பூர்ணிமா திகைத்துப் போய் அவனைப் பார்த்தாள்.
‘இன்று காலைதான் அப்சராவுடனான திருமணத்தைப் பற்றி மீடியா முன்னிலையில் பேசினான்… இப்போது தன்னை நாடுகிறான்? என்ன நினைப்பில் இருக்கிறான்?’ என்று கேட்டது அவளின் மனசாட்சி.
‘அவனது நோக்கம் எதுவாக இருந்தாலும் சரி, அவன் அருகில் இருக்கும் இந்த நிமிடத்திற்காகவே என் வாழ்நாள் முழுக்க தந்துவிட, நான் தயார்…’ என்று அதனிடம் உரக்கச் சொல்லியவள், தன் கைகளை அவன் தோளைச் சுற்றி மாலையிட்டாள்.
அவனது கரங்கள் அவளது இடையைச் சுற்றி வளைத்து, அவளைத் தன்னுடோடு இறுக்கிக் கொண்டது. அவன் இதழ் தந்த போதையில் பூர்ணிமா தன்னை மறந்தாள்.
“சூர்யா…” என்று அவள் முணுமுணுத்த வார்த்தைகள், அவனது முத்தங்களினால் இருந்த இடம் தெரியாமல் கரைந்து போனது. அவளது தவிப்பை ரசித்தபடியே, அவளை அப்படியே அள்ளிச் சென்று மெத்தையில் கிடத்தினான். சூர்யாவின் கைகள் அவளது உடையில் உரிமையாய் விளையாட, அந்த அதிகாரம் கூட பூர்ணிமாவிற்கு ஏனோ சுகமாக தெரிந்தது.
ஒவ்வொரு ஆடையையும் உரித்து எடுத்தவன், அவளது மேனி அழகை விளக்கொளியில் விழி விரித்து பார்த்தான். மொத்தமாய் அவனிடம் சரணடைந்துவிட்டிருந்த பேதை, தலையணையை இறுக்கி பிடித்துக் கொண்டாள். அதற்கு மேல் தாங்க மாட்டாதவனாய் அவள் மீதி சரிந்தான்…
பூர்ணிமாவின் கழுத்து சரிவுகளில் அவன் பதித்த முத்தங்கள், அவளது அடிவயிற்றில் மின்சாரத்தை பாய்ச்சியது. பயத்தில் அவனது முரட்டுத் தோள்களைத் தன் கைகளால் இறுகப் பற்றிக் கொண்டாள். முத்தங்கள் இடம் மாறின! இருவரது தேகத்திலும் முழுதாய் தீ பற்றிக் கொண்டது.
உலகத்தின் அத்தனை சத்தங்களும் அவர்களுக்குத் தூரத்துப் பிரமையாய் மாறின. இத்தனை காலம் அவள் உடலிலும் மனதிலும் சுமந்த காயங்களை அவனது இதழ் தீண்டல்கள் சுத்தமாய் துடைத்தெறிந்தன. அவனது கம்பீரமானத் தோள்களில் அவள் தஞ்சமடைந்தபோது, அவளுக்குத் தன் உலகம் முழுமை பெற்றது போன்ற உணர்வு.
ஆபத்தான இடம் நோக்கி அவன் செல்லச் செல்ல, “சூர்யா… போதும்…” என்று அவள் தவிப்பாய் முணுமுணுத்தாள்.
அவன் அவளது காதோரம் குனிந்தவனோ, “பத்து வருஷ தாகம் பூரி… இன்னைக்கு எனக்கு எதுவுமே போதாது!” என்று கரகரப்பான குரலில் கிசுகிசுத்தான்.
அவனது மேனிச் சூடு அவளது குளிர்ச்சியை மெல்ல மெல்ல உருக்க, இருவரின் மூச்சுக்காற்றும் ஒன்றோடொன்று கலந்து அந்த அறையின் வெப்பத்தை ஏற்றியது. சூர்யாவின் இதழ்கள் அவளது தேகத்தின் ரகசியங்களை ஒவ்வொன்றாகக் கண்டறிய, பூர்ணிமா சொர்க்கத்தின் விளிம்பில் நின்றாள்.
மொத்தமாய் அவளைத் தன் வசமாக்கிவிட்டு தலை நிமிர்ந்தவன், அவளது இதழ்களை மீண்டும் சிறைபிடித்தான். இப்போது, அது வெறும் முத்தமல்ல; அவளது வலிகளைத் துடைக்கும் ஒரு மருந்தாகவும், அவளைத் தனதாக்கிக் கொண்டதன் அடையாள முத்திரையாகவும் இருந்தது.
மாலை ஆறு மணி…
அறையின் ஏசி குளிரையும் மீறி, சூர்யாவின் நெஞ்சில் தலைசாய்த்து நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தாள் பூர்ணிமா. பத்து வருட பாரத்தை இறக்கி வைத்த நிம்மதி அவளது முகத்திற்கு ஒரு தெளிவைத் தந்திருந்தது. சூர்யாவின் கண்கள் மட்டும் உறக்கமின்றி ஜன்னலுக்கு வெளியே தெரியும் வானத்தை வெறித்துக் கொண்டிருந்தன.
அப்போது, அவனது கைப்பேசி அதிர்ந்தது. திரையில் ‘பாலாஜி’ என்ற பெயர் மின்ன, பூர்ணிமா விழித்துவிடக் கூடாதே என்ற பதற்றத்தில் மெல்ல அவளை விலக்கிவிட்டு, பால்கனிக்குச் சென்றான்.
“சொல்லு பாலாஜி…”
“பாஸ்… நீங்க சொன்னபடி அப்சராவோட ரிப்போர்ட்ஸ் ஆன்லைன்ல லீக் ஆகிடுச்சு. சோஷியல் மீடியா முழுக்க சுஜித் அப்சரா பேர் தான் ஓடிட்டு இருக்கு. ஆகாஷ் நிலைகுலைஞ்சு போய் உக்காந்திருக்காரு. நமக்கு கொடுத்த அந்த 25% ஷேர்ஸை அவர் திரும்பக் கேட்கக்கூட முடியாத அளவுக்கு இப்போ அவரோட பிராண்ட் நேம் டேமேஜ் ஆகிடுச்சு!”
சூர்யாவின் இதழ்களில் ஒரு குரூரமானப் புன்னகை விரிந்தது. இதுவரை இருந்த அமைதியை தொலைத்துவிட்டு, மீண்டும் அரக்க குணத்தை தத்தெடுத்துக் கொண்டது அவன் உள்ளம்.
“நம்மகிட்டதான் அப்சராவோட ஷேரும், சுஜித்தோட ஷேரும் இருக்குனு இப்பவே ப்ரஸ்க்கு சொல்லிடுவோமா? நாம லேட் பண்ணா, ஏர்லைன்ஸ் கம்பெனி ஹெவி லாஸ்க்கு போயிடும்.”
“அவசரப்பட்டு எந்த ஸ்டெப்பும் எடுக்காத பாலாஜி. நான் இது எதையும் பணத்துக்காக செய்யல. விஷயத்தைக் கேள்விப்பட்டதுக்கு அப்புறம் அந்த ஆகாஷே எனக்கு கால் பண்ணுவாரு. அவருட்ட முடிக்க வேண்டிய டீல்ஸ முடிச்சதுக்கு அப்புறம் இதை பார்த்துக்கலாம்.”
“ஓகே பாஸ்…” என்பதோடு காலை கட் செய்து கொண்டான்.
மனதில் நெருப்பு கொழுந்துவிட்டு எரிய, நேராக பாத்ரூம் சென்று தண்ணீரை திறந்தான். டெல்லி குளிரில் பச்சை தண்ணீரில் போய் உடலை கொடுத்தால் என்னாகும்? விரைத்துவிடும் அல்லவா? ஆனால் சூர்யா அப்படியே மரம் போல அசையாது நின்றான். அவன் உள்ளத்தில் எரிந்து கொண்டிருந்த தீயை, அந்த குளிரும் நீரும் கட்டுப்படுத்த முடியாமல் கொதித்து தரை இறங்கிற்று…
விருப்பமில்லை என்றாலும், அவன் மனதும் பழைய நினைவுகளை மெல்ல அசை போட ஆரம்பித்தது.
கோர்ட்டில் மாற்றி பேசிய பூர்ணியை, கொல்லும் ஆத்திரத்தோடு நின்று கொண்டிருந்தான் சூர்யா. ஆனால் அவன் தாத்தாவுக்கு நிதர்சனம் புரிந்திருந்தது.
“அந்தப் பாப்பா மேல தப்பு இருக்காது சூர்யா. நாம இன்னொரு நாள் அவ கிட்ட இத பத்தி பேசலாம். இப்ப வீட்டுக்கு போவோம் வா…” என்று அவனை தாத்தா சமாதானப்படுத்தி, ஊருக்கு ஒதுக்குப்புறம் இருக்கும் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
அங்கேயே ஸ்கூல், கோச்சிங் என மாற்றிக் கொண்டான் சூர்யா. அடுத்த சில நாட்களிலேயே ஆர்யாவும் கோமாவிலிருந்து மீண்டு வந்தான். ஆனால், அந்த விபத்தின் கோரத்தால் அவனது நினைவுகள் முழுவதுமாக அழித்திருந்தது. தான் யார் என்று கூட தெரியாமல் இருந்த பிள்ளை, அருகில் அண்ணனையும் விசித்திரமாக பார்த்தான். அவன் குணத்தில் பல நூறு மாற்றங்கள் உருவானது!
“நான் அவன சரி பண்றேன்” என தாத்தா பொறுப்பேற்றுக் கொண்டார். சொன்னபடியே அவனை கொஞ்சம் கொஞ்சமாக நடைமுறைக்கு பழக்க ஆரம்பித்தார். அவனும் தாத்தாவோடு அதிகமாக ஒட்டிக்கொண்டு சூர்யாவை யாரோ போல பார்த்தான்.
இனி இழக்க எதுவும் இல்லை எனும் நிலையில், சூர்யா விளையாட்டில் வெறித்தனமாக இறங்கினான். அவனது ஒவ்வொரு பவுண்டரியிலும் ஒருவித ஆக்ரோஷம் தெரிந்தது.
“நான் ஜெயிக்கணும்!” எனும் தாரக மந்திரம் அவன் ரத்தத்தில் ஊறிப் போனது.
பதினாறு வயதில் அன்டர் 19 பிரிவில், அவன் இந்திய அணிக்குள் ஒரு புயலாகப் பிரவேசித்தான். ‘The Smiling Storm’ என்று உலகம் அவனை அழைத்தாலும், அவனது சிரிப்பிற்குப் பின்னால் ஒரு பெரிய எரிமலை குமுறிக்கொண்டிருப்பது அவனுக்கு மட்டுமே தெரியும்.
சூர்யாவின் பார்வையும் பழக்கவழக்கங்களும் விரிவடைந்தது. தன்னுடைய கிரிக்கெட் புகழையும், பணத்தையும் வைத்து, தனது குடும்பத்தின் அழிவுக்குப் பின்னால் இருக்கும் நபர் யார் என்று தேட ஆரம்பித்தான். கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்குப் பிறகு அவனுக்கு பதில் கிடைத்தது! அந்த சமயத்தில் சுஜித் ஏற்கனவே இந்திய அணிக்குள் நுழைந்து, வலுவாக தன் காலடித்தடத்தை பதித்து விட்டான்.
‘அடுத்த இந்தியன் கிரிக்கெட்டின் கேப்டன் சுஜித்தான்! அவங்க அப்பா இதுக்காக போர்டு மெம்பர்ஸ்க்கு பல கோடி லஞ்சமா கொடுத்திருக்காருனு கேள்விப்பட்டேன்!’ என மற்ற பிளேயர்கள் பேசுவது அரசல் புரசலாக இவன் காதிலும் விழுந்தது.
போதாக்குறைக்கு சூர்யாவும் அவனும் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இறங்கி விளையாட வேண்டிய நிர்பந்தம். ஜென்ம விரோதி என்று தெரிந்தும் முகத்தில் எந்த உணர்ச்சி மாற்றத்தையும் காட்டாமல் சுஜித்தோடு நட்பாக பேசி பழகினான்.
“எனக்கு இந்த கேப்டன்சி எல்லாம் ஒத்து வராது சுஜித். கிரவுண்ட்ல இறங்கினோமா, டக்கு டக்குனு ரன்ஸ் எடுத்தோமா, அவுட் ஆனதும் ரெஸ்ட் போட்டோமானு ஃப்ரீயா இருக்கணும். வேற எந்த தலைவலியும் இருக்க கூடாது. அது மட்டுமில்லாம, நீ நல்ல ப்ளேயர், எந்த பார்சியாலிட்டியும் பாக்காம எல்லாரையும் ஈக்குவலா ட்ரீட் பண்ற. உன்கிட்ட கேப்டன்சி இருக்கறது தான் சரி!…” என்று அவ்வப்போது நாக்கில் தேன் தடவி பேசினான்.
‘என்ன? ரொம்ப நார்மலா நம்மளோட பேசுறான்? அப்போ இவனுக்கு, சின்ன வயசுல நடந்த பிரச்சனைக்கு எங்க அப்பாவும் நானும் தான் காரணம்னு தெரியல போல!’ என்று நினைத்துக் கொண்ட சுஜித்தும், சூர்யாவோடு சாதாரணமாக பேசி பழகினான்.
ஆனால் சூர்யாவின் மனதில் இருந்த திட்டமே வேறு!
‘நேரடியாய் சுஜித்தோடு மோதி பகையை காட்டினால், எதிரி சுதாரித்து விடுவான். ஏர்லைன்ஸ் அதிபராகவும், பிசிசிஐ போர்டு மெம்பர்களை விலைக்கு வாங்கும் வலிமையோடும் இருக்கும் ஆகாஷை நேரடியாக நெருங்கக் கூடாது. அவரை உறவாடி கெடுக்க வேண்டும்!…’ என்று முடிவெடுத்திருந்தான்.
அதன் முதல் படி தான் சுஜித்தோடு நட்பு பேணுவது! இரண்டாவது அப்சராவை தன் அடிமையாக்குவது!
அப்சரா, தன் அழகிலும் அதிகாரத்திலும் திளைத்துக் கொண்டிருந்த நவ நாகரீக யுவதி. அந்த சமயத்தில் அவளுக்கு வெறும் பதினெட்டு வயது தான். இருபதுகளின் துவக்கத்தில் இருந்த சூர்யாவுக்கு, அவளைத் தன் வசீகரத்தில் விழ வைக்க அதிக நேரம் பிடிக்கவில்லை.
சென்னையில் ஒரு விளம்பரப் படப்பிடிப்பின் போது, சூர்யாவை முதன்முதலில் பார்த்த அப்சரா, அவனது அழகில் அப்படியே மயங்கிப் போனாள். சூர்யாவும் அவளிடம் ரொமான்டிக்காக பேசி நடிக்கத் தொடங்கினான். அடுத்த சில வருடங்களில் இருவரது பழக்கமும் எல்லை மீறி போயிருந்தது.
அவனோடு தன் எல்லையை நிறுத்தி இருக்கவில்லை அப்சரா! ஒரு நடிகர், தொழிலதிபர், அரசியல்வாதி மகன் என பலரை ஒரே நேரத்தில் காதலித்துக் கொண்டிருந்தாள். திருமண வயதில் யார் சரிப்பட்டு வருகிறார்களோ அவர்களோடு வாழ்க்கையை கொண்டு செலுத்துவதே அவளின் திட்டம்.
இப்போது சூர்யா மற்ற ஆட்களை எல்லாம் தெரிந்து கொண்டு அவர்களிடம் அப்சராவின் முகத்திரையை கிழித்து காட்டி விட்டான். எனவே எல்லோருக்கும் அவள் மீது கோபம்.
சூர்யா, “ஆகாஷோட பிசினஸ்ஸ அழிக்கிறது தான் என் குறி! மத்தபடி அவ மேல எனக்கு எந்த இன்ட்ரஸ்ட்டும் இல்ல. பழிவாங்கற அளவுக்கு அவ வொர்த்தும் இல்ல…” என்று வெளிப்படையாக கூறிவிட்டான்.
நடிகரும், தொழிலதிபரும் கூட இனி இந்த சனியன் தங்களை நெருங்காமல் இருந்தால் போதும் என்று விலகிப் போகத்தான் நினைத்தனர். ஆனால் அரசியல்வாதியின் மகன் அவளை உண்மையாக காதலித்து விட்டான். இப்படி ஒரு துரோகத்தை அவன் கனவிலும் நினைத்து பார்த்திருக்கவில்லை. எனவே மனம் முழுவதும் வன்மம் நிறைந்து கிடந்தது!
“அடுத்த வாரம் என்னோட ஆளு ஒருத்தன வச்சு அவள பழிவாங்க போறேன். தப்பி தவறி கூட இனிமே யாரும் அவ கூட ரிலேஷன்ஷிப் வச்சுக்காதீங்க. அது உங்க உயிருக்கே ஆபத்த முடியலாம்” என்று மறைமுகமாக கூறிவிட்டு சென்றான்.
அவன்தான் அப்சரா உடலில் ஹெபடைடிஸ் பி வைரஸை பரவ வைத்ததே! அதுவும் மருத்துவத்தால் சரி செய்ய முடியாத அளவுக்கு கொடூரமாய் செய்துவிட்டு தடயம் இல்லாமல் நழுவி விட்டான். சூர்யாவுக்கு விஷயம் தெரிந்தும் கண்டும் காணாமல் இருந்து கொண்டான்.
மனிதன் என்ற பெயரில் முழுக்க முழுக்க மிருகங்கள் மட்டுமே வாழும் காலம் இது! மற்ற மிருகங்கள் நம்மை கொல்லாமல் இருக்க, நாமும் மிருகமாக மாற வேண்டிய கட்டாயம்! இந்த விதிமுறையை சூர்யா புரிந்து கொண்டதாலேயே இன்று இந்த உயரத்திற்கு வந்திருக்கிறான்.
இது எதுவுமே வேண்டாமென்று, இயற்கை படைத்த போது என்ன மனநிலையில் இருந்தாளோ, அதேபோல இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறாள் பூர்ணிமா. அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் அவள் அருகே வந்த சூர்யா, அவள் நெற்றி முடிகளை மென்மையாக ஒதுக்கிவிட்டு, ஒரு அழுத்தமான முத்தத்தைப் பதித்தான்.
“சூர்யா…” என்று உறக்கத்திலேயே சினுங்கினாள் அவள்.
“ராட்சஷி! கண்ட இடத்துல கடிச்சு வச்சுட்டு பச்ச பிள்ளை மாதிரி தூங்குறத பாரு?!…” என்று மெல்ல முணுமுணுத்துக் கொண்டே அவளருகில் படுத்தான்.
சுவாசத்தில் புது வாசம் வீசுவதை உணர்ந்து கண் திறந்தாள்! விழிகளுக்கு அருகே அவன் இருக்க, இதுவும் கனவென்று நினைத்தவள், உறக்கத்திலேயே அவனோடு ஒன்றினாள்.
சந்தில் சிந்து பாடுபவனுக்கு, இவ்வளவு இடம் தரலாமா பூர்ணிமா? மீண்டும் அவளை வில்லாய் வளைத்து கவி பாடத் துவங்கிவிட்டான் தலைவன்.
