இதயம் 9

 

நேத்ரா மருத்துவமனையில் பரிசோதனை முடித்துக் கோவை வந்தவுடன் சரவணன் அதைப் பற்றி விசாரித்தான்.

மேற்கொண்டு மைதிலி மாத்திரை விவரங்களைக் கேட்டவள் அவளைக் கரெக்டாகச் சாப்பிட சொல்ல அவள் சரி என்று தலையாட்டினாள்.

எப்படியோ அடுத்த 2 நாட்கள் எவ்வித ஆர்ப்பாட்டமும் இன்றி அமைதியாகச் செல்ல நேத்ராவும் கொஞ்சம் நிம்மதியானாள்.

அன்றைய இரவு நேத்ரா உணவு பரிமாறச் சாப்பிட்டவுடன் அவளைக் கூப்பிட்ட மைதிலி,

“நேத்ரா நாளைக்கு நாங்க வெளிய போக வேண்டிய வேலை இருக்கு. செங்கப்பன் அண்ணா இருப்பாங்க. வீட்டை பார்த்துக்கோ” எனச் சொல்ல அவள் சரி என்றாள்.

சரவணன் ஊரில் செல்வாக்கு மிகுந்த ஆள். அவரைத் தேடி அடிக்கடி யாராவது வருவது வழக்கமாதலால் நேத்ராவை விட்டு வெளியே சென்றனர்.

ஆனால் வீட்டை பார்த்துக் கொள்ளச் சொல்லுபவள் எங்குப் போகிறோம், என்ன வேலை என்பதைக் கூடச் சரியாகச் சொல்வதில்லை.

அவளுடைய கணவன் அதற்கும் மேலே. எங்குப் போனாலும் அவனுடைய அம்மா செல்லிற்கு மட்டுமே போன் பண்ணுவான்.

எந்த ஒரு தகவலும் அவனிடமிருந்து வராது. அதே போலத் தப்பித் தவறி இவளுடைய செல்லுக்குப் போனும் வராது.

இதையெல்லாம் யோசித்தவள் ‘அப்பாடா… கொஞ்சம் நிம்மதியா இருக்கலாம்’ என ஆசுவாசமானாள்.

“நேத்ரா சொல்றது புரியுதா? இல்லையா? நாளைக்கு நான் வரப்ப சொன்ன வேலை எல்லாம் முடிச்சிருக்கணும்” என அதட்ட

“முடிச்சிடறேன் அத்தை” என்று பதில் சொன்னவள் மீதி இருந்த வேலைகளை முடித்தாள்.

அடுத்த நாள் சந்திரன் வேலைக்குப் போனவுடன் சரவணனும், மைதிலியும் கிளம்பி போனவுடன் நேத்ரா வீட்டில் உள்ள வேலைகளைச் செய்ய ஆரம்பித்தாள்.

நேத்ராவுக்குத் தனியாக இருக்க எப்படியோ இருக்கத் தொலைக்காட்சியை உயிர்ப்பித்துச் சன் மியூசிக் போட்டுப் பாட்டை ரசித்தபடியே வேலை செய்ய ஆரம்பித்தவளுக்கு ஏதோ மணி அடிப்பது போல் சத்தம் கேட்க வெளியே வந்தவள் பூபாலனை பார்த்து திடுக்கிட்டாள்.

‘இவனா? இந்தப் பன்னாட எங்க இங்க வந்தான்?’ என அவள் யோசிக்கத் திருப்பி அவன் காலிங் பெல்லை அழுத்த கதவை திறந்தவளை இளிப்புடன் நோக்கினான்.

அவள் அவனை முறைத்தபடி உள்ளே செல்ல

“வீட்டுக்கு யாராவது வந்தா வாங்கன்னு சொல்லணும் நேத்ரா. நான் உன் மாமியார் கிட்ட சொல்லட்டுமா?” என நக்கலாகக் கேட்க அவனை ஒரு பார்வை பார்த்தவள் “வாங்க” என உணர்ச்சியற்ற குரலில் கூறினாள்.

“எங்க யாரையும் காணோம்?” என ஒன்றும் தெரியாதவன் போல் அவன் கேட்க அப்போது தான் நேத்ராவுக்கு நேற்று இரவு மாமனார் அவனிடம் வெளியே போகிறோம் என்று சொன்னதே நியாபகம் வந்தது.

‘தெரிஞ்சே தான் வந்திருக்கான் பரதேசி’

“உனக்கென்ன அவ்ளோ திமிரா? நீ போன் நம்பர் மாத்திட்டா உன்கிட்ட என்னால பேச முடியாதா?”

“எப்படி பிளான் பண்ணி வந்தேன் பார்த்தியா?” என்று அவன் இளிப்புடன் கேட்க

“உனக்கென்ன வேணும்?” என நேத்ரா பயத்தை மறைத்து கேட்க அவனோ நீ தான் என்பதைப் போல் கை காட்ட அவளுக்கு உள்ளுக்குள் குளிர் பரவியது.

அவளைப் பார்த்துக் கொண்டே அவன் நெருங்கி வர நேத்ரா ஓட முயற்சிக்க அவள் முன்னால் வந்து அவளைத் தடுத்தவன் நேத்ராவின் கையைப் பிடிக்க வர காலிங் பெல்லின் சத்தம் கேட்டது.

அந்தச் சத்தத்தில் அதிர்ந்தவன் அவளை விட்டு விலகி சோபாவில் அமர்ந்தான்.

இதற்கிடையில் சமையல் அறைக்குச் சென்ற நேத்ரா பெருமூச்செடுத்துத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள் வெளியே வந்து கதவை திறந்தாள்.

பூபாலன் திக் திக் என்ற பயத்தோடு யாரென்று பார்க்க அங்கே செங்கப்பனை பார்த்ததும் நிம்மதி அடைந்தான்.

பூபாலனை பார்த்த செங்கப்பன் ஒரு விநாடி யோசித்தவன் பிறகு அவனை வரவேற்றான்.

“அண்ணா நீங்க வரீங்கன்னு அண்ணா எதுவும் சொல்லலையே?” என்று விசாரிக்க

“இந்தப் பக்கம் ஒரு வேலையா வந்தேன் செங்கா. அப்படியே தம்பியையும் பார்த்துட்டு போலாம்னு வந்தேன்” என்று சமாளித்தான்.

அதைக் கேட்ட செங்காவோ “அண்ணனுக்குப் போன் போடட்டுமா?” என்று கேட்க

“நான் பேசிட்டேன்” என்று பூபாலன் சொல்லி கொண்டிருக்கும் போதே நேத்ராவை அழைத்த பூபாலன் “டீ அண்ணாக்கு போடலியா நேத்ரா?” எனக் கேட்க

“2 பேருக்கும் போட்டுட்டு இருக்கேண்ணா” என்று கூறியவள் தேநீரை தயாரித்தாள்.

செங்கப்பன் வெகு நாட்களாகச் சரவணன் வீட்டில் வேலை செய்பவர். அதனால் அவர்களுடைய எல்லா உறவினர்களையும் அவருக்குத் தெரியும்.

சிறிது நேரத்தில் இருவருக்கும் புன்னகையுடன் தேநீர் கொடுத்து விட்டு அவர்கள் பேசட்டும் என உள்ளே சென்று விட்டாள்.

டீ குடித்துக் கொண்டே பூபாலன் இங்கிருந்து எப்படித் தப்பிப்பது என யோசித்தான்.

தேநீரை குடித்த சில மணித்துளிகளில் பூபாலனுக்கு வயிறு ஏதோ செய்யப் பாத்ரூமை நோக்கி சென்றவன் சிறிது நேரம் கழித்து வந்தவன் நேத்ரா என ஆரம்பிக்கத் திரும்பவும் வயிறு கடமுடா என்றிருந்தது.

‘என்ன ஆச்சு? வரும்போது நல்லா தானே இருந்தது?’ என்று யோசித்தபடியே திரும்பவும் செல்ல இங்கு நடக்கும் நிகழ்வுகளை நேத்ரா அடக்கப்பட்ட சிரிப்புடன் பார்த்து கொண்டிருந்தாள்.

அவனிடமிருந்து எப்படித் தப்பிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தவள் சரியாகச் செங்கப்பன் வந்ததும் வேலை என்று நழுவியவள் அவன் டீ போட சொன்னதும் போட ஆரம்பித்தவளின் கண்களில் மாத்திரை பட்டைகள் கண்ணில் படத் திடீரென்று அவளது முகம் பிரகாசமாக மாறியது.

‘ஏன்டா டேய் தப்பு தப்பாவா மெஸேஜ் பண்றே? இருடா உனக்கு இன்னைக்கு இருக்கு’

‘இது ராங் மெஸேஜ் பண்ணதுக்கு. இது அம்மாவை தப்பா பேசினதுக்கு’ என்று யோசித்தவள்,

‘இது நீ யாரும் இல்லாதப்ப வந்ததுக்கு’

‘இதுக்கு மேல நீ தனியா இருக்கறப்ப வருவ’ என்றவள் சிரித்துக் கொண்டே இருவரிடமும் தேநீரை கொடுத்து விட்டு இவர்களைக் கவனித்தபடியே தனது வேலைகளைக் கவனித்தாள்.

சமையல் அறையில் இருந்து பூபாலனை கவனித்தவளுக்கு அடக்க மாட்டாமல் சிரிப்பு வர ஏதேச்சையாக இதைப் பார்த்த பூபாலன் இவளால் தான் எனக் கண்டு கொண்டான்.

‘உனக்கு அவ்ளோ கொழுப்பாகிடுச்சா?’ என்று கோபம் கொண்டவன்

‘அய்யோ ஃபர்ஸ்ட் வீட்டுக்கு போகணுமே. இவங்க வந்தா என்ன பதில் சொல்றது?’ என்று ஜெர்க் ஆனான்.

இதற்கிடையில் நேத்ராவின் செல்லுக்கு மைதிலி போன் செய்து விசாரிக்க அவள் வேண்டிய பதிலை சொன்னாள்.

“நேத்ரா என்ன பண்ற?”

“இப்போ தான் குழம்புக்கு எல்லாம் ரெடி பண்ணேன்” என்றவள்

“அத்தை பூபாலன் மாமா வந்திருக்காங்க” எனச் சொல்ல

“அவங்க கிட்ட கொடு” என்க நேத்ரா சிரித்துக் கொண்டே போனை நீட்ட பேச முடியாமல் பேசியவன் அவர்கள் வந்தால் மானம் போய்விடும் என விழுந்தடித்துக் கொண்டு புறப்பட்டான்.

அவன் சென்ற சிறிது நேரத்தில் வந்த மைதிலி அவனைப் பற்றிக் கேட்க,

“ஏதோ இந்தப் பக்கம் வேலையா வந்தாங்கன்னு சொன்னாங்க அத்தை” என்று சொல்ல மைதிலி யோசனையுடன் தலையாட்டினாள்.

அன்று இரவு சந்திரன் தொலைக்காட்சியைப் பார்க்கும் போது இதைப் பற்றிச் சொன்னாள்.

“என்னங்க”

“சொல்லு”

“இன்னைக்கு உங்க பெரியப்பா வந்தாங்க”

“சரி” என் சொல்ல அவள் தான் கடுப்பாகி போனாள்.

‘என்னன்னு கூடக் கேட்க தோணாத’ என்று நினைத்தவள்

“அவரு இன்னைக்கு யாரும் இல்லாதப்ப வந்தாருங்க. எனக்குப் பயமா இருக்கு” என்று சொல்ல அவளை ஒரு பார்வை பார்த்தவன்,

“நீ ஃபர்ஸ்ட் ஒழுங்கா இரு. அப்புறம் மத்தவங்கள குறை சொல்லலாம். சசிக்கு ஒரு டீ கூடப் போட யோசிக்கற. நீ மத்தவங்களை பத்தி சொல்றியா?” எனக் கேட்க அவள் அதிர்ச்சியில் உறைந்தாள்.

அதற்கு மேல் அவளுக்கு மேற்கொண்டு ஒன்றும் சொல்ல தோன்றவில்லை. அமைதியாக அவ்விடத்தை விட்டு அகன்றாள்.

அந்த வாரத்தில் சசி வரும்போது நேத்ராவின் நேரமோ என்னவோ அவளது மாமனார், மாமியார் முக்கியமான உறவினர் இறந்ததற்குச் செல்ல அங்கே சசியின் ஆட்டம் ஆரம்பமாகியது.

அப்போது சந்திரனும் அலுவலகத்தில் இருந்து வரவில்லை.

இதையெல்லாம் கவனித்தவள் அன்றைக்குத் தேநீர் கொடுக்காததை மனதில் வைத்து இப்போது தான் யார் என்று நிருபித்துக் கொண்டிருந்தாள்.

சசியின் குடும்பம் உள்ளே வந்ததும் அவர்களை வரவேற்று தண்ணீர் கொடுத்தவளிடம்,

“அம்மா, அப்பா காணோமே. எங்க போனாங்க?”

“யாரோ இறந்துட்டாங்கனு எழவுக்குப் போனாங்க அண்ணி” என்றவள்

“அண்ணி டீ போடட்டுமா?” எனக் கேட்க

“டீ வேண்டாம்” என்று சொல்ல நேத்ரா அதிர்ச்சியானாள்.

“அண்ணி”

“ஆமா. எங்க வீட்ல எனக்கே நீ டீ தர யோசிக்கறியா? நான் எங்க அப்பா, அம்மா வந்ததுக்கு அப்புறம் குடிச்சுக்கறேன். இப்போ டீ வேண்டாம்”

“அண்ணி அவங்க வரதுக்கு நைட் ஆகிடும். ப்ளீஸ் டீ குடிங்க” என்று கெஞ்ச

“நீ போடற மாதிரி இருந்தா டீயே வேண்டாம்”

நேத்ரா எத்தனை முறை சொல்லியும், கெஞ்சியும் சசி கொஞ்சமும் கண்டு கொள்ளவில்லை.

சசியின் பிள்ளைகளிடம் பால் ஆத்தறேன் என்று சொல்ல அவர்களும் சசி சாப்பிடாததால் வேண்டாம் என்று சொல்ல நேத்ராவுக்குத் தான் ரத்த அழுத்தம் எகிறியது.

‘ச்சே… பிரச்சனை பண்ணும்னே பண்றா. என்ன பண்றது?’ என்று அவள் ஒன்றும் புரியாமல் திணறினாள்.

இப்படியே சிறிது நேரம் சென்றதும் சந்திரன் வந்தவுடன் அவனுக்காகவே காத்திருந்தவள் போல ஆரம்பித்தாள்.

“அண்ணா நான் வந்ததில இருந்து ஒரு டீ குடிக்கறியானு கூடக் கேட்கல. இந்தப் பசங்களும் பட்டினி அண்ணா” என்று பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு சொன்னவளை பார்த்தவன்

“ஆமாண்ணா. நான் வீக்லி வரேன்னு கோபத்துல இப்படி பண்றாங்க” என்று அவள் இன்னும் அவனை ஏற்றிவிட்டு நீலிக் கண்ணீர் வடிக்க அதைப் பார்த்துக் கொண்டிருந்த நேத்ராவுக்கோ உள்ளம் நடுங்கியது.

‘ஐயோ… இவ என்ன இந்த ஆக்ட் பண்றா? நாம எப்ப இப்படி சொன்னோம்? இவன் பார்வையே சரியில்லயே” என்று அவள் மிரள நேத்ராவின் அருகே வந்தவன் ஓங்கி அவளை ஒரு அறை அறைய அதில் அவளுக்குக் கன்னம் பழுத்தது.

“ஏய்… என்னடி நினைச்சிட்டு இருக்க? அவ்ளோ தூரம் களைச்சி போய் வரா. அவளுக்கு ஒரு டீ கூடப் போட முடியாதா உன்னால?”

“இந்தச் சின்னப் பசங்க உன்னை என்ன பண்ணாங்க? இப்படி எதுவும் குடுக்காம இருக்கற?” என்று அவன் கோபத்தில் குரல் இறுக கேட்க அவளுக்கு வார்த்தை வரவில்லை.

“கேட்கறேன்ல. பதில் சொல்லுடி” என்று அவன் மறுபடியும் கை ஓங்க

“இ… இல்லைங்க. நா… நான் கேட்டேன்” என்று அவள் கண்கள் கலங்க திக்கித் திணறி சொல்ல

“பொய் சொல்றியா நீ?” என்று சொன்னவன் அவளுடைய இன்னொரு கன்னத்திலும் அறைய நேத்ராவுக்குப் பொறிக் கலங்கியது.

‘நான் எதுவுமே பண்ணலயே. நான் எங்க பொய் சொன்னேன்?’ என்று நினைத்து உள்ளுக்குள் இறுகியவள் சமையல் அறைக்குள் சென்று அழ ஆரம்பித்தாள்.

இந்தக் களேபரத்தை உள்ளுக்குள் வன்மத்துடனும் வெளியே அழுதபடியும் சசி வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள்.

இது நடந்து ஓரிரு மணி நேரம் கழித்துச் சரவணனும், மைதிலியும் வர அவர்களிடம் அப்போது நடந்ததைச் சசியும், சந்திரனும் சொல்ல அவர்கள் இருவரும் கொலைக்காரியை போல் பார்த்தனர்.

சரவணன் “ஏய்… உனக்கு அவ்ளோ திமிராடி? என் குட்டிமா தான்டி இந்த வீட்ல எல்லாமே” என்று சொன்னவன் ஓங்கி அறைய நேத்ரா தூரப் போய் விழுந்தாள்.

“ஏங்க… அமைதியா இருங்க. நான் பார்த்துக்கறேன்” என்றவள் சந்திரனிடம்,

“நீங்க முதல் டைம் சசி வீட்டுக்கு போனப்பயே இவ அஸ்வதிய மிரட்டினாளாம்”

“நான் உன்கிட்ட சொல்ல வேண்டாம்னு நினைச்சேன். ஆனா இவ பண்றதே சரியில்ல ” என்று சொல்ல

“ஏன்மா… இதை முன்னாடியே சொல்ல மாட்டியா?” என்றவன் அவள் தலைமுடியை இறுக பற்ற நேத்ராவோ வலியில் கதறினாள்.

“அய்யோ… டேய் என்னடா பண்ற? நீ அடிக்காத. நான் இனி அவளை அடிக்கறேன். இப்போ அவளை விடுடா” என்று சொன்னவுடன் நேத்ராவை அவன் சட்டென்று விடுவிக்கத் தடுமாறி தரையில் விழுந்தவள் நடுக்கத்துடன் மைதிலியை பார்த்தாள்.

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page