மயிலாவுக்கும் குமரனுக்கும் அன்று முதல் இரவு. அது மலை கிராமம் என்பதால், அவர்களுடைய சடங்கு சம்பிரதாயத்தின் படி, அந்திமாலை கல்யாணம் முடிந்த கையோடு முதல் இரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
செவத்தம்மா பாட்டியின் வீடு குடிசையால் ஆனது. ஆனாலும் பேரனுக்காக தனி அறையே கட்டிக் கொடுத்திருந்தார். அங்குதான் முதலிரவுக்கும் ஏற்பாடு செய்திருந்தனர். கயித்துக் கட்டில் மீது போர்வையை விரித்து, அதில் பூக்களை தூவி அலங்காரம் செய்து வைத்திருந்தனர்.
பக்கத்து வீட்டு செல்வி, “வம்படியா மலமாட மடியில கட்டிக்கிட்ட. பார்த்து பக்குவமா நடந்துக்கோடி. இல்லனா முட்டி தள்ளிடும்” என்றாள் கிண்டலாக.
மயிலா, “அதெல்லாம் நான் நேக்கு போக்கா பாத்துக்குவேன். நீ போக்கா” என்றாள் வெட்கச் சிரிப்போடு.
அவளை முதலிரவு அறைக்குள் தள்ளிவிட்டு, “வீட்ட பூட்டிட்டு கெழவிய என்னோட கூட்டிட்டு போறேன். ரெண்டு பேரும் சந்தோஷமா இருங்க…” என்று அறிவித்துவிட்டு போனாள் செல்வி.
பாட்டி அதற்கு முன்பே செல்வி வீட்டு திண்ணையில் படுத்து விட்டார்.
மயிலா பயந்து கொண்டே பால் சொம்போடு மெதுவாக கட்டிலின் அருகே சென்றாள். அந்த அறைக்குள்ளே அவன் இல்லை. குமரன் எங்கே சென்றான் என்று வீடு முழுதும் தேடினாள். கொல்லை பக்கத்து கதவு திறந்து இருப்பதை பார்த்ததும், மெதுவாக அங்கு சென்றாள். அங்கே குளிர் காற்றுடன், நிலவு அழகாய் ஒளி வீசிக் கொண்டு இருந்தது.
ரம்மியமான அந்த பொழுதினை பார்ப்பவர் எவருக்கும் நிச்சயம் உள்ளம் குளிரும். ஆனால் அவள் கணவன் எரிமலை மனதோடு அல்லவா அவளுக்காக காத்திருக்கிறான்?! அவன் உள்ளத்து நெருப்பை தணிக்க, ஆழிப் பேரலையாலும் இயலாது. ஐந்தடி தேவதை என்ன செய்வாள்?
நிலவின் பால் வண்ண வெளிச்சத்திற்கு கீழே, மரத்தில் முதுகினை சாய்த்து நின்று கொண்டு இருந்தான் குமரன். அவன் அணிந்திருந்த பட்டு வேட்டியும் சட்டையும், மார்புக்கு குறுக்காக கைகளை கட்டியிருந்த விதமும் அழகிய கவிதை போன்ற தோற்றத்தை கொடுத்தது.
“மச்சான்…”
அவள் சத்தத்தை கேட்டுக் குமரன் திரும்பிப் பார்த்தான். அவனுடைய கண்கள் கோபத்தில் கொப்பளித்துக் கொண்டு இருந்தது. அந்த அக்கினிப் பார்வையை மயிலாவால் எதிர்கொள்ள முடியவில்லை. அவள் உள்ளம் கலங்கியது. இதுவரை ‘பயம்’ என்றால் என்னவென்றே தெரியாத மயிலா, முதல் முறையாக குமரனை பார்த்து பயந்து நடுங்கினாள்.
அவனுக்கோ சம்பந்தமே இல்லாமல் பஞ்சாயத்தில் மக்கள் பேசிய கேலி பேச்சுக்கள், மீண்டும் மீண்டும் அவன் மனதுக்குள் ஓடிக் கொண்டே இருந்தது. கோபத்தில் இவளை பார்வையால் எரித்து விடுவது போல பார்த்தான்.
நிச்சயமாக, இது அவன் எதிர்பார்த்த முதலிரவு காட்சி இல்லை என்று அவன் முகலட்சணமே கூறியது. அந்த க்ஷணத்திலும், மயிலாவின் அடி மனது அவன் அழகினை ஒரு படி தூக்கிக்காட்ட தன்னைத்தானே நொந்து கொண்டாள் பேதை. அவளைச் சொல்லியும் குற்றமில்லை! உண்மையில் குமரன், தமிழ் கடவுள் முருகனைப் போல அத்தனை அழகு…
செவத்தம்மாவ பாட்டி பெயருக்கு ஏற்றார் போல, செக்கச் செவேல் என்றிருப்பார். இந்த தள்ளாடும் வயதிலும், அவர் பார்ப்பதற்கு லட்சணமாகத்தான் தெரிந்தார். அந்த கிராமத்தில் பொதுவாக எல்லோரும் அடர் கறுப்புக்கும், மங்கிய கருப்புக்கும் இடைப்பட்ட நேரத்தில் இருப்பார்கள். கிழவி பிறக்கும் போதே சிவப்பாக இருந்ததால் தான், அவருக்கு ‘செவத்தம்மா’ என்று பெயர் சூட்டப்பட்டது.
அதனால்தான் அவர் மகளுக்கு அந்த காலத்திலேயே டவுன் மாப்பிள்ளை கிடைத்தது. குமரனும் அப்படித்தான்! நறுக்கிய ஆப்பிள் வண்ணத்தில் தங்கம் போல ஜொலிப்பான். அவன் மீது மயிலாவுக்கு ஈர்ப்பு வருவதற்கு இதுவும் ஒரு காரணம்.
“பனி அடிக்குது, உள்ள வா மச்சான்…” பயத்தை மறைத்துக் கொண்டு பேசினாள்.
இரண்டொரு நொடிகள் அவளை முறைத்துப் பார்த்துக் கொண்டே இருந்தவன், என்ன நினைத்தானோ! அவளை கடந்து வீட்டுக்குள் சென்றான். எப்படியாவது அவனை சமாதானப்படுத்தி விட வேண்டும் என்று நினைத்த மயிலா, மெதுவாக உள்ளே வந்து கதவை சாத்தி தாழிட்டாள். தயங்கி தயங்கி அவனருகில் சென்றவள், கீழே குனிந்து காலை தொடப் போனாள். அதற்கு முன் விருட்டென காலை பின்னால் இழுத்துக் கொண்டான்.
“என்னடி? மறுபடியும் உன் நாடகத்தை ஆரம்பிச்சுட்டியா” என்றான் கோபமாக. அவள் முகம் அடியோடு மாறிவிட்டது…
“இல்ல மச்சான்… நான்..” என்று அவள் சொல்லி முடிப்பதற்குள்,
“எதுக்காக இப்படி செஞ்ச? உனக்கு நான் என்ன பாவம் பண்ணேன். ஊரக்கூட்டி, அத்தனை பேர் முன்னால வச்சு என்ன அவமானப்படுத்திட்டல்ல? இதுவரைக்கும் எப்பவாச்சும் நான் உன்ன தப்பான கண்ணோட்டத்துல பார்த்திருக்கேனா? அவ்வளவு ஏன்? உன் முகத்தையாவது முழுசா பார்த்திருக்கேனா? எதுக்காக இப்டி செஞ்ச?” என்று ஆத்திரத்தோடு கேட்டான்.
மயிலாவுக்கு வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கிக்கொண்டு, வெளியே வர மாட்டேன் என்று அடம் பிடித்தது.
அவள் திணறியபடி, “அது வந்து… நான்… நான் உங்கள காதலிச்சேன்! அதனாலதான்…” என்று இழுத்தாள்.
“காதலா? காதலிக்கிறவங்கள உங்க ஊர்ல எல்லாம் இப்படித்தான் பஞ்சாயத்து வரைக்கும் கூட்டிட்டு போய் அசிங்கப்படுத்துவாங்களா? அதவிடு, உனக்கு என் மேல காதல் இருக்குன்னு எப்பவாவது என்கிட்ட வந்து சொல்லியிருக்கியா? எனக்கு டவுன்ல இன்னொரு பொண்டாட்டி இருக்குறது உனக்கு தெரியுமா?” என்று அவன் கேட்க, அவளுக்கு கண்கள் கலங்க ஆரம்பித்துவிட்டது.
“என்ன சொல்ற மச்சான்? உனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சா?”
“இப்ப அழுது என்ன புண்ணியம்? முதல்லயே கேட்டு இருக்கணும்.”
“என்ன மன்னிச்சிடு, மச்சான்! நான் வேனும்னே அப்படி பண்ணல. அந்த ராசாத்தி தான் இதுக்கெல்லாம் காரணம்!” என்று சொல்ல, அவன் குழப்பத்தோடு அவளைப் பார்த்தான்.
“எங்க ரெண்டு பேத்துக்கும் உன்ன ரொம்ப பிடிக்கும். போனவாரம் அவ என்ன உசுப்பேத்துறதுக்காக, அவ வீட்டுல உன்னோட கல்யாணம் பேச ஏற்பாடு நடக்கிறதா சொன்னா. ஏற்கனவே நீங்க ரெண்டு பேரும் உறவுக்காரங்க. அவ சொன்னது உண்மையா பொய்யான்னு எனக்கு யோசிக்க தெரியல. உன்ன கட்டிக்க என்ன பண்றதுன்னும் எனக்கு தெரியல. அதனாலதான் இப்படி பண்ணிட்டேன் மச்சான்…” என்றாள் அழுகையோடு.
ஆனால், அவளுடைய எந்த சமாதானத்தையும் அவன் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.
“அடச்சீ வாய மூடு… பண்றதெல்லாம் பண்ணிட்டு, இப்போ காரணம் வேற சொல்றியா? வாயை திறந்தாலே பொய் பொய் பொய்! உன்னால மட்டும் எப்படி தான் இவ்வளவு பொய் சொல்ல முடியுதுன்னே தெரியல.”
“இல்ல மச்சான், நான்…”
“பேசாத! உன் முகத்தை பார்த்தாலே எனக்கு அவ்வளவு ஆத்திரம் வருது.”
அவள் கண்கள் கலங்க, இரண்டடி பின்னால் நகர்ந்தாள்.
“ஊருக்கு முன்னால வாய் கூசாம நான் உன்னை கெடுத்துட்டேன்னு சொன்னேல. நீ சொன்ன பொய்ய இப்போ நான் நிஜமாக்க போறேன். நாளைக்கு மறுபடியும் போய் பஞ்சாயத்து வச்சுக்கோ” என்று சொல்லிக் கொண்டே அவளை நெருங்கி வந்தான் குமரன். இவளுக்கு இருதயம் இருநூறு கிலோமீட்டர் வேகத்தில் துடித்தது.
“வேணாம் மச்சான், இது தப்பு!”
“தப்புதான், தைரியம் இருந்தா கத்தி கூச்சல் போடு. உன்ன யாரு என்கிட்ட இருந்து காப்பாத்துறாங்கன்னு நானும் பார்க்கிறேன்” என்று அவன் சொல்லச் சொல்ல, மயிலாவுக்கு உடம்பில் உயிரே இல்லை. சிற்பம் போல அவள் உறைந்து போய் இருந்தாள். புடவை முந்தானை அவன் கைக்கு போன பிறகுதான், இவளுக்கு சுய நினைவே வந்தது.
“நீங்க டவுன்ல பிறந்து வளர்ந்தவங்க. நாகரிகமா நடந்துக்குவீங்கன்னு நினைச்சேன். இப்படி பண்றது கொஞ்சம் கூட சரியில்ல” என்று பயந்தபடி பேசினாள்.
அதற்குள் அவன் முந்தானையை பிடித்து இழுக்க ஆரம்பித்து விட்டான். சேலை, தன்னிடமிருந்து விலகாமல் இருப்பதற்காக, மயிலா புடவையை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள். ஆனால் அவன் அளவுக்கு அவள் தேகத்தில் வலு இல்லை. புடவையின் ஒரு பாதி அவன் கைக்கு போய்விட, இருந்த இடத்திலேயே அமர்ந்து விட்டாள் அவள்.
“வேணா மச்சான்! இப்படி எல்லாம் பண்ணாதீங்க. எனக்கு ரொம்ப பயமா இருக்கு. உங்க கால்ல கூட விழுறேன், என்ன விட்டுடுங்க!” என்று கெஞ்ச ஆரம்பித்து விட்டாள் மயிலா.
ஆனால் குமரன் அவளுடைய பேச்சை கேட்பதாக இல்லை. இதற்கு மேல், அவனிடமிருந்து தப்பிப்பதற்கு வேறு வழியே இல்லை என்பதை புரிந்து கொண்ட மயிலா, ஒரு கட்டத்திற்கு மேல் அழவே ஆரம்பித்து விட்டாள்.
“நான் செஞ்சது பெரிய தப்புதான். ஒத்துக்குறேன். நீ என்ன சொன்னாலும் கேக்குறேன் மச்சான்! தயவுசெஞ்சி என்னை விட்டுடு” என்று கேவி அழுதாள்.
அவளுடைய வார்த்தைகளை பொருட்படுத்தாமல், அவள் கையை பிடித்து தன்னை நோக்கி இழுத்தான். தரையில் இருந்தவள் பறந்து போய் அவன் மார்பில் மோதினாள். இருவரின் மூச்சுக்காற்றும், எதிரில் இருப்பவர் தேகத்தை சுட்டது.
“வேணாம் மச்சான்…” கண்ணீர் கோடுகள் கன்னத்தை தாண்டி வழிய கெஞ்சினாள்.
அவன் விழியிலோ சிறிதும் இரக்கமில்லை. அவன் விரல்கள் இவள் தேகத்தை தடவ முனைந்தன. அவளுக்கு தன்னுடைய இதயத்தின் ஓசையை தெளிவாக கேட்க முடிந்தது. இதயம் படபடக்க, நடுங்கியபடி நின்று கொண்டு இருந்தாள்.
குமரன் அவள் காதுக்கு அருகில் வந்து, “ஒத்த காசு செலவு பண்ணாம, சாமர்த்தியமா என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டு, என் கூடவே டவுனுக்கு வந்து, ஜாலியா டவுன் வாழ்க்கை வாழலாம்னு கணக்கு போட்டியா? உன் பேராசைக்காக அத்தனை பேருக்கு முன்னால நான் அவமானப்பட்டதுக்கு என்ன பதில்?” என்று கர்ஜித்தான்.
“நான் வேணும்னா திரும்ப பஞ்சாயத்து கூட்டி உன் மேல தப்பு இல்லன்னு சொல்லிடுறேன்.”
“அப்படி எல்லாம் உன்னால சுலபமா தப்பிச்சிட முடியாது. உன் பிராயச்சத்தம் என்னனு நான் சொல்றேன். நல்லா காதை திறந்து கேட்டுக்கோ. எனக்கு, உன் அப்பா வச்சிருக்கிற வண்டி வேணும். இனிமே அந்த வேலையை நான் தான் செய்யப் போறேன். அதுக்கு நீ ஏற்பாடு செஞ்சு கொடுத்தா, நான் உன்னை தொடாம இருப்பேன். இல்லனா, தினம் தினம் நீ எங்கிட்ட நரக வேதனை அனுபவிக்க வேண்டி வரும்.”
இதைக் கேட்ட மயிலாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. குமரனின் வாயிலிருந்து இப்படிப்பட்ட வார்த்தைகள் வரும் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை.
அந்த வண்டியை வைத்துத்தான் அவளுடைய அப்பா பிழைப்பே நடத்திக் கொண்டு இருக்கிறார். அது இல்லை என்றால், அவள் குடும்பம் சாப்பாட்டுக்கே சிரமப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்படும்.
கொஞ்சம் நிலம் இருக்கிறது தான். ஆனால் அதில் வரும் வருமானம் அவர்களுக்கு போதாது. அதனால் மயிலாவால், அந்த உடன்படிக்கைக்கு உடனே சரி என்று சொல்ல முடியவில்லை. அதே நேரம், அந்த வண்டி குமரனுக்கு எதற்கு என்று யோசித்துக் கொண்டு இருக்க, அவன் மயிலாவை யோசிக்க விடாமல் தடாலடியாய் இறங்கினான்.
மொட்டவிழ்ந்த மலர் போல திறந்திருந்த செவ்வாயில், தன் வன்மையான இதழ்களை பொருத்தினான். இவளுக்கு அந்த நொடி உடலை விட்டு உயிர் வெளியே போனது போல இருந்தது. கண்மூடி அரை மயக்க நிலையில் நின்றிருந்தாள்.
அவள் கன்னத்தை தட்டி, “இது வெறும் சாம்பிள் தான். நீ அவ்ளோ ஈசியா என்கிட்ட இருந்து தப்பிக்க முடியாது. ஒழுங்கா நாளைக்கே உன் வீட்டுக்கு போற. உங்க அப்பா கிட்ட என்ன பேசுவியோ, ஏது பேசுவியோ எனக்கு தெரியாது. அவரே அந்த வண்டிய கொண்டு வந்து, என் முன்னாடி நிறுத்தனும்” என்று கட்டளையாக கூறினான்.
“அவரு பாவம் மச்சான், அத வச்சு தான் பொழப்பு நடத்திட்டு இருக்காரு. அவரு பொழப்புல என்னால மண்ணள்ளி போட முடியாது!” என்று உறுதியாக சொல்லி முடித்த மறு கணமே, குமரன் தன் கைப்பிடியில் இருந்த அவள் புடவையை வலுவாக பிடித்து இழுத்தான்.
சேலை, அவள் உடலில் இருந்து மொத்தமாக அவனுடைய கைக்கு வந்து விட்டது. அதை வேகமாக மேலே தூக்கி எறிய, அந்த புடவை கூரையில் இருந்த ஏதோ ஒரு கம்பத்தில் மாட்டிக் கொண்டது.
அவளுக்கு எட்டாத உயரத்தில் அது தொங்கிக் கொண்டு இருக்க, அதிர்ச்சியாய் அவன் முகம் பார்த்தாள். அவள் நினைத்தால் கூட, அதை இப்போது எடுக்க முடியாது. தனது இரண்டு கைகளாலும் மார்பை மறைத்துக்கொண்டு, சுவரோடு சுவராய் ஒண்டிக் கொண்டு நின்றாள்.
அவளால் குமரனின் இந்த நடவடிக்கையை துளி கூட நம்ப முடியவில்லை. ஏனென்றால், குமரன் இதுவரை யாரிடமும் சத்தமாக கூட பேசியதில்லை. அவன் மிகவும் சாந்தமானவன், அப்பாவி என்று நினைத்திருந்தாள். ஆனால், திடீரென அவனுடைய இந்த மாற்றத்தை அவளால் நம்பவே முடியவில்லை.
அந்த பத்துக்கு பத்து அறையின் மஞ்சள் பூசிய சுவர்கள் அவளைச் சூழ்ந்து கொண்டது போல உணர்ந்தாள். ஒரே ஒரு மங்கிய குண்டு பல்பு உச்சியில் எரிந்தது. அதுவுமே அவனுடைய கோபக் கண்களை இன்னும் கூர்மையாகக் காட்டி அவளை அச்சுறுத்தியது. குமரன் அவளை நெருங்க நெருங்க, அவளது சுவாசம் தடைப்பட்டது. அவனது முகத்தில் தெரிந்த கொடூரம் பார்த்து இவளுக்கு அடிவயிற்றில் கிலி கவ்வியது.
Soooo sad! 🤐
