ஆரெழில் – 1
ஆதவன் தன் அக்னி கரங்களை சுருட்டிக்கொண்டு மேற்கு மலையில் பதுங்கிக் கொண்டிருந்த நேரம். பாதையில்லா கானகத்தின் நடுவே பாவை ஒருத்தி தன்னந்தனியே நடந்துக் கொண்டிருந்தாள். நிலவின் தயவால் நீண்டு கிடந்த நிழல்களும், எலும்பைத் தழுவும் குளிரும் கோதையவள் கால்களின் வேகத்தை கணிசமாக குறைத்து இருந்தது.
அடர்ந்து செழித்து வளர்ந்து கிடந்த புதர்களின் தயவால் கானகத்தின் மையத்தை அடைந்துவிட்டதை அறிந்தாள். அந்த இருளில் ஒரு உருவம் கையில் நெருப்பு பந்தத்தோடு அவளை நோக்கி நடந்து வருவது தெரிந்தது. பயத்தில் இதயம் போர் முரசடிக்க, பக்கத்தில் இருந்த மரத்தின் பின்னே மறைந்து நின்றாள். இனம் தெரியாத ஏதோ ஒன்று அவள் இடது காலில் ஊர்ந்து நகர்ந்தது. வாடைக்காற்று வனப்பைக் கூட்டி, வாசனையோடு விரவியது.

