அலை கடல் பெண்ணவள்

அலை 28

கொற்கை நகர் முழுவதும் இருபத்தெட்டு நாள் விழா இந்திர விழா கொண்டாட்டத்தில் இருந்தது. வானம் மெதுவாகக் கருத்து வந்தது. காற்றில் அந்த நேரம் மின்னல் ஒளி வானத்தில் துடித்து, இடியோடு கூடிய மழை ஆரம்பமானது. இந்திரன் தன் பணியை வருண பகவானிடம் கொடுத்தான்.

காலை முதலே கொற்கை மக்கள் நகரம் முழுதும் கலக்கமாக இருந்தனர். பாறைகள்மீது மின்னல் வெட்டி இடி முழங்கியது. அந்த நேரம் இந்திரன் சப்தம் போல வானம் முழங்கத் தொடங்கியது.மின்னல் கதிர்கள் வானில் துடித்தன. இடியோடு கூடிய கனமழை ஆற்றிலும் கலந்தது. மண்டபங்கள், மலர்கள், தீவட்டிகள் எல்லாம் மழையில் குளித்தன.

மக்கள் ஓடிக் கையால் தீவட்டியை தாங்கினர். சிலர் ரசித்தனர். சிலர் சிரித்தனர். மக்கள், “காமன் வாழ்க! இந்திரன் வாழ்க!” என்று முழங்கினார்கள். மழையின் ஒலி, மின்னலின் ஒளி, காமன் உருவம் எல்லாம் ஒன்றாகக் கலந்து பிரதிபலித்தது.

சிங்கனும், வீனஸும் அரண்மனையில் அமைச்சரைக் கண்டனர். அமைச்சர் புன்முறுவலுடன் வீனஸை வரவேற்றார்.

யவன வீரர்கள் ஐந்து பேர் தங்கத்தால் பூட்டப்பட்ட பெரிய பெட்டிகளைக் கொண்டு வந்து வைத்தனர்.

“இவை எங்கள் யவன நாட்டு பரிசில்கள். எங்கள் வேந்தனின் இனிய நட்புப் பரிசு சுந்தர பாண்டியருக்கு! எங்கள் நாட்டின் வணக்கங்களையும சமர்ப்பிக்கிறோம் இந்தக் கொற்கை நகருக்கு!” என்று வணங்கினான்.

அமைச்சர் ஆரத்தழுவி, “இத்தனை நாட்கள் கொற்கையின் விருந்தோம்பலை ஏற்று எங்களுடன் இன்புற்று இருந்ததற்காக நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். மீண்டும் தங்களின் வரவை எதிர்பார்த்து இருக்கிறோம்.” என்றவர் பாண்டிய நாட்டு வீரர்கள் பத்து பேரை வரவழைத்து, “இது எங்கள் கொற்கையின் பரிசுப் பொருட்கள். தங்களின் யவன அரசிக்கும், அரசருக்கும், ஏன் உங்களுக்குமே நீங்கள் கப்பலில் சேரும் முன் இவைகள் அங்கே இருக்கும்.” என்றார்.

“இன்னும் சிறிது காலம் எங்களுடன் தங்கினால் நாங்கள் மிகவும் ஆனந்தமடைவோம்!” என்றார்.

வீனஸ், “ஐயா, அவசர பணியின் காரணமாக நான் செல்ல வேண்டும். இப்போது மழை வேறு, இன்னும் நாங்கள் தாமதித்தே யவன தேசம் செலல முடியும்.” என்றான் கவலையாக.

“நன்று. உங்களுக்கு எங்கள் வேங்குழல் நாதன் துணை இருப்பார். நல்லபடியாகப் போய் வாருங்கள். உங்கள் பயணம் இனிதாகட்டும்!” என்றார்.

விடை பெற்று வெளியே வந்தார்கள் சிங்கனும் வீனஸும். துகிலன் பரிசில் பொருட்களைக் கப்பலில் கொண்டு சேர்க்கும் பணியினை மேற்கொண்டான்.

மாலைவேளை என்பது தெரியாமல் கொற்கை நகரம் எங்கும் இருட்டைப் பூசியிருந்தது. வானமும் காற்றும் போட்டி போட்டு முழங்கிக் கொண்டிருந்தது.

வீனஸ் சிங்கனிடம், “எவ்வாறு மயூரியைக் காண்பது?” என்றான்.

சிங்கன், “வாருங்கள், மழையால் அம்பையைக்கூடப் பார்க்க முடியவில்லை சேதியும் சொல்ல முடியவில்லை.” என்றான்.

கணீகையர் வீதிக்குள் பிரவேசித்தனர். கணீகையர் வீதி மழையின் துளிகளுக்குள் முடங்கிக் கிடந்தது. சிங்கன் மயூரியின் மாளிகைக்குப் பின்னால் வந்தவுடன் நீண்டு வளர்ந்த செண்பக மரத்தின் மீது ஏறிச் செல்லுமாறு கூறினான்.

வீனஸ் எதையுமே சிந்திக்காமல் ஒரு நொடிப்பொழுதில் மரத்தின் உச்சியை அடைந்து நிலா சதுக்க மண்டபத்தில் குதித்தான். மண்டபம் எங்கும் வண்ண வண்ணப் பூக்கள் கொட்டி வாசனையையும் ஈரமான இன்பத்தையும் கொடுத்தது. மரங்கள் மழைநீரால் கழுவிப் புதியதாகப் பளபளத்தது. நீரின் அழுத்தத்தால் தழைகள் தொங்கிச் சாய்ந்து நின்றது.

நிலா சதுக்க மண்டபத்திலிருந்து குதித்து நடந்தவன் அழகிய பெரிய திரைச்சீலையுடன் இருந்த சாளரத்தைக் கண்டான். சாளரத்தின் வழியே பார்த்தவனுக்கு யவன விளக்கொளியில் மயூரி பஞ்சணையில் துயில் கொண்ட காட்சி தென்பட்டது.

இந்திர கோப ஆடையில் பேரழகியாகச் செழுத்து திமிறிய அங்கங்கள் கலைந்து கிடந்தன. விளக்கொளியின் வெளிச்சத்தில் மினுக்கென்ற மின்மினிப் பூச்சிகள் கிடந்ததைபோல் ஒளிர்ந்தது. கைகளிலிருந்த பொன் வளையல்கள் உதிர்ந்து கீழே கிடந்தது. நெற்றியில் உள்ள நெற்றிச்சுட்டி சுருண்டு கிடந்தது. வதனம் வாடிக் கிடந்தது. இடையணி சிறியதாக இறுக்கிப் பிடித்திருக்க, அவளின் மூச்சுக்கள் தாளமிட்டுக் கொண்டிருந்தது.

இந்திர கோப சிவப்புக் கச்சை தோள்களில் நழுவி பாதி தோளுக்கு வந்து சந்தன பாகத்தைக் காட்டியது. பசலை நோயால் கொங்கைகளில் அரைத்த பசுஞ்சந்தனத்தை தடவி இருந்தாள்.

சந்தனத்தின் குளுமை மயூரியின் மேனியின் ஜ்வாலையை குறைக்கவில்லை. செவ்விதழ்கள் ஈரத்துடனும் மினுமினுப்புடனும் சிவந்து கிடந்தது. செண்பகப் பூவின் நாசி அழகான வடிவுடன் மூச்சை இழுத்து ஒருவித இசையை எழுப்பியது.

வர்ணிக்க வார்த்தைகள் இல்லாமல் அறையில் நுழைந்தான் வீனஸ். தன் பெண்ணின் உச்சியை முகர்ந்தான். நித்திரையின் மயக்கத்தில் இருந்தவளுக்கு முத்தம் கனவில் இட்டதுபோல இருக்க சிரித்தாள்.

வீனஸ் மயூரியை ஆரத்தழுவி அணைத்தான். அணைப்பின் இறுக்கத்தால் கண்களை மலர்த்தியவளின் வதனம் ஆனந்தப் பூச்சொரிந்தது. தான் காண்பது கனவல்ல என்று தெரிந்ததும் பெண்ணவளின் உள்ளத்து வேட்கை பொங்கியது. இதுபோல் சமயம் இனி அமையாது என்ற நினைவுடன் இன்றே இவன் என்னவன் என்று வேண்டிக் கொண்டே கந்தர்வ மணம் புரிந்தாள்.

பெண்ணவள் தன்னைக் கொடுக்கத் தொடங்கினாள். எத்தனையோ ஜென்மங்களில் நடைபெறாத சங்கமத்தில் சங்கமிக்க ஆரம்பித்தாள்.

வீனஸே ஆச்சரியப்பட்டான். தன்னைவிட வேகமும் வேட்கையும் கொண்ட இவளின் காதலைவிட தன் காதலை வேகத்துடன் காட்ட ஆரம்பித்தான்.

அழுத்தமான முத்திரைகளைப் பரிமாறிக்கொண்டே இருவரும் தங்களின் காதலையும் பறைசாற்றிக் கொண்டனர்.

கால்களில் மெல்லிய தங்க அணிகள் அவளை அறியாமல் சரளி வரிசையைப் பாடியது.

வீனஸ் மயூரியை பார்த்து, “நான் விரைவாகச் செல்ல வேண்டும். ரோமாபுரி அரசரின் ஆணை!” என்று தவிப்புடன் கூறினான்.

மயூரி வீனஸை அணைத்துக் கொண்டு, “என்னை விட்டுப் பிரியாதீர்!” என்று அழுதாள்.

வீனஸ், “மயூரி, உன்னை விட்டுச் செல்ல எனக்கும் மனமில்லை. மின்னல் வேகத்தில் வந்து விடுவேன். கவலை கொள்ளாதே!” என்று முத்தமிட்டான்.

அன்றில் பறவையைப் போலப் பிரியமுடியாமல் தவித்தனர். மீண்டும் ஒருமுறை சங்கமித்தனர்.

நிலவு மிளிரும் சோலைதனில் தாமரை தடாகத்தில்

அல்லிமலராய் நான் படர

பைந்தமிழ் பொய்கையில் பவளப்பாறையில்

சுடர்க்கொடியாய் நான் பின்னலிட

கயல்விழிகளின் கூட்டங்கள் செம்பஞ்சு பாதங்களை

முத்தமிட்ட கூச்சத்தில் நான் மயங்க

எழில் மேனிதனில் செங்காந்தள் தளிர் வர்ணங்களை

வாரி வாரி இசைக்க நான் கிறங்க

தாரா சந்திரிகன் பவனியில் உலாவர அவனின் அமுத ஒளி

என்மீது சிதற நான் துடிதுடிக்க

நாபியின் வட்டக்குழலில் பச்சை நரம்புகள் தாளம்

போட நான் விம்பி ததும்ப

வேங்குழல் நாதம் என் சுவாசத்தின் வழியே

சப்தம் இல்லாமல் சங்கீதமிட

ஆழ்கடலின் ஆழத்தை ஆழிலையின் தூரிகையில்

மாக்கோலம் மயிலிறகாய் இட.

கொன்றைப் பூக்களின் கலசத்தில் மதனமழை சொரிய

வழிந்து வழிந்து வழிவிட

கார்கூந்தல் பாய்விரித்து தொடாத பாகம் மறைக்க

பல்லவி இல்லாமல் நான் சிந்துபாட

பசும்புற்கள் சாமரம்வீச பருவம் பூத்த காரிகை

மையலுடன் மன்னவன் முகம் தேட

கொங்கைகளின் திமிரலில் பாவைநள்ளால்

விரகத்தில் பரிதவிக்க

வண்டுகளின் ரீங்காரங்கள் கூடச் செவிகளின்

வழியே மோகம் கொள்ள

பால்வண்ண முகத்தில் பசலை படிய

வெள்ளாற்றுநீர் நதியெனப் பாய

கண்கள் மட்டும் கண்ணீர் பூக்கள் சிந்த

உள்ளங்கையில் உத்தமனை ஏந்தி

தேன் மலர்மதுவை இதழ்களில் இருத்தி

கரைதனில் கற்பூரமாய் கரைந்து நிற்பேன்

செவ்வரியோடிய விழிகளில் உதிரத்தின்

உவர்ப்பில் காணாமல் போகிறேன்

அலர்மேல்வள்ளி தன் கனங்களையும்

தவிப்பையும் சேர்த்து கல்லாய் சமைகிறாள்

காரிருளின் வண்ணத்தை வாரி எடுத்து

தன்மீது பூசிக்கொண்ட வானதி

காற்றுபுகா இறுக்கத்தில் நான் உறைய

நிசப்தம் இல்லாமல் உருக வேண்டும்

சேர்பவனின் வதனம் காண மருள்

சொருகி வீழ்ந்து கிடந்தாள் பாவை

பாவையின் விரகத்தை ஆற்றிய ஆண்மையின் திண்மையுடன் எழுந்தவன் மயூரியை ஆற்றி தேற்றிவிட்டு நிலா சதுக்கம் வழியாக வெளியேறினான்.

சிங்கன் வெகுநேரம் கணீகையர் வீதியின் பின்புறம் உள்ள மண்டபத்தில் காத்திருந்தான்.

வீனஸ் வந்ததும், “போகலாம்” என்றான். சிங்கன் வீனஸைப் பார்க்க அவன் முகம் தெளிந்து இருந்தது.

சிங்கன், “என்ன வீனஸ் பிரிவுத்துயரா?” என்றான்.

வீனஸ் கவலையுடன், “ஆம்! சிங்கா” என்றான்.

இருவரும் வீதியின் முடிவுக்கு வர அங்கே அம்பை வேங்குழல் நாதன் ஆலயத்திலிருந்து வந்துகொண்டிருந்தாள்.

இருவரையும் பார்த்தவள், “என்ன இருவரும் இங்கே?” என்றாள்.

சிங்கன் நடந்ததைக் கூறியவுடன் அம்பைக்கு என்ன சொல்லவது என்று தெரியாமல் வருத்தத்துடன், “போய் வாருங்கள்” என்று வேங்குழல் நாதனின் திருநீரை வீனஸின் நெற்றியில் இட்டவள், “உங்களுடன் அந்த வேங்குழல் நாதனும், நாயகியும் துணை இருப்பார்கள்.” என்றாள்.

வீனஸ், “மயூரியைப் பார்த்துக் கொள்ளுங்கள். நான் விரைவில் காற்றாய் வந்து விடுவேன்.” என்றான்.

அம்பை, “நான் கவனமாகப் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் நலமுடன் சென்று வாருங்கள்.” என்றாள். மழை சடசடவென வர ஆரம்பித்தது.

அம்பைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே கணீகையர் வீதியில் நுழைந்தாள். சிங்கனும் வீனஸும் மறு வீதியைக் கடந்தனர்.

நிலா சதுக்க மண்டபத்தின் ஓரத்தில் மயூரி வீனஸ் செல்வதை விழிகளில் நீருடன் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

மழைநீர் வீதிகள் எங்கும் உடைப்பெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. ஊரில் உள்ள மரங்கள் எல்லாம் ‘ஊஊஊ’ என்ற ஓசையுடன் தள்ளாடியது. தண்பொருநை பொங்கிப் பெருகி ஓடியது.

பச்சை தவளைகளின் ஓசைகள் இருட்டைக் கிழித்து எறிந்தது. மின்னல் வெளிச்சத்தில் கொற்கை அரண்மனையின் மாடமாளிகைகள் தெரிந்தன.

மயூரிக்கு இதயத்தில் ஏதோ ஒரு பெரிய துன்பம் கொற்கையில் நடக்கப் போவதை போல மனதில் பட்டது. தான் இதுவரை காணாத பேய் மழையின் ஆட்டத்தைப் பார்த்தவளுக்கு இந்திரன் மீது கோபம் வந்தது.

இந்திரனால் தான் இந்தப் பேய்மழை என்று திட்டிக்கொண்டிருந்தாள். கூடவே வீனஸ் இந்த நேரத்தில் கடல் பயணம் போவது பெரும் வேதனையாக இருந்தது.

அம்பை மயூரியை தேடிக்கொண்டு வந்தவள் மயூரி அழுதுகொண்டு இருப்பதைப் பார்த்து மயூரியை அணைத்தாள். வீனஸைப் பார்த்ததைச் சொன்னாள். மயூரி அம்பையின் மடியில் கிடந்து தன் துயரத்தைக் கொட்டினாள். அம்பை அவளை ஆறுதல் படுத்திக்கொண்டே மழையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

காதல் வேதனை எவ்வளவு கொடுந்துயர் என்பதைப் பார்த்தவளுக்கு நம்பியின் நினைவு வந்தது. அன்று பார்த்தது நம்பியைத் தான் என்று அம்பைக்கு தெரியும். நாட்டியம் முடிந்து வந்து நம்பியைத் தேடினால் நம்பி மறைந்து விட்டான். கற்பூரமாய் தன் இதயத்திற்குள் பதித்து பத்திரப்படுத்திக் கொண்டாள் ஒருதலைக் காதலை. அம்பையின் கண்களிலும் காதல் வேதனை வலியைக் கொடுத்தது.

அலை வருடும்…

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page