“நிலாமா நீ என்ன பேசறேனு புரிஞ்சு தான் பேசுறியா?” என்று ஓவியன் அதிர்ச்சியுடன் கேட்டான்.
“நான் என்ன தப்பா பேசிட்டேன்?” என்று கோபமாக கேட்டாள் நித்திலா.
“இல்லடா. அம்மா அப்பா சம்மதம் இல்லாம எப்படிடா கல்யாணம் பண்றது?”
“எனக்கு அவங்க உங்களோட கல்யாணம் பண்ணி வைப்பாங்கனு நம்பிக்கை இல்ல. என்னோட அப்பா இவ்வளவு மோசமா மாறுவாருனு எதிர்பார்க்கல. அதுவும் ஹாஸ்பிடல்…” என்றவளின் கண்களில் இருந்து கண்ணீர் அருவியாய் கொட்டியது.
“நிலாமா. ப்ளீஸ்… அழாத” என்றவன் அவளின் தலையை தனது தோளில் சாய்த்துக் கொண்டவன் ஆறுதலாக அவளது முதுகை வருடி கொடுத்தான். அவள் தனது தந்தை பொய்த்து போன ஏமாற்றத்தில் கதறி அழுதாள்.
“நிலாமா… ஒண்ணும் இல்லடா” என்று அவளை தேற்றினான்.
“நான் இருக்கறப்ப நீ இப்படி அழலாமா? நம்ம கல்யாணம் எல்லாரோட ஆசிர்வாதத்தோட நல்லா நடக்கும் பேபி. நான் இருக்கிறப்போ உன்னை எதுக்காகவும் அழ விட மாட்டேன்டா. என்னை நம்புடா” என்றவன் சிறிது சிறிதாக தேற்றவும் அவள் தன்னை மீட்டுக் கொண்டாள்.
“போய் ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வா” என்றவன் பெருமூச்சுடன் எழுந்து காஃபி போடச் சென்றான்.
அவன் காபி எடுத்துக் கொண்டு வரும்போது அங்கே கண்ணனும் வந்திருந்தான்.
“என்னடா சொல்றாரு எமதர்மரு?”
“எமதர்மனா? அது யாருடா?” என்றவன் கேள்வி கேட்டான்.
“இது தெரியாதா… எல்லாம் நம்ம தர்மராஜ் தான்”
“டேய் எவ்வளவு திமிரு இருந்தா நீ என்கிட்டயே இப்படி சொல்லுவ” என்றவனை இமைக்காது பார்த்தான்.
“இல்ல இவ்ளோ நடந்தும் கூட உன் வாயில இருந்து இப்படி ஒரு வார்த்தை வருதே… உண்மையாலுமே எமதர்மர் லக்கிடா” என்றான்.
“ச்சே… அந்த மனுசன் பண்ணதுக்கு” என்றவன் பல்லை கடித்தபடி தலையில் கையை வைத்தான்.
“டேய் எருமை நீ அவருக்கு சப்போர்ட் பண்ற மாதிரி இருந்தா இங்க இருந்து கிளம்பு” என்றவள் சொன்னாள்.
“விடு நிலாமா. அவன் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகட்டும்” என்றவன்
“அவன் போனா நீயும் தான்டா கூட சேர்ந்து போகணும். வெயிட் பண்ணுமா” என்றவன் தொழில் விஷயமாக சிறிது நேரம் பேச ஆரம்பித்தான்.
சிறிது நேரம் அவனது குடோனில் நடந்ததை பற்றி விவாதித்தவர்கள் மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று ஆலோசனை செய்தார்கள்.
அனைத்தையும் பேசி முடித்தவன் “இன்னைக்கு உங்க வீட்ல என்ன நடந்தது? அவங்க சண்டை போட்டாங்கன்னா உன் தங்கச்சிக்கு நீ தான்டா சொல்லணும். நீயும் வீட்டை விட்டு வெளிய வந்திடுவியா ராஸ்கல்? நீங்க வந்துட்டா தாத்தா, பாட்டிமாவை யாரு பார்த்துப்பா? உங்கம்மா அந்தாளோட என்ன பாடுபடப் போறாங்களோ? இதெல்லாம் யோசிக்க மாட்டியா நீ?” என்று கத்தினான்.
“இல்லடா. எனக்கு வெறுத்து போச்சு. வர வர நாங்க பேசறது அவங்க கண்டுக்கறது கூட இல்ல. அவரை பார்த்தாலே கடுப்பாகுது” என்று சொன்னான்.
“நீ எதுவா இருந்தாலும் அவருக்கு பக்கத்துல இருந்து புரிய வை. அவரு என்ன பண்றாருனு வாட்ச் பண்ணுடா” என்று கண்ணனிடம் கடுமையாக பேசியவன் நித்திலாவிடம் “உனக்கும் சேர்த்து தான் நான் சொல்றேன்டா. இவர் பண்றதுல தாத்தா ஏற்கனவே டென்ஷனா தான் இருப்பாரு. ஓகேவா? நீங்க ரெண்டு பேரும் அவங்கள பார்த்துக்கோங்க” என்றவன் சிறு இடைவெளி விட்டு கேட்டான்.
“உன் தங்கச்சிய நீ எனக்கு மேரேஜ் பண்ணி கொடுப்பியா? அவங்கள நான் நல்லா பார்த்துப்பேன்” என்று சங்கடமான குரலில் கேட்டான்.
அவனுக்கு பூரணி வீடியோவை பற்றி பேசியது ஓவியனது மனதை உறுத்திக் கொண்டிருந்தது.
கண்ணன் திகைப்பாய் அவனை பார்த்துக் கொண்டிருந்தான். அவன் இப்படி கேட்பான் என கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
“நான் அப்பா பேரு தெரியாதவன்னு யோசிக்கிறியா? நான் எந்த ஃபேமிலினு தெரியாம எப்படி உன் தங்கச்சியை கொடுக்கிறதுன்னு நினைக்கிறியா?” என்று கேட்டான்.
“அப்படி எல்லாம் இல்லடா. நீ என் தங்கச்சிக்கு ஹஸ்பெண்டா வந்தா ரொம்ப சந்தோஷம். நீ அந்த வீடியோ வந்தப்பவே கேட்பேனு பார்த்தேன். நீ லேட் மச்சி” என்று சிரிப்புடன் கண்ணடித்தான்.
அவனை பார்த்தவன் “நான் அவங்க கிட்ட பேசினது அவங்கள கடுப்பாக்க பேசினேன். பணம் வேணும்னு இன்டென்ஷன்ல பேசல” என்று அவர்களுக்கு தயங்கிய குரலில் விளக்கம் கொடுத்தான்.
“உன்னை யாராவது விளக்கம் கேட்டாங்களா? அமைதியா இருடா” என்றவனை முறைத்தான் ஓவியன்.
“நான் தாத்தாகிட்ட வாங்கின பணம் எவ்ளோ முடியுமோ அவ்ளோ சீக்கிரம் கொடுத்துடுறேன். சாரி. நான் இருக்க நிலைமைல பணம் கொஞ்சம் லேட்டாகும்” என ஓவியன் அவர்களை பார்க்க முடியாமல் சங்கடமாக பேசினான்.
“யார்டா உன்கிட்ட இப்போ பணம் கேட்டா? நீ கொஞ்சம் ரிலாக்ஸாகுடா. நாங்க தாத்தாகிட்ட பேசிக்கறோம்” என்றவன் அவனை ஆறுதலாக அணைத்தான்.
“நீ எதுவும் மனசை போட்டு குழப்பிக்காத. எந்த டைம்னாலும் எனக்கு கூப்பிட யோசிக்காத. ஓகேவா?” என்று கனிவான குரலில் சொன்னான்.
“தேங்க்ஸ்டா. நான் பேசினதை மனசுல வச்சுக்காம ஓகே சொன்னதுக்கு”
“ஃபர்ஸ்ட் நீ சொன்னப்ப கோபம் வந்தது தான். ஆனா அன்னைக்கு அவரு நடந்துக்கிட்டது, இப்போ இந்த மனுசனுக்கு என்ன ஆச்சு என்ன பேசறது சத்தியமா எனக்கு புரியல” என்று வருத்தமாய் பேசினான்.
“நோ வொர்ரிஸ்டா” என்று அவனை தேற்றியவன் அவர்களுடன் தனது காரில் அவர்களின் வீட்டிற்கு புறப்பட்டான்.
அவனை ரொம்ப நாள் கழித்து பார்த்தவர்கள் அவனை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள்.
“தாத்தா நானும் நிலாவும் விரும்புறோம். நீங்க அவங்களுக்கு என்னை கல்யாணம் பண்ணி கொடுப்பீங்களா?” என்று கேட்டான்.
அவனது வார்த்தையில் அனைவரும் திகைத்து நின்றார்கள்.
“நீ நல்லவன்னு நினைச்சு தானே நான் உன்னை என் ஃபேமிலியோட பழக விட்டேன். ஒரு நிச்சயமான பொண்ண போய் நீ லவ் பண்றேன்னு சொல்றியே… இது நியாயமா?” என்று சீதா கேட்டார். அந்தக் கேள்வியில் அனைவரும் அமைதியாக இருந்தனர்.
அந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று அவனுக்கு தெரியவில்லை.
“நீ என்னதான் எங்க கூட பழகினாலும் உன் ஃபேமிலி பத்தி எங்ககிட்ட ஷேர் பண்ணினதில்ல. அப்படி இருக்கறப்ப எதை நம்பிப்பா நான் என் பொண்ணை கொடுக்கிறது?” என்றவர் கேட்க அந்த கேள்வியின் கனம் தாங்க முடியாமல் எழுந்து நின்றான்.
“சாரி ஆன்ட்டி. நான் கிளம்புறேன்” என்று யாரின் முகமும் பார்க்க முடியாமல் தலை குனிந்தபடி சொல்லிவிட்டுச் சென்றான்.
“என்ன சீதா இப்படி பேசிட்ட. அந்த பையன் முகமே வாடிப் போச்சு”
“ஏன் மாமா நான் தப்பா எதுவும் பேசிட்டேனா?” என்று கலங்கிய குரலில் கேட்டார்.
“நீ கேட்ட கேள்வி சரிதான். ஆனா அவனும் நல்ல பையன்மா. காரணம் இல்லாம ஒருத்தர் மனசை புண்படுத்தக் கூடாது. உனக்கு பிடிக்கலைன்னா பிடிக்கலைன்னு சொல்லி நிறுத்தி இருக்கலாம். ஏன் குடும்பத்தை பத்தி எல்லாம் கேட்ட?” என்று அவர் கடிந்தார்.
கண்ணனும், நித்திலாவும் மிகுந்த குற்ற உணர்வில் இருந்தனர். அவன் இப்போதுதான் ஓரளவு தனது பிரச்சனையிலிருந்து தேறியிருந்தான். அவனைக் கூப்பிட்டதே அவனின் தனிமை உணர்வை மறக்க செய்யத்தான். ஆனால் இப்போது?
“ம்மா… இனி ஒரு வார்த்தை அவனை கேள்வி கேட்டீங்கன்னா நான் என்ன பண்ணுவேன்னு தெரியாது. அவன் லோன்லியா ஃபீல் பண்ணுவான்னு தான் கூட்டிட்டு வந்தேன்ம்மா. ச்சே… இப்படி பண்ணிட்டீங்களே” என்று வருத்தத்துடன் உரைத்தவன் கார் சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
நித்திலா அன்னையின் கேள்வியில் அடுத்து என்ன செய்வது என்று திகைத்து நின்றாள்.
கண்ணன் கார் எடுத்து வந்தவன் அவனை தேட அவனோ எதிலிருந்தோ தப்பிப்பவன் போல காரை வேகமாக ஓட்டினான்.
அவனது உள்மனம் அவ்வளவு குமுறிக் கொண்டிருந்தது.
‘என்னை யாருனு தெரியாம ஒத்துக்க மாட்டாங்களா? எனக்கென்ன படிப்பில்லையா? அழகில்லையா? திறமை இல்லையா? அவங்க அடையாளம் எதுவும் வேணாம்னு தானே நான் வந்திருக்கேன்’
அவனுக்கு இருந்த ஆத்திரத்துக்கு அப்படியே அனைவரையும் கொன்று போடும் வெறி வந்தது.
தனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு வாழ்க்கை என்று வெறுத்து போனான்.
எல்லாரையும் போல அவனும் அம்மா, அப்பாவுடன் வாழ வேண்டும் என்று தானே ஆசைப்பட்டான். அந்த மனிதர் சரியாய் இல்லாது இருந்ததில் இவனது வாழ்க்கை திசை மாறியது.
‘அவன் வந்து தான் கல்யாணம் பேசணும்னா எனக்கு அந்த கல்யாணமே வேணாம்’ மனதின் ஓரம் எழுந்த அறைகூவலில் அப்போது நித்திலாவின் முகம் அவனது மனக்கண்ணில் மின்னி மறைந்தது.
அவளை நினைத்ததும் அவனுக்கு ஏதும் ஓடவில்லை. இப்படிப்பட்டவனை போய் காதலித்தேனே என அவள் வேதனை கொண்டிருப்பாள்.
தன்னால் அவள் இன்னும் என்னென்ன கஷ்டங்களை எல்லாம் அனுபவிப்பாளோ என்று யோசித்தவனுக்கு அவளுக்காகவாவது தான் ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது.
ஒரு முடிவுடன் நேராக அந்த வீட்டை நோக்கி வண்டியை விட்டான். இதற்கிடையில் கண்ணன் பின்னால் அவனை ஃபாலோ செய்தபடி வந்தான்.
அவன் அந்த வீட்டை நோக்கி நடக்க ‘இவன் ஏன் இங்க வரான்? அதுவும் இந்த டைம்ல’ என்று குழப்பமாக இருந்தது.
மெல்ல அவனை ஃபாலோ செய்தவன் என்ன நடக்கிறது என கவனிக்க ஆரம்பித்தான்.
அங்கு நடந்த ஒவ்வொன்றும் அவனை அவ்வளவு அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அதை விட அங்கிருந்த மனிதர்கள்…
அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை. அதை விட ஓவியன் படும் பாடு கண் கொண்டு பார்க்க முடியவில்லை.
அவன் மீது சேற்றை வாரி இறைத்தார்கள். ஏதேதோ கடுமையான குரல்கள் கேட்க அப்போதும் அவன் அமைதியாக இருந்தான்.
ஒரு கட்டத்தில் அந்த வீட்டில் இருந்து வாழ்க்கையே வெறுத்த நிலையில் அவன் வந்தான். இப்படி ஒரு பிறவி தனக்கு தேவை தானா என்று நிலையில் இருந்தான். வரும் போதே அவனது கால்கள் தடுமாறியது.
அவனை இப்போதே ஆறுதல் படுத்த கண்ணன் துடித்தான். ஆனால் அவன் காருக்கு செல்லும் வரையும் அமைதியாக இருந்தான்.
காரில் வந்து உட்கார்ந்தவனுக்கு கிளம்ப வேண்டும் என்று கூட தோன்றவில்லை.
முன்னால் இருந்த இருட்டை போல அவனது வாழ்வும் சூனியமாகவே தோன்றியது.
உண்மையில் இப்படி ஒரு விஷயம் தன் வாழ்வில் நடக்கவே கூடாது என்று தான் நினைத்தான்.
ஆனால்… அடுத்து என்ன என்று நினைத்தவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
“ஓவியன்” என்று மிக அருகில் கேட்ட குரலில் விலுக்கென்று நிமிர்ந்தான்.
அங்கே கண்ணன் அவனை கூப்பிட்டான். மனம் உடைந்த நிலையில் அவன் பார்த்த நிராதாரவான பார்வை கண்ணனை வாள் கொண்டு அறுத்தது.
“கண்…கண்… கண்ணா… நீ… நீ… எ… எப்போ…வந்த?” என்றவனுக்கு வார்த்தைகள் கூட வரவில்லை.
“ஏன்டா இவ்ளோ டென்ஷன் ஆகற? ஏன் இப்படி உனக்கு வியர்த்திருக்கு?” என்று தனது கைக்குட்டையை எடுத்து அவன் துடைத்து விட்டான்.
அவனது செயலில் ஓவியன் சில்லு சில்லாக உடைந்து போனான்.
அவனது இடுப்பை கட்டிக் கொண்டு கதறி விட்டான்.க்ஷ
“ஏய்… ஓவியன்…என்னாச்சுடா? ஏன் இப்படி அழற? இங்க பாரு” என்று அவனை தேற்ற ஆரம்பித்தான்.
சிறிது நேரம் தன்னை மறந்து அழுத ஓவியன் ஒரு கட்டத்தில் சுதாரித்திருந்தான்.
“சா… சாரி கண்ணா” என்று தான் அழுததற்கு அவனிடம் மன்னிப்பு வேண்ட அவனோ எதுவுமே நடவாதது போல காரை கிளப்பினான்.
“எதுக்குடா இப்போ தேவையில்லாம சாரி கேட்டுட்டு இருக்க? என்கிட்ட உனக்கு அந்த ரைட்ஸ் கூட உனக்கு நான் கொடுக்கலையா? இனி சாரி கேளு. உனக்கு இருக்கு” என்றவன் நடந்த நிகழ்வுக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாது பேசி அவனை மாற்ற முயற்சி செய்துக் கொண்டிருந்தான்.
“எனக்கு செம பசி” என்று உரைத்தவன் இருவருக்கும் வீட்டில் சாப்பிட பார்சல் வாங்கி வந்தான்.
வீட்டிற்கு வந்ததும் அவனிடம் உணவு பொட்டலத்தை நீட்ட “எனக்கு பசியில்ல. நீ சாப்பிடு” என்று ஒட்ட வைத்த புன்னகையோடு பேசினான்.
“ஏன் நான் மட்டும் சாப்பிட்டு குண்டாகணும்னு ஆசையா உனக்கு? இங்க பாரு எல்லாம் ஹாஃப் ஹாஃப் ஷேரிங் தான். உனக்கு ஒரு வாய். எனக்கு ஒரு வாய்” என்றவன் பேசியபடியே அவனுக்கு அதிகமாக ஊட்டியவன் அவனை தூங்க வைக்க முயற்சி செய்யவும் சுதாரித்தான்.
“டேய் நீ இங்க என்ன பண்ற? கிளம்பு. ஆன்ட்டிக்கு தெரிஞ்சா திட்டுவாங்க. இனி நித்திலா கூட இங்க வர வேண்டாம்” என்று சொல்லியவனின் குரல் தழுதழுத்தது.
“அதை அப்புறம் பார்த்துக்கலாம். தூங்கு” என்றவன் பாலை அவனது கையில் கொடுத்தான்.
“இப்போ தானே சாப்பிட்டேன். எனக்கு வேண்டாம்” என்று மறுத்தான்.
“அட குடிடானா…” என்று அதட்டியவனின் குரலில் அவன் குரலுக்கு கட்டுப்பட்டு அவன் குடித்தான்.
பாலை குடித்தவனுக்கு தூக்கம் சொக்கிய போதும் அவன் அசையாமல் அமர்ந்திருந்தான்.
“ஓவியா… வா… தூங்கலாம்” என்றவன் கூப்பிட “தூ… க்க…ம்… வ…ர…ல…டா…” என்று சொல்லியவன் அப்படியே அவனது மடியில் படுத்து தன்னை மறந்து தூங்க ஆரம்பித்தான்.
ஓவியனின் முகத்தையே வேதனையாய் பார்த்தபடி வெகு நேரம் தூக்கம் வராமல் அமர்ந்திருந்தான் கண்ணன்.
