அவள் அந்த அறைக்குள் நுழைந்தவுடன், அந்த அறை மிகவும் இருட்டாக இருந்தது.
அதைக் கண்டு பயந்தவள், “என்னாச்சு? எங்க போனீங்க? யாராவது இருக்கீங்களா?” என்று கத்தினாள்.
அப்பொழுது அந்த அறையில் இருந்த ஒரு சிறிய விளக்கு மட்டும் எரிந்து, அதன் கீழ் கரண் முகம் தெரிய, நிம்மதியாக பெருமூச்சு விட்டவள், “என்ன சீனியர் இது?” என்று கேட்டாள்.
அப்பொழுதுதான் அவனது கையில் இருந்த ரோஜா பூச்செண்டை பார்த்தாள். அடுத்து சுற்றி இருந்த கலர் கலரான மின்விளக்குகளும் எரிய, இப்பொழுது அந்த இடம் மிகவும் அழகாகத் தெரிந்தது.
அந்த அறையில் நிறைய வண்ண பூக்கள் இருந்தன; ஆங்காங்கே ஹார்ட் பலூன்கள் பறந்து கொண்டிருந்தன. இவனும் கையில் பூங்கொத்துடன் நின்றான். அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தவள் முன்பு, சிரித்துக் கொண்டே மண்டியிட்டு, “என்னோட காதலை ஏற்றுக் கொள்வாயா? அம்மாவை தவிர இதுவரைக்கும் யாரையும் நான் என்னுடைய சொந்தமா நினைச்சது இல்ல. உன்னை பார்த்ததுக்கு அப்புறம் தான், எனக்குன்னு இந்த உலகத்துல ஒரு உசுரு துடிச்சிட்டு இருக்குன்னு நினைச்சு அவ்வளவு சந்தோஷமா இருக்கேன். இந்த சந்தோஷம் எனக்கு கடைசி வரைக்கும், என்னுடைய இறுதி மூச்சு இருக்கிற வரைக்கும், உன் கூட இந்த வாழ்க்கை வாழணும்னு ஆசைப்படறேன் அபி. இப்பதான் நீ ஃபர்ஸ்ட் இயர் படிச்சிட்டு இருக்க. நீ படிச்சு முடி; நானும் என்னோட படிப்புக்காக அப்ராட் போறேன். உன் கிட்ட இத சொல்ல முடியாம நானும் தவிச்சிட்டு இருந்தேன். ஆனா என்னோட வாழ்க்கையில உன்னை நல்லபடியா சந்தோஷமா வச்சு பார்த்துக்கறதுக்கு இன்னும் நான் என்னைய வளர்த்துக்கணும். அதனால அப்ராட்ல இரண்டு வருடம் படிச்சுட்டு திரும்ப வருவேன். அதுக்குள்ள நீயும் யூஜி முடிச்சிடுவ. நானும் நல்ல நிலைமைக்கு வருவேன். அதுக்கப்புறம் வந்து உன்னை கண்டிப்பா கல்யாணம் பண்ணிப்பேன். இந்த ப்ரொபோசல் உன் கையில இந்த மோதிரத்தை போட்டுட்டு நான் நிம்மதியா வெளிநாட்டில இருப்பேன். ப்ளீஸ் அபி, will you accept me?” என்றான் கரண் முழு காதலையும் கண்களில் தேக்கி வைத்து .
அதை அவள் உணர்ந்து, மனதிற்குள் கத்தி கதறி அழுதாள் என்றே சொல்லலாம். அவள் மனம் ஒரு பொருளாக இருந்தால், இந்த நேரம் அது வெடித்து சிதறி இருக்கும். அப்படிப்பட்ட ஒரு புயல் அவள் மனதில் சுழன்று கொண்டிருந்தது. ஆனால் வெளியே, அவளோ கண்களில் கண்ணீர் வழிய நின்றிருந்தாள். அவனை பார்த்த வண்ணம் மற்றவர்களும் அவள் முகத்தில் இருந்த பாவனைகளையே பார்த்துக் கொண்டிருந்தனர். அவளுடைய தோழிகள் இருவரும், “அக்செப்ட் பண்ணு, அக்செப்ட் பண்ணு,” என்று கத்த ஆரம்பிக்க, அப்பொழுதுதான் சுயநினைவு பெற்றவள், “சாரி கரண், நாம பிரிஞ்சிடலாம். எனக்கு நம்ம ரிலேஷன்ஷிப் தொடரது பிடிக்கல,” என்றாள்.
அதில் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். கையில் வைத்திருந்த ரோஜா பூக்களை அப்படியே தவறவிட்டவன், தடுமாறி கீழே விழ செல்ல, ஓடி வந்து அவனுடைய நண்பர்கள் பிடித்தனர்.
சமிக்ஷாவும் இவளுக்கு அருகில் வந்து நின்று, “என்னடி முட்டாள் மாதிரி பேசிட்டு இருக்க? நீங்க ரெண்டு பேரும் லவ் பண்றீங்க. அண்ணா இப்ப உனக்கு ப்ரொபோஸ் பண்ணி இருக்காரு. ஏன் டி இப்படி பண்ற?” என்றாள்.
அதற்கு அவள், “நான் நல்லா யோசிச்சு தான் பேசுறேன். படிக்கிற காலத்துல நான் தான் ஏதோ லூசுத்தனமா பண்ணிட்டேன். இப்பதான் எனக்கு புத்தி தெளிந்திருக்கு. போதும். அவருக்கும் எனக்கும் ஸ்டேட்டஸ் ஒத்து வராது. அது மட்டும் இல்லாம, இந்த பணக்கார வீட்டு பசங்களோட காதல் எல்லாம் கடைசி வரைக்கும் உண்மையா இருக்கும்னு என்னால நம்ப முடியல,” என்றாள்.
அதில் கோபமடைந்த தேவன், “என்ன அபி இப்படி பேசுற?” என்றவுடன், கை நீட்டி தனது நண்பனை தடுத்த கரண்,
“நீங்க எல்லாரும் கொஞ்சம் வெளியே போங்க. இது நானும் அபியும் பேசிட்டு வரோம்” என்றான்.
அப்பொழுது தேவன் மீண்டும் ஏதோ பேச வர, “ப்ளீஸ், leave us alone,” என்று கத்தினான் கரண்.
உடனே இவர்கள் இருவரை தவிர அனைவரும் அறையிலிருந்து வெளியேறினர்.
அவளையே அழுத்தமாக பார்த்தவன், கண்களில் கண்ணீருடன் நின்று கொண்டிருந்தவளை கண்டு, விரக்தி புன்னகை சிந்தியவன், “சொல்லு, என்ன ஆச்சு? நல்லாதானே இருந்தோம்? உங்க அப்பா அம்மா எல்லாம் கூட சரி தானே சொன்னாங்க? இப்ப ஏன் இப்படி சொல்ற? உனக்கும் என்ன பிடிக்கலையா? அந்த அளவுக்கு நான் அதிர்ஷ்டம் இல்லாதவனா? நான் நீ சொல்ற மாதிரி ஒருநாளும் உன்கிட்ட நடந்துக்கிட்டதே இல்லையே. ஆரம்பத்துல கொஞ்சம் டார்ச்சர் பண்ணினேன்; அதுவும் உனக்கு பிடிக்காம இருந்தப்போ நிறுத்திக்கிட்டேனே. ஏன் இப்படி சொல்ற?” பேசிக்கொண்டே அவளது கன்னத்தை தொட வந்தவன், அவள் சற்று தள்ளியதால் அவன் கை அந்தரத்தில் நின்றது. தன்னவளை அதிர்ச்சியாக பார்த்தான். தனது தொடுகை கூட அவளுக்கு பிடிக்கவில்லையா என்பது போல் அவன் பார்வை இருந்தது.
மெதுவாக அவனை நிமிர்ந்து பார்த்தவள், மனதிற்குள் நூறு முறை சாகிற மாதிரி உணர்ந்தாள். அவனுக்கு எல்லா சந்தோஷங்களையும் கொடுக்க வேண்டும் என்று நினைத்தவள், இப்போது அவன் மனதை சுக்குநூறாக உடைக்கப் போகிறேன் என்று தெரிந்தும் பேசத் துணிந்தாள்.
“கரெக்டுதான். ஆரம்பத்துல நீங்க பண்ணினது எனக்கு பிடிக்கல. அதுக்கப்புறம் நீங்க பணக்காரர்; அதனால நல்ல வாழ்க்கை கிடைக்கும் என்று நினைச்சேன். ஆனா அப்புறம் தான் நிதர்சனம் புரிந்தது. எந்த பணக்காரங்களும் நல்லவங்க கிடையாது. நான் உங்க பின்னாடி வர வரைக்கும் லவ் பண்ணுவீங்க; வந்ததுக்கப்புறம் என்னைக் கண்டுக்க மாட்டீங்க. நான் இல்லாத அந்த நாலு நாள் இண்டஸ்ட்ரியல் விசிட்ல ஆராத்யா கூட அவ்வளவு நெருக்கமா போட்டோ எடுத்தீங்களே; அப்பவே நான் சுதாரிச்சு இருக்கணும்,” என்றாள்.
அதற்கு அவன், “அது என்ன விஷயம்னு நான் உன்கிட்ட சொன்னேனே! ஏன் இன்னும் அதையே பேசுற?” என்றான் கரண் கோபமாக.
“இல்ல, எனக்கு உங்க காதல் மேல நம்பிக்கை இல்ல. ஆராத்யா என்கிட்ட வந்து சில போட்டோஸ் காட்டினாங்க. நீங்க ரெண்டு பேரும் ரொம்ப நெருக்கமா இருந்தீங்க. என்னிடமும் அப்படித்தான் நடந்து, அவங்களிடமும் அதே மாதிரி நடந்துக்கிட்டீங்க,” என்று பொய்யாக கூறினாள்.
அதில் அதிர்ந்தவன், “அபி, சத்தியமா நான் அப்படி பண்ணல. ப்ளீஸ் டி, என்னை நம்பு,” என்றான் கரன் கெஞ்சலாக.
“இல்ல, அந்த போட்டோஸ் உண்மைதான். நீங்க மாறவே இல்ல. அன்னைக்கு எப்படி பொய் சொன்னீங்களோ, இப்பவும் அதே மாதிரி தான் சொல்றீங்க. உங்க மேல எனக்கு நம்பிக்கை இல்லை,” என்றாள்.
அதன் பின் பேச்சு கடுமையாகி, இருவரும் வலியுடன் பேசிக்கொண்டனர்.
“இதுக்கப்புறம் என்னை நீங்க டிஸ்டர்ப் பண்ண மாட்டீங்கன்னு நம்புறேன். குட்பை,” என்றாள்.
அதில் கோபமடைந்தவன் கையை உயர்த்தி, பின்னர் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, “இனிமே இந்த கரண் வாழ்க்கையில நீ கிடையாது,” என்று சொல்லிவிட்டு வெளியேறினான்.
அவன் வெளியேறியவுடன், அவள் மடங்கி அமர்ந்து அழுதாள்.
கரண் வெளியே வந்தவனை நண்பர்கள் தடுத்து “என்னடா ஆச்சு? அபி என்ன சொன்னா?” என்று கேட்டனர்.
அவன், “அவளுக்கு என்னை பிடிக்கலை. என் மேல நம்பிக்கை இல்ல. என் காதல் வேண்டாம் னு சொல்லிட்டா டா. இனிமே எனக்குன்னு யாரும் வேண்டாம்,” என்றான்.
மழை பெய்ய ஆரம்பிக்க, அதை பொருட்படுத்தாமல் அவன் ஒரு நடை பிணம் போல நடந்தான்; நண்பர்களும் பின்னால் சென்றனர்.
அபி வீட்டிற்கு வந்தவள் அறைக்குள் சென்று கதவை பூட்டி, உடை மாற்றாமலே கதறி அழுதாள்.
“என்னை மன்னிச்சிடு கரண்… உங்களுக்கு நான் வேண்டாம்… நம்ம இருவரும் சேர்ந்து இருந்தா பிரச்சனை தான்…” என்று தன்னைத்தானே திட்டிக் கொண்டே அழுதவள், இறுதியில் சோர்ந்து அமர்ந்தாள்.
