத் அட் ஈவினிங்” என்று கட்டளையிட்டவன், வேகமாக எழுந்து வெளியே சென்றான்.
புயல் வேகத்தில் அவன் அறைக்கு வெளியே சென்றிருக்க, அப்போதுதான் விஷ்ணுவும் நதியாவும் இழுத்துப் பிடித்திருந்த மூச்சை விட்டு ஒருவரையொருவர் பார்த்தனர்.
‘அம்மா பரதேவதை… என்னை காப்பாத்திட்ட. இது ஒரு வேலை. இதுக்கு ஒரு இன்டர்வியூ’ என்று மனதிற்குள் நினைத்தவன், “மிஸ்.நதியா… அக்ரிமெண்ட்ட நல்லாப் படிச்சுப் பார்த்துட்டு கையெழுத்துப் போடுங்க. பின்னாடி எந்தப் பிரச்சனையும் வரக்கூடாதுல?!” என விவரித்ததும்,
“அண்ணா… என்னோட அம்மாவைச் சேர்த்த ஹாஸ்பிடல்ல இருக்கிற நர்ஸ்தான் இந்த மாதிரி இன்டர்வியூ நடக்குதுன்னு சொன்னாங்க. ட்ரீட்மென்ட்டுக்குத் தேவையான எல்லாப் பணமும் தந்துருவீங்களா? எனக்கு இருக்கிற ஒரே சொந்தம் அவங்கதான். அவங்க முழுசா சரியாகி என்கூட இருந்தா போதும்…” – வேதனையை அடக்கியவள் கம்மிய குரலில் விசாரித்தாள்.
‘அண்ணா’ என்ற வார்த்தையைக் கேட்டு அகமகிழ்ந்தவன், ‘என்னையே அந்தப் பாடு படுத்துவாரு. பாவம், இந்தப் பொண்ணு அவர்கிட்ட சிக்கிக்கிட்டு என்ன கஷ்டப்படப் போகுதோ? பேசாம இப்படியே ஓடிருன்னு சொல்லிடலாமா?!’ என்று உள்ளுக்குள் பேசியபடி இருக்க… ‘டேய்… அப்படிச் சொல்லிட்டு நீ ரோட்டுக்குப் போய் பிச்சை எடுக்கப் போறியா? உன் அப்பா ஹார்ட் ஆபரேஷன், அவர் வாங்கி வச்சிருக்கக் கடன் இதெல்லாம் யார் பார்ப்பா? பொண்ணா இருந்திருந்தா இப்போ நீதான் அந்தப் பொண்ணு இடத்துல இருந்திருப்ப. நல்லது நினைக்கிற மூஞ்சியப் பாரு!’ என அவன் மனசாட்சியே அவனைக் காரித் துப்பியது.
“உன்னோட அம்மா குணமாகிடுவாங்க, அது இனிமே எங்களோட பொறுப்பு. ஆனா, அது நீ நடந்துக்கிற விதத்துலதான் இருக்கு. சார் எது சொன்னாலும் சரி சரின்னு தலையை ஆட்டு, என்ன கேட்டாலும் மறுக்காமப் பண்ணிடுமா… அவர் கோபப்படாத மாதிரி நடந்துக்கோ” – மனம் தாங்காமல் இலவசமாய்ச் சில அறிவுரைகளையும் தந்தான் விஷ்ணு.
நதியா கண்ணீரோடு அவன் தந்த ஒப்பந்தப் படிவங்களில் கையெழுத்திட்டு முடிக்க, “சரி வா போகலாம்” என்று அவளை அழைத்துக்கொண்டு லிஃப்ட்டில் கீழே பார்க்கிங் தளத்திற்குச் சென்றான்.
நிறுவனம் அவனுக்கென்று ஒதுக்கிய காரில் அவளையும் அழைத்துக் கொண்டு ஏறியவன், நதியாவின் அம்மாவைச் சேர்த்திருக்கும் மருத்துவமனையின் பெயரைக் கேட்டு அங்கு சென்றான்.
நதியா அவசரச் சிகிச்சை பிரிவில் இருக்கும் தன்னுடைய தாயைச் சென்று பார்த்தவள், “அம்மா…” என்றழைக்க, மருத்துவ உபகரணங்களின் உதவியோடு மூச்சு விட்டுக்கொண்டிருந்தவர் மெல்லக் கண்களைத் திறந்தார்.
பெருகி வந்த அழுகையைக் கட்டுப்படுத்திக்கொண்டு அவர் கையைப் பிடித்துக்கொண்டவள், “சாந்திம்மா… எனக்கு வேலை கிடைச்சிருச்சு. உங்களுக்கு ஆபரேஷன் பண்ணா சீக்கிரமே சரியாகிடும். நீங்க பழைய மாதிரி என்கூட வந்து பேசத்தான் போறீங்க. என்கூட விளையாடிக்கிட்டே எனக்குச் சாப்பாடு ஊட்டி விடப்போறீங்க” என்று கூறியதும் அவர் கண்களை மூடிக்கொண்டார்.
அடக்கி வைத்திருந்த விழிநீர் அவளது கன்னம் தாண்டி வழிய, விஷ்ணு பாவமாய் அவர்களைப் பார்த்திருந்தான். சிறிது நேரத்தில், நதியாவின் தாய் அந்த மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டார்.
ஆம்புலன்ஸில் தன் தாயுடன் ஏற முயன்றவளைத் தடுத்த விஷ்ணு, “சார் உங்க அம்மாவை அவருக்குத் தெரிஞ்ச பெரிய ஹாஸ்பிட்டல்ல சேர்க்கச் சொல்லியிருக்கார். ஆனா, அது எந்த ஹாஸ்பிட்டல்னு உங்களுக்குத் தெரிய வேணாம்னு சொல்லிட்டார்” என்று கூறியதும், திகைத்தபடி அவனை நோக்கினாள்.
ஆம்புலன்ஸ் சென்றபின் காரில் ஏறியவள், கேள்வியாய் அவன் முகத்தைப் பார்க்க, “நீ ட்ரீட்மென்ட் முடிஞ்சதும் உங்க அம்மாவைக் கூப்பிட்டுட்டு, எங்களை ஏமாத்திட்டுப் போயிட்டா என்ன பண்றது?! எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கையான ஏற்பாடுதான். எங்க சார் அவ்ளோ ஈஸியா யாரையும் நம்ப மாட்டாரு” என்று காரணத்தை விளக்கினான்.
விரக்தியாய்ச் சிரித்தவள், “நீங்க என் அம்மாவுக்கு நல்ல ட்ரீட்மென்ட் தந்து சரியாக்குவீங்கன்னு நான் எப்படி நம்புறது?!” அவனைத் தன் கூர்விழிகளால் துளைத்தபடி அழுத்தமாகக் கேட்டாள்.
அவன் பதில் கூற முடியாமல் தடுமாற, “நான் நம்புறேன்…” என்று பதிலையும் அவளே சொல்லி முகத்தைத் திருப்பிக்கொண்டாள். இங்கு வேலைக்குச் சேர்ந்த பின் மனசாட்சியையும் உணர்வுகளையும் ஏற்கனவே அடகு வைத்திருந்தவன், அதன் பிறகு ஒன்றும் பேசாமல் காரை ஓட்டினான்.
ஒரு உயர்தர ஹோட்டலில் காரை நிறுத்தியவன், அவளை உணவருந்த அழைத்துச் சென்றான். “உனக்கு என்ன வேணுமோ ஆர்டர் பண்ணிக்கோமா” என்று விஷ்ணு கூற, நதியா பட்டியலை நீட்டினாள். “மட்டன் பிரியாணி, முட்டை பரோட்டா, மட்டன் சுக்கா, சிக்கன் லாலிபாப், நூடுல்ஸ், பட்டர் சிக்கன், நாண்…” என அடுக்கிக்கொண்டே போனவள், உணவு வந்ததும் மௌனமாகச் சாப்பிடத் தொடங்கினாள். அவள் ஒரு பிடி பிடிப்பதைப் பார்த்தே விஷ்ணுவுக்கு வயிறு நிறைந்து போனது.
ஆர்வமாய் உணவருந்தியவள் நிமிர்ந்து அவனைப் பார்த்து, “நீங்க சாப்பிடலையா அண்ணா?” என்றுவிட்டு, “எனக்கு மனசு சரியில்லைனா பிடிச்சதெல்லாம் வாங்கிச் சாப்பிடுவேன்” என்றாள். அவள் தொடர்ந்து உணவை உட்கொள்ள, தொண்டையை அடைத்த துக்கம் அவளைச் சாப்பிட விடாமல் தடுத்தது.
விழிநீரைத் துடைத்துக்கொண்டே அவள் உணவை விழுங்குவதைக் கண்ட விஷ்ணுவால் அதற்கு மேல் அங்கே இருக்க முடியவில்லை. என்னதான் இரும்பாய் மனதை மாற்றிக்கொண்டாலும், இதையெல்லாம் பார்க்கச் சகிக்காமல் அவன் எழுந்து வெளியே சென்றான்.
எல்லா உணவிலும் தேவையான அளவு மட்டும் எடுத்து உண்டபின் அவளும் வெளியே வர, இருவரும் அங்கிருந்து புறப்பட்டனர். “உன்னோட லக்கேஜ், உனக்குத் தேவையான எல்லாத்தையும் எடுத்துக்கோமா. சார் வீட்டுக்குப் போகணும். குழந்தை பிறக்கிற வரைக்கும் நீ அங்கதான் இருக்கணும்.அக்ரிமெண்ட் படி எப்படியும் ஒரு வருஷம் ஆகும்,” என்று அவன் உரைத்ததும், தற்போது தான் தங்கியிருக்கும் தோழியின் வீட்டிற்குச் சென்று, வேலை கிடைத்த விஷயத்தையும் ஹாஸ்டலில் தங்கப்போவதாகவும் கூறிவிட்டுத் தன் உடைமைகளை எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.
“அண்ணா… நீங்க எவ்வளவு வருஷமா சார்கிட்ட வேலை பார்க்குறீங்க?” – பொழுதைப் போக்க நினைத்து நதியா அவனிடம் கேட்க, “நான் பத்து வருஷமா இங்கதான் வேலை பார்க்குறேன்” என்று பதில் தந்தவன், ‘இதுக்கு நான் அடிமாடா போயிருக்கலாம்’ என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டான்.
“உங்க சார் யாரையும் நம்ப மாட்டாருன்னு சொல்றீங்களே… உங்களை மட்டும் நம்பி எப்படிப் பத்து வருஷமா கூடவே வச்சிருக்கார்?” – யோசனையோடு அவள் வினவியதும், அவனுக்குள்ளும் அந்தக் கேள்வி நெடுநாட்களாக இருந்திட,
‘ஆமா, எதுக்கு வச்சிருக்கார்? தெரியலையே… ஒருவேளை எங்க அப்பா அவரோட அப்பாகிட்ட பி.ஏ-வா இருந்தார், அதனால இருக்குமோ?! பேசாம அவர்கிட்டயே கேட்டிடலாமா? கேட்டு அவர் பதில் சொல்லிட்டாலும்…’ – தலையை ஆட்டி ஆட்டித் தனக்குள்ளேயே அவன் பேசிக்கொண்டிருக்க, அவனது முகபாவனைகளைக் கண்டு சிரித்தே விட்டாள் நதியா.
“எதுக்குமா சிரிக்கிற? என்னைப் பார்த்தா பைத்தியம் மாதிரி இருக்கா?!” – கண்களைச் சுருக்கி அவன் கோபமாய்க் கேட்க, “மாதிரிலாம் இல்ல… அதேதான்!” என்றவள் தன்னை மறந்து கலகலவென சிரித்தாள்.
“நல்லா சிரிச்சுக்கோமா… அந்த வீட்டுக்குள்ள போனா இப்படிச் சிரிக்க முடியுமோ என்னமோ? அந்த வீட்ல ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு டிசைனா இருப்பாங்க” விஷ்ணு உண்மையைச் சொல்லி அவள் மனதில் கலக்கத்தை உண்டாக்கியிருந்தான்.
அங்கிருந்து கிளம்பியவர்கள் கம்பெனிக்குத் திரும்புவதற்கும், அவன் கம்பெனிக்குள் நுழைவதற்கும் சரியாக இருந்தது.
❤️🔥 மோகம் தீர்ப்பாள் ❤️🔥
