அடுத்த நாள் ஓவியனை பார்க்க மகேந்திரன் வந்திருந்தான்.
“டேய் நீ எங்க இங்க?”
“ண்ணா சாரிண்ணா. உங்கள தனியா விட்டுட்டு போய்ட்டு எனக்கு கஷ்டமா இருந்தது. கண்ணன் அண்ணா தான் நான் பார்த்துக்கறேனு சொன்னாங்க. அதனால தான் போனேன் அண்ணா” என்று மன்னிப்பு கோரும் குரலில் பேசினான்.
“சரிடா. நான் வர வரையும் நம்ம ஷாப்ஸை நல்லா பார்த்துக்கோ” என்று கூறினான்.
“இப்போ உங்கப்பா எப்படி இருக்காருடா?”
“பரவாயில்லணா. மைல்ட் அட்டாக்னு சொன்னாங்க. கண்ணன் அண்ணா பணம் கொடுத்தாங்க” என்றான்.
“சரிடா. அப்பப்போ அங்கயும் கவனி. நான் நம்ம தினேஷையும் கடைய பார்த்துக்க சொல்றேன்” என சொன்னவனிடம் சரி என்றவன் அங்கிருந்து கிளம்பினான்.
ஓவியன் அடுத்து என்ன செய்வது என்பது பற்றி யோசிக்கையில் விமல் ராஜ் அங்கு வந்தார். அவர்களது குடும்பம் அன்று காலை தான் சென்னை வந்தது.
அகிலவேணி நடந்ததை சொல்லவும் பதறி போய் விசாரிக்க வந்து விட்டார்.
“ஓவியன் எப்படி இருக்கீங்க?”
“பரவாயில்ல அங்கிள்”
“நடந்தது எல்லாம் கேள்விப்பட்டேன்பா. என்னை மன்னிச்சிடு” என்று வருத்தமான குரலில் கூறினார்.
“விடுங்க அங்கிள். யார் யார் எப்போ மாறுறாங்கனே தெரிய மாட்டேங்குது” என்று விரக்தியான குரலில் கூறினான்.
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது புவனாவும், ப்ரீத்தியும் வந்தார்கள்.
“இப்போ எப்படி இருக்கு ஓவியன்?” என்று அவர் விசாரித்தார்.
“இன்னும் பெய்ன் இருக்கு ஆன்ட்டி. நீங்க எப்படி இருக்கீங்க?” என்றவன்
“ஏய்… ப்ரீத்தி குட்டி எவ்ளோ வளர்ந்துட்ட?” என்று புன்னகையுடன் கேட்க “அண்ணா” என்றவள் சிணுங்கினாள்.
“என்ன படிக்கிற?” என்று விசாரித்தவன் அவளுக்கு படிப்பு சம்பந்தமான அறிவுரையும் வழங்கினான்.
முன்னொரு காலத்தில் இந்த வீட்டில் உள்ள அனைவரிடமும் நன்றாக பழகியவன் தான். ஆனால் இப்போது… என்றவனுக்கு நினைவுகள் கசந்து வழிந்தது.
“ஹேய் யங் பாய்… என்ன நீ இப்படி திங்க் பண்ணிட்டு இருக்க?”
“ஒண்ணும் இல்ல அங்கிள்” என்றவன் “அங்கிள் நான் நம்ம டிரான்ஸேக்ஷன்ல இருந்து விலகிக்கலாம்னு இருக்கேன்” என்று தயங்கிய குரலில் கூறினான்.
“என்ன சொல்ற ஓவியா?”
“இல்ல அங்கிள். என்னால மத்தவங்களுக்கு எதுக்கு சங்கடம்? அவருக்கு நான் இப்ப வீட்டுக்கு வந்தது பிடிக்கலனு எனக்கு தெரியும். நானும் அவாய்ட் பண்ணலாம்னு எவ்ளோவோ டிரை பண்ணேன். ஆனா நித்திலா மேடம் கூட்டிட்டு வந்துட்டாங்க. இனியும் நான் யாருக்கும் தொந்தரவா இருக்க விரும்பல அங்கிள்”
“கமான் ஓவியா. எதுக்கும் எதுக்கும் நீ முடிச்சு போட்டு பேசற?”
“நல்லா சொல்லுங்க சித்தப்பா. காலைல இருந்து இப்படியே சொல்லிட்டு இருக்கான். என்னால சமாளிக்க முடியல”
“டேய் புரியாம பேசாத. இப்பவே அடிக்கற வரையும் போனவரு என்ன வேணும்னாலும் பண்ணுவாரு. விடு” என்று சொல்லியவன் பின் ஞாபகம் வந்து கண்ணனை பார்க்க அவன் கண்களில் அடிப்பட்ட வலி தெரிந்தது.
“சாரி கண்ணா”
“நீ உண்மைய தானே சொன்ன. விடு. ஆனா நாங்க இத்தனை பேர் இருக்கோமே உன்னை அப்படியே விட்ருவோமா?” என்று கேட்டான்.
“அப்படி இல்லடா. ஆனா என்னனு சொல்ல தெரியல”
“நீ ஒண்ணும் குழப்பிக்காத” என்றவன் சொல்ல அவனும் அமைதியானான்.
என்னதான் ஓவியன் மீது பழி போட்டாலும் நடந்த நிகழ்ச்சியை அறிந்த தர்மராஜிற்கு உடல் பயந்து நடுங்கியது. கண்ணனும், நித்திலாவும் அவரை விளாசி விட்டார்கள்.
அவரது வீட்டினர் எப்போதும் இவரை முறைப்பாய் பார்த்தபடி இருக்க அது வேறு அந்த மனிதருக்கு ஓவியன் மேல் கோபம் பொங்கிக் கொண்டு வந்தது.
அதில் ரத்னத்திற்கு போனை போட அவரது மனைவி அன்னபூரணி எடுத்தார்.
“பூரணி உன் பையன் என்ன நினைச்சிட்டு இருக்கான்? உன்னை நம்பி தானே எம் பொண்ண கொடுக்க சம்மதிச்சேன். அவன் ஏன் இவ்ளோ இர்ரெஸ்பான்ஸிபிளா இருக்கான்? எனக்கு ஒரு போன் கூட பண்ணி பேசல. இப்படிலாம் இருந்தா நான் இந்த மேரேஜ் இத்தோட ஸ்டாப் பண்ண வேண்டி வரும்” என்று அவர் இறுகிய குரலில் கேட்க அந்த பக்கம் இருந்த அன்னபூரணி பதறினார்.
“என்னாச்சுணா?அவன் அப்படிலாம் இருக்க மாட்டானே. ஏன்னா இப்படி பேசறீங்க?” என்று பதட்டமான குரலில் கேட்டார்.
“ஏன் ஒண்ணும் தெரியாத மாதிரி பேசற? உன் புள்ள உன்கிட்ட எதும் சொல்லலையா?”
“இல்லண்ணா. அவன் நைட் லேட்டா தான் அண்ணா வந்தான்”
“இங்க பாரு. உங்கிட்ட நான் எந்த விளக்கமும் கேட்கல. அவன் எனக்கு போன் பண்ணியிருக்கணுமா? இல்லையா?” என கேட்க “ஆமாண்ணா” என்று சொன்னார்.
“என்ன ஆமாண்ணா? கூட இருக்கற ஆள் எப்படிப்பட்ட ஆள்னு கூட தெரியாம அப்படியே விட்டுட்டு போவானா? அவனுக்கு வேலை இருக்குனா வீட்ல வந்து விட்ருக்கணும் இல்ல” என்றவர் கேள்வியில் அன்னபூரணி என்ன சொல்வதென திணறினார்.
“அண்ணா இவன் அர்ஜென்ட்டா கிளையண்ட் வந்திருக்காங்கனு சொல்லிட்டு இருந்தான்” என்றவர் ஞாபகம் வந்தது போல கூறினார்.
“ஏதாவது பதில் சொல்லணும்னு பேசாத பூரணி. என் பொண்ணுக்கு மட்டும் ஏதாவது ஆச்சுனா உங்க எல்லாரையும் தூக்கி உள்ள வச்சுடுவேன்” என்று அவர் மிரட்டியதில் பூரணி அதிர்ச்சியில் உறைந்து போனார்.
‘ஐயோ… முதலுக்கே மோசம் ஆயிடும் போல’ என்று திடுக்கிட்டவர் அவரிடம் பொறுமையாக பேசி விஷயத்தை கறந்தார்.
‘எங்க போனாலும் இந்த சனியன் நந்தி மாதிரி வருது? இருடா. உனக்கு ஆப்பு வைக்கிறேன்’ என்று சூளுரைத்தவர் “அண்ணா அவனை நம்பாதீங்க. அவனே ஆள் செட் பண்ணிருப்பான்” என்று ஏத்தி விட்டார்.
“என்ன சொல்ற?”
“ஆமா. நீங்க இப்போ பாருங்க. அவனை முன்ன உங்க ஃபேமிலில இப்படி பார்த்துக்கிட்டாங்களா? இப்போ நீங்க சொல்றதை பார்த்தா ராஜ உபசரிப்பு போலண்ணா. நீங்க எதுக்கும் எச்சரிக்கையா இருந்துக்கோங்க” என்றவர் மேலும் சிலது பேசிவிட்டு வைக்க இங்கே தர்மராஜ் அதிர்ச்சியில் வெலவெலத்துப் போய் நின்றார்.
போனை கட் செய்த பூரணி விஷாலை கூப்பிட்டார்.
“என்னமா? வேலை இருக்கு. ஏன் கூப்பிட்டுட்டே இருக்கீங்க?” என்று கத்தியபடியே வந்தான்.
“விஷால் ரெண்டு நாள் முன்னாடி நீ நித்திலாவை மீட் பண்ணியா?”
“ஏன் உங்ககிட்ட சொல்லிட்டு தானே போனேன். இப்போ என்ன திடீர் கேள்வி?”
“கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுடா”
“ஆமாமா. பட் அர்ஜன்ட் வொர்க்னால என்னால அவகிட்ட சரியா பேச முடியல”
“அப்போ யார் உன்கூட இருந்தா?”
“வாசு அங்கிள்”
“அந்தாளா? அவன் அங்க எங்க வந்தான்? அவன் நித்திலாகிட்ட நடந்துக்கிட்டது சரியில்ல. இப்படியே போனா இந்த கல்யாணம் நடக்காதுனு சொல்றாரு டா அண்ணா எவ்ளோ சொத்து இருக்கு? நமக்கு தெரியாம எங்கயும் போய்ட கூடாதுனு தான் நான் கல்யாண பேச்சை ஆரம்பித்தேன். இப்போ முதலுக்கே மோசம் வந்துரும் போல. ஃபர்ஸ்ட் நம்ம நித்திலா வீட்டுக்கு போகலாம் டா” என்றவர் சொல்ல மூவருமாக சேர்ந்து அவள் வீட்டுக்குச் சென்றனர்.
அவர்கள் உள்ளே நுழையும் போது நித்திலா ஓவியனுக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருக்க அவன் அவள் முகத்தை பருகியபடி புன்னகையுடன் சாப்பிட்டான்.
அதை பார்த்தவர் வயிறு பற்றி எரிந்தது.
சாப்பிட்டபடியே திரும்பியவன் கண்களில் விஷால் பட்டான்.
‘இவங்க எங்க இங்க?’ என்று சிந்தனை ஓடினாலும் ஓவியன் அவர்களை கண்டு கொள்ளவில்லை.
“நித்திலா… எப்படி இருக்க மா?” என்று அன்னபூரணி புன்னகையுடன் கேட்டார்.
“நல்லா இருக்கேன் ஆன்ட்டி” என்றவளிடம் “இவன் எங்கம்மா இங்க வந்தான்?” என்று முகத்தை சுழித்தபடி கேட்டார்.
ரத்னம் கூட ஓவியனை அதிர்ச்சியாக பார்த்தபடி நின்றார்.
“ஏன் ஆன்ட்டி நான் தான் கூட்டிட்டு வந்தேன்” என்று சொன்னவளை அதிர்ச்சியோடு பார்த்தார்.
“நீயா?” என்றவர் முகம் எப்படியோ போக அதைப் பார்த்துக் கொண்டிருந்த நித்திலாவுக்கு பற்றிக் கொண்டு வந்தது.
“ஆன்ட்டி என்ன வேணும் உங்களுக்கு?” என்று கோபமான குரலில் கேட்டாள்.
“ஏன் ஆன்ட்டி நான் எங்க சின்னாபின்னாமாகிட்டனோனு பார்க்க வந்தீங்களா?” என்று கேட்டாள்.
அவள் கேட்ட வார்த்தையில் ஓவியன் பதறி போய் வந்தான்.
“என்ன பேசற நித்திலா?” என்று அதிர்ச்சியாய் கேட்டான். அவனுக்கு பக்கத்தில் கேட்டுக் கொண்டிருந்த தர்மராஜுக்கும் உள்ளமெல்லாம் பதறியது.
என்ன இவள் இப்படி பேசுகிறாள் என்று.
“நீங்க ஏன் பதட்டப்படறீங்க ஓவியன்? இவங்க பையன் இப்ப வரையும் என்னைய பத்தி ஒரு வார்த்தை கேட்கல. நம்ம வீட்டுக்கு வந்து நம்மகிட்டயே முகத்தை சுழிச்சிட்டு பேசுறாங்க?” என்றவள் கேட்க ‘இவ அமைதியா இருப்பானு பார்த்தா நமக்கே டஃப் கொடுப்பா போலயே’ என்று நினைத்தவர்
“என்னடா புள்ளய பார்த்து ரொம்ப நாளாச்சுனா கேட்டா நீ இப்படி பேசுற?” என்று சிரித்துக் கொண்டே பேசினார்.
“உங்க அக்கறை எல்லாம் எனக்கு தெரியும் மிஸஸ்.அன்னபூரணி” என்றவன் “என்ன பிள்ளைய வளர்த்து வெச்சிருக்கீங்க?” என்றபடி விஷால் முன்னால் சென்று நின்றவன் “ஏன்டா உன்னை தேடி தானே அந்த பொண்ணு வந்தது? ஒரு பொண்ண எப்படி பார்த்துக்கணும்னு தெரியாதா?” என்றவன் அவனை கன்னம் கன்னமாக அறைந்தான்.
அவனது அறையில் விஷாலுக்கு பொறி கலங்கியது.
“ஹேய் ஓவியன் என்ன பண்றீங்க அடிப்பட்ட கைய வைச்சிக்கிட்டு?” என்று நித்திலா பதறினாள்.
“மேடம் என்னோட இன்னொரு கை நல்லா தான் இருக்கு. யாராவது ஏதாவது பேசட்டும். நான் கவனிச்சிக்கறேன்” என்றவன் கோபத்தில் திகைத்து போய் அவனை பார்த்தாள்.
“இனிமேல் அவங்க உன்னால கஷ்டப்பட்டாங்கனு கேள்விப்பட்டேன். மாறு கால், மாறு கை வாங்கிடுவேன். அது சரி. உன்னை சொல்லி என்ன பிரயோஜனம்? உங்க குடும்பத்துக்கு எங்க புத்தி வர போகுது?” என்றவன் இன்னும் அடி வெளுத்தான்.
அவர்களை வரவேற்க வந்த தர்மராஜ் அவன் அடித்த அடியை பார்த்து பொறி கலங்கி நின்றார்.
இவன் அன்றைக்கு பார்த்த ஓவியன் இல்லை. இவனது கம்பீரமும், ஆளுமையும் அவரை வாயடைக்க வைத்தது.
“வாங்க எமதர்மா… பாசக்கயிறு ரொம்ப வேகமாக இந்த பக்கம் வருது போல. உன்னால மேடம்க்கு எதுனா ஆச்சு நீ என்ன ஆவேனு தெரியாது” என்று அவளது அப்பாவிடமே அவளுக்காக சண்டையிட்டான்.
“ஏய்… அவங்க என் சம்பந்தி. என் பொண்ண பத்தி நீ கவலைப்படாதே” என்றவர் பேசியதை கேட்டு துணுக்குற்றான்.
“சம்பந்தியா?”
“விஷாலுக்கு தான் நித்திலாவை பேசியிருக்கு” என்றவரின் பேச்சில் உறைந்து போய் நின்றான்.
“என்ன சொல்றீங்க?” என்றவன் அதிர்ச்சியில் சிலையாய் நின்றான்.
பின்னர் தலையை உலுக்கிக் கொண்டவன் “நீ என்ன வேணா பண்ணு. ஆனா மேடமை யாராவது கஷ்டப்படுத்தினீங்க… மைன்ட் இட்” என்றவனின் ஆளுமையில் அனைவரும் திகைத்து போய் அவனை பார்த்தார்கள்.
தர்மராஜிற்கு இப்போதும் அவன் விஷாலை அடித்தது கண் முன்னே நின்றது.
அன்று மட்டும் அவன் தன்னை அடித்திருந்தால்… நினைத்தவருக்கு அவனது ஆளுமையில் உடல் நடுங்கியது.
யாராக இருந்தாலும் அசராமல் அடிக்கும் அவன் ஆளுமையை பார்த்து இவர் பீதி அடைந்தார்.
அனைவரிடமும் ரத்னம் குடும்பம் மன்னிப்பு கேட்டனர்.
ஆனால் அண்ணாமலை இறுதியாக நான் சொல்வது தான் முடிவு என்றவரை எப்படி சமாதானம் செய்வதென்று தெரியாமல் திணறினார்கள்.
தர்மராஜின் பேச்சில் அதிர்ந்தவன் அதற்கு மேல் அங்கிருக்க பிடிக்காமல் வந்து விட்டான்.
அவனது உள்மனம் ஏனோ அமைதியில்லாமல் இருந்தது. அது ஏனென்று புரியாமல் திணறினான்.
எதுவோ அவனை துரத்துவது போல இருக்க அதிலிருந்து தப்பிப்பவன் போல கண்களை மூடிக் கொண்டான். பின் அவன் இரவு வரையும் வெளியே வரவில்லை.
இரவில் அவன் தூக்கம் வராமல் வெளியே வந்த போது நித்திலா பேயறைந்ததை போல் அமர்ந்திருந்தாள்.
