“டேய் உன்னை யாரு இங்க வர சொன்னா?”
“ஓவியன்”
“நான் தான் யாரும் வேண்டாம்னு சொல்றேன்ல?”
“அப்புறம் ஏன்டா நித்திலா பேசினப்ப அமைதியா இருந்த?”
“அவங்க மனசு கஷ்டப்பட கூடாதுனு தான் அமைதியா இருந்தேன்” என்று மென்மையான குரலில் கூறினான்.
“நான் யாரையும் டிபெண்ட் பண்ணி இருக்கல. என்னை விட்ருங்க”
“ஓவியா டென்ஷனாகாதடா. ஏற்கனவே உடம்பு சரியில்லாம இருக்கற. ஏதாவது இழுத்து விட்டுக்க போற” என்று பதறிய குரலில் கூறினான் கண்ணன்.
“எதாவது இழுத்து விட்டா ஒரேயடியா போய் சேர்றேன்” என்றவன் எரிந்து விழுந்தான்.
“ஓவியா” என்றவன் பதறி போய் அவனை அணைத்துக் கொள்ள அவனிடம் இருந்து விடுபட திமுறியவன் ஒரு கட்டத்தில் அவன் தோளிலே கண்ணீர் வடித்தான். அவன் எவ்வளவு கட்டுப்படுத்தியும் அவனுக்கு கண்கள் கலங்க அதனை கட்டுப்படுத்த முடியவில்லை.
“ஓவியா என்னை நம்புடா. ஐயோ… ஏன்டா அழற? நான் பண்ணது தப்பு தான்டா. என்னை நாலு அடி கூட அடிச்சிடு. இப்படி இருக்காத” என்று சொல்ல
“என்னடா இன்னும் உங்க பஞ்சாயத்து முடியலையா?” என்றொரு குரல் கேட்டது.
“மேடம்” என்று ஓவியன் திகைப்பாய் பார்த்தான்.
“என்னடா மேடம்? ஒழுங்கு மரியாதையா இரண்டு பேரும் வீட்டுக்கு கிளம்புங்கடா. இந்த பக்கி நைட் ஃபுல்லா வீட்டுக்கு வராம காருக்குள்ளயே ஸ்டே பண்ணிட்டு புலம்பிட்டு இருக்கு. மகேந்திரன் இல்லனு கூட உங்களால ஒரு வார்த்தை சொல்ல முடியல” என்று கோபமான குரலில் சொன்னாள்.
“கண்ணா” என்று ஓவியன் அதிர்ச்சியாக பார்த்தான்.
“ஆமா. நீ போக சொல்லிட்ட. எனக்கு உன்னை விட்டு போக மனசில்ல இந்த நிலைமைல. அதான் அமைதியா காருக்குள்ள ஸ்டே பண்ணிட்டேன்”
“டேய் எருமை கார்ல ஸ்டே பண்ணேன்னு சொல்லாத. என் உயிரை எடுத்தனு சொல்லு.நைட் ஃபுல்லா தூங்க விடாம எனக்கு காதுல ரத்தம் வருது” என்றவள் மலமலவென கட்டளையிட்டாள்.
“கண்ணா ஓவியனுக்கு தேவையான டிரஸெஸ் எடுத்து வை. நீங்க அவன்கிட்ட என்ன டிரெஸ் வேணும்னு சொல்லுங்க. அவன் அரேன்ஜ் பண்ணட்டும். தென் நான் காஃபி போட்டுட்டு வரேன். ஓவியன் உங்களுக்கு கஞ்சி தான். ஓகேவா?” என்றவள்
“நான் ப்ரிப்பேர் பண்ணி வரதுக்குள்ள எல்லாம் பேக் பண்ணி வெச்சிருக்கணும்” என்றவள் கட்டளையாக சொல்லி செல்ல அந்த கட்டளையை மீற முடியாமல் ஓவியன் திகைத்து நின்றான்.
கண்ணன் கார் ஓட்ட தான் அவர்கள் வீட்டுக்கு போவது எப்படி சரியாகும் என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
“என்ன ஓவியரே… யோசனை எல்லாம் பலமா இருக்கும் போலயே?”
“நான் உங்க வீட்டுக்கு வந்துட்டு எதுக்கு சிரமம் மேடம்?”
“இங்க பாருங்க ஓவியன்.இங்க யாருக்கும் எந்த சிரமமும் இல்ல. தாத்தா தான் உங்கள கூட்டிட்டு வர சொன்னாரு. இனி எதுவும் வாய தொறக்க கூடாது. மூச்” என்றவள் சிறு பிள்ளையை அதட்டுவது போல அதட்ட ஓவியன் மெய் மறந்து அவளை பார்த்தான்.
அவன் கார் விட்டு இறங்கும் போது கொஞ்சம் தடுமாற கண்ணன் அவனை தாங்கி பிடித்தான்.
வீட்டினுள் அவன் சென்ற போது அவனை வரவேற்க அனைவரும் நின்றிருந்தனர்.
தாத்தா,பாட்டி,சீதா, விமல்ராஜ், புவனா, ப்ரீத்தி என அனைவரும் உடன் இருந்தார்கள்.
தர்மராஜ் அவனை பார்த்தவுடன் முகத்தை சுழித்தார்.
‘இவனுக்கா இவ்ளோ பில்டப்பு’ என்று அவரது முகம் அசூசையை காட்டியது.
ஓவியன் அனைவரிடமும் பேசியவன் தர்மராஜையும் கவனித்தபடி இருந்தான்.
“அப்பா இவனை ஏன் இங்க கூட்டிட்டு வந்தீங்க? இவன் ஆள் சரியில்லப்பா” என்று அடுத்த பஞ்சாயத்தை ஆரம்பித்தார்.
அண்ணாமலை அவனை அதிர்ச்சியாக பார்த்தார்.
“தர்மா நீயாடா இப்படி பேசற?” என்றவர் திடுக்கிட்டு கேட்டார்.
அதில் முகம் கன்றினாலும் அவரை தைரியமாக பார்த்தார்.
அவரை பார்த்தபடியே “ஓ… அப்படியா…” என தாடையை தடவியவர் “நீ எத்தனை நாள்ப்பா அவனோட பழகுன?” என்றவர் ஏதோ யோசனையில் அவரை ரௌத்திரமாக முறைத்தார்.
அவருடைய கண்களை பார்த்த தர்மராஜிற்கு இப்போது கூட பயம் மனதை கவ்வியது. அவர் கண்கள் பேசும் மொழியை கண்டவர் சிறிது நேரம் ஏதும் பேசாமல் அமைதியாய் இருந்தார்.
பிறகு இதை இப்படியே விட கூடாது என நினைத்தவர் “ப்பா” என்று ஆரம்பித்தார்.
“சொல்லுப்பா” என்றவர் “ஆனா நீ இப்படி சொல்றது தான் ஆச்சரியமா இருக்கு. நீ பிஸினஸ்லயும் இதை தான் பண்றியா?” என இறுகிய குரலில் கேட்டார்.
“அப்பா எதுக்கு சம்பந்தம் இல்லாம பிஸினஸை இழுக்கறீங்க?” என்றவர் பின் அமைதியான குரலில் “இல்லப்பா. ரத்னம் ஒய்ஃப் பூரணி தான் இவனை பத்தி சொன்னாங்க” என்று சொன்னார்.
“ஓ… அவங்களுக்கு எப்படி பழக்கம்?” என்றவரின் குரலில் ஆச்சரியம் நிறைந்திருந்தது.
“அவங்க தூரத்து சொந்தத்துல ஏதோ கிராமத்துக்கு போனப்ப பழக்கம்னு சொன்னாங்க” என்றவரை கண்டிப்புடன் பார்த்தார் அண்ணாமலை.
“ஓகே. நீ அதை கிராஸ் செக் பண்ணியா?” என்று கேட்டார்.
“ப்பா” என்றவர் இப்போது என்ன அவருக்கு பதில் சொல்வதென்று திணறினார்.
“உன்கிட்ட இருந்து இந்த பதில் நான் எதிர்பார்க்கல தர்மா. இனி ஏதாவது ஒழுங்கா விசாரிக்காம ஏதாவது தப்பா என் காதுக்கு வந்தது, அப்புறம் இருக்குடா உனக்கு” என்றவரை திகைப்பாய் பார்த்தார் தர்மராஜ்.
‘இவரை எப்படி நம்ப வைக்க?’ என்றவர் அண்ணாமலையை ஆயாசமாக பார்த்தார்.
அப்படியே அவரது பார்வை ஓவியனை நோக்கிச் செல்ல அவனை பார்த்ததும் அவரது முகம் போன போக்கை கண்டு விழுந்து விழுந்து சிரித்தான்.
அவனது சிரிப்பை நித்திலாவும், கண்ணனும் ஆச்சரியம் பொங்க பார்த்தார்கள்.
எப்போதும் இறுக்கமாகவே இருப்பவன் இன்று தன்னை மீறி சிரிக்க அதை பார்க்கவே அவ்வளவு அழகாக இருந்தது.
கண்ணன் இந்த சிரிப்பை என்றும் நிலைக்க செய்ய வேண்டும் என்று மனதினில் உறுதி எடுத்துக் கொண்டான்.
நித்திலாவோ இமைக்க மறந்து அவனை பார்த்தாள்.
அகிலவேணி அவனை கண்களால் வருடியவர் “இப்போ எப்படி இருக்கு கண்ணு? வலி எல்லாம் பரவாயில்லையா?” என்று ஆதுரமான குரலில் கேட்டார்.
“நான் நல்லாருக்கேன் பாட்டி” என்றவன் புன்னகையுடன் சொன்னான்.
“நீ நல்லாருப்ப கண்ணு. என் குலவிளக்கை காப்பாத்தி கொடுத்தவன் நீ” என்றவர் அவனுடைய முகத்தை தடவி சொடுக்கெடுத்தார்.
அவரது வாழ்த்தில் அவனது முகம் புன்னகையுடன் மலர்ந்தது.
“பாட்டி என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க” என்றவன்
தன்னையறியாமல் குனிய “ஆ…” என்று கத்தினான்.
“என்னாச்சு? ஓவியரே என்ன பண்றீங்க? ஓவியா பெய்ன் அதிகமாக இருக்காடா?” என்று ஆளாளுக்கு பதறிய குரலில் கேட்க அவனுக்கு ஜென்ம சாபல்யம் அடைந்தது போன்று இருந்தது.
தனக்காக இத்தனை பேர் இருக்கிறார்களா என்று அவன் மனதிற்கு இதமாக இருந்தது.
பதினான்கு வயதில் வீட்டை விட்டு வெளியே வந்தவனுக்கு எப்போதும் தனிமை தான். அவர்கள் வற்புறுத்தி கூப்பிட்டால் ஒழிய அங்கே செல்வதில்லை.
தனிமை அவனுக்கு பழக்கப்பட்டது என்றாலும் இன்று நடந்ததை போல சில நேரம் கொடுமையாகவும் இருக்கும்.
ஆனால் இன்று அவர்களது அன்பு அவனை கண்கள் பணிக்க செய்ய ஏதும் செய்ய தோன்றாமல் அமைதியாக நின்றான்.
“டேய் ஏதாவது பேசுடா? என்னடா கண்ணுலாம் கலங்குது? ரொம்ப வலிக்குதா?” என்று கண்ணன் இன்னும் பதட்டமானான்.
“நத்திங்டா. அவ்ளோ வலி எல்லாம் இல்ல” என்று அவனை தேற்றினாலும் அவன் முகம் வலியை காட்டியது.
ஓவியன் தன்னிடம் நன்றாக பேசியதில் சந்தோசப்பட்டவன் அவனுக்காக அரேன்ஜ் செய்யப்பட்ட அறைக்கு அழைத்து வந்தான்.
“கண்ணா… ஓவியன் சாப்பிடட்டும்டா” என்று சீதா சொன்னார்.
“இல்லமா. அவனுக்கு பெயினா இருக்கும் போல. நீங்க சாப்பாட்டை கொடுத்து விடுங்க. நான் அவனுக்கு கொடுத்துக்கறேன்” என்றவன் அவனை கை தாங்கலாக அவனது அறைக்கு கூட்டிச் சென்றான்.
அறைக்கு கூட்டி வந்தவன் அவனுக்கு தலையணை எல்லாம் வசதியாக வைத்து பெட்டில் அமர வைத்தான்.
“இருடா. நான் அம்மாகிட்ட சாப்பிட வாங்கிட்டு வரேன்” என்றவன் செல்ல அப்போது ஓவியன் அவன் கையை பிடித்தான்.
“டேய் என்னாச்சு? இன்னும் கை வலிக்குதா?” என்றவன் பதற ‘இவன் ஒருத்தன்’ என்றவன் “ஒரு நிமிஷம் பக்கத்துல வாயேன்டா” என்று கோபமான குரலில் கூறினான்.
“டேய் என்ன?” என்று கண்ணன் திகைக்க “ரொம்ப தேங்க்ஸ்டா மச்சான். உங்க வீட்டுல இருக்கறவங்க இவ்ளோ நல்லா பேசுவாங்கனு நினைக்கல” என்றவன் அவனை இறுக அணைத்தான்.
“மச்சான்” என்று இனிமையாக அதிர்ந்தவன் சந்தோஷமாய் அவனை இறுக்கினான்.
“சாரிடா. நான் உங்கிட்ட கோபப்பட்டதுக்கு. என் மைன்ட் நீ பண்ணத ஏத்துக்கல. அதான் ரொம்ப கோபப்பட்டேன்” என்று வருத்தமான குரலில் சொன்னான்.
“டேய் நான் தான் வருத்தப்படணும். நீ ஒண்ணும் ஃபீல் பண்ணாத” என்று குற்ற உணர்வுடன் கூறினான்.
“இல்லடா. நிஜமா இந்த அன்பை நான் மிஸ் பண்ணியிருப்பேன்” என்று நெகிழ்வான குரலில் கூறியவனை ஆழ்ந்து பார்த்தவன் அங்கிருந்து கிளம்பினான்.
டிபன் எடுத்து வந்தவன் அவனுக்கு ஊட்ட வந்தான்.
“இல்லடா. நானே சாப்பிட்டுக்கறேன்” என்று சங்கடமான குரலில் கூறினான்.
“கைல கட்டுப் போட்டிருக்கு. எப்படி சாப்பிடுவ? என்கிட்ட என்னடா உனக்கு தயக்கம்?” என்றவன் ஊட்ட ஓவியனின் கண்கள் பனித்தது. அதனை கண்ணனுக்கு காட்டாமல் மறைத்தான்.
அவன் சாப்பிட்டு முடிக்கும் போது நித்திலாவும், அகிலவேணியும் வந்தனர்.
நித்திலா கையில் ஒரு பாத்திரத்தை கொண்டு வந்தாள்.
“ஓவியன் வலி எப்படி இருக்கு?”
“இப்போ பரவாயில்ல பாட்டி” என்று கூறினான்.
“பாட்டி உனக்கு ஒத்தடம் கொடுக்க எடுத்திட்டு வந்திருக்கேன். சட்டைய கழட்டுப்பா” என்று சொல்ல அவன் கூச்சத்தில் நெளிந்தான்.
“பாட்டி வேணாம் பாட்டி” என்று தயக்கத்துடன் சொன்னான்.
“உனக்கென்ன இவ்ளோ கூச்சம்? நித்திலா இருக்காளேனு பார்க்கறியா? அவ கிளம்பிடுவா” என்று சொன்னதும் நித்திலா அவனை முறைத்தாள்.
கண்ணன் அவனுக்கு ஒத்தடம் கொடுக்க அகிலவேணி ஒவியனை பற்றி அவனிடம் விசாரித்தார்.
“உனக்கு யாரும் இல்லனு நினைக்காத ஓவியன். எப்போ வேணாலும் நம்ம வீட்டுக்கு வா” என்று சொன்னார்.
“சரி பாட்டி” என்றவன் “ரொம்ப தேங்க்ஸ் பாட்டி” என்று மகிழ்ச்சியுடன் சொன்னான்.
ஓவியனின் அறையில் இருந்து வந்த நித்திலாவுக்கு அவனை பற்றிய நினைவுகளே மேலோங்கி நின்றது.
தனது வீட்டினரிடம் அவன் காட்டிய உணர்வுகளை படம் பிடித்துக் கொண்டவளுக்கு தனது அப்பாவின் பேச்சும் ஞாபகம் வந்தது. அவரை பற்றி நினைத்ததும் அவள் முகம் அப்பட்டமான வெறுப்பை காட்டியது.
