கண்ணன் கன்ஸ்ட்ரக்ஷன் சம்பந்தமாக கிளைண்டை வெளியே சந்திக்க நேர்ந்தது. அவருடன் தொழில் சம்பந்தமாக பேசியவன் அங்கிருந்து மதியம் கிளம்பினான்.
அவன் அங்கிருந்து கிளம்பும் போது மொபைலை எடுத்து பார்க்க அதில் நிறைய மிஸ்டு கால் இருந்தது.
‘ஓ… மை காட்… என்ன ஆச்சு? ஏன் மாத்தி மாத்தி கூப்பிட்டுருக்காங்க?’ என்று பதறியவன் நித்திலாவிற்கு அழைத்தான்.
“குட்டிமா ஏன்டா ஃபார்ட்டி மிஸ்ட் கால்? பாட்டிமாவும் நிறைய டைம் கூப்பிட்டுருக்காங்க. என்னடா ஆச்சு?” என்று பதறி அடித்து கேட்டான்.
“டேய் எருமை எவ்வளவு அவசரமா கூப்பிடறோம்? போனை எடுக்க மாட்டேங்கற?” என்று கத்தினாள்.
“நித்தி மா… சாரிடா. இங்க ஒரு கிளைன்ட் கிட்ட பேசிட்டு இருந்தேன். அதான் எடுக்கல” என்று சமாதானம் சொன்னான்.
“நீ ஃபர்ஸ்ட் வீட்டுக்கு வா. அப்பா ஓவியனை அடிச்சு போட்டாரு. அவரு மயங்கி இருக்காரு. எங்களையும் மிரட்டிட்டு போயிருக்காருடா. நீ சீக்கிரம் வாடா” என்றவள் அழுதுக் கொண்டே விவரம் சொன்னாள்.
“ஏய்… நித்திலா… என்ன சொல்ற? அவனை எதுக்கு அப்பா அடிக்கணும்?” என்று அதிர்ச்சி அடைந்தான்.
“டேய் நீ ஃபர்ஸ்ட் கிளம்பி வா. அவ்ளோ தான்” என்றவள் சத்தம் போட்டாள்.
“நான் காரை எடுத்திட்டேன் குட்டிமா” என்றவன் அசுர வேகத்தில் தனது வீட்டிற்குச் சென்றான்.
இவன் வீட்டிற்குச் சென்ற போது வாட்ச்மேனிடம் சொல்லி அவனை உள்ளே கொண்டு வந்தவர்கள் பாட்டியின் அறையில் படுக்க வைத்தார்கள்.
வீட்டினுள் வந்தவன் ஓவியனை பார்த்ததும் பதறினான்.
“டேய் ஓவியா இங்க பாரு என்னாச்சு உனக்கு? கண்ணை முழிச்சி பாருடா” என்றவன் ஓவியனை எழுப்ப முயற்சித்துக் கொண்டிருந்தான்.
“டேய் ஏற்கனவே அவருக்கு ரொம்ப அடி. ஃபர்ஸ்ட் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும்டா” என்று சொல்ல கண்ணன் ஓவியனை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினான்.
அவனை பரிசோதித்த மருத்துவர் “அவர் கை, கால் ஃபிராக்சர் ஆகியிருக்கு. ஷோல்டர்ல ஆல்ஸோ அடிப்பட்டிருக்கு. நாங்க அதுக்கு தேவையான ட்ரீட்மெண்ட் கொடுத்திருக்கிறோம். ரெண்டு நாள் அப்சர்வேஷன்ல இருக்கணும்” என்று சொல்ல அவர்கள் அதிர்ச்சி ஆனார்கள்.
‘ஓவியனை அடித்து போடும் அளவுக்கு அவனது அப்பாவுக்கு என்ன அவ்வளவு வெறி?’
அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
காலையில் கம்பீரமாக இருந்தவன் இப்போது காய்ந்த சருகாக கிடந்தான்.
அவனை இப்போது தனி அறைக்கு மாற்றி இருந்தார்கள்.
அவனது தலையை வருடியவன் “நித்திலா என்ன நடந்தது? அப்பா ஏன் இப்படி பிஹேவ் பண்ணாங்க?” என்றவன் கேட்டதும் அவள் நடந்ததை சொன்னாள்.
அதை கேட்டவன் அதிர்ச்சியில் உறைந்து நின்றான்.
“என்ன சொல்ற நித்திலா?”
“நடந்ததை தான் சொல்றேன். அப்பா ஏன்டா ஓவியனை இப்படி மாட்டை போட்டு அடிக்கற மாதிரி அடிச்சிருக்காரு. அவன் மேல இவருக்கு அப்படி என்ன வன்மம்? நேத்து ஓவியன் அப்பா சட்டைய பிடிச்சப்ப எனக்கு அவ்ளோ கோபம் வந்தது. ஆனா ஓவியனை அடிக்கறப்ப அப்பா சொன்ன வார்த்தைகள்… எனக்கு நினச்சாலே நடுங்குதுடா. நம்ம அப்பா எப்படி இப்படி மாறினாரு” என்று உடைந்த குரலில் கேட்டாள்.
அவள் சொல்ல சொல்ல காலையில் அவனை சந்தித்த போது தான் பேசிய வார்த்தைகள் ஞாபகம் வர அவனுக்கு குற்ற உணர்வாக வந்தது.
‘கடவுளே நானும் அதானே பேசி வெச்சேன்’ என்றவனுக்கு எப்படி அவனை சமாதானப்படுத்துவோம் என்று புரியாமல் குழம்பி நின்றான்.
“டேய் என்ன ஆச்சு? நீ ஏன் மூஞ்சை தொங்க போட்டுட்டு இருக்க?” என்றவள் கேட்க முதலில் தயங்கியவன் பின்பு நடந்ததை சொன்னான்.
கண்ணன் சொன்னதை கேட்டவள் அதிர்ச்சியில் சிலை போல நின்று விட்டாள்.
“நீ கூடவாடா இப்படி பேசின? டேய் அவரு உன்னோட உயிர் ஃபிரண்டுடா. நீயே இப்படி பேசுவியா? எங்க முன்னாடியே அவர் ஃபேமிலி பத்தி கேவலமா பேசின அப்பா இப்போ நேத்து எப்படி பேசிருப்பாருனு டவுட்டா இருக்குடா” என்றவள் சொல்ல அவளது கணிப்பில் கண்ணன் அதிர்ச்சியில் உறைந்தான்.
“குட்டிமா”
“பேசாதீங்கடா. ஏன்டா அவரு நமக்கு ஹெல்ப் தானேடா பண்ணாரு. அதுக்கு அந்த மனுசனை அப்படி போட்டு அடிப்பாரா டா. நான் சொல்ல வர்றதை என்னனு கூட கேட்கலடா. ஓவியன் இல்லேனா இன்னைக்கு…” என்றவளுக்கு உடல் நடுங்கியது.
“குட்டிமா… ஒண்ணுமில்லடா” என்று அவளை அணைத்து ஆறுதல்படுத்தியவன் அடுத்து பேச ஆரம்பிக்கும் முன் வீட்டில் இருந்து போன் வந்தது.
“ஓவியன் எப்படி இருக்கான் கண்ணா?” என்று அண்ணாமலை கேட்டார்.
“தாத்தா ட்ரீட்மெண்ட் கொடுத்திருக்காங்க. அவன் மயக்கத்துல இருக்கான்” என்று சொன்னான்.
“ஓகே. நாங்க அவன் முழிச்சப்பறம் வரோம். போன் பண்ணு” என்றவர் காலை கட் செய்தார்.
எந்த ஒரு சூழ்நிலையிலும் கலங்காதவன் இப்போது குற்றுயிரும் குலையுயிறுமாக படுத்திருப்பதை பார்க்க அவனுக்கு கண்களில் கண்ணீர் வரும் போலிருந்தது.
அதுவும் தனது அப்பாவா? இப்போது வரையும் அவனால் நம்ப முடியவில்லை.
அவனது உடல் முழுக்க கட்டு போட்டிருந்தார்கள். இன்னும் அவன் கண் விழிக்கவில்லை.
நித்திலா குடும்பத்தினர் அனைவரும் சிறிது நேரத்தில் மருத்துவமனைக்கு வந்தனர்.
“என்ன சொல்றாங்க கண்ணா டாக்டர்?”
“மருந்து கொடுத்திருக்காங்க தாத்தா. இன்னும் கொஞ்ச நேரத்துல முழிச்சிடுவான்” என்றவன் குரலில் அவ்வளவு வேதனை இருந்தது.
“கவலைப்படாத கண்ணா” என அவனை தேற்றியவர் யோசனையில் ஆழ்ந்தார்.
கண்ணன் வெளியே சென்றிருந்த வேளையில் ஓவியன் கண் விழித்தான்.
கண் விழித்தவனுக்கு நாக்கு வறண்டு பேச முடியாமல் போனது. அவனை கவனித்தவர் அவனுக்கு ஃபிளாஸ்க்கில் இருந்து தண்ணீர் ஊற்றி அவனை தனது மடியில் படுக்க வைத்து தண்ணீர் அருந்த வைத்தார்.
அவரது செயலில் அவனுக்கு கண்களில் கண்ணீர் வழிந்தது.
“ஒண்ணுமில்லப்பா. எஞ்சாமி ரொம்ப வலிக்குதா?” என்று வாஞ்சையோடு கேட்டவரை வயிற்றோடு இறுக அணைத்தவன் தன்னை மீறிய வேதனையில் வெடித்து அழுதான்.
அவனது அழுகை அவர்கள் இருவரையும் தூள் தூளாக சிதற செய்தது.
அவனது அழுகையை பார்த்து பதறியவர் “ஒண்ணுமில்ல சாமி ஒண்ணுமில்லபா” என்றவர் அவனது தலையை கோதி அவனை தேற்றிக் கொண்டிருந்தார்.
எப்படி இருந்த ஒருவனை இன்று கதற வைத்து விட்டானே என்று அவருக்கு தர்மராஜின் மேல் அவ்வளவு கோபம் வந்தது.
“தாத்தா… கா…ஃபி” என்றவனுக்கு ஓவியனது அழுகையை பார்த்து அவனது கண்களும் கலங்கியது.
அவனை சிறிது நேரம் அழவிட்டவர் “இப்போ எப்படி இருக்கு ஓவியா. எல்லாம் சரியாயிடும்” என்றவர் அவனது தலையை தடவி கொடுக்க அதை அனுபவிப்பவன் போல கண் மூடி அமைதியாக நின்றான்.
பிறகு சிறிது யோசித்தவர் “உன் அப்பா நம்பர் கொடுப்பா. இன்னும் உன் வீட்ல யார்கிட்டயும் சொல்லல” என்றவரின் பேச்சில் அவனது உடல் ஒரு நொடி அதிர்ந்து அடங்கியது. அதனை கவனித்தவரின் கண்கள் சுருங்கியது.
“எனக்கு யாரும் இல்ல தாத்தா. நான் தனியா தான் இருக்கேன்” என்றவனை அதிர்ச்சியோடு பார்த்தார்கள்.
‘இத்தனை நாளா உனக்கு என்ன தெரிஞ்சிது டா இவனை பத்தி? எப்போ பார்த்தாலும் உன் ஃபேமிலி பத்தி மட்டும் கதை அளப்பியே? அவனை பத்தி என்னைக்காவது யோசிச்சு இருக்கியா?’ ஓவியனின் பதிலில் அவனின் உள்மனம் சுட்டது.
“ஓவி உனக்கு ஜீஸ் வாங்கிட்டு வந்திருக்கேன். குடி” என்று கண்ணன் நீட்ட அவனை இறுகி போய் பார்த்தான்.
கண்ணனை பார்த்தவன் வேண்டாம் என்பது போல மறுப்பாக தலையசைத்தான்.
“குடிடா” என்றவனுக்கு அப்போது தான் அவன் கைகள் இரண்டிலும் கட்டு போட்டிருந்தது ஞாபகம் வந்தது.
“ஏன்டா குடிடானா எப்படி குடிப்பான்? அவனுக்கு நீயே கொடுடா” என்றவர் குடிக்க ஆரம்பித்தார்.
அவனால் கைகளை தூக்கவும் முடியவில்லை. அதே சமயம் அவனிடம் உதவி வாங்கி குடிக்கவும் பிடிக்கவில்லை. யாரும் இல்லாத தனது நிலையை எண்ணி அறவே வெறுத்தான்.
“குடிடா” என்று கண்ணன் அவனுக்கு அருகில் கொடுக்க வர அதில் திடுக்கிட்டு அவசரமாக பின் நகர்ந்தான். அப்போது அவனது முகம் வலியை காட்டியது.
அவனது செயலில் மனம் வலித்தாலும் தாங்கிக் கொண்டவன் அவனுக்கு கொடுக்க வர அப்போது ஒரு கை வந்து அதை வாங்கிக் கொண்டது.
“கண்ணா என்ன பண்ற? அவருக்கு இப்படி தான் கொடுப்பியா?” என்றவள் அன்னை போல அவனுக்கு குடிக்க கொடுத்தாள்.
இருவரும் நித்திலாவின் செயலை எதிர்பாராதவர்கள் திகைத்து நின்றார்கள்.
“நல்லா சொல்லு குட்டிமா. உன் அண்ணனுக்கு ஏழு கழுதை வயசாகுது. ஆனா யார்கிட்ட எப்படி நடந்துக்கணும்னு தெரியல” என்றவரை திடுக்கிட்டு பார்த்தான்.
“தாத்தா அவனுக்கும் அப்பாவோட சேர்ந்து மூளை குழம்பிடுச்சு தாத்தா” என்றவள் அவனை முறைத்தாள். கண்ணனோ எதுவும் பேச வாய் வராமல் நின்றான்.
“இன்னைக்கு மட்டும் ஓவியன் இல்லேனா நான் என்னவாகியிருப்பேனு எனக்கே தெரியல” என்றவளின் குரல் கரகரத்தது.
“மேடம் ஏன் இப்படி பேசறீங்க? நான் இல்லேனா வேற யாராவது உங்களை சேவ் பண்ணிருப்பாங்க. எதுவும் வொர்ரி பண்ணிக்காதீங்க மேடம்” என்று மென்மையான குரலில் அப்போதும் அவளை தேற்ற அவளுக்கு கண்கள் கலங்கியது.
“என்னை மன்னிச்சிடுங்க ஓவியன். நான் இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல” என்றவளின் கண்கள் கலங்கியது.
“இதெல்லாம் எனக்கு புதுசா மேடம்? நீங்க ஒண்ணும் வொர்ரி பண்ணிக்காதீங்க. என்னை கொலை பண்ணினா கூட இங்க யாரும் கேட்க மாட்டாங்க” என்று கசப்பாய் சொன்னவன் கண்களை மூடிக் கொண்டான்.
“கண்ணா உங்கம்மா பாட்டி எல்லாம் வந்தாங்களே? எங்க இருக்காங்க?” என்று கேட்டார்.
“வெளிய தான் வெயிட் பண்றாங்க தாத்தா”
“அவங்க கிட்ட ஓவியன் கண்ணு முழிச்சதை சொல்லலையா?”
“சொல்லிட்டேன் தாத்தா” என்றவன் சொல்ல அப்போது நித்திலாவின் அம்மா, பாட்டி இருவரும் வந்தனர். அவர்களை எதிர்பாராத ஓவியன் திகைத்தான்.
“பாட்டி” என்றவன் வாய் முணுமுணுக்க
“எங்கள மன்னிச்சிரு தம்பி. தர்மா இப்படி பண்ணுவான்னு நினைக்கல”
“பாட்டி என்ன பேசறீங்க?” என்று ஓவியன் பதறினான். அவனால் சரியாக பேசவும் முடியவில்லை.
“நீ உன்னை கஷ்டப்படுத்திக்காத தம்பி. இவரு இப்படி பண்ணுவாருனு நான் நினைக்கல” என்று சீதா மன்னிப்பு குரலில் கூறினார்.
“ஆன்ட்டி அதலாம் எதுவும் இல்ல ஆன்ட்டி” என்று ஓவியன் அவரிடம் சமாதானமாய் சொன்னான்.
பிறகு அவனிடம் சிறிது நேரம் பேசியவர்கள் அங்கிருந்து கிளம்பினார்கள்.
அவர்கள் போனதும் அப்படியே கண்களை மூடியவனுக்கு காலையில் இருந்து நடந்த நிகழ்வுகள் உள்ளுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.
பழைய நினைவுகளும் சேர்ந்து ஞாபகம் வர அவனால் நிம்மதியாக ஒரு நிமிடம் கூட கண்களை மூட முடியவில்லை.
அந்த நினைவுகளின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க கண் விழித்தவனை மூவரும் அதிர்வாக பார்த்தனர்.
“என்ன மேடம் என்னாச்சு?” என்று நித்திலாவை கேட்டான்.
“ஒண்ணும் இல்ல ஓவியன். நீங்க தேவையில்லாம எதுவும் நினைச்சி குழப்பிக்காம சாப்பிடுங்க” என்றவள் சீதா அவனுக்கு கொண்டு வந்த உணவை ஊட்ட வர அவளை திகைப்பாய் பார்த்தான்.
எப்போதோ ஏதோ ஒரு கை அவனுக்கு ஊட்டியது ஞாபகம் வந்தது. இப்போது அந்த உருவம் நித்திலாவின் உருவமாய் மாறி இருக்க தன்னை மறந்து அம்மா என்று முணுமுணுத்தான்.
“ஆ… காட்டுங்க ஓவியன்” என்றவள் ஊட்ட தோசை கூட அமிர்தமாய் உள்ளுக்குள் இறங்கியது.
“ஓவியன் உன்னை நாளைக்கு வந்து பார்க்கறேன். எதுனாலும் உனக்கு தாத்தா இருக்கிறேன். மனசை போட்டு குழப்பிக்காத” என்றவர் வாஞ்சையாய் தலையை வருடி கொடுத்தார்.
“சரி தாத்தா” என்றவன் தலையசைத்தான்.
“தாத்தா இவங்க ரெண்டு பேரையும் கூட கூட்டிட்டு போங்க. இவங்க ஏன் வீணா எனக்காக கஷ்டப்படறாங்க?”
“டேய் என்னடா பேசற? நானும் அமைதியா போலாம்னு பார்த்தா என்ன பேச்சுடா இது?” என்று கண்ணன் கோபமான குரலில் கேட்டான்.
“ஆமாங்க கண்ணன். இப்பவும் சுழ்நிலை ஏதும் மாறல. எனக்கு என் ஃபேமிலில யாரையும் தெரியாது. அப்படியே தெரிஞ்சா கூட அதை உங்களுக்கு காட்டிக்க மாட்டேன். நான் ஒரு அநாதை. என்னை யாராவது தப்பா பேசினா நான் சட்டைய பிடிப்பேன். மத்தவங்க வன்மத்தை என்னை அடிச்சு தீர்த்துக்குவாங்க. நீங்க ஏன் உங்க டைம் வேஸ்ட் பண்ணிட்டு… கிளம்புங்க. யார் அப்பானு தெரியாத நான் எதுக்கு உங்க பிரண்டா? வேணாம் கண்ணன். நான் பார்த்துக்கிறேன். நீங்க கிளம்புங்க” சொல்லும்போதே குரல் கமறியது.
“டேய் ஏன்டா இப்படி எல்லாம் பேசற. காலைல நீ சொன்னப்ப எனக்கு கோபம் வந்தது தான். ஆனா அப்புறம் அதை நான் தப்புனு ரியலைஸ் பண்ணிட்டேன். ப்ளீஸ்டா. சாரிடா” என்றவன் ஓவியனை இறுக அணைத்தான்.
ஆனால் ஓவியனோ எந்த உணர்வையும் காட்டாமல் அமைதியாய் இருந்தான்.
