கோவிலுக்குச் சென்று வந்ததில் இருந்து நேத்ரா யோசனையாக இருக்க அதைக் கவனித்த மைதிலி ஏதேச்சையாக
“நேத்ரா நீயும், அவனும் சந்தோஷமா இருக்கீங்களா?” எனக் கேட்க அவள் இல்லை என்று தலையாட்ட மைதிலி அதிர்ச்சியில் உறைந்தாள்.
உடனே வீட்டில் பெரும் சண்டை உண்டானது.
“நான் டெய்லியும் குழந்தை வேணும்னு எத்தனை சாமி கும்பிட்டுட்டு இருக்கேன். நீ அசால்ட்டா இல்லனு சொல்ற?”
“ஒவ்வொரு மாசமும் எவ்ளோ இன்ட்ரஸ்ட்டா எதிர்பாத்திட்டு இருக்கேன்? நீ என்ன இப்படி பதில் சொல்ற?” எனக் கத்தியவள் அமுதாவிற்குப் போனை போட்டு அவளிடமும் கத்தினாள்.
“ஹலோ”
“சொல்லுங்க அண்ணி”
“என்னத்த சொல்றது? உங்க பொண்ணு கிட்ட சந்தோஷமா இருக்கறானு எல்லாம் கேட்க மாட்டிங்களா?”
“கேட்டேனே அண்ணி. அவ சந்தோஷமா இருக்கேனு தான் சொன்னா” எனச் சொல்ல
“அவகிட்ட சந்தோஷமா இருக்கறியானு கேட்டா அப்படி ஒண்ணு நடக்கவே இல்லனு சொல்றா”
“பொண்ணு எப்படி இருக்கான்னு கூடக் கவனிக்க மாட்டிங்களா?” என மைதிலி பேச பேச நேத்ரா தன் வாழ்க்கையை நினைத்து மனம் நொந்தாள்.
“உங்க பொண்ணு வாழ்க்கைய கெடுக்கறதுக்கு நீங்களே போதும். வைங்க போன” என்றவள்
“இன்னைக்கு அவன் வரட்டும். அவனுக்கு இருக்கு” எனச் சந்திரனையும் திட்ட நேத்ரா மேற்கொண்டு என்ன ஆகுமோ என்று பயந்தாள்.
சிறிது நேரத்தில் சந்திரன் வர அவனிடம் இருந்து லஞ்ச் பேகை நேத்ரா வாங்க மைதிலி திட்ட ஆரம்பித்தாள்.
“எப்போ பார்த்தாலும் அவன் வந்தா லஞ்ச் பேகை வாங்க வேண்டியது. என்ன சாப்பிட வேணும்னு கூடக் கேட்கறதில்ல” என்று திட்ட நேத்ரா அதைக் கேட்டபடி சமையலறைக்குள் நுழைந்தாள்.
“டேய் என்னடா நினைச்சிட்டிருக்க?”
“ஏன் மீ? என்னாச்சு?”
“நீயும், நேத்ராவும் சந்தோஷமா இருக்கீங்களா? இல்லையா?” எனக் கேட்க அப்போது அவனுக்கு டீ கொடுக்க வந்த நேத்ராவை யோசனையோடு பார்க்க அவளோ சந்திரனின் முகம் பார்க்காமல் சென்றாள்.
“மீ அதுல உனக்கென்ன சந்தேகம்? நாங்க சந்தோஷமா தான் இருக்கோம்” என அவன் சொல்ல
“ஏன்டா சகவாச தோஷமா? அவளோட சேர்ந்து நீயும் பொய் பேசறியா?”
“மீ…” என அவன் கத்த
“அவகிட்ட கேட்டா நாங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இல்லன்னு சொல்றா?”
“மீ அவ சொல்றதெல்லாம் நம்பாத”
“ஒரு குழந்தை வேணும்னு நான் எத்தனை கோயிலுக்குப் போறேன்? அதெல்லாம் பார்த்திட்டு தான இருக்க?”
“மீ அதெல்லாம் ஒண்ணுல்ல” என அவன் சமாளிக்க
“நீங்க சந்தோஷமா இல்லேன்னா நடக்கறதே வேற” என்றவள் சசிக்கு போன் செய்து அவளிடம் ஒரு மூச்சு புலம்பினாள்.
இதையெல்லாம் எந்த வித உணர்வும் இன்றி நேத்ரா பார்த்து கொண்டிருந்தாள்.
சிறிது நேரம் மைதிலியுடன் பேசியவன் பின் தனது அலுவலை பார்க்க சென்றான்.
இரவு சாப்பிட்டு முடித்தவுடன் நேத்ராவின் அருகில் வந்த மைதிலி, “அவன்ட்ட எல்லாம் சொல்லிருக்கேன்” எனக் கூற நேத்ரா சரி எனத் தலையாட்டினாள்.
அவர்கள் சென்றவுடன் நேத்ராவுக்கு முன்பாக வந்து படுத்தவன் அவள் உள்ளே நுழைந்ததும்,
“என்ன நினைச்சிட்டு இருக்க? அம்மாட்ட இதெல்லாம் சொல்வியா?” என இறுக்கமான குரலில் கேட்க
“இல்லங்க. இன்னைக்குக் கோவிலுக்குப் போனோமா? அங்க பரிகாரம் பண்ண சொன்னாங்க” என்று நேத்ரா மெல்லிய குரலில் சொல்ல
“ஓ… அதனால அம்மாட்ட இப்படி தான் சொல்வியா?”
“இல்லைங்க. அ… அது கஷ்டமா இருந்ததா? ஏமாத்தறமோனு. அதான்” எனச் சொல்ல
“இனிமே இதை பத்தி எந்த விஷயமும் வெளிய போகக் கூடாது” என அவன் மிரட்ட அதற்கும் சரி என்று அமைதியாகப் படுத்தவளுக்கோ தூக்கம் தூர சென்றது.
மனதெங்கும் ஒரு வித பதட்டம் இருக்க எதையும் யோசிக்க முடியாமல் அமைதியாகப் படுத்தவள் மெல்ல உறங்க முயற்சித்தாள்.
அடுத்த நாள் மதியம் மைதிலி போன் ரிங் ஆக அதை எடுக்கப் போனவள் சந்திரன் போன் செய்ததைப் பார்த்து ஒன்றும் பேசாமல் அவளிடம் கொடுக்க அவள் திட்டியபடியே போனை வாங்கினாள்.
“என்ன தம்பி?”
“……”
“வர லேட்டாகுமா? ஓகே” என்றபடி போனை கட் பண்ணியவள் நேத்ராவை திட்ட ஆரம்பித்தாள்.
“போன் எடுத்தா பேச மாட்டியா? உன் புருஷன் கிட்ட பேசறதுக்கு உனக்கு அவ்ளோ கஷ்டமா?” எனக் கேட்க அவள் எதுவும் பேசாமல் அமைதியாக யோசித்தபடி இருந்தாள்.
‘போன் எடுத்தா உடனே அம்மாட்ட குடுன்னு சொல்றவன்கிட்ட என்ன பேசறது?’
இப்படியாக அவளது சிந்தனை சென்றது.
இதற்கிடையில் சந்திரனது குல தெய்வ கோவிலில் பண்டிகை வர அங்கே சென்றவளுக்கோ எதிர்பாராத அதிர்ச்சி காத்திருந்தது.
கோயிலில் பண்டிகை அன்று ஏராளமான கூட்டம் இருக்க அவர்கள் முந்தின நாளே சென்று ஒரு அறையில் தங்கினர். அடுத்த நாள் தங்கிய அறையின் ஜன்னலில் டாலர் செயினைக் கழட்டி வைத்தவள் சிறிது நேரத்தில் அங்கே சென்று பார்க்க அங்கே செயின் இல்லாதது கண்டு அதிர்ச்சியில் உறைந்தாள்.
அவளுக்கு அவர்களிடம் சொல்லவும் பயமாக இருந்தது.
ஆனால் அதே சமயம் செயின் எங்கேயும் தொலைந்திருக்காது என்ற நம்பிக்கையுடன் அமைதியாய் இருந்தாள்.
பண்டிகைக்கு அமுதாவையும் அழைத்திருந்ததால் அவளும் வந்து கொண்டிருப்பதாகப் போன் செய்யச் சீக்கிரம் அமுதா வர வேண்டும் என வேண்ட அதற்குள் மைதிலியோ அவளைச் செயினைப் போட்டு வர சொல்ல என்ன செய்வதென்று புரியாமல் திணறியவள் செயினைத் தேடுவது போல் பார்த்து விட்டுக் கோயிலில் அவர்களுடன் சாமி கும்பிட்டு வந்தாள்.
சாமி கும்பிட்டவுடன் அவர்கள் தங்கி இருந்த அறைக்கு வந்தவுடன் திரும்ப மைதிலி செயினைப் பற்றி ஆரம்பித்தாள்.
“சாமி கும்பிடறப்ப செயின் போட்டுட்டு வான்னு சொல்றேன். போட்டு வர மாட்டியா? செயின் எங்க?” என அதட்ட
“அத்தை செயின் காணோம்” என்று மெல்லிய குரலில் சொல்ல
“அப்புறம் ஏன்டி செயின் இருக்க மாதிரி ஆக்ட் பண்ண?”
“இல்லத்த. இத்தன நாள்ல செயின் இப்படி எல்லாம் தொலைஞ்சதில்ல. ஆனா இப்போ தேடின வரையும் கிடைக்கல” எனச் சொல்ல
“ஏன்டி ஒரு செயின் தொலைஞ்சி போச்சுனு கூடச் சொல்ல முடியாதா? உங்கம்மா வந்திட்டு இருக்காங்க இல்ல? அவங்க வரட்டும்” எனத் திட்ட
“நான் எப்படியும் கிடைச்சிடும்னு நினைச்சேன்”
