சாந்தமூர்த்தித் தன் குடும்பத்தைப் பற்றிக் கண்டு கொள்ளாததால் ஏற்கனவே கடுப்பில் இருந்தவள் இப்போது தான் ஏதோ எல்லாவற்றையும் சரி செய்வது போல் சீன் போட அவள் ஆத்திரத்துடன் அவன் நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டிருந்தாள்.
இந்நிலையில் அவன் தனிக்குடித்தனம் போறீங்களா எனக் கேட்க இன்னும் கோபமானாள்.
“நேத்ரா தனியா போய் இருந்தா ஓகே தானா?”
“தனியா அவங்க வரமாட்டாங்க சித்தப்பா”
“நான் சொன்னா அவங்க வருவாங்க. நான் அவங்ககிட்ட பேசறேன்” எனச் சொல்ல அவள் உறுதியாக மறுத்தாள்.
பின் சந்திரன் குடும்பத்தாரிடம் பேச அவர்கள் ஒரு மாசம் அவர்கள் வீட்டில் வேலை செய்வதைக் கவனித்து விட்டுத் தனிக்குடித்தனம் வைப்பதாகச் சொல்ல சந்திரன் அதனை உறுதியாக மறுத்தான்.
சாந்தமூர்த்தியின் செயலை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கோ உள்ளுக்குள் குமுறியது.
‘இத்தன நாளா எங்க இருந்தோம்? என்ன பண்ணோம்னு ஒண்ணும் கண்டுக்கல. இப்போ அவங்க போன் பண்றாங்க. நான் சேர்த்து வைக்கறேன்ற மாதிரி சீன் போட்டுட்டு இருக்கான்’ என நேத்ரா உள்ளே ஆத்திரத்துடனும் வெளியே அமைதியுடனும் சாந்தமூர்த்தியின் செயலை கவனித்துக் கொண்டிருந்தாள்.
“கரெக்டா சொல்லு நேத்ரா”
“நான் போக மாட்டேன். போனா அவங்க அடிப்பாங்க”
“சும்மா ஏன் நேத்ரா இதே சொல்லிட்டிருக்க? நீ எதிர்த்து பேசி இருந்தா இந்தப் பிராப்ளம் வந்திருக்குமா?”
“உங்களுக்கென்ன தெரியும்? நம்ம வீட்டுக்கு வந்து பேசினப்ப அந்தச் சந்திரன் அம்மா முன்னாடியே அடிக்க வந்தான். அப்புறமும் சேர்ந்து வாழுன்னு சொல்றீங்க?” எனக் காட்டமாகக் கேட்க
“என்ன சொல்ற?”
“ஆமா சித்தப்பா. நான் பேச பேச அவனுக்கு அவ்வளவு கோபம். அம்மா முன்னாடியே அடிக்க வந்தான்”
“இதை ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லல?” எனச் சாந்தமூர்த்திக் காட்டமாகக் கேட்க…
“உங்ககிட்ட ஏன் சொல்லணும்?” என நேத்ரா இறுக்கமான குரலில் கேட்க சாந்தமூர்த்தித் திகைத்து போய் அவளைப் பார்த்தவன் பின் நிமிடத்தில் சுதாரித்து,
“அவங்க நான் தான கல்யாணம் பண்ணி வெச்சேன்னு எனக்குப் போன் பண்றாங்க” எனக் கெத்தாகச் சொல்ல
“ஓ… அப்படியா?” என்றவள்
“அப்போ டிவோர்ஸ் அனுப்பினது?” எனக் கேள்வியுடன் அவனை நோக்க…
“என்ன டிவோர்ஸா?” எனச் சாந்தமூர்த்தி அதிர்ந்து போனான்.
“எதுக்கு டிவோர்ஸ் அனுப்பிட்டு திரும்பி நல்லவங்க மாதிரி சீன் போடறாங்க?”
உண்மையில் அன்று சந்திரன் குடும்பத்தினர் நேத்ரா மேல் சரியான கோபத்தில் இருந்தனர்.
சந்திரன் கூண்டுப்புலி போல நடந்து கொண்டிருக்க மைதிலி அவனைத் திட்டி கொண்டிருந்தாள்.
“தம்பி அவளை நீ அவங்க முன்னாடி அடிக்கக் கை ஓங்கியிருக்கக் கூடாது”
“மீ அவ என்ன பேச்சு பேசறா? இங்க புழு பூச்சி மாதிரி இருந்துட்டு”
“டேய் விடுடா”
“அவளுக்கு ஃபர்ஸ்ட் டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பனும்”
“அண்ணா சொல்றது கரெக்ட் தான் மீ. அவ என்ன துள்ளு துள்ளறா. எனக்கு வந்த ஆத்திரத்துக்கு அப்படியே அவ கைய, காலக் கட்டி தூக்கிட்டு வந்திருக்கனும்னு தோணுது”
“அவசரப்படாத சசி. கொஞ்சம் பொறுமையா தான் இதை டீல் பண்ணனும்”
“என்னமா சொல்றே?” எனச் சந்திரன் காட்டமாகக் கேட்க
“ஆமாடா. நம்ம வக்கீல போய்ப் பார்த்து டிவொர்ஸ் நோட்டீஸ் அனுப்பலாம். அப்படியே இதுங்க கிட்ட கெஞ்சற மாதிரி நடிக்கலாம். எப்படியும் நோட்டீஸ் பார்த்தாலே அம்மாவும், மகளும் பதறியடிச்சிட்டு வந்துடுவாங்க”
“மீ எனக்கென்னமோ அவங்க அப்படி வருவாங்கன்னு தோணல”
“டேய் நீ ரொம்ப யோசிக்காத. கண்டிப்பா உன்னோட மாமியார்னால இதெல்லாம் தனியா சமாளிக்க முடியாது. நேத்ராவை இங்க அனுப்பி விட்டுடு வா. அப்புறம் இருக்கு அவளுக்கு”
“நீ சொல்றதெல்லாம் கரெக்ட் தான் மீ. ஆனா நம்ம ஏன் அவங்க கிட்ட கெஞ்சணும்?”
“எல்லாம் நடிப்பு தான்டா. என்னங்க நீங்க அவ சித்தப்பா கிட்ட பேசுங்க” என மைதிலி சரவணனை பார்த்து சொல்ல அவன் சரி எனத் தலையாட்டினான்.
சிறிது நேரம் ஏதேதோ யோசித்த மைதிலி,
“டேய் அவ பூபாலன் அண்ணா பத்தி ஏதோ சொன்னாளேடா?”
“ஆமா மீ. என்கிட்ட ராங் மெஸேஜஸ் எல்லாம் காட்டினா. நான் அந்த மெஸேஜ் எல்லாம் டெலிட் பண்ண சொல்லிட்டேன்”
“நல்ல வேலை பண்ண தம்பி. அப்போ நமக்கு எதிரா அவகிட்ட எந்த ஆதாரமும் இருக்காது தானே?”
“இல்ல மீ”
“அவளை ஏதாவது பண்ணி வீட்டுக்கு வரவைக்கணும். இல்லேன்னா நம்ம கௌரவம் என்னாகிறது?” என்றவள்
“அவ மட்டும் இங்க வரட்டும். அவ அவங்க வீட்டையே மறந்திடணும். என்ன திமிர் உனக்கு? நீ வாடி. வந்தா நரகத்த தான் பார்ப்ப” எனக் கருவி கொண்டாள்.
இந்நிலையில் நேத்ராவை கூப்பிட்டுப் பேசிய சாந்தமூர்த்தியிடம் அவள் தனியாக வந்தால் தான் வருவேன் என்று அவள் சொன்னது அவர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை.
சந்திரன் ‘என்ன திமிர்?’ என நினைத்தவன் உறுதியாக மறுக்க அவன் அம்மா, அப்பாவோ வேண்டுமென்றே கண்டிஷன் போட்டு நல்லவர்கள் போலக் காட்ட நேத்ராவுக்கு ஆத்திரம் அதிகமாகியது.
“சித்தப்பா நீங்க எனக்குக் கல்யாணம் பண்ணி வெச்ச வரையும் போதும். எங்க வாழ்க்கைய நாங்க பார்த்துக்கறோம்” எனச் சொல்ல அமுதா உட்பட அனைவரும் அதிர்ச்சியானார்கள்.
“நேத்ரா பெரியவங்க கிட்ட மரியாதையா பேசு” என அமுதா அதட்ட…
“ம்மா நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க. அவ்ளோ பெரியவங்களா இருந்தா கல்யாணத்தப்ப ஏன்மா எழுதி வாங்குறாங்க?” எனக் கேட்க அமுதா அமைதியானாள்.
நேத்ரா சாந்தமூர்த்தியை பார்த்து, “சொல்லுங்க சித்தப்பா. நீங்க சின்ன வயசில இருந்து எல்லாமே பண்ணிங்க. ஏன் இன்ஜினியரிங் கூட நீங்க தான் படிக்க வைச்சீங்க. அப்படி இருக்கறப்ப ஏன் கல்யாணத்தப்ப கத்தி வெச்சு மிரட்டற மாதிரி கையெழுத்து வாங்கினீங்க?” எனக் கேட்க சாந்தமூர்த்திக் கோபமானான்.
“எங்கப்பா சொத்து. எனக்கு எப்போ பிரிக்கணும்னு தோணுதோ அப்போ தான் பிரிப்பேன்” எனச் சொல்ல நேத்ரா புருவம் உயர்த்தினாள்.
“ஓ… சரி” என்றவள்
“நான் உங்ககிட்ட தானே அவங்க அடிச்சாங்கனு ஃபர்ஸ்ட் சொன்னேன். ஏதாவது பண்ணீங்களா? எனக்குத் தெரிஞ்சு அம்மா, பாட்டிமா எல்லாம் பயந்துக்குவாங்கனு தான் உன்கிட்ட சொன்னேன். ஆனா எனக்கு ஏதாவது பிரச்சனை வந்துடுமோனு சாக்கு சொல்லி கழண்டு கிட்டவங்களுக்கு இப்போ என்ன அக்கற?”
“சொத்த எழுதி வாங்கின பிறகு நாங்க என்ன ஆனாலும் உங்களுக்குக் கவலை இல்ல. இப்போ அவங்க போன் பண்ணதுக்கப்புறம் தான் உங்களுக்குக் கல்யாணம் பண்ணி வெச்சதே நியாபகம் வருதா?”
“போதும். நாங்க ரெண்டு பேரும் இப்போ தான் நிம்மதியா இருக்கோம். அவங்க ஊருக்குள்ள ரொம்ப நல்லவங்கன்னு காமிக்கணும்னு சீன் போடறாங்க. அதையே நீங்க வீட்டுக்குள்ள போடுறீங்க. போலிங்கள நம்பி ஏமாந்த வரையும் போதும். குட்பை” என்றவள்
“வாம்மா கிளம்பலாம்” என்று அமுதாவிடம் கூறியவள்
“இன்னொரு டைம் அங்க இருந்து போன் பண்ணாங்கனா உங்ககிட்ட நாங்க டச்ல இல்லனு கட் அண்ட் ரைட்டா சொல்லிடுங்க” எனச் சொல்ல சாந்தமூர்த்தி அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றான்.
அங்கிருந்து வரும் போதும் நேத்ராவுக்கு உள்ளுக்குள் குமுறிக் கொண்டு வந்தது.
என்ன தான் அவர்களிடம் தைரியமாகப் பேசிவிட்டு வந்தாலும் திரும்ப நடந்ததெல்லாம் நியாபகம் வர பெரும் மன அழுத்தத்திலிருந்தவள் மனம் கதிரை தேட நேத்ரா அவளுக்குப் போன் செய்ய அவனும் எடுக்கவில்லை.
அதனால் அவள் மனம் ஏமாற்றமடைந்தது.
ஏனோ இந்த உலகத்தில் தான் ரொம்பத் தனித்திருப்பது போல உணர்ந்தாள்.
அவள் புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வராமல் இருக்க மனதை மாற்ற போனை நோண்ட ஆரம்பித்த சமயம் அவனிடமிருந்து போன் வந்தது.
“பேபி என்னடா போன் பண்ணிருந்த? சாரிடா. நான் டிராவல்ல இருந்ததால கவனிக்கல” எனச் சொல்ல
“இப்ப எங்க இருக்கீங்க கதிர்?”
“வீட்ல தான்டா. நாளைக்குத் தான் சென்னை கிளம்பணும்” என அவன் சொல்ல சிறிது யோசித்த நேத்ரா…
“சரி கதிர். நாளைக்கு வாங்க. பேசிக்கலாம்”
“என்னாச்சு பேபி? சித்தப்பாவ பார்த்திங்களா? ஏன் இவ்ளோ மிஸ்ட் கால்ஸ்?” என் அவன் விடாமல் கேட்க
“அது கொஞ்சம் மைண்ட் சரியில்லைன்னு கூப்ட்டேன். நீங்க உங்க அம்மா, அப்பா கூட இருப்பீங்க. எவ்ளோ நாள் கழிச்சு ஊருக்கு போய் இருப்பீங்க. சாரி கதிர். ஞாபகம் இல்லாம கூப்டுட்டேன்” என அவள் விளக்க
‘நான் என்ன கேட்டா இவ என்னா சொல்றா?’
“பேபி சித்தப்பா என்ன சொன்னாங்க?”
“சந்திரன் இங்க டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பிட்டு அங்க சமாதான தூது அனுப்பிருக்கான்”
“என்ன பேபி சொல்ற?”
“அங்க சித்தப்பாக்கு அவனோட அப்பா போன் பண்ணி சாரி கேட்கறாங்க. மறுபடியும் அங்க வர சொல்லி சொல்றாங்க”
“என்ன?” எனக் கதிர் அதிர்ச்சியாக
“ஆமாடா. ஆனா இவங்க எல்லாம் ஆக்ட் பண்றாங்க. அங்க அவன் ஃபேமிலி ஆக்ட் பண்ணுது. இங்க இந்தச் சித்தப்பன் நல்லவன் மாதிரி ஆக்ட் பண்றாங்க. இவனுங்கள நம்பி நான் அங்கே போகணுமாம்” என்றவள் உடைந்து அழ ஆரம்பித்தாள்.
“பேபி என்னாச்சு? அழறியா?” என அவன் பதறி போய்க் கேட்க அதில் சுதாரித்தவள்
“இல்ல கதிர்” எனச் சொல்ல உன்னை நானறிவேன் என்பது போல அவன் தனக்குள் புன்னகைத்து கொண்டவன்…
“பேபி நீ இப்போ அமைதியா தூங்கினா உனக்கு நாளைக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு” என அவன் குழந்தையைச் சமாதானப்படுத்துபவன் போலச் சொல்ல அவளும் அவள் பிரச்சனையை மறந்து,
“என்ன சர்ப்ரைஸ்?” எனப் பரபரப்புடன் கேட்க
“அதுக்கு நாளைக்கு வரையும் நீ வெயிட் பண்ணனும்”
“போடா. உன்னை எல்லாம் வெச்சுகிட்டு” என அவள் திட்ட அதில் சிரித்தவன்…
“பேபி இப்போ சொன்னா அந்தச் சர்ப்ரைஸ் போய்டும். நாளைக்குப் பார்க்கலாம்” என அவன் சமாதானப்படுத்த…
“நாளைக்குத் தான் நீ வர மாட்டேன்னு சொன்னியே எரும?”
“அதைப் பத்தி நீ ஏன் கவலைப்படற? கெட் ரெடி ஃபார் தட்” என்றவன்
“இதையே யோசிச்சிட்டே நீ தூங்குவியாம். ஸ்வீட் பேபி தான் நீ” எனச் சொல்ல
“சரிடா. வெச்சிடறேன்” என்றவள் சொல்ல அவன் சிரித்தபடியே போனை கட் செய்தான்.
**********
அடுத்த நாள் அலுவலகத்திற்கு வந்த நேத்ரா அவனைத் தேட அவனோ அவள் கண்களில் சிக்கவில்லை.
அதில் கடுப்பான நேத்ரா அவன் மேல் கோபமாக இருக்க அவள் அலுவலகத்தை விட்டு வெளியே வந்த வேளையில் கதிரிடமிருந்து போன் வந்தது.
“பேபி” என அவன் ஆசையாகக் கூப்பிட அவளோ
“பக்கி எரும மாடு. எங்கடா போன? உன்னை காலையில இருந்து தேடினேன்” எனச் சொல்ல
“வாவ்… என் பேபி என்னைத் தேடினாங்களா?” என அவன் சந்தோஷமாகக் கேட்க அவளுக்கு இருந்த கோபத்தில் அவன் சொன்னதைக் கவனிக்கவில்லை.
“டேய் உன் மேல நான் கொலைவெறில இருக்கேன். நீ மட்டும் நேர்ல வந்த அவ்வளவுதான்” எனச் சொல்ல
“அப்படியா. என்ன பண்ணுவே?” என்று கேட்டபடி அவள் முன்னால் வந்து நின்றவன் ஒற்றைப் புருவத்தை உயர்த்த
“உன்ன” என்றவள் தனது கைப்பையால் அவனை அடிக்க ஆரம்பிக்க அவனும் பயந்தது போல் அங்கும் இங்கும் ஓடி ஆரம்பித்தான்.
“ஏய் ராட்சசி. அடிக்காதடி. அதனால தான் இன்னைக்கு நைட் கிளம்புறவன் கூட உன்னை பார்க்கறதுக்காகக் காலைலயே கிளம்பி வந்தேன்” எனச் சொல்ல அவளுக்குக் குற்ற உணர்வாகி போனது.
“சாரி” என அவள் தலைகுனிந்தபடி சொல்ல
“ஏய் உனக்கு இது விட்டா வேற ஒண்ணும் தெரியாதா?” என்றவன்,
“வா. கார்ல போய்ட்டே பேசலாம். லேட்டாகுது” என அவன் அவள் கூட்டி போக
“டேய் என்ன சர்ப்ரைஸ்டா? அதை ஃபர்ஸ்ட் சொல்லு” என அவள் கேட்க அவனும் சிரித்தபடியே அதைக் காட்ட தன்னை மறந்து நேத்ரா அதனைப் பார்த்தாள்.
