அமலா, கதிர் மாமா தன் போட்டோவை பார்த்து அழுததை பார்த்ததும், அவனிடம் கேட்க வேண்டிய கேள்விகளை எதுவும் கேட்காமல் தன்னறைக்கு போய் அமர்ந்துக் கொண்டாள்.
பயத்தாலும் தன் கையாலாகாத தனத்தாலும், அய்யோ.. தன் பெண்ணின் வாழ்க்கையை காப்பாற்ற முடியாத பேதையாகி விட்டேனே என்று உள்ளம் மருகி, அழுது, அழுது அப்படியே கண்ணயர்ந்த உமாராணி திடுக்கிட்டு விழித்தாள்.
தன் பெண்ணிற்கு இருவர் அலங்காரம் அமைதியாக செய்து கொண்டியிருந்தனர்.
அவள் புரிந்துக் கொண்டு முகத்தை முடி அழுதாள்.
தன் அம்மாவை தேற்றக் கூட தோன்றாமல், பியூட்டிஷனுக்கு தன் முகத்தையும், தலையையும் கொடுத்து
ஒரு ஜடம் போல் அமலா அமர்ந்து இருந்தாள்.
அலங்காரம் முடிந்ததும், தன் பெண்ணை பார்த்ததும், கண்ணீர் பெருக்கெடுத்தது. பச்சை கலர் பார்டர் வைத்த சிவப்பு கலர் புடவையும், அதற்கேற்றார் ஜரி வேலைப்பாடுள்ள ஜாக்கெட்டும்,நகைகளும் இதில் ஏதும் விசாலம் குறை வைக்கவில்லை.
நன்றாக அலங்கரித்த ஆடு, கசாப்பு கடைக்கு போவது போல் இருந்தது.
முத்துவால் கணவனாக வாழ முடியாது.
எந்த சுகத்தையும் அனுபவிக்க முடியாது என்று நினைக்க, ஆற்றாமை பெருகியது.
ஊர் பெரியவர்கள் திருமணத்திற்கு வராமலா போய் விடுவார்கள். நியாயம் கேட்போம். கட்டாய திருமணம் செய்கிறார்கள் என்று ஊர் அறிய சொல்வோம் என்று மனதில் நினைத்துக் கொண்டு உறுதியுடன் கண்களை துடைத்துக் கொண்டாள்.
பெண்ணை அழைத்து வரச் சொன்னார்கள்.
வெளியே போனதும்,
உமாராணி திகைத்தாள்..
அவர்கள் வீட்டு ஹாலிலே பந்தல் போட்டு திருமண மேடை அமைத்திருந்தார்கள்.
ஊர்மக்கள் ஒருவரையும் காணவில்லை.
அமலாவின் சித்தப்பாவும்,சித்தியும் எந்த வித குற்றவுணர்வும் இல்லாமல் மிதமிஞ்சிய சிரிப்பில் அந்த ஹாலை நிறைத்தார்கள்.
திருமணமேடை பூக்களால் அலங்கரிக்கப் பட்டு இருந்தது. ஊதுபத்தி, நறுமணமும், சாம்பிராணி வாசனையும் கூடத்தை கலக்கமாக திணறடித்து கொண்டியிருந்தது.
அங்கு மணமேடையில் போடப் பட்டுருந்த நாற்காலியில் அமலாவை அமர வைத்தார்கள்.
அம்மாவின் அலறல் சத்தம் கேட்டது.
“படுபாவிங்களா. நீங்கள் நல்லா இருப்பீர்களா .. என்ன பாவம் செய்தீர்களோ… முத்துவிற்கு இப்படியாகி விட்டது. மேலும், மேலும் பாவத்தை கொட்டிக் காதீங்கடா”…
விசாலம் தன் கணவனுடன் பட்டு புடவை சரசரக்க கழுத்து கொள்ளா நகைகளுடன் வந்தாள்.
முகத்தில் எதோ சாதித்த திருப்தி காணப்பட்டது. அது கொடூரமாகவும் இருந்தது.
தன் அடியாட்களை பார்த்து,”என்னங்கடா.. நல்ல நாள் அதுவுமா அவளை கத்தவிட்டு இருக்கீங்க.. விருந்தினர் வரும் நேரம்”
என்று சொன்னதும். அவர்கள் இருவரும் உமாராணியின் கழுத்தில் கத்தியை வைத்தனர். கத்துனா குத்தி விடுவேன் என்றதும்,
“குத்துங்கடா அப்படியாவது இங்த கலியாணம் தடை படட்டும் “.
அமலா ஒரு குத்துக்கல் போலத்தான் அமர்ந்திருந்தாள்.
கண்களில் கண்ணீர் வரவில்லை. தலை குனிந்து,வெறித்த பார்வையுடன் தரையில் ஓடும் எறும்புகளை பார்த்துக் கொண்டு இருந்தாள்.
எதோ ஒரு செத்த பூச்சிபோல அதை இழுத்துக் கொண்டு போய்க் கொண்டு இருந்தது. அதை இழுக்க அவ்வளவு பிரயத்தனம். சாவு ஊர்வலம் போல இருந்தது.
தன் நிலையும் அந்த செத்த பூச்சி போலத்தான். இவர்கள் இழுத்த இழுப்புக்கு போகணும்.
அம்மாவின் அலறல் மட்டும் காதுகளில் ஒலித்ததே தவிர, ஏறெடுத்து பார்க்க வில்லை.
கண்கள் கதிரையும் தேடவில்லை.
உண்மையில் அவள் செத்த பூச்சி போல் இருந்தாள்.
திடீரென்று விசாலம் வீடு பரபரப்பாக காணப்பட்டது.
மேளச் சத்தம் கேட்டது.
வாய் நிறைய அத்தையும் மாமாவும் யாரையோ குரலில் பாசம் பொங்க “வாங்க வாங்க” என்றும், “வலது கால் எடுத்து வைத்து வாம்மா”என்றனர் –
“நீங்கள் இங்கு வர நாங்கள் பெரும் பாக்கியம் செய்து இருக்க வேண்டும்” என்று கூழை கும்பிடு போட்டுக் கொண்டு, கணவனும் மனைவியும் வரவேற்றார்கள்.
சித்தப்பாவும் சித்தியும் எழுந்து ஓடினர்.
பணிப்பெண் ஒருத்தி அமலாவை நிற்க வைத்தாள்.
ஒருத்தி கொஞ்சலாக, மென்மையான குரலில் “கதிர் எங்கே இருக்கிறார்” என்றதும், சர்ரென்று தலையை தூக்கி குரல் வந்த திசையை நோக்கி அமலா பார்க்க, அங்கே
தன்னை அழகாக காண்பிப்பதற்காக, மிகவும் கவனமான ஒப்பனையில் ஒருவளை பார்த்தாள். நல்ல மஞ்சள் பட்டு புடவையில் வைரங்கள் டாலடிக்க,
அவள் ஒயிலாக விசாலத்தின் கால்களை தொட்டு கும்பிட்டுக் கொண்டு யிருந்தாள்.
விசாலம், “என்ன அடக்கம் என்ன அடக்கம்” என்று அவளை தூக்கி நிறுத்தி, தன் கைகளால் “என் தங்கமே “என்று திருஷ்டி சுத்தினாள்.
விசாலம் அவர்களை பணிவுடன் அழைத்து , மேடையை நோக்கி போடப்பட்டு இருந்த சோபாக்களில் அமர வைத்தாள்.
“ஆன்ட்டி.. கதிர் எங்க……? அவரே முன் நின்று என்னை வரவேற்பார் என்று பார்த்தேன்”…
“ஷாலினி கண்ணு. கோவிச்சிக்காதடா. அவன் அண்ணன் திருமணம் ஆச்சே அவன் தான் எல்லாவற்றையும் இழுத்து போட்டுக் கொண்டு செய்கிறான். இப்பொழுது கூட முத்துவை மாப்பிள்ளை கணக்கா ஜோராக தயார் செய்ய வேண்டுமே .அதற்காகத் தான் மேலே இருக்கிறான்.
இதோ வரச் சொல்றேன்” என்று என்றுமே கேட்டுயிராத பாசமும், பணிவும் உள்ள குரலில் சொன்னாள்.
உடனே சமையல்காரி வனஜாவை அழைத்து “கதிரை அழைத்து வா” என்று உத்திரவு யிட்டாள்.
கதிர் வந்ததும், அந்தப் பெண் பெரியவர்கள் இருக்கிறார்களே என்று எந்த மரியாதையும் இல்லாமல் “ஹாய் டார்லிங்” என்று கதிரை கட்டி பிடித்துக் கொண்டாள்.
அவனோ முகம் இறுக, நெளிந்தான்.
அமலாவின் கண்களிலிருந்து கண்ணீர் திரண்டு, போய்க் கொண்டுயிருந்த எறும்புகள் மீது ஒரு சொட்டு விழுந்தது. அந்த கண்ணீர் சுட்டதோ என்னவோ எறும்புகள் இங்கும்மங்கும் அலை பாய்ந்தது.
வழித் தெரியாமல் திணறின. மறுபடியும் சுதாரித்துக் கொண்டு
அந்த பூச்சியை இழுத்துக் கொண்டு சென்றது.
…………………………………..…
ஆர்.ஏ.புரம் சென்னை.
மதிவதனியின் பெற்றோர் அலறியடித்துக் கொண்டு தன் சம்பந்தி வீட்டுக்கு வந்தனர்.
“வாங்கப்பா,வாங்கம்மா உங்கள் புள்ள பண்றதை பாருங்கள். குடித்து விட்டு வந்து இருக்கிறான் .எனக்கு மானமே போகுதுப்பா “…
பிரசாத்தை பார்த்தார்கள்.
மிதமிஞ்சிய குடி போலும்.
கண்கள் சிவந்து. கழுத்தில் கட்டியிருந்த டை அவிழ்ந்து எதோ ஒரு தினுசில் தொங்கிக் கொண்டியிருந்தது. சோபாவில் கால்களை பரத்திக் கொண்டு உட்கார்ந்திருந்த தோரணையே எதோ ஒரு முடிவில் இருக்கிறான் என்று தெரிந்துக் கொண்டார்கள்.
அம்மா தன் மகளிடம், “வீட்டில் ஒருவரும் இல்லையா”…?
“மாமியார் மட்டும் இருக்கிறார்கள். கணவனும், மாமானரும் பெங்களூரிலிருந்து இன்னும் வரவில்லை. வரும் நேரம்மா. ஜெனி பஃபுக்கு போய் இருக்கிறாள். அதுவும் இவன் சொல்லித் தான் தெரியும்.”
“அவள் அப்படியெல்லாம் போகும் பெண் இல்லையே .”
‘இவனை வெறுப்பேற்றுவதற்காக போய் இருக்கிறாள். அதற்குத்தான் இந்த கோபம்.
எப்படியாவது கூட்டிட்டு போய்டும்மா .”
“சும்மா கிடந்தவனை உசுப்பேற்றி விட்டுட்டு,
இப்ப இப்படி சொன்னால் எப்படி.”
“சரிம்மா. எதாவது பண்ணு”.
அவனருகில் அமர்ந்துக் கொண்டார்.
“தம்பி என்னபா .. இப்படி பண்ற நம்ப மானம் சம்பந்தி வீட்ல போகனுமா . மாப்பிள்ளை வந்தால் என்ன நினைப்பார். எழுந்து வாடா. வீட்டுக்கு போகலாம்.”
பிரசாத்.தலையை ஒரு பக்கமாக விநோதமாக சாய்த்து தன் அம்மாவை பார்த்து வாய் குழறலாக, “முடியாது போ. அந்த ஜெனி இங்க வரணும். என்னை
என் நண்பர்கள் முன்னாடியே தூக்கி வெளியே போட்டு விட்டார்கள். எப்பேர்ப்பட்ட அவமானம் தெரியுமா.
நீ உன் புள்ளய பார்க்காமல் உன் மாப்பிள்ளை வந்தால் என்ன நடக்கும் என்று பார்க்கிற .நீயெல்லாம் ஒரு ஒரு தாயா”…….என்று எங்கோ பார்த்தபடி சொன்னான்.
இவர்கள் வந்து இருப்பது தெரிந்தும் சுதா வெளியே வரவில்லை.
அதுவே அவர்களுக்கு அவமானமாக இருந்தது. அதையெல்லாம் கூட பெரிதாக நினைக்காமல், இவனை எப்படியாவது அழைத்துக் கொண்டு போனால் போதும் என்றிருந்தது
“டேய் ..வேலைக்காரர்கள் கூட நம் பெண்ணை மதிக்க மாட்டார்கள் வாடா” என்று அவனிடம் கெஞ்சிக் கொண்டு இருந்தாள்.
மதி கைகளை பிசைந்துக் கொண்டு, இவன் போய் தொலைய மாட்டானா என்ற பாவனையில் முகத்தை வைத்துக் கொண்டியிருந்தாள்.
“மம்மி… நா வர மாட்டேன் ஜெனி இங்கு வரணும். நான் அவளுக்கு தாலி கட்டணும். அவளை நம் வீட்டிற்கு இழுத்துக் கொண்டு போகணும்.” என்றெல்லாம் பேச, மதிக்கே அவனை அறைய வேண்டும் போல் இருந்தது.
மதியின் அப்பா கருணாகரன் “என்னடி உன் புள்ள கிட்ட கெஞ்சிகிட்டு இருக்க”
என்று சிடு சிடுத்தார்..
“இதோ பாருடா..இப்ப நீ வரலேனா
நம் சொத்து முழுவதும் உன் தங்கை மதிவதனிககே கொடுத்து விடுவேன்.
இப்பவே வக்கில் கிட்ட பேசவா “… என்று அவன் மோவாயை பிடித்து கேட்க.
பிரசாத் அவரைப் பார்த்து, “பாதர் இப்ப என்ன நடந்து போச்சு என்று சொத்தை பற்றி பேசற.” என்று ஆங்கிலத்தில் கேட்க,
“ச்சீய்… எழுந்து வா .நம் மாப்பிள்ளை வருவதற்குள் போய் விடுவோம். லூசு பயலே” என்று திட்ட,
“நான் வர மாட்டேன். எனக்கு ஜெனி வேண்டும். இன்னிக்கு ஒரு டிரஸ் போட்டு வந்தாள் . எப்படி இருத்தாள் தெரியுமா . அந்த டாக்டர் அவள் இடுப்பை பிடித்து ஆடுகிறான். இவளும் அவனுக்கு வளைந்து கொடுத்து, அவன் மேல் சாய்கிறாள்.
இருவர் உதடுகளும் இதோ இந்த தூரத்தில் இருந்தது” என்று கருணா கரனின் உதட்டருகில் வர போடா என்று தள்ளி விட்டார்.
“என் பொண்டாட்டிப்பா.அவள் எப்படிப்பா எனக்கு துரோகம் பண்ணலாம்.
ஐயோ… என் கண் முன்னாடியே அவள் அவனுடன் இருப்பது தெரிகிறதே” .
“அப்பா.. அந்த டாக்டரை கொன்னுடலாமா.” என்று பிரசாத் வெறி பிடித்து கேட்க,
பளரென்று கன்னத்தில் அறைந்தார்.
அம்மா ராஜேஸ்வரி தலையில் அடித்துக் கொண்டார்.
கருணாகரன்,” இது சரியா வராது.
மதி தண்ணி எடுத்துட்டு வாம்மா.”
அவனைஇழுத்துக் கொண்டு போய், தலையில் தண்ணீர் ஊற்றி, காரில் தள்ளினர்.
டிரைவரிடம், “வண்டியை வீட்டுக்கு விடு” என்றார்.
அவர்கள் அப்படிப் போக, எதிர்புறமாக ஜெனியின் கார் ஒளி வெள்ளத்தை சிந்திக் கொண்டு வந்தது.
வாட்ச்மேன் சல்யூட் அடித்தபடி, கேட்டை திறந்து விட்டான்.
மெலிதாக விசிலடித்துக் கொண்டே உள்ளே நுழைந்தாள்.
முகத்தில் தேஜஸ் . சிரிப்பு வழிந்தது.
“நில்லுடி” என்று அண்ணியின் குரல் கேட்டது.
“ஹலோ அண்ணி நீங்கள் இன்னும் தூங்கலயா அண்ணனுக்காக வெயிட்டிங்கா.
அண்ணன் வருவதற்கு லேட்டாகுமாம். மெஸேஜ் பண்ணி இருக்கார்”.
“என்னது. உனக்கு செய்தாரா…!!!!
எனக்கு ஏன் செய்யவில்லை” .?
“பதறாதீங்க அண்ணி. உங்களுக்கு சொல்ல, போன் பண்ணி இருக்கார். நீங்கள் எடுக்கவில்லையாம். நீங்கள் நீங்கள் தூங்கி விட்டீர்கள் என்று நினைத்துக் கொண்டார்.அதனால், எனக்கு மெஸேஜ் செய்து இருக்கார்”.
“சரி அதை விடு உங்கண்ணன் எப்பவாவது வரட்டும்.”
“நீ ஏன் என் அண்ணன் போன பஃபுக்கு போன் . உனக்கு அவன் அங்கு இருப்பான் என்று தெரியுமில்ல..வம்புக்காக போனியா”
“ஐயோ அண்ணி. அந்த பஃபில் அண்ணன் ஷேர் ஹோல்டர். அண்ணனுக்கு பில் போய்விடும்.அதுவும் குறைச்சலாக. ஏன் உங்களுக்கு என்ன பிரச்சனை.”
அப்போது சுதா இறங்கி வர, “அம்மா நீயும் தூங்கலயா”.
அவர் ஜெனியை ஏற இறங்க பார்த்து விட்டு, “ இது மாதிரி உடை போட மாட்ட. ஆல்கஹாலும் சாப்பிட மாட்டா.. உன்னிடம் நிறைய மாறுதல்”
அம்மாவை கட்டி பிடித்துக் கொண்டாள்
“இந்த டிரஸ் எனக்கு யார் வாங்கி கொடுத்தது. ஞாபகம் இருக்கா.”
சுதா தான் சிங்கப்பூர் போனபோது, மகளுக்காக அந்த உடையை வாங்கி கொடுத்தாள்.
கொஞ்சமாவது மேட்டுத் தன்மையோடு இருடி.பார்ட்டி பப்புக்கு எல்லாம் போ என்று சொல்லிக் கொடுத்ததே நீ தானேம்மா”.
“இப்ப என்னவாயிற்று மாறி மாறி நீயும் அண்ணியும் கேள்வி கேட்கிறீர்கள்.”
இவர்கள் பேசிக் கொண்டு இருக்கும்போதே கார் போர்டிகோவில் நிற்கும் ஓசை கேட்டது.
தொடரும்
_
