தாரகையின் மாயோன்

மாயோன் -7

அபிஷேக் கூறியதைக் கேட்டு சரணவன் ராஜனும் , கல்பனா தேவியும்  ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர் .”அதுக்கு வாய்ப்பில்லை என்ன‌ நினைச்சிட்டு‌ இருக்க “என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்தான் கார்த்திக்.

அபிஷேக்,”டேய் உன்னை யாராவது கேட்டாங்களா ?கொஞ்ச நேரம் அமைதியா இரேன் டா”

“பார்றா இது நம்ம வீடு. இங்கே என்ன முடிவு எடுத்தாலும் கருத்து சொல்ல எனக்கும் உரிமை இருக்கு, என்னை அமைதியா இருக்க சொல்லவா , என்னை அழைச்சிட்டு வந்து உட்கார வச்சிருக்க”

“ஆமாண்டா கூப்பிட்டேன்   அவகிட்ட நம்பிக்கையா சொன்னேன்.. என் அண்ணன் இருக்கான் ..அவனுக்கு தெரிந்த டாக்டர் இருக்காங்க. கண்டிப்பா உன் பிரச்சினைக்கு ஒரு சொல்யூஷன் கிடைக்கும் என்று சொன்னேன்‌.

ஆனால் நீ இப்படி பேசுவேன்னு நானே எதிர்பார்க்கல அவள் இதைக் கேள்விப்பட்டா என்ன நினைப்பா?

உன் அண்ணன்  என்னை நேருக்கு நேர் பார்க்காமலே  நான் பேசியதை கேட்டு  தவறா புரிஞ்சுகிட்டார் .ஏனோ அவருக்கு என்னை பிடிக்கல..அதனால  இது பத்தி அவர்கிட்ட பேசாதேன்னு  சொன்னா.. அவள் சரியாதான் கெஸ்  பண்ணி இருக்கா நான்தான் தப்பு பண்ணிட்டேன்” என்றான் அபிஷேக்.

“இது என்னடா வம்பா போச்சு

அவளுக்கு  உதவி செய்றேன்னு நான் சொன்னேனா ? அம்மா சொன்னதால் நான் செய்தது தவறு என்று தோணுச்சு.அதனால் சாரி கேட்கறதுக்காக நான் உன் காலேஜுக்கு வந்தேன்.திமிர் பிடிச்சவ லேட்டா வந்ததும் இல்லாம  ஒரு ஃபோன் பண்ணி  சொன்னாளா அதுவும் கிடையாது”

“கார்த்திக் எந்த உரிமைல அவக்கிட்ட இதல்லாம் எதிர்பார்க்கிற..அவள் எதுக்குடா உனக்கு ஃபோன் பண்ணி பேசனும்.எனக்கு உன்னுடைய உதவி தேவையில்லை தயவு செய்து இந்த விஷயத்திலிருந்து நீ விலிகிடு”

“டேய்  எதையாவது செய்துக்கோ

ஆனால் என் விருப்பம் இல்லாம இங்கே எதுவும் நடக்கக் கூடாது..

இன்னொரு தடவை இந்த வீட்ல அவளுடைய பேச்சு வரக்கூடாது” என்ற அடுத்த நொடி தன் தாடையில் கை வைத்து நின்றிருந்தான் கார்த்திக்.

கல்பனா தேவி அவனை ஓங்கி அறைந்தவர்.” அந்தப் பொண்ணு எவ்வளவு கஷ்டத்தில் இருக்கா தெரியுமா?” நீ ஏன்டா அவள் பேச்சை எடுத்தாலே இப்படி நடந்துக்கிற .நான் உங்களை இப்படித்தான் வளர்த்தேனோ.

?நீ  இதேபோல் இருந்தா உன் திருமண வாழ்க்கை எப்படி இருக்குமோன்னு எனக்கு பயமா இருக்குடா”என்று கோபத்தில் ஆரம்பித்து ஆதங்கத்தில் முடித்தார் கல்பனா.

கல்பனாவின் செய்கைகளில் கார்த்திக்கும் , அபிஷேக்கும்.  ‘தன் அம்மா இதுவரை இப்படி நடந்து கொண்டதில்லையே?’ என்று நினைத்தவர்கள் அதிர்ச்சியில் நின்றனர்.

“கல்பனா

என்னம்மா இது ?எதுக்கு எதை முடிச்சு போடுற. அவனுக்கு  ஆரம்பத்திலிருந்தே இனியா மீது நல்ல அபிப்ராயம் இல்ல.நாம முடிஞ்ச அளவுக்கு அவனுக்கு புரிய வச்சிட்டோம் .அதுக்காக இப்படி எல்லாம் பேசாத” என்றார் சரவண ராஜன்.

“என்னங்க இனியாவைப் பற்றி இவன் இப்படி பேசும்போது  நமக்கே கோபம் வருதே அப்போ அபிக்கும், அந்த பொண்ணோட பெத்தவங்களுக்கும் எப்படி இருக்கும் யோசிச்சு பாருங்க .இவன் ஏங்க இப்படி மாறிட்டான்”

“அம்மா நான் இப்படித்தான் என்னை மாத்த முயற்சி செய்யாதீங்க.எனக்கு இப்படி இருக்க தான் பிடிச்சிருக்கு .எத்தனை பேர் என்ன சொன்னாலும் பரவாயில்ல

உங்களுக்கு மகனாக நான் எதையும் சரிவர செய்யாமல் இல்ல .எனக்கு அது போதும் நீங்க யாரையாவது  அழைச்சிட்டு வாங்க நான் வேணாம்னு சொல்லல “என்றவன் அங்கிருந்து சென்றான்

தன் அம்மா நீண்ட நாள் பிறகு ‌தன் அண்ணனை அடித்ததை நினைத்து கவலையடைந்த அபிஷேக்  தன் அம்மாவை சமாதானப்படுத்தியவன் பிறகு கார்த்திக்கை தேடி அவனது அறைக்குச் சென்றான்.

“கார்த்திக் ஏன்டா இப்படி பண்ற. கோபப்படாத நம்ம அம்மாவே கோப படறாங்க அப்படின்னா நீ எப்படி பேசயிருப்ப  யோசிச்சுப் பாரு. ஒரு சிலரிடம் நீ இப்படித்தான் நடந்துக்கிற.. என் அண்ணன் சிடுமூஞ்சி ,ஸ்ட்ரிக்ட் ஆபிசர் என்று மத்த ஸ்டூடன்ட்ஸ் சொல்லக் கேட்கும்போது எனக்கு எப்படி இருக்கும் தெரியுமா?

எனக்குத் தெரியும் நீ  நிறைய  ஸ்டூடன்ட்ஸ்க்கு நல்லது பண்ணி இருக்க, ஆனாலும் இந்த குணத்தை மட்டும் விட்டுடுடா. எனக்கு சின்ன வயசில் இருந்த அதே கார்த்திக் வேணும் .ஏன்டா வளர வளர நீயே உனக்கு முகமூடி போட்டுகிட்டு சுத்தற”என்ற அபிஷேக் அங்கிருந்து வெளியேறினான்.

அபிஷேக் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்த கார்த்திக் அவன் சென்றதும்  கடந்த காலத்திற்கு சென்றான்.

கார்த்திக் சிறுவயதிலிருந்தே அமைதியாகவே இருந்தாலும் தன் நெருங்கிய சொந்தங்களிடமும் , நண்பர்களிடமும் நன்றாகவே பேசினான். இவனின் அமைதியான அணுகுமுறை ,மரியாதையாக பேசுதல் இதனாலேயே அனைவருக்குமே  கார்த்திக்கை மிகவும் பிடிக்கும் .அப்படி இருந்து வந்தவன் தனது பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரியில் அடியெடுத்து வைத்தான்.

கார்த்திக் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் ஆண்களுக்கே உரிய மிடுக்குடனும் ,அம்சமாகவும் ,அழகாகவும் இருப்பான்.அங்கே இவனுக்கு நண்பனாக கிடைத்தவன் தான் புவனேஷ்.நாளடைவில் இருவரும் உயிர் நண்பர்களாக மாறினர்.

இவர்களுடன் படித்த பெண் கவிதா. புவனேஷை மனதார விரும்புவதாக கூற அவனோ முதலில் மறுத்தான் .அந்தப் பெண் இதில் மனம் வருத்தத்துடன் கார்த்திக்கிடம் வந்து சொன்னாள்.

கார்த்திக் ,”கவிதா  அவனுக்கு விருப்பமில்ல சொன்னா விட்டுடு ..காதல்  தன்னால வரனும் 

கட்டாயப்படுத்தி வருவதற்கு பெயர் காதல் இல்ல.அவன் காதலிக்கும் சூழ்நிலையிலும் இல்லை

அவனின் குடும்ப நிலைமை அப்படி .அவங்க அப்பா காதலிச்சுட்டு போய் நின்னா வீட்டை விட்டு அவனை வெளியே துரத்திடுவார்.அவருக்கு அவருடைய குடும்ப கௌரவம் தான் முக்கியம்..நீ அவனை தொந்தரவு செய்யாத” என்றான். 

கார்த்திக் கூறியதைக் கேட்ட கவிதா

‘கண்டிப்பா நான் அவனை காதலிக்க வைக்கிறேன்.உன்னால் இதை தடுக்கவே முடியாது கார்த்திக் ‘என்று மனதினுள் சூளுரைத்தாள்.

கவிதா தொடர்ந்து புவனேஷிடம் தன் காதலை சொல்லாலும், செயலாலும் உணர்த்திக்கொண்டிருக்க  புவனேஷ் அவளின் செயலில் ஈர்க்கப்பட்டவன் அவனும் தன் காதலை ஒப்புக் கொண்டான்.இதைத் தெரிந்து கொண்ட கார்த்திக் இது அவனுடைய தனிப்பட்ட முடிவு. இதில் தான் தலையிடக்கூடாது என்று விட்டு விட்டான்..இப்படியாக இருவரும் கல்லூரிப்படிப்பை முடிக்க இளங்கலை பட்டம் பெற்று முதுகலை படிப்பிற்காக இருவரும் வெவ்வேறு கல்லூரியில்  காலடி எடுத்து வைத்தனர். அங்கே தான் பிரச்சனை ஆரம்பித்தது.

அந்தப் பெண்ணிடம் வேறு ஒருவன் வந்து காதலைக் கூற‌ அதுக்கு சம்மதம் தெரிவித்தவள் அன்றிலிருந்து புவனேஷை கொஞ்சம் கொஞ்சமாக தவிர்க்க ஆரம்பித்தாள்.

இதை கவனித்து வந்த புவனேஷ்,  “ஏன் இப்படி நடந்துக்கிற கவிதா”என்று நேரடியாகவே அவளிடம் கேட்க அவளோ கொஞ்சமும் தயக்கமின்றி நடந்த உண்மையை கூறினாள்.

புவனேஷ் இந்த சம்பவத்துக்குப் பின் கார்த்திக்கிடம் அழுது புலம்பியவன் தன் படிப்பிலும் கவனம் செலுத்த முடியாமல் தவித்து வந்தவன் தற்கொலை முயற்சி மேற்கொள்ள கார்த்திக் மற்றும் அவனது  நண்பர்களால் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவன் உயிர் பிழைத்தான் புவனேஷ்.

பிறகு கார்த்திக்கின் முயற்சியால் கொஞ்சம்  கொஞ்சமாக அதிலிருந்து மீண்டு வந்த புவனேஷ் இன்று மிகப்பெரிய கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறான்.அதற்கு முக்கிய காரணம் கார்த்திக் மட்டுமே..இந்த புவனேஷ் யாரென்று உங்களுக்கு தெரியுதா?அபிஷேக் ராஜன் படிக்கும் கல்லூரியில் தான் புவனேஷ் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறான்.

பொதுவாக கார்த்திக் யாரிடமும்  நம்பிக்கையும் ,பாசமும் வைக்க மாட்டான் .ஆனாலும் அவளின் துரோகத்தை இவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதிலிருந்து கார்த்திக் பெண்களைக் கண்டாலே ஒதுங்கி போனான். 

தன்னிடம் படிக்கும் மாணவிகள் மட்டுமில்லாமல்  மத்த பெண்களிடமும் கண்டிப்புடன் நடந்து வந்தான்.  இது எதுவும் அவனின் பெற்றோருக்கும் ,அபிஷேக்கும் தெரியாது ..ஆனால் அவனின் இந்த மாற்றத்தைக் கண்டவர்கள் என்ன என்று கேட்டதற்கு ,”அதெல்லாம் ஒன்றுமில்ல.”என்று மழுப்பி விட்டான். 

கடந்த காலத்தை நினைத்து பார்த்தவனுக்கு,’ தன் வாழ்க்கையில் யாரும் வரப்போவதில்லை..’ என்று நினைத்தவனுக்கு  மீண்டும் இனியாவைப் பற்றி அபி சொன்ன விஷயங்களே மனதில் சுழன்று கொண்டிருந்தது..

கல்பனா தேவியும், சரவணராஜனும் இனியாவின் வீட்டிற்குச் சென்றவர்கள் அபிஷேக்கும் அவனின் நண்பர்களும் எடுத்த முடிவைக் கூறினர்.

“லட்சுமி அபிஷேக்கும் அவனின் நண்பர்களும் சேர்ந்து இனியாவை எங்க வீட்ல தங்க வைக்கலாம் என்று முடிவு பண்ணி இருக்காங்க அவளை மட்டும் கூப்பிட்டா வரமாட்டாள்.அதனால் ஸ்ருதி, அன்பு ,பாலாஜி எல்லாரும் ஒண்ணா சேர்ந்து வரலாம் என்று முடிவு பண்ணி இருக்காங்க நீங்க உங்களோட முடிவை சொல்லுங்க “என்றார் கல்பனா தேவி.

இனியாவின் அம்மா லட்சுமி இதற்கு மறுப்பு தெரிவிக்க,” இங்க பாருங்க லட்சுமி நீங்க ஏன் வேண்டாம் சொல்றீங்கன்னு  எனக்கு நல்லாவே புரியுது.நான் அவளை வேறு எங்கேயும் அனுப்ப சொல்லலையே. எங்க வீட்டுக்குத்தான் அழைச்சிட்டு போறேன்னு சொல்றேன்.நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க .அவளுக்கு அங்கே எல்லா பாதுகாப்பும் கிடைக்கும் “என்றார் கல்பனா.

 

.

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page